கூடுதல் மகிழ்ச்சி கூடுதல் நம்பிக்கை

Posted by அகத்தீ Labels:

 

கூடுதல் மகிழ்ச்சி...கூடுதல் நம்பிக்கை





சென்ற ஆண்டு வந்துபோன

அதே பொங்கல் அல்ல

இந்த ஆண்டும் வருவது …

 

கூடுதல் மகிழ்ச்சி

கூடுதல் நம்பிக்கை

கூடுதல் எழுச்சி

 

கொரானா காலத்திலுமா

என நீங்கள் கேட்பது

காதில் விழுகிறது

 

ஆண்டொன்றாய் உழவர்கள் போராடி

ஆள்வோரை மண்டியிடச் செய்து

வென்றது மகிழ்ச்சிதானே!

 

சேற்றை மிதிக்கும் உழவரை

தெருவில் வதைத்த மமதையை

பணிய வைத்தது நம்பிக்கைதானே !

 

வயல்வெளியில் வியர்வையையும்

போர்க்களத்தில் உயிரையும்

சொரிந்து பெற்ற எழுச்சியன்றோ !

 

இந்த ஆண்டு பொங்கலை

இறும்பூதெய்தி கொண்டாடு !

இனிவரும் காலம் நமதாகும் !

 

உழவன் பெற்ற பெருவெற்றி

உழைப்போர் குருதியை சூடேற்றும்

உலுத்தர்கள் மகுடம் உருண்டோடும் !

 

சென்ற ஆண்டு வந்துபோன

அதே பொங்கல் அல்ல

இந்த ஆண்டும் வருவது …

 

கூடுதல் மகிழ்ச்சி

கூடுதல் நம்பிக்கை

கூடுதல் எழுச்சி

 

ஆனாலும் ,

ஊரும் சேரியும் உறவாடி

ஒன்றாய்ப் பொங்கல் கொண்டாடும்

உன்னதநாள் எப்போது ?

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

13/1/2022.

 

 

 

 

0 comments :

Post a Comment