’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி வெடிப்புகள்’
சுஜாதா செல்வராஜின்
சிறுகதைத் தொகுப்பான “ கன்னிமார் சாமி” உறுத்தும் உண்மைகளைப் பேசுகிறது . “
அவலச்சுவை” மேலோங்கி இருக்கும் நூலென முன்னுரை சொல்கிறது . ’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி
வெடிப்புகள்’ என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
“…… நம்மள மாதிரி
பொம்பள ஜென்மங்க மனசுல ,எல்லாற்றையும் போட்டு, மூடி வச்சு நொதிச்சுப் போய்க் கெடக்கு
.அதையெல்லாம் திறந்து வெளியே கொட்டுனா ஆம்பளங்க பவுசு எல்லாம் மண்ணாய்ப் போய்டும்
…” ‘காந்தாயி’ சிறுகதையின் முத்தாய்ப்பு வரிகள் இவை . இந்நூல் பேசும் செய்தி அதுதான்
. ஒவ்வொரு கதையும் பெண் மனதின் வலியைத்தான் சொல்கிறது .
ஒவ்வொரு கதையும் காயத்தை தடவிக்காட்டும் கதைகள்தாம் . குளிப்பாட்டும்
போது அந்தத் தழும்பின் முன் சத்தியமூர்த்தி ஒரு குற்றவாளியாக நின்றிருந்தார். “ என்னம்மா
முதுகுல தழும்பு ” என்று கேட்க மனம் தவித்தது . ஆனால் அவள் சொல்லப்போகிற பதிலை எதிர்
கொள்ள அவர் அஞ்சினார் …. ’ தழும்பு ‘ கதையில் வரும் இந்தவரிகள் அழுத்தமானவை .
இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்தபின் ஒவ்வொரு
ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால் , அதுவே இந்நூலின் பெருவெற்றி
!
எல்லா கதைகளையும் சொல்ல ஆசை . நீங்களே வாசித்து உணர்வதே
நன்று .
இவர் கவிஞர் என்பதால் இவர் எழுத்தில் அதில் கூர்மை கொள்கிறது
.”ஒரு வீட்டின் உயிர்ப்பு ,சமையில் அறையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.” என்ற வரியும்
அதைத் தொடர்ந்த சித்தரிப்பும் அதை மெய்பிக்கிறது .
பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை படம்பிடிக்கும் ஆயிரம் கதைகள்
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் . இந்த ஆண் மையச் சமூகம் உணர ஒன்று இரண்டு போதாது
.
ஒரே ஒரு வேண்டுகோள் . அடித்தட்டு மக்கள் எல்லோரும் குடிகாரர்கள்
அல்ல . குடி மட்டுமே குடும்ப வாழ்வின் நிம்மதியைக் கெட்டுக்கும் வில்லன் அல்ல .குடி
ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அல்ல .அது ஓர் நோய் . அது உடல் நலம் சார்ந்த பிரச்சனை .
இந்தப் பண்பாட்டுப் புரிதல் நம் சமூகத்துக்கு வர வேண்டும் .இனி வரும் உங்கள் எழுத்துகளிலும்
அது தலை காட்டட்டும் .
வாழ்த்துகள் .
கன்னிமார் சாமி ,ஆசிரியர் : சுஜாதா செல்வராஜ் ,
வெளியீடு : காலச்சுவடு பப்பிளிகேஷன்ஸ் [பி] லிட்.,
தொடர்புக்கு : 91-4652-278525, publications@kalachuvadu.com பக்கங்கள் : 143 , விலை : 190 /
சு.பொ.அகத்தியலிங்கம் .
16 /02 /26 .

0 comments :
Post a Comment