இருட்சிறையில் பிறந்த சூரிய ஒளி

Posted by அகத்தீ Labels:



புரட்சிப் பெருநதி - 7


இருட்சிறையில் பிறந்த சூரிய ஒளி

சு.பொ.அகத்தியலிங்கம்.



பைத்தியமாக நடித்தார். பைத்தியத்தை சிறையில் வைக்கமாட்டார்கள்
என்று கருதினார். கடும் மருத்துவ சோதனைகளாலும்
அவருக்கு பைத்தியம் இல்லை என்று
ஆட்சியாளர்களால் நிரூபிக்க முடியவில்லை;
ஆயினும் விடுதலை செய்யவில்லை.




சிறைக்கொடுமையும் சித்ரவதையும் அவரை நடைபிணமாக்கிவிட்டது. நண்பர்கள் சிலரை பார்வையாளராய் வரவைத்து தன் கனவு நூலை வாய்வழி சொல்லி எழுதவைக்க முயற்சித்தார். ஆனால் தந்தையும் உறவினருமே வந்தனர்; அவர்களுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது. இடிந்து போனாலும் சமாளித்து உடல்வலியோடு போராடி கிறுக்கல் கையெழுத்தோடு எப்படியோ அந்த நூலை எழுதினார்.

71 வயது வரை வாழ்ந்த அவர் 27 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்தார்; அதிலும் பெரும் பகுதியை வெளிச்சமே புகாத இருட்சிறையில் கழித்தார் .
அவர்தான் தொம்மாசோ கம்பானெல்லா; அந்த நூல்தான்சூரிய நகரம்’.

இத்தாலியில் டி கலப்பிரிய வட்டத்திலுள்ள ஸ்டெப்பியானோ கிராமத்தில் ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாய் 1568இல் பிறந்தார். இளமையிலேயே தத்துவ ஆர்வமும் அறிவியல் தேடலும் மிக்கவராய் இருந்தார். அரிஸ்டாட்டிலின் தத்துவ வழியை நிராகரித்து; பட்டறிவு சார்ந்து பேசிய தெலோசியா என்பவரின் கருத்துகளை ஆதரித்தார்; அவரை ஆதரித்து நூலே எழுதினார். இது மத பீடங்களை அலறவைத்தது . சிறையிலடைக்கப்பட்டார் விசாரணை முடிந்து உள்ளூரிலேயே தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டார் .

மீறினார். சிறகடித்துப் பறந்தார் . புதிய நூல் எழுதினார், மீண்டும் கைது செய்யப்பட்டார். இரும்புக் கூண்டில் மிருகங்களைப் போல் அடைத்து ரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு தனிமை இருட்சிறையில் அடைக்கப்பட்ட போதுதான்சூரிய நகரம்அவருள் விசுவரூபமெடுக்கலாயிற்று. புனித தாமஸ் மூர் எழுதியகற்பனைத் தீவுஎன்கிற நூல் இவருள் கிளர்த்திய வேட்கையே சூரிய நகரின் விதையானது.இம்முறை விடுதலையானதும் தலைமறைவானார். ஸ்பானிய ஆதிக்கத்தால் தெற்கு இத்தாலியின் பொருளாதாரமும் பண்பாடும் சீரழிந்திருந்ததைக் கண்டு வெகுண்டார். அதற்கு எதிராய் எழுதவும் செயல்படவும் தொடங்கினார். மீண்டும் கடும் சிறை.

பைத்தியமாக நடித்தார்.பைத்தியத்தை சிறையில் வைக்கமாட்டார்கள் என்று கருதினார். கடும் மருத்துவ சோதனைகளாலும் அவருக்கு பைத்தியம் இல்லை என்று ஆட்சியாளர்களால் நிரூபிக்க முடியவில்லை; ஆயினும் விடுதலை செய்யவில்லை. அவர் கருத்துகளைக் கண்டு அஞ்சியது அரசும் மதபீடமும்; நெடிய சிறைவாசம் இப்போது தொடங்கியது.

புரூனோ, கலிலியோ உட்பட பலரைக் கற்றறிந்தார். ‘அப்போலோஜியா கலிலியோஎன்ற ஆய்வு கட்டுரையே எழுதினார். ‘கடவுள் மனிதனைப் படைக்கவில்லை; மனிதன்தான் கடவுளைப் படைத்தான்என உரத்து முழங்கினார்.
மதபீடம் பழிவாங்காமல் இருக்குமோ?ஸ்பெயினின் முடியாட்சி (1600), அரசியல் சூத்திரங்கள் (1601), நாத்திகம் வெல்லப்பட்டது (1605-1607), மெட்டாபிசிக்கா (1609-1623), தியோலொஜியா (1613-1624) என்பவை இவரின் முக்கிய படைப்புகள் .

இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான  ‘சூரிய நகரம்’ முதலில் இத்தாலிய மொழியிலும், 1623இல் இலத்தீனிலும் எழுதப்பட்டது. 1638 இல் பாரீசில் வெளியாகியது.நெடிய கடற்பயணம் முடித்து திரும்பிய ஒரு கேப்டன் தன்னுடன் தங்கி இருக்கும் ஒரு விருந்தாளியோடு உரையாடும் போது, தான் கண்ட சிறிய தீவான சூரிய நகரத்தை விவரிக்கும் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல்.
அந்த நகரம் ஒரு மலை மீது இருந்தது .ஏழு வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது . ’சூரியன்தான் ஆட்சித் தலைவர் . அவரோடு சம அதிகாரத்தில்வலிமை’, ‘அறிவு’, ‘அறம்’ (அன்பு) என மூன்று பேர் இருந்தனர் . சூரியனே மதகுருவாகவும் லெளகீக விவகாரங்களில் வழிகாட்டுபவராகவும் இருப்பார். இராணுவம் பாதுகாப்புக்குவலிமைபொறுப்பு -கல்வி ,மருத்துவம் போன்றவற்றைஅறிவுகவனிக்க- விவசாயம், கால்நடை போன்றவற்றைஅன்புகவனித்தது. 20 வயதான அனைவருக்கும் வாக்குரிமை - புகார் செய்ய விமர்சிக்க உரிமை -ஆண்,பெண் இருவருக்கும் சம உரிமை , சம வாய்ப்பு -கல்வி ,வேலை சுய விருப்பத் தேர்வாக அனைவரும் மனமுவந்து பங்கேற்கும் ஏற்பாடு- .
தொழில் நுட்பம் புகுத்தப்படுவதால் வேலைப் பளு குறைய - , வேலை நேரமும் நான்கு மணி நேரமானது . கருத்தால் உழைப்போரும் ,கரத்தால் உழைப்போரும் சமமாக நடத்தப்பட்டனர் . சொத்துடமையே பல தீங்குகளின் மூலம் என்பதால்; தனிச் சொத்துரிமை அகற்றப்பட்டு; சமூகத்துக்கே அனைத்தும் பொதுவானதாக இருக்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

சூரியனின் ஒளி பாரபட்சமின்றி எல்லோரையும் முழுக்காட்டுவதுபோல் ஒரு சமூகத்தை கற்பனை செய்து அதற்கு சூரிய நகரமென்று பெயருமிட்டார். மொத்தத்தில் ஒரு கற்பனா சோஷலிச சொர்க்கமாக இதனை வரைந்து காட்டினார்.

திருமணம் போன்ற உறவுகளில் மதகுரு சூரியனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது; மதம் தொடர்பான மூடநம்பிக்கைகளை அனுமதித்தது;ஆன்மா அழிவற்றது என்ற நம்பிக்கை போன்ற சில மோசமான கூறுகளும் இவரது சூரியநகரத்தில் இடம் பெற்றிருந்தது .

சூரிய நகரில் மதத்துக்கு இடமிருந்த போதிலும் கம்பானெல்லா தொடர்ந்து கடவுளை கேள்விக்குள்ளாக்கினார், ‘கடவுள் எல்லையில்லா பரம்பொருளானவர்நல்லவர்கருணையானவர் எனில் துன்ப துயரங்களும் ,துரதிர்ஷ்டங்களும் போன்றவை மழையெனப் பொழிவதேன்? பஞ்சத்தை, நோய்களை, போர்களை கடவுள் ஏன் தடுக்கவில்லை?’ எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

போப்பின் மரணநாள் குறித்து ஒரு சோதிடன் அறிவிக்க போப் மிரண்டார் ; சிறையிலிருந்த கம்பானெல்லா தந்திரமாக இதனைப் பயன்படுத்தி நாடகமாடி போப்பின் சலுகையை பெற்று விடுதலையானார். சிறைவாசமும் சித்ரவதையும் அவர் சிந்தனையை கனவை கிஞ்சிற்றும் சிதைக்கமுடியவில்லை.

பிரெஞ்சு நாட்டுக்கு போன அவர் அங்கு புனித ஜேக்கப் மடாலயத்தில் தங்கினார்; கல்வி சபைகளுக்கு தலைமை ஏற்றார்; அறிவுப் பசியோடு புதியனவற்றைக் கற்றுக்கொண்டே இருந்தார்.
இவர் தன் கனவு நகரம் பூக்கும் என நம்பினார்; அறிவியல் மேதைகள் கொல்லப்படுவது குறித்து வருந்தி மதத் தலைவருக்கும் ஆட்சித் தலைவருக்கும் எழுதிய கடிதம் ஒன்றில், ‘வரக்கூடிய சகாப்தம் எங்களைச் சரியாகக் கணிக்கும்; இன்றைய சகாப்தமோ தங்களுக்கு நன்மை செய்கிறவர்களையே சாகடிக்கிறதுஎன்றார். 1639ல் மரணமடைந்தார்.

காரல் மார்க்ஸ் அறிவியல் பூர்வமான சோஷலிசத்துக்கு தத்துவம் படைக்கும் வரை இத்தகு உட்டோபியன்கள் தொடர்ந்தன . மனித குலத்தை விடுவிக்கும் நல்லெண்ணக் கனவாக இதனைப் பார்த்தார் லெனின் . எனவே இந்நகரம் குறித்த ஓவியக் காட்சி ஏற்பாடு செய்யலாம் என்றுகூட யோசனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
புரட்சி தொடரும்

நன்றி : தீக்கதிர் 19/12/2016.



0 comments :

Post a Comment