தேசசேவை என்பது .......

Posted by அகத்தீ Labels:


  





“தேச சேவை” என்பது
இராணுவத்தில் சாவது மட்டும்தானா ?

சு.பொ.அகத்தியலிங்கம்

 “ நம் தேசத்துகாக எல்லையில் ராணுவ வீரன் செத்துமடியுறான் . அவன் தேசபக்தன் . இங்கே படிக்க போன இடத்தில் அரசியல் செய்யுறான் . இதுவா தேச சேவை ?”

இப்படி கேள்வி கேட்டார் நண்பர் ..இதையேதான் சில மத்திய பாஜக அமைச்சர்களும் அவர்களின் ஊடக ஆட்களும் கேட்கிறார்கள் .

இப்படி கேள்வி கேட்ட நண்பர் மீது எனக்கு கோபம் வரவில்லை . ஏனெனில் ஒரு புறம் நல்லெண்ணமும் மறுபுறம் அறியாமையும் நண்பரின் கேள்வி வெளிப்படுத்துகிறது . ஆனால் அதையே பாஜகவினர் கேட்கும்போது அதற்குள் ஒரு வஞ்சகம் ஒளிந்து கொண்டிருக்கிறது 

எது எது தேச சேவை ? எது எது அரசியல்? எது கல்வி ? இந்தக் கேள்விகளுக்கு நாம் முதலில் விடை காண வேண்டும் .

ராணுவத்தில் பணியாற்றுவது தேச சேவையே . ஐயமே இல்லை . இராணுவ வீரர்களின் மகத்தான உயிர் தியாகத்தையும் கொடும்பனியில் எல்லை காக்கும் தீரத்தையும் போற்றுகிறேன் .
 ஆனால் அது மட்டும் தான் தேச சேவையா ? இதுதான் அடிப்படைக் கேள்வி .

ராணுவத்தில் பணியாற்றுவதுதான் தேச சேவை எனில் மோடி ஏன் ராணுவத்தில் சேரவில்லை ? அமித் ஷா ஏன் இராணுவத்தில் சேரவில்லை ? மோகன் பகவத்தும் ஹெச் ராஜாவும் ஏன் இராணுவத்தில் சேரவில்லை ?

எல்லையில் உயிர் விடும் ராணுவப்பணியில் குஜராத் மாநிலத்தவர் குறிப்பிட்டு சொல்லும் அளவில் குறைந்த பட்சம் ஒரு சதவீதம் கூட இல்லையே ?அப்படியாயின் குஜராத்திகள் வட்டிகடை நடத்தி இரத்தம் குடிப்பவர்கள் ;தேச பக்தி இல்லாதவர் எனச் சொல்லலாமா ? மோடியும் அமித்ஷாவும் குஜராத்திகளுக்கு பணவெறியை மதவெறியை ஊட்டினாரே தவிர தேசபக்தியை ஊட்டவில்லை என்று குற்றம் சாட்டலாமா ?

இப்படியெல்லாம் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது என்பதை நானும் அறிவேன். நீங்களும் அறிவீர்கள்.சங்பரிவார் ஊளையிடுவது இப்படி சிறுப்பிள்ளைத்தனமானதுதான்.

இராணுவ வீரர்கள் என்பவர் சீருடை அணிந்த விவசாய வீட்டுப் பிள்ளைகள் என்று லெனின் சொன்னார் . அதைத்தான் கன்னையாகுமார் அவர் மொழியில் சொன்னார் .அப்பன் விவசாயி கிராமத்தில் கடன் தொல்லை தாழாமல் தற்கொலை செய்து கொள்கிறான் . மகன் எல்லையில் சாகிறான் . இந்த  “விவசாயி தற்கொலையை”  “பேஷன் தற்கொலை” என்கிறார் பா.ஜ.க. எம்.பி.யான கோபால் ஷெட்டி . இப்படி உழைத்து ஊருக்கே சோறுபோடும் விவசாயியை இழிவுபடுத்துவதுதான் தேசபக்தியா ?

வயிற்றுக்குச் சோறிடும் விவசாயம் செய்வது தேச சேவை இல்லையா ?  “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் / விட்டேம்என் பார்க்கும் நிலை.”  அதாவது உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் காவிகட்டிய சாமியார்களுக்கும் வாழ்வு இல்லை என நெற்றிப் பொட்டில் அறைந்து சொன்னாரே வள்ளுவர் . ஆனால் வள்ளுவன் குறள் சமஸ்கிருதத்தில் எழுதப்படாததால் ஏற்பது தேசவிரோதம் என்பார்களோ ?

ஊரும் தெருவும் நாறாமல் சுத்தம் செய்கிறான் அந்த நகர சுத்தித் தொழிலாளி செய்வது தேச சேவை இல்லையா ? அவர் இரண்டு நாள் பணி முடங்கின் ஊரே நாறிப் போகாதா ?

அன்றாடம் அவர் சாக்கடைக்  குழியில் செத்துப்போகும் செய்தி வருகின்றதே ! அவை எல்லாம் அற்ப மரணங்களா ? அது தேச சேவை இல்லையா ?

மோடி தமுக்கடிக்கும் ஸ்வச்ச பாரத் – தூய்மை இந்தியா திட்டத்திற்கு இரண்டாயிரம் கோடி மூவாயிரம் கோடி என நிதி ஒதுக்கப்படுகிறது அதில் ஒரு சிறு சதவீதமாவது நகர சுத்தித் தொழிலாளி சாக்கடைக் குழியிலும் மலக்குழியிலும் இறங்கி சுத்தம் செய்வதை மாற்ற நவீன கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்டதா ?

ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இப்பணியில் ஈடுபட வேண்டும்  ? தேச சேவை பற்றி வாய்கிழியப் பேசுவோர் என்றைக்கேனும் இக்கேள்வியை எழுப்பியதுண்டா ?இப்பணி   “கர்மயோகம்” என புத்தகத்தில் எழுதிய மோடி எல்லா இந்துக்களும் இப்பணியில் ஈடுபட வழி செய்வாரா?

வழிகாட்டியாக ஆகம விதிப்படி கோயில் பூஜை செய்யும் பிராமணர்களை  கொஞ்சகாலம் இந்த கர்மயோகத்தில் நாட்டலாமே ! மாறாக இந்த நகர சுத்தி தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்து பூஜாரி ஆக்கலாமே !மோடியும் அமிதஷாவும் முயற்சி செய்வாரா ? நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதும் தேச சேவைதானே ! இப்படிச் சொன்னால் தேசவிரோதி என்பார்களோ என்னவோ !

  “இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே! / எந்திரங்கள் வகுத்திடு வீரே! /கரும்பைச் சாறு பிழிந்திடு/ வீரே! /கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே! /அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் /ஆயிரம் தொழில் செய்திடு வீரே!/பெரும்புகழ் நுமக்கே இசைக் கின்றேன் /பிரம்மதேவன் கலை இங்கு நீரே!” இப்படி தேசக் கட்டுமானத்தின் ஒவ்வொரு செங்கலிலும் வியர்வை சிந்துவோர் தேச சேவை ஆற்றவில்லையா ?

மதப்பிரசங்கிகளும் பூஜாரிகளும் செய்வது வேண்டுமானால் தேச சேவை இல்லை எனலாம் . ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கேற்ப தேச கட்டுமானத்தில் பங்கேற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் .

இன்னொரு புறம் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு அமெரிக்கனுக்கும் அந்நாட்டிற்கும் சேவை செய்து கோடிக்கோடியாய் அமெரிக்க டாலரை ஈட்டிக்கொண்டிருக்கிற சுந்தர் பிச்சை போன்றவர்கள் தேச சேவையை போதிக்கத் தகுதி இல்லாதவர்கள் .

இப்படிப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் மோடி பஜனை பாடுவதும் தேசபக்தி பற்றி வகுப்பெடுப்பதும் குமட்டலெடுக்க வைக்கிறது .

கார்க்கில் சவப்பெட்டியிலும் ஊழல் செய்த அரை டவுஸர் பாய்ஸ்களா தேசபக்திக்கு இலக்கணம்  சொல்வது ?

தியாகத்தின் இலக்கணம் பகத்சிங் ; நிச்சயம் சவார்க்கர் அல்ல ; நாட்டுக்காக சிறைசென்ற பாரம்பரியம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பாரம்பரியம், வாஜ்பாய் பாரம்பரியம் அல்ல ;தேசத்தின் இதயம் மகாத்மா காந்தியே ,இவர்கள் சுமக்கும் கோல்வார்க்கரோ கோட்சேவோ அல்ல.அல்ல.

அரசியல் என்பது பிரதமராவதும் நாடுநாடாய் பறப்பதும் அல்ல ; அவர் செய்வது தேச சேவை அல்ல ; அம்பானி அதானிக்கு வியாபார சேவையே !

அரசியல் என்பது வறுமைக் கண்டு கண்ணீர் விடுவதோ கொஞ்சம் புளியோதரையோ தயிர் சாதமோ தானம் செய்வதல்ல ; வறுமையின் வேர்களைத் தேடி அறுக்க முயல்வதே அரசியல் .
அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மனித குலத்தை விடுவிக்க எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அரசியலே ! அந்த சவாலான பணிக்கு தன்னை ஆகுதியாக்க முன்வருபவனே இளைஞன் .

கன்னையா குமார் அப்படி முன்வருகிறான் . அது பொறுக்கவில்லை இவர்களுக்கு ! நிரந்தரமாய் அச்சத்திலும் ,அறியாமையிலும் , மூடத்தனத்திலும் மூழ்கிக்கிடக்கவும் தொண்டூழியம் செய்யவுமே உழைப்பாளி மக்கள் பிறந்தனர் எனக் கருதும் மநுவாதிகளுக்கு இது பொறுக்காதுதான் !

மாணவர்களுக்கு அரசியல் கூடாதெனில் பாஜக தன் மாணவர் அமைப்பான எபிவிபி ஐக் கலைத்துவிடட்டுமே !

அவர்கள் மாணவர்களிடையே மதவெறி அரசியல் செய்யலாம் அதனை எதிர்த்து உழைக்கும் மக்கள் நல அரசியலை மற்றவர் செய்யக்கூடாதாம் . எப்படி இருக்கு நியாயம் ?

கல்வியை விற்பது அரசியல் இல்லையா ? பாடதிட்டத்தில் மதவெறி புகுத்துவது அரசியல் இல்லையா ? கல்வி ஒரு விற்பனைப் பண்டம்தான் என காட் ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திடுவது அரசியல் இல்லையா ?

இதை எல்லாம் எதிர்ப்பது மாணவர் கடமை . உண்மையான தேச நலன்  விழையும் மாணவன் ஒவ்வொருவரும் இந்த மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும் . போராட வேண்டும் .

விடுதலைப் போரில் மாணவர் ஈடுபடாவிட்டால் விடுதலை வந்திருக்குமா ? வாஜ்பாய் போல் போராடுபவர்களை  எல்லாம் காட்டிக் கொடுத்திருந்தால் விடுதலை வந்திருக்குமா ? வாஜ்பாயுயும் மோடியும் பிரதமராயிருப்பார்களா ? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாணவர்களைத் திரட்டிப் போராடவில்லையா ? தமிழகத்தில் வீரம் செறிந்த மொழிப்போரில் மாணவர்கள் ஈடுபடவில்லையா ?

கல்வி என்பது வெறுமே பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல ; அதனை செய்ய  இயந்திரம் ரோபட் போதும் . என்ன ?எது ? ஏன் ? எதற்கு ? எங்கு ? எப்படி ? யாருக்கு ? என கேள்விகளைக் கேட்கத் தூண்டுவதே கல்வி . கேட்பவனே மாணவன் .

கல்வி என்பது பாடங்களுடன் சமூகத்தைப் படிப்பது ; படைப்பாக்கத் திறனை வளர்ப்பது ;   “வையத் தலைமை கொள்” என்றானே பாரதி அந்த வையத் தலைமை கொள்ளும் பயிற்சியைப் பெறுதல் ; தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்  ;அதற்கொப்ப அறிவைத் தேடிக்கொண்டே இருத்தல் ; அதற்காக விவாதங்கள் , உரையாடல்களில் ஓயாது ஈடுபடல் ; “ ரெளத்திரம் பழகுதல்”[ இதுவும் பாரதி உபயமே] எல்லாம் கல்விதான் .

இந்த புரிதலே தேசத்தை நேசிப்போரின் புரிதலாகும் ; வெறும் அடிமைகள் போதும் என்பது சூதாட்ட விடுதிக்கே பொருந்தும் .

பாடத்தைப் படி ! சமுதாயத்தைப் படி ! தேசத்தைப் படி ! தியாக வரலாற்றைப் படி ! அறிவியல் பார்வையை தேடிப்படி ! விடியலின் பாதையைப் படி ! தேசம் உனக்காகத்தான் காத்திருக்கிறது எம் இளைய தலைமுறையே !படி ! திரட்டு ! போராடு ! புதுமை செய் !

பின்னொட்டு :

மேலே உள்ள இந்த  கட்டுரையைப் படித்த நண்பர்கள்  தேசபக்திக்கு ஒரு வரைவிலக்கணம் கேட்டனர் . அவர்களுக்காக இந்த பின்னொட்டு .
 விடுதலைப் போராட்ட தேசபக்தக் கனல் இன்று இருக்கும் என எதிர்பார்க்க இயலாது . சூழல் வேறு .அதே சமயம் நாட்டுக்கு ஒரு ஆபத்தெனில் தேசமே சிலிர்த்தெழும் . அதே நேரம் மதவெறியை குரோதத்தை விதைத்து தேசபக்தியை செயற்கையாய் கனலச் செய்ய முயல்வது பெருங்கேடாய் முடியும் .

 முதலில் தேசம் என்பது அதாவது இங்கே நாடு என்கிற அர்த்தத்தில் சொல்லுகிறேன்; வெறுமே இங்குள்ள மண்ணும் மலைகளும் , நதிகளும் , அடிவயிறு நிரம்பி இருக்கும் கனிவளமும் மட்டுமல்ல .

ஆம் . இவை முக்கியமே . ஆனால், இவை மட்டுமே நாடு அல்ல . இங்குள்ள கோடிக்கணக்கான உழைக்கும் கரங்கள் , சிந்திக்கும் மூளைகள் இவற்றின் கூட்டுப் படைப்பே இந்த தேசம் - எம் இந்திய நாடு .

இந்த அற்புத பேராற்றலை இனங்கண்டு காப்பதும் வளர்ப்பதுமே மெய்யான தேசசேவை . தேசத்தை சூறையாடும் அம்பானி அதானி அந்நிய முதலைகளை காக்கவும் வளர்க்கவும் துரோகத்துக்கு துணைபோவது எந்தவகை தேசபதி ?.

நாடு ஒன்றாக இல்லை . இரண்டாக இருக்கிறது . வசதியான இந்தியா , வறுமையான இந்தியா . முன்னதில் சில ஆயிரம் பேர்கள் .பின்னதில்   90 விழுக்காட்டு மக்கள் .

முன்னதுக்கு சேவை செய்வது “ கொழுப்பு தேச சேவை” - பின்னதுக்காக உழைப்பது “ வியர்வை தேச சேவை” . மோடி , அமித்ஷா , சங்பரிவார் முன்னதின் முகவர் ; நாமெல்லாம் பின்னதின் முகவர் . இதில் நமக்கெல்லாம் பெருமை . நீங்கள் இப்போது எந்தப் பக்கம் ?.






2 comments :

  1. Unknown

    அற்புதமான பதிவு. ஆழமான விவாதம்

  1. Unknown

    Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
    For further detail visit our locate please click here>>
    commercial painting contractor in chennai
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

Post a Comment