முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே ?

Posted by அகத்தீ Labels:




முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே?

சு.பொ.அகத்தியலிங்கம்



 சிற்றின்பம் , பேரின்பம் என இரண்டாகப் பகுத்து உயர் வாழ்நெறி கண்டவர் நம் முன்னோர்கள். அவ்வழி செல்வதன்றோ சரியானது?

நிலப்பிரபுத்துவ சமுதாயம் நிலைக்க உதவிய மதம் முதலாளித்துவம் மலரும் போது தடைக்கல் அல்லவா? ஆயினும் முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே! இதன் மூலம் மதத்தின் தேவையும் வலுவும் தெளிவாகவில்லையா?


சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து உயர் வாழ்நெறி கண்டவர் நம் முன்னோர்கள். அவ்வழி செல்வதன்றோ சரியானது?
காதலையும் உடலின்பத்தையும் அதாவது காமத்தையும் பாடுவது சிற்றின்பம் என்றும்; கடவுளைச் சரண்டைவதே – அதைப் பற்றிப் பேசுவதும் பாடுவதுமே பேரின்பம் என்றும் புலவர்கள் விளக்கம் சொல்வார்கள். அம்பிகாவதி - அமராவதி காதல் காவியம் இதனைச் சுற்றியே பின்னப்படிருக்கும். ஆனால் காமம் இல்லா வாழ்க்கையை கனவி
சிற்றின்பம், பேரின்பம்லும் மனிதகுலம் நினைக்க இயலுமா? நினைப்பது தேவையா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் .விலங்குகளுக்கும் காமம் என்பது இனப்பெருக்கத் தேவையினையொட்டி மட்டுமே ஊற்றெடுக்கும். சிம்பன்ஸி மனிதக் குரங்குகள் காலம் வரை இதுவே நிலை. கிப்பான்கள் என்கிற குரங்குகளே மனிதனுக்கு மிக நெருங்கியவை என்று கருதப்படுகின்றன.
இந்த கிப்பான் குரங்குகள் ஆண்டு முழுவதும் எப்போதுவேண்டுமானாலும் உடலுறவு கொள்ளும். இது அவற்றின் வாழ்க்கைமுறையை மாற்றியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி கிப்பானைப் போன்று நினைத்த போதெல்லாம் உறவுகொண்டதே மனிதகுலம் விரைந்து முன்னேறவும் பல கண்டுபிடிப்புகளுக்கும் உந்துசக்தியாகியது என்பார் “கடவுள் உருவான கதை” நூலின் ஆசிரியர் அஜய் கன்சால்.

மனித குலத்துக்கே ஆண்டு முழுவதும் நினைக்குந் தோறும் காமம் ஊறும்.
“ ஊடல் உணர்தல் புணர்தல் இவைக்காமம்  
கூடியார் பெற்ற பயன்”
என்பாரே வள்ளுவரும். அந்த காமம் கெட்ட தன்று.
உற்பத்தி , மறு உற்பத்தி” -அதாவது உழைப்பும் காமமுமே உலகின் அச்சாணி என்பார் மார்க்ஸ். ஆண்டாளும் , காரைக்கால் அம்மையாரும் தம் காமத்தை ஆண்டவன் மீது ஏற்றிப்பாடவில்லையா? அதுமட்டுமா? அதிவீரராமபாண்டியர் எழுதிய “ கொக்கோகம்” மற்றும் வாத்சாயனர் எழுதிய “ காமசூத்திரத்து”க்கு நிகரான நூல் உலகில் இன்னொன்று இல்லை என்பர் .

வாழ்வியல் நூலாம் திருக்குறள் தந்த வள்ளுவனும் அறம், பொருளோடு நில்லாமல் காமத்துப் பாலையும் நமக்குப் புகட்டினான். 250 குறட்பாக்களை இதற்காகவே ஒதுக்கினானே. அதுதானே சரியான வாழ்வியல் அணுகுமுறை.
“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.”
ஆம். நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. என ஒப்பிட்டு உரைத்தவன் வள்ளுவன் .
“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.”
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே என வகுத்துரைதவனும் அவனே!
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.”
ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்என நெற்றியடியாய் காமத்துக்கு வரைவிலக்கணம் தந்தவன் வள்ளுவன்.ஆயினும்,

பெண்ணை அடிமைப் படுத்திய சமூகமும் அதன் மதமும் “பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை” என ஜடப்பொருளில் ஒன்றாய் காமத்தைச் சுருக்கிவிட்டது. “ மது, மாது, மாமிசம்” என, பெருப்பாலானோரின் உணவுப் பழக்கத்தையும், அனைவருக்கும் உரிய காமத்தையும் சம்மந்தசம்மந்தமே இன்றி போதையுடன் இணைத்து இழிவுபடுத்துவதும்; அதுவும் காமத்தை ‘மாது’ எனச்சுட்டி பெண் மீது பழியைச் சுமத்திவிட்டது மதம் .
காமம் என்பதை பெண்ணோடு மட்டுமே தொடர்பு படுத்தி “பெண்ணாசை” என “பாவப்பட்டியலில்” சேர்த்த மதம், அதில் ஆண்களும் சமபங்காளி என்பதை வசதியாக மூடிமறைத்துவிட்டது.

நம் நாட்டில் ரிஷிகளுக்கு ரிஷிபத்தினி உண்டு. புத்தம் தன் துறவிகளுக்கு பெண் தொடர்பு கூடாதென போட்ட தடை இந்து மதத்தையும் பற்றிக் கொண்டு விட்டதோ! ஆனால் அதன் பின் மிகவும் மூர்க்கமாய் காமத்தை இழிவு செய்தது . கிறுத்துவத்திலும் போப்புகள், பாதிரிகளுக்கும், சகோதரிகளுக்கும் காமத்தை தடுக்க போட்ட இருப்புவேலி இன்னும் தொடர்கிறதே!

வைதீகத்தை எதிர்த்த சித்தர் மரபில் மிகவும் போற்றத்தக்க பகுத்தறிவுக் கூறுகள் உண்டெனினும் அவர்களிலும் “ காமப்படுகுழி” எனப் பெண்களைப் பழித்து வெறுத் தொதுக்கியோருண்டு. எல்லா மதங்களிலும்காமம் சம்மந்தப்பட்ட அனைத்திலும் பெண்ணை மட்டுமே குற்றவாளியாக்குவது ஆணாதிக்கச் சிந்தனையின் தொடர்ச்சியே ! யார் எப்படிப் பேசினும் காமத்தை தவிர்க்கவும் முடியாது; தடுக்கவும் முடியாது.
ஏனெனின் இது வாழ்வியல் யதார்த்தம். காமத்தை பிழையற புரிந்து கொள்வதும்; தெளிந்து அணைவதும் வாழ்வின் தேவை. அதைப் பேசுவதும் பாடுவதும் பிழை அல்ல. தேவை .ஆண்,பெண் இரு பாலர் மட்டுமல்ல திருநங்கை , திருநம்பி என்கிறவர் உட்பட அனைத்து பாலினத்தவரும் காமம் குறித்து பேசுவதும் , எழுதுவதும் , உரையாடுவதும் குற்றமல்ல .இயல்பு. உரிமை என்பதறிக!

நம் சிற்பக் கலையில் , ஓவியத்தில் , நாட்டார் வழக்காறுகளில் ,பாட்டுகளில் , கதைகளில் காமம் விரவிக்கிடக்கும் ஏனெனில் காமம் வாழ்வோடு விரவிக்கிடப்பது .காதலும் காமமும் இயல்பானது. பாடத்தக்கது.

ஆயின் காதல், காமம் என்கிற எல்லையைத் தாண்டி பெண்களை கொச்சைப் படுத்தவும், வக்கிரமாய் பார்க்கவும் தூண்டுவதே பிழை. அளவுக்கு மீறினால் அமிதமும் நஞ்சென்பது நம் முதுமொழி . உணவே ஆயினும் அதிகம் உண்டால் துன்பமே. எதுவுவாயினும் அததற்கு ஒரு எல்லை உண்டு . அதனை மீறுகிற போது துன்பம் உண்டு. காமம் குறித்த எல்லையும் புரிதலும் நாட்டுக்கு நாடு, காலத்துக்கு காலம் மாறும். இன்று அது குறித்து மனம் திறந்து பேச முன்வருவது உசிதமானது.
காமம் குறித்த உரையாடலையே பிழையாக, குற்றமாகக் கருதும் மனோநிலை ஆணிடமும் உண்டு. பெண்ணிடமும் உண்டு. இது தவறான பார்வையாகும், காமம் குறித்து செக்ஸ் கல்வி மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாய் போதித்தல் அவசியம். இது சிற்றின்பமல்ல. தேவையான இன்பம். மனிதம் குலம் தழைக்க மிக மிக அவசிவம் .

கடவுளிடம் சரண்டையச் சொல்லும் பேரின்பம் பயனற்றது. பொருளற்றது. தேவையற்றது. யதார்த்தமற்றது. நியாயமற்றது. அறிவியலுக்கு முரணானது. வெறும் கற்பனை மயக்கம். வேறென்ன சொல்ல?
நிலப்பிரபுத்துவ சமுதாயம் நிலைக்க உதவிய மதம் முதலாளித்துவம் மலரும் போது தடைக்கல் அல்லவா? ஆயினும் முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே! இதன் மூலம் மதத்தின் தேவையும் வலுவும் தெளிவாகவில்லையா?
ஆண்டான் - அடிமை யுகத்தில் எந்த சுதந்திரமும் இல்லாதவர்களாய் உழைப்பாளிகள் இருந்தனர். அடிமை நுகத்தடியில் உழன்றனர். ஆனால் அடிமைகள் திமிற ஆரம்பித்ததும் ; கலகங்கள் வெடித்ததும் ஆளும் வர்க்கம் உஷாரானது. அடிமைச் சங்கிலி அகன்றது. ஏட்டளவில் அனைவரும் சுதந்திரத் தொழிலாளிகள் ஆனார்கள். ஆனால் அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க ஆளும் வர்க்கம் புது உத்தி கண்டுபிடித்தது. அவர்களை நிலமற்றவர்களாக்கி, பண்ணைகளில் கூலியடிமைகளாக்கினார்கள். நிலப்பிரபுவை பகைத்தால் வேலையும் இல்லை. கூலியும் இல்லை. இப்படி பல்லக்கு சுமக்க ஒருவர்க்கமும் ; பல்லக்கு சுமக்க ஒருவர்க்கமும் என சமூக உளவியல் தத்துவம் அரசியல் அடக்குமுறை அனைத்தும் கட்டமைக்கப்பட்டன.கைவினைஞர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரம் அனுபவித்தனர்.

ஆனால் முதலாளித்துவம் முளைக்கும் போது கைவினைஞர்களை ஓரம் கட்டவேண்டியிருந்தது . கூட்டம் கூட்டமாக விவசாயக் கூலிகளை கூலித்தொழிலாளர்களாய் நகரத்துக்கு கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது அவர்களின் மதநம்பிக்கைகளை கொஞ்சம் அசைக்க வேண்டிய தேவை முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பகுத்தறிவுப் பாதை அப்படியே தொடரவில்லை . ஏன் ?மதமும் கடவுளும் ஒற்றை இரவில் உருவாக்கப்படவில்லை. ஆதி பொதுவுடைமை யுகத்தில் மனிதர்களிடம் அறியாமை, பயம் இவற்றால் உருவான சில நம்பிக்கைகள்; அதனை அடுத்து வந்த சமூக அமைப்பான ஆண்டான் யுகத்தில் அடிமைத்தனத்தை நியாயபடுத்தவும் ஒடுக்கவும் கடவுள் மதக் கருத்துகளாய் வடிவெடுத்தன. நிலப்பிரபுத்துவ யுகம் தன் சுரண்டலுக்கு மதம் நல்ல கருவி என்பதை உணர்ந்து அதனைக் கூர்மைப்படுத்தி அதிகார மையமாக்கியது .

அறிவியலும் தொழில் வளர்ச்சியும் முதலாளித்துவ யுகம் கருக்கொள்ள களம் அமைத்தது; ஆனால் நிலப்பிரபுத்துவம் சார்ந்த மத நிறுவனங்கள் இதற்கு தடையாக இருந்ததால் எதிர்ப்பு வலுத்தது.

கத்தோலிக்க கிறுத்துவம் மன்னராட்சிக்கு குடைபிடித்தது எனில், மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் பிரிந்து வந்த புரட்டஸ்ட்டாண்டு முதலாளித்தும் விரும்பிய குடியரசுக்கு சாமரம் வீசியது. 1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பத்தில் மதபீடங்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டது என்றாலும், தொழிலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் போய்விடக்கூடாது எனக் கருதியது. எனவே மத நிராகரிப்புக்கு பதிலாக மதச்சார்பின்மை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. ஆயினும் நிலப்பிரபுத்துவத்தை நீக்கிவிட்டே முதலாளித்துவம் தன்னை பல நாடுகளில் நிலைநிறுத்திக் கொண்டது. அதே சமயம் மதத்தை தங்கள் தேவைக்கு வளைப்பதில் அவை வெற்றிபெற்றுவிட்டன. மதங்கள் நெகிழ்ந்து முதலாளித்துவத் தேவைக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொண்டது.

இந்தியாவிலோ நிலை வேறாக இருந்தது. இங்கே தொழில் வளர்ச்சியும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டதும் ஏறத்தாழ ஒரு சேர நிகழ்ந்தது. பிபின் சந்திரா எழுதிய “இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் விரிவாகக் காணலாம்.“வயிறார உணவும் சிறிது நீதியும் கிடைத்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருபதியோடு வாழ மக்கள் தயார்” என நிலைமையின் கடுமையை ‘அம்ரிதபஜார் பத்ரிகா’ எழுதியது மிகையல்ல.

“....இந்திய மக்களின் நிலைமை மோசமானது, இரங்கத்தக்கது, விலங்குகளுக்கும் கீழானது, ...இந்தியர்கள் பட்டினியில் வாழ்வதாக, வெறுக்கத்தக்க, கீழான, அஞ்சி ஒடுங்கத்தக்க வறுமையில் உழல்வதாக..” இந்திய பத்திரிகைகள் விடாமல் தினந்தோறும் வாரந்தோறும் எழுதின என்பதை நூலாசிரியர் மிகச் சரியாகச் சுட்டுகிறார். “பஞ்சங்களின் காரணம் விளைச்சல் இல்லாதது அல்ல. இருக்கக்கூடிய உணவு தானியத்தை வாங்க வசதி இல்லாததுதான்“ என்பதை அன்றைய ஏடுகள் எடுத்து இயம்பின . “விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் நாடு நிச்சயம் ஏழையாகத்தான் இருக்கும் “என்பதை மிகச்சரியாக புரிந்த தலைவர்கள் தொழில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமும் அக்கறையும் காட்டினார்கள் ; அதே சமயம் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை பெற்றதன் ஒரு முக்கியமான விளைவு, இந்திய நகர்ப்புற கைத்தொழில்களும், கிராமப்புற சிறுதொழில்களும் குறைந்து, அழிந்து பல நூற்றாண்டுகளாகப் பிணைத்திருந்த விவசாயம், உற்பத்தி தொழில்களை பாதித்ததாகும்.”இந்திய விடுதலைப் போரில் விவசாயிகள் நிலை கண்டு மகாத்மா கண்ணீர் விட்டதும்; அரையாடை தரித்ததும்ஒரு புறம் இருப்பினும்; விடுதலைப் போரில் தலைமை ஏற்ற ஆளும் வர்க்கமான பெருமுதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டது.

நிலப்புரட்சி இங்கே நடக்கவே இல்லை .“உலகமெங்கும் சுயமுன்னேற்றத்தின் உந்து சக்தி சுயநலம்தான். தன்னலமற்ற வேதாந்தத்தில் ஊறிய நாட்டிலும் மனித இயல்பு வேறுமாதிரியாக இருக்க முடியாது .கரும்பாறைகள் உள்ள இடத்தையும் ஒருவனுக்கு சொந்தமாகக் கொடுத்தால் அவன் அதனைத் தோட்டமாக்கி விடுவான் . இது பிரான்சிலும் நார்வேயிலும் உண்மை என்றால் இந்தியாவிலும் உண்மைதான்.இன்று விவசாயிகள் அக்கறையின்றி இருப்பதை மாற்ற அவன் உழும் நிலத்தை அவனுக்கே உரியதாக்கி அதன் பலன்களுக் அவனுக்கே என்று கூறுவதைவிட நல்லவழி ஏதுமில்லை.” என்றார் அன்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோஷி. இன்றும் அதுவே உண்மை.

இங்கே மேற்கு வங்கம், கேரளம் தவிர எங்கும் நிலக்குவியல் உடைக்கப்படவில்லை. நிலம் உழுபவனுக்குத் தரப்படவில்லை.நிலப்பிரபுத்துவம் மட்டும் இங்கு நீடிக்கவில்ல்லை அதனோடு சாதி, மத, பழமைவாத அத்தனை கசடுகளும் தொடர்கின்றன.பேயாட்டம் போடுகின்றன. இந்தியாவின் விஷேசத்தன்மை இது.இச்சூழல் கடவுள், மதம், சாதி, மூடப்பழக்க வழக்கங்கள் இவற்றின் இருத்தலை நமக்கு வலியுறுத்துவதாகச் சொல்வதைவிட; இவற்றுக்கு எதிராக சமரசமற்றத் தத்துவப் போர் நடத்த வேண்டிய தேவையையே நமக்கு அழுத்தமாய் வலியுறுத்துகின்றது.

நன்றி : வண்ணக்கதிர்  , தீக்கதிர் 27-03-2016.
[ இத்துடன் 93 கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டுவிட்டது .இன்னும் 7 கேள்விகள் தொடரும்]


0 comments :

Post a Comment