சொல்.95

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .95 [ 14 /12/2018 ] “என் மனைவி யதார்த்தத்தைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க..” என ஆரம்பித்து அந்த இளம் தோழர் சொன்னதின் சாராம்சம் . வேலைக்குப் போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாள் ; அவள் வாங்குற சம்பளம் குழந்தையை டே கேரில் [பாரமரிக்கும் இடம் ] விட்டா ஆகிற செலவுக்கே சரியாப் போகும் ;குழந்தைக்கு சரியான கவனிப்பு இல்லாமல் போகும் என அவன் சொன்னான் .நகரில் கூட்டுக்குடும்பமாக இல்லாமல் தம்பதியர் மட்டும் வாழும் சூழலில் இக்கேள்வி முக்கியமாகிறது . “உத்தியோகம் புருஷ லட்சணம்னா பெண்ணுக்கு வருமான லட்சணமா?” என முகநூலில் ஒரு தோழி விவாதத்தைக் கிளப்பினாள் . மேலே குறிப்பிட்ட சம்பவத்துக்கும் தோழியின் கேள்விக்கும் நேரடி தொடர்பு இல்லை .ஆனால் விவாதத்தின் மையம் ஒன்றே ! “ஆஸ்திக்கு ஆண் ; ஆசைக்குப் பெண்,” என்கிற நிலபிரபுத்துவக் கருத்தோட்டத்தின் தொடர்ச்சியே அது . சொத்து ,காசு ,பணம் எல்லாம் ஆணோடு தொடர்புடையது .பண்பாடு ,கலாச்சாரம் எல்லாம் பெண்களின் பொறுப்பு என்பது நம் சமூகத்தில் எழுதப்படாத விதி . அதாவது பெண் என்பவள் ஆணைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் ;இயங்க வேண்டும் . அவளுக்கு சுயம் கிடையாது .அவள் வேலைக்கு போக வேண்டுமா ? வேண்டாமா ? சம்பாத்தியத்தை எதுக்கு செலவு செய்ய வேண்டும் ? எதுக்கு செலவு செய்யக்கூடாது ? அனைத்தையும் ஆணே முடிவு செய்யும் ஆண் மைய சமூகக் கண்ணோட்டமே இங்கு அடிப்படை ஆகிறது . வேலை என்பது வெறும் பணம் ஈட்டும் செயல் மட்டுமல்ல .WHETHER MALE OR FEMALE THERE IS NO SELF RESPECT WITHOUT EMPLOYMENT OPPORTUNITY என்பது அடிப்படையானது ;அதாவது ஆணோ பெண்ணோ யாராயினும் வேலை வாய்ப்பு இல்லாவிடில் சுயமரியாதை என்பதே இருக்காது . இது சோஷலிச சமுதாயப் பார்வை . ஒவ்வொரு பெண்ணும் வேலைக்குச் செல்வது அவளது சுய உரிமை ,சயமரியாதை ,சுயவிருப்பம் அவளின் சுயத்தை நிலை நிறுத்தும் கண்ணி . அதனை மறுக்கவோ திணிக்கவோ யாருக்கும் ,ஆம் கணவனே ஆயினும் உரிமை கிடையாது .வீட்டு வேலை ,குழந்தை பராமரிப்பை எப்படி பகிர்வது ; சமாளிப்பது என்பதை மனம் திறந்து பேசி யாரின் சுயமும் பாதிக்காமல் முடிவெடுப்பதே நாகரீக சமூகத்துக்கான லட்சணம் . Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment