சும்மா கிடந்த சொல்ல எடுத்து...11

Posted by அகத்தீ Labels:



சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 11]


என்னடி கண்ணம்மா இன்னுஞ் சொல்ல வேணுமா?

சு.பொ.அகத்தியலிங்கம்
“ ஜிங்குசா ஜிங்குசா செகப்புக் கலரு ஜிங்குசா /பச்ச கலரு ஜிங்குசா/ மஞ்ச கலரு ஜிங்குசா /வண்ண வண்ண சேலைங்க / வசதியான சேலைங்க /வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க / எங்க உள்ளம் ஓடும் சேலைங்க /உறுதி யான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க.... ” – பொற்காலம் திரைப் படத்தின் பாடல் காற்றில் தவழ்ந்து காதைத் தீண்டியது . நெசவாளர் நிலையும் கைத்தறித் துணியும் நினை வில் விரிந்தது .

காலந்தோறும் நெசவாளரும் நெசவும் உன்னதக் கவிஞர்களின் பாடுபொருளாகவே இருந்துள்ளது சுதந்திரப் போராட்டத்தில் முன்நின்ற கவிக்குயில் சரோஜினி நாயுடு “ நீலம்..வெள்ளை..” என்ற தலைப்பில் பாடிய கவிதை மறக்க முடியாதது .“ விடியற்காலையில் , நெசவாளர்களே / இவ்வளவு அழகான ஆடையை/ யாருக்காக நெய்து கொண்டிருக்கிறீர்கள் ? / காட்டுப் பறவையின் நீலச்சிறகு போல் / புதிதாகப் பிறந்த குழந்தைக்கு / ஆடை நெய்து கொண்டிருக்கி றோம் / இருள் சூழும் வேளையில் நெசவாளிகளே / இவ்வளவு பள பளப்பான ஆடையை / யாருக்காக நெய்து கொண்டிருக்கிறீர்கள் ? / பச்சையும் நீலமும் உள்ள மயில் தோகை போல் /ஒரு மகாராணியின் திருமணத்திற்காக / முகத்திரையை நெய்து கொண்டிருக்கிறோம் / அடக்கத்துடன் அமைதியாக / நெய்து கொண்டிருக்கும் நெசவாளிகளே / இந்தக் குளிர் நிலவில் / என்ன நெய்து கொண் டிருக்கிறீர்கள்? / இறகு போன்ற மேகம் மாதிரியான வெண்மையில் / இறந்துபோன ஒரு மனிதனுக்கு / சவச்சீலை நெய்து கொண்டிருக் கிறோம் ” நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தவர்கள் நெசவாளிகள் என்பதை இக்கவிதை பிரகடனம் செய்யும் .

பட்டுக்கோட்டை 1957 ல் “ புதையல்” திரைப்படத்திற்கு என்ன பாட்டு எழுதலாம் என நெடுநேரம் யோசித் தாராம். பாரதிதாசனிடமும் கலந்து ரையாடினார் .அவர் ஆலோசனையின் பெயரில் கைத்தறி நெசவாளர்களை சந்தித்து அவர்களோடு தங்கி இருந்து ஒரு பாடலை எழுதினார் . இன்றும் கைத்தறி என்றதும் ஒவ்வொருவர் உதடும் முணுமுணுக்கும் பாட லாகும் அது . அதன் முதல் வரியே கலக்கும் ; “ சின்னச் சின்ன இழைப் பின்னிப் பின்னிவரும் / சித்திரக் கைத்தறி சேலையடி - நம்ம / தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலை யடி / தய்யா தய்யா தந்தத்தானா தய்யா தய்யா தந்தத்தானா ” இதைவிட எளிமையும் எழிலும் கொஞ்ச யார் சொல்லி விட முடியும் . சித்திரக்கைத்தறி என் கிற ஒற்றை வார்த்தையில் கைத்திற னும் கலைநுட்பமும் கைகோர்ப் பதை அற்புதமாய் வடித்து தந்துவிட் டார் .அடுத்த பத்தியில் யார்யாரெல் லாம் கைத்தறி ஆடை அணிவர் என ஒரு பட்டியல் தருவார் பட்டுக் கோட்டை ; அன்னையர் , தந்தையர் வண்ணக்குழந்தைகள் , புன்னகை மங்கையர் , சிந்தனைச் சிற்பிகள், தேசத்தலைவர்கள் , செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள் , மங்கலமா நிலம் காக்கும் மறவர் , வாழ்வை உயர்த்தும் மக்கள் என எல்லோருக்கும் ஏற்றது என்றார் .

கைத்தறி என்றால் விலை குறைவா னது சாதாரண ஏழைகளுக்கானது என்று மக்களில் ஒரு சாராரிடம் அன்றைக்கு இருந்த கருத்தைத் துடைத் தெறிகிறார் . எல்லோரும் வாங்கி மகிழும் பொன்னாடை என் றார் .அதுமட்டுமா ? சாயம் போகுமா? அதற்கும் பதில் சொன்னார் ; “ உழைத்திடும் எளியவர் அடிக்கடி துவைத்து வந்தாலும் / மங்காது பார்வை சிங்காரப் போர்வை ” அது சரி இது ஏழைகளுக்கு என எண் ணாதே என சொன்னால் மட்டும் போதுமா பணம் படைத்தவர்களின் தேவைக்கு வழி உண்டா என்பதை யும் கூறவேண்டாமோ ! கூறினார் ; “ பணத்தொகை மிகுந்தவர் படித்தவர் பெருத்தவர் நாடும் பச்சைப் பட் டாடை பார்த்தால் கிளிஜாடை” கிளி ஜாடை என்ற சொல்லாட்சியில் ஆடையின் மென்மையையும் வண் ணச்சேர்க்கையையும் ஒருங்கே காட் சிப்படுத்திவிட்டார் பட்டுக்கோட்டை .

இந்த கைத்தறித் தொழிலின் பெருமையையும் தொழிலாளர் பெருமையையும் அடுத்து பிணைத்து தரும் அழகை என்னென்பது ? “ஒற்று மையோடு அத்தனை நூலும் / ஒழுங்கா வந்தால் வளரும். – இதில் / ஒரு நூலறுந்தால் குளரும். – இதை / ஓட்டும் ஏழைக் கூட்டுறவாலே / உலகில் தொழில் வளம் உயரும் – இந்த / உலகில் தொழில் வளம் உயரும் ” . இது மெய்யன்றி வேறென்ன ? “என்னடி கண்ணம்மா இன்னுஞ் சொல்ல வேணுமா ? ” எனக் கேள் வியும் கேட்டுப் பதிலும் சொல்லு வார்; “ வள்ளுவர் வழி வந்த பெரும் பணி வாழ்வில் / நன்மை உண்டாக் கும் தன்மானம் காக்கும் / புதுமைப் புடவைகள் விதவிதப் பறவைகள் போலே / நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும்” இதற்கிணையாக கைத்தறி பற்றி இன்னொரு பாட்டு பிறக்கவில்லை என்கிறார்கள் சான் றோர்கள்.

பெரியாரும் ஜீவாவும் அண்ணா வும் கைத்தறித் துணிகளை தலையில் சுமந்து விற்றகாலம் . கைத்தறியை ஊக்குவிக்க திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பாடு பட்ட காலம் .கைத்தறித் தொழிலா ளர் வாழ்வில் சூழ்ந்த இருள் விலக பொதுவுடைமை இயக்கம் சங்கம் அமைத்த காலம் . அன்றைய சமூக தேவையை நிறைவு செய்ய பாட்டு எழுது என்கிற பாரதிதாசன் திராவிட இயக்கத்தவர் ; பாட்டுக்கட்டியவர் பொதுவுடைமை இயக்கத்தவர் . ஒலித்தது திரைப்படத்தில். இதனை மனதில் கொண்டால் எங்கேயும் எச் சூழலிலும் சமூக அக்கறை மிக்கோர் அதற்கொப்பவே சிந்திப்பர் செயல் படுவர் என்பது புலனாகும் . கிடைக் கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்திய சமூகப் போராளிக் கவிஞர் அல்லவா பட்டுக்கோட்டை. அவர் காலம் கைத்தறியை கைதூக்கி விடும் காலம். எனவே அதற்கேற்ற வாறு பாடல் புனைந்தார் .

 மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரின் நெருங்கிய நண்பரான ஹென்ரிச் ஹெய்னே என்ற ஜெர்மானிய மகாகவிஞனின் “ நெசவாளர் ” எனும் பாடல் புகழ்பெற்றது . அதிலி ருந்து சில வரிகளை இங்கே நினை வூட்டுவது சாலப் பொருந்தும் .

“ அவர்கள் கண்களில் கண்ணீர் இல்லை -ஏனெனில் /கண்ணீர் பார்வையை மறைக்கும்தறியில்அமர்ந்திருக்கிறார்கள்;/பற்கள் நறநறக்கின்றன .  / ஓ ! ஜெர்மனியே ! / உனது சவத்துணியைநாங்கள் நெய்துகொண்டிருக் கிறோம்;/குளிர்பனியில் கொடும்பசியில்  / மரித்துக் கொண்டிருந்த போது  / நாங்கள் கதறியழைத்தோமே  / அந்தக் கடவுளை சபிக்கிறோம்! / அந்த அரசனை சபிக்கிறோம்கீச்சிடும்  /  தறியில் நாடா பறக்கிறது /இரவெல்லாம் பகலெல்லாம் / உன் விதியை நெய்து கொண்டிருக்கிறோம் / உன் சவத்துணியை நெய்துகொண்டிருகிறோம் ; / ஓ , கிழட்டு ஜெர்மனியே ! / உனக்கொருசாபத்தை நெய்து கொண்டிருக்கிறோம் / உனக்கொரு சாவை நெய்து கொண்டிருக்கிறோம் / நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம் / நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம் ”

பட்டுக்கோட்டையின் பாடல் களில் அவலச்சுவையும் அறிவுரை யும் மட்டுமல்ல ; தத்துவப் பார்வை யும் சமத்துவ நோக்கும் மட்டுமல்ல ஆவேசக்குரலும் போர்ப்பரணியும் உரக்கக் கேட்கும். அடுத்து அவற்றை யும் பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர்  இலக்கியச்சோலை 14 ஜூலை 2014

0 comments :

Post a Comment