கட்சிக் கல்வி : நேற்றும் இன்றும்

Posted by அகத்தீ Labels:

 






கட்சிக் கல்வி : நேற்றும் இன்றும்

[ இது முழுக்க முழுக்க என் அனுபவம் புரிதல் சார்ந்தது மட்டுமே . சற்று பெரியது .கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் என வேண்டுகிறேன். ]

சில நாட்கள் முன்பு ஒரு பழைய தோழர் எப்படியோ என் அலைபேசி எண்ணை தேடிவாங்கிப் பேசினார் . ரொம்ப மகிழ்ச்சி . “இன்றைக்கு கட்சிக் கல்வி சிபிஎம்மில் பெருமளவு குறைந்து விட்டது” என அவர் வருந்தினார் .எங்கள் உரையாடல் முழுவதும் கிட்டத்தட்ட அதனைச் சுற்றியே வட்டமிட்டது .

“இங்கே நடந்த உரையாடல் சார்ந்து நான் ஒரு பதிவு எழுதுவேன்” என அவரிடம் வாக்குக் கொடுத்தேன் . அதன் பின் நான் பலவற்றை நினைத்துப் பார்த்தேன் . எழுதுகிறேன்.

“நேற்று எல்லாம் சிறப்பாக இருந்தது ; இன்று எல்லாம் கேட்டுப்போச்சு” என்கிறவர்களோடு எனக்கு உடன் பாடில்லை . நேற்றின் தேவையும் சூழலும் வாய்ப்பும் இன்றைய தேவையும் வாய்ப்பும் சூழலும் ஒருப்போல் இல்லை . ஆகவே நேற்றையும் இன்றையும் வறட்டுத்தனமாக ஒப்பிட விரும்பவில்லை . அனுபவத் தடங்களில் கொஞ்சம் அழைத்துச் செல்வேன் .

“கட்சித் திட்டம்” , மனிதகுல வரலாறு “” மார்க்சிய தத்துவம்”, “ சிபிஎம் சிபிஐ எம் எல் தத்துவ வேறுபாடு “ , “ சுதந்திரப் போராட்ட வரலாறு”, “ ரஷ்யப் புரட்சி வரலாறு” , “ சீனபுரட்சி வரலாறு” , “ தெலுங்கான போராட்ட வரலாறு “ “ கட்சி வரலாறு” “ கட்சி அமைப்பு “ “ மார்க்சியப் பொருளாதாரம்” “ திராவிட இயக்க வரலாறு” “ இந்திய மண்ணின் பொருள்முதல்வாதம்” “ உயிரின் தோற்றம்” ” ஏகாதிபத்திய சதிகள்” இப்படிப்பட்ட தலைப்புகளில் தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் , வி.பி.சிந்தன் . பி.ராமச்சந்திரன் , கே.வரதராஜன் , எஸ் ஏ பெருமாள் ,வே.மீனாட்சிசுந்தரம் ,எஸ் ஏ பெருமாள் , மதுரை எழிலன் என்கிற சுந்தரம் , மைதிலிசிவராமன் , ஆத்ரேயா , நெல்லைச் செல்வன் உட்பட [ இன்னும் சில பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை ] ஒரு பெரும்படை களத்தில் நின்றது . தோழர் ஏ.பாலசுப்பிரமணியன் , எம் ஆர் வெங்கட்ராமன் போன்றோரும் வகுப்பில் ஆசிரியராக வருவார்கள் .

அப்போது வகுப்பு எனில் ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று மணி நேரம் தொடங்கி ஏழு மணி நேரம் எல்லாம் நடக்கும் . கடைசியில் கேள்வி பதில் இருக்கும் . அதுவும் ஒரு கேள்விக்கே கால் மணி /அரை மணி நேரத்துக்கு குறையாமல் பதில் சொல்லுவார்கள் . இது போக மத்தியக் குழு முடிவுகள் குறித்து அரசியல் ரிப்போர்ட் அடிக்கடி நடை பெறும் . குறைந்தது இரண்டரை மணி நேரம் ரிப்போர்ட் செய்வார்கள் .

நான் முதன் முதலில் கலந்து கொண்ட வகுப்பு தோழர் து .ஜானகிராமன் அவர் வீட்டில் நான் உட்பட நான்கைந்து இளம் தோழர்களுக்கு கட்சியைப் பற்றி அவர் பேசியதுதான் . முழுநாள் வகுப்பாக கலந்து கொண்டது தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் ‘கட்சித் திட்டம் ‘ குறித்து பேசியதுதான் .அப்புறம் ஓர் முறை ‘மார்க்சிய தத்துவம் குறித்து ‘ ஒரு நாள் முழுக்க [ ஏழு மணி நேரம் ] அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு அசந்துவிட்டேன் .அதையே பலநாள் பேசிக் கொண்டிருந்தேன் . முதன் முதல் பி.ஆர்.பி வகுப்பில் நான் கேட்ட ”சந்தேகம் புரட்சி எப்போது வரும் ?” . பல வகுப்பாசிரியர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுள்ளேன் . அன்றைய புரிதலின் தரம் அவ்வளவுதான்.

சென்னையில் வாலிபர் சங்கம் கிட்டத்தட்ட மேலே பட்டியலிட்ட தலைப்புகள் சார்ந்து வாலிபர் சங்க மேடைக்கேற்ற தலைப்பாக்கி டிக்கெட் போட்டு சிறப்புக் கூட்டம் நடத்திய அனுபவம் உண்டு .இரண்டு மணி நேரம் உரை இருக்கும் . சுமார் அறுநூறு பேருக்கு குறையாமல் பங்கேற்பார்கள் . சென்னை கேரள சமாஜத்தில்தான் பெரும்பாலும் நடை பெறும் . நிதிக்கு நிதியும் ஆச்சு , அரசியல் கல்வியும் ஆச்சு !

அன்றைய கல்வி போதனையின் வடிவமும் தேவையும் அன்றைய பொது சமூகச் சூழல் , உறுப்பினர்கள் பெரும்பாலோரின் பள்ளிக் கல்வித் தரம் ,வாய்ப்பு இவை சார்ந்தே தீர்மானிக்கப்பட்டது . ஆகவே மேலிருந்து அனைத்தையும் ”ஸ்பூண் ஃபீடு” [spoon feed ] என்பார்களே அதுபோல் வாயில் ஊட்டுவதுபோல் மேலிருந்து விலாவாரியாகச் சொல்வதாகவே அமைந்தது . ஆகவே பல மணி நேரம் வகுப்பு என்பது அன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது ..

அன்றைய போதனை முறை ’ஒத்த கருத்தோட்டத்தை’ எல்லோர் மூளையிலும் பதியம் போடுவதில் வெற்றி பெற்றது ஆனால் அது கடிவாளம் கட்டிய குதிரை போல் ஒரு நேர்கோட்டு பயணமாகவே அமைந்தது . அப்போதே இந்த பாணியில் தொடர்ந்து மணிகணக்கில் போதிப்பது மட்டும் போதாது . வேறு வடிவங்களும் தேட வேண்டும் என்கிற விவாதமும் நடந்தது .

பின்னர் என் போன்றவர்கள் களத்துக்கு வந்த காலம் . வகுப்பு ஒன்றைரை மணி முதல் இரண்டுமணி நேரம் என்றானது .ஒரே நாளில் இரண்டு மூன்று தலைப்புகளில் போதனை என்றானது .பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டன . எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதின் எதிரொலி இது . நான் ஏராளம் வகுப்புகளில் ஆசிரியராக இருந்துள்ளேன்.

அன்றைய பின்னணியில் ’மார்க்சிஸ்ட்’ என்கிற தத்துவ ஏடொன்று துவக்கப்பட்டது .இன்னும் வந்து கொண்டிருக்கிறது . அவ்வேடு மாறுபட்ட கோணங்களில் கட்டுரை எழுதவும் அதனை ஒட்டி விவாதமாக பலர் எழுதவும் இறுதியில் சரியாண கோணத்தில் தெளிவுபடுத்துவதும் என்கிற முயற்சி செய்ய வேண்டும் என்பது அப்போது பேசப்படது . பேச்சோடு நின்று போனது . இப்போதுவரை செயலுக்கு வந்ததாகத் தெரியவில்லை . தோழர் ஈ எம் எஸ் எப்போதும் தேசாபிமானியில் சிந்தாவில் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வார் . அதில் பலநேரங்களில் விவாதத்தை அவரே துவக்கி தூண்டிவிடுவார் . அவரே நிறைவும் செய்வார் .இது கட்சி முழுவதையும் கருத்து ரீதியாக ஒருங்கிணைக்க ஆயுதமானது . மாறுபட்ட கருத்து விவாதம் தவறல்ல ; இறுதியில் கட்சி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

அன்றைய தலைவர்கள் பரந்த புத்தக வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருந்தனர் .ஆனால் களத்தில் அப்படி இல்லை . ஆகவே இதில் மாற்றம் கொண்டுவர பெரும் முயற்சி நடந்தது . என்சிபிஹெச் பதிப்பகத்தில் சோவியத் யூனியன் வெளியீடாக அடிப்படை மார்க்சிய நூல்கள் மிக மலிவான விலையில் தமிழில் தாரளமாக கிடைத்தன .வாங்கிக் குவித்தனர் .ஆனால் படிப்பதும் புரிவதும் எல்லோருக்கும் வாய்க்கவில்லை காரணம் கடினமான மொழிபெயர்ப்பாக இருந்தது . அதேநேரம் சோவியத் நாவல்கள் ,சிறுகதைகள் மிகப்பெரும் வாசகர் பரப்பைச் சென்றடைந்தன

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதின் எதிரொலி .கட்சிக்குள் புத்தக வாசிப்பு முக்கியமாக இரண்டு வகையில் இருந்தது . முதல் ரகம் ஆழமாக பலதரப்பட்ட நூல்களைத் தேடி வாசிக்கும் பிரிவினர் .இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு . கட்சி பிரசுரங்கள் ,வெளியீடுகள் , ஏடுகள் இவற்றுக்குள் வட்டமிடும் பெரும்பாலோர் . சொல்லப் போனால் கட்சிப் பார்வைக்கு வெளியே எட்டிப்பார்ப்பதே குற்றம் என்கிற பார்வைகூட இருந்தது என்றாலும் தப்பில்லை .

’நீண்டபயணம்’ ,சமரன்’ போன்ற நக்சலைட் ஏடுகளை நாம் வாசிப்பதை யாராவது பார்த்துவிட்டால் கட்சிக் கிளையில் பெரும் விவாதமாகிவிடும் . அப்படித்தான் நூல்கள் வாசிப்பும் . இது கட்சிக் கட்டுப்பாடாக மூத்த தோழர்கள் சிலர் பார்த்ததும் உண்டு .நான் பலமுறை சிக்கி கடிப்பட்டதும் உண்டு . நான் கண்ணில் பட்டதை எல்லாம் வாசிக்கும் டைப் . பிரச்சனைதான் .

நோக்கு என்கிற கவிதை ஏட்டில் [ டிராஸ்கிய ஏட்டில் ] சு.பொ.அலி என்ற பெயரில் நான் எழுதிய கல்ராயன் மலை கொத்தடிமைகள் குறித்த நெடுங்கவிதை வந்தது . வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் அதனை சிலர் விற்ற போது தடுக்கப்பட்டனர் .நானும் கண்டிக்கப்பட்டேன் .இனி இந்த ஏடுகளில் எழுதக்கூடாது என அறிவுறுத்தப்பட்டேன். இதை எல்லாம் சொல்லுவதற்கு காரணம் .அன்றைய கட்சிக் கல்வி குறிப்பிட்ட வட்டத்துக்குள் தோழர்களை சுழலவைத்தது .

ஆனால் இன்றைய சூழல் முற்றிலும் மாறியுள்ளது .கட்சிக்குள் கற்றவர் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது . கல்லூரிக்கு போனவர்களும் கணிசமாக உள்ளனர் . இன்றைய கட்சி உறுப்பினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருள் பல்வேறு கருத்துகளை சரியாகவோ தவறாகவோ அலைபேசியும் கணினியும் கொட்டிக்கொண்டே இருக்கிறது . கூகுள் ஆண்டவர் உதவியால் எந்தத் தகவலையும் நொடியில் பெற்றுவிட முடியும் . இப்போது AI செயற்கை மூளை அல்லது இயந்திர மூளை கொட்டும் தகவல்களை அலசிப் பார்க்கத்தான் பழக்க வேண்டி இருக்கிறது .

இன்றைய வாசிப்பு தளமும் மிகவும் விரிவடைந்துள்ளது . நான் ஐம்பது அறுபது வயதில் படித்தவைகளை 25 வயதுக்குள் படித்துவிடுகிறார்கள். ஆக , கொரானா காலத்தில் இணையதளம் மூலம் கல்வி சாத்தியமாயிற்று .இப்போது மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார வைப்பது மிகச் சிரமம் . ’ஒன் வே டிராபிக் போல’ மேலிருந்து அள்ளிக் கொட்டுவது என்கிற முறை கிட்டத்தட்ட காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது .கலந்துரையாடல் ,உரையாடல் என கொடுப்பதும் வாங்குவதுமாய் இருவழிக் கல்வியாகிக் கொண்டிருக்கிறது .

இன்றைய இளைஞர்கள் சமூகவலைதளங்கள் மூலம் பெற்ற பல்வேறு தவறான தகவல்கள் , எதிர் சிந்தனைகள் இவற்றோடுதான் வருகிறார்கள் .ஆளும் வர்க்கம் கருத்துருவாக்கத்தில் அசுரவேகத்தில் இயங்குகிறது .அதன் கடும் பாதிப்போடு வரும் இளைஞர்களோடு நட்போடு உரையாடி பயிற்றுவிப்பது இன்றைய சவால் . இணையத்தில் படித்தது கேட்டது எல்லாமே சரி என்றோ தவறென்றோ சொல்லிவிட முடியாது .பாலையும் தண்ணீரையும் சேர்த்து வைத்தாலும் பாலை மட்டுமே பிரித்து குடிக்கும் அன்னப்பறவை இருந்ததாக கற்பனையில் சொல்வார்களே அது போன்ற திறமைக்கு தயார்படுத்த வேண்டும் . அந்த அளவு சவால் உள்ளது .

’அடையாள அரசியல்’ , ’மதவெறிக்கு எதிரான தத்துவப்போர்’ , ‘சாதியத்துக்கு எதிரான தத்துவப் போர்’ , ‘வரலாற்றை மதவெறி இன்றி புரிய வைக்க பெரும் முயற்சி’ ,’எது ஜனநாயகப் பண்பாடு’ , ’பாலின சமத்துவம்’ , ’உலகமய பொருளாதாரமும் அரசியலும்’ , இப்படி கல்வியின் வட்டம் விரிவாகிக்கொண்டே இருக்கிறது . தேவை பெருத்துக் கொண்டே இருக்கிறது.

1] DIALITICAL MATERIALISAM 2] HISTORICAL MATERIALISAM 3] POLITICAL ECONOMY 4] COMMUNIST MOVEMENT 5] PROGRAMME 6] SOCIAL GROPES 7] ORGANISATION 8 ] THEREAT OF RSS AND HINDUTVA FORCES HOW TO COUNTER THEM

என கடசியின் மத்தியக்குழு எட்டு பாடத்திட்டங்கள் வெளியிட்டுள்ளது . ஆங்கிலத்தில் அவை கிடைக்கின்றன . தமிழிலும் கிடைக்கலாம் . மேலும் பல நூல்களும் சிறுவெளியீடுகளும் உள்ளன ,இன்னும் தலைப்புகளும் பரப்பும் விரிவாகிக் கொண்டே செல்கிறது . கட்சிக் கல்வியின் வளர்ச்சியும் தேவையும் அத்தகையதுதான் .

1981 வாலிபர் சங்க திருப்பூர் மாநில மாநாட்டில் தோழர் என் .நன்மாறன் சொன்னார் , “ ’கற்றலின் கேட்டலே நன்று’ என்று சொன்னது எப்போது ? ‘ எல்லோரும் படிக்கக்கூடாது ; நாங்க மட்டும்தான் படிக்கணும்னு’ சொன்ன காலகட்டத்தில் சொன்னது . அது மலையேறிவிட்டது .எல்லோரும் படிக்கணும் .சுயகல்விக்கு தூண்டுவது மட்டுமே இன்றைக்கு நம் அரசியல் வகுப்பாக இருக்க முடியும் .சுயகல்விக்கு மாற்றாக அரசியல் வகுப்புகள் இருக்க முடியாது.”

அது மெய்தானே . இன்றைக்கு கட்சி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ள பட்டியலில் ’புத்தக வாசிப்புக்குத் தூண்டுவதும்’ இடம் பெற்றுள்ளது .இது காலத்தின் தேவை . புத்தக வாசிப்புக்கு மாற்று இல்லை . புத்தக வாசிப்பு என்பது ’இ புக்’ வாசிப்பதும்தான்; இணைய வாசிப்பும்தான் .

நாங்கள் சோதித்த ஒரு முயற்சி . தோழர் வே.மீனாட்சி சுந்தரம் மாவட்டச் செயலாளர் .நான் செயற்குழு உறுப்பினர் . தோழர் க.சின்னையா மூவரும் கட்சிக் கல்விக்குழு .ஒரு தலைப்பை தேர்வு செய்வோம் . வாசிக்க வேண்டிய முக்கிய நூல்களின் பட்டியல் தேர்வு செய்வோம் . கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் ,முழுநேர ஊழியர்கள் அனைவருக்கும் நூல் பட்டியலை அனுப்பி நூல் கிடைப்பதை உறுதி செய்தி வகுப்பு நடை பெறும் . ஒருவர் 15 அல்லது 20 நிமிடம் அறிமுக செய்வார் .பின் யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். யார் கைதூக்குகிறார்களோ அவர்கள் பதில் சொல்லலாம் . எல்லோரையும் கேள்வி கேட்பவராகவும் பதில் சொல்லுகிறவராகவும் மாற்றுவது எங்கள் வேலை .சரியான பதில் கிடைக்கும் வரை மேலும் சிலரை பதில் சொல்லக் கோருவோம் .தேவைப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் .சில வகுப்புகள் இப்படி நடைபெற்றன .அப்புறம் நின்று போனது . இதற்கு பெரு முயற்சி தேவைப்பட்டதே காரணம் . இது ஒரு சோதனை முயற்சியே !

காலமும் சூழலும் கருவிகளும் மாறியுள்ளன .நாமும் மாற வேண்டும் .கட்சிக் கல்வியும் நவீனமாக வேண்டும் . கருத்துப் போர் நடத்த ஒவ்வொருவரும் தன்னை கருத்துரீதியாக ஆயுத பாணியாக்க வேண்டிய நேரம் . ’அரைத்த மாவை அரைக்காமல்’ ஒவ்வொரு நொடியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கு வேண்டியுள்ளது . எனக்கு ஓர் நினைவு தோழர் பி.ஆர்.சி எங்கு பேசினாலும் அண்மையில் தான் படித்த நூல் ஒன்றை குறிப்பிட்டு அதிலிருந்து சில தகவல்களைச் சொல்லி படிக்கத் தூண்டுவார் . மைதிலி சிவராமனும் அப்படிச் செய்வார் .

ஐடி [IT]யில் வேலை பார்ப்பவர்களிடம் கேளுங்கள் தங்களை அப்டேட் பண்ணாதவர்கள் பணியில் நிலைக்கவே முடியாது .ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருந்தால்தான் வாழமுடியும் . கட்சி கல்வியும் அப்படித்தான் . பேசுவது எளிது .நடைமுறை சவால் மிக்கது .இதில் முயற்சி போதவில்லை .தேவைக்கு ஏற்ப இல்லை என்பது சரிதான் .ஆனால் இதனை ஒரு வழிப்பாதையில் சரி செய்ய முடியாது .பன்முகப் பார்வையும் அணுகுமுறையும் தேவை .இளைய தலைமுறை அதில் வெல்வார்கள் என்கிற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

சுபொஅ.
08/09/25.

Time Machine

Posted by அகத்தீ Labels:




"Time Machine" அதாவது “கால இயந்திரம்” ஒன்று என் கனவில் வந்தது . எனக்கும் அதற்கும் உரையாடல் தொடங்கியது .

TM : என் மீது ஏறிக்கொள்! நீ விரும்பிய பழைய காலத்துக்கு எடுத்துச் செல்கிறேன் .

நான் : என் இணையரையும் அழைத்துக் கொள்ளட்டுமா ?

TM : ஆஹா , வரலாம் .தடை இல்லை . முதுமையில் காதல் கெட்டியாக இருக்கிறது போல……. ம்…ம்.. நடக்கட்டும் …நடக்கட்டும்…

நான் : மணமுடித்து வருடங்கள் கடகடவென உருண்டோடிவிட்டதே …

TM : சரி ! எந்த வருடம் எந்த தேதிக்கு பின்னுக்கு போக வேண்டும் …

நான் : [ சற்று வெட்கத்தோடு ] என் இணையரை பெண் பார்த்த நாளுக்கு…

TM : ஓ ! அங்கிருந்து கதை தொடங்கவா ? ஏன் ?

நான் : நான் அன்றிலிருந்து செய்த தவறுகள் ,அவசரக் குடுக்கைத் தனங்கள் , கோப தாபங்கள் , தடுமாற்றங்கள் ,புரிதல் குறைபாடுகள் எல்லாம் எனக்கும் அவளுக்கும் இப்போது புரிகிறது … பக்குவம் வந்துவிட்டது …

TM : அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் …

நான் : பழையபடி அங்கிருந்து வாழ்வைத் தொடங்கினால் இந்த ஐம்பதாண்டு அனுபவத்தோடு தெளிந்த நீரோடையாக வாழ்க்கைக் கொண்டு போகலாம் .. தென்றல் மணக்க ரீங்காரமிடலாம்…

TM : எல்லாம் சரி ! புதிய தப்புகள் நிகழாது என உங்களால் உறுதிகூற முடியுமா ? இனி கோப தாபம் உருவாகாதென்று உறுதியாக சொல்ல முடியுமா ? கணினி இல்லாத அலைபேசி இல்லாத அமேசான் இல்லாத சுவிக்கி இல்லாத ; ‘இன்று நீ அனுபவிக்கும் பலதும்’ இல்லாத நேற்றுக்குள் உன்னால் இனி வாழமுடியுமா ?

நான் : சாத்தியமில்லை … சாத்தியமில்லை… நேற்றின் நெருக்கடிகளும் கசப்பும் பண முடையும் சவால்களும் கூடவே வரும் அல்லவா ? யோசிக்கவே பயமாக இருக்கிறதே !

TM : ஆம் .ஆம். நிச்சயம் .ஒவ்வொரு காலகட்டமும் அததற்கு உரிய பிரச்சனைகளும் சவால்களும் மிக்கதுதான்… காயங்களும் சிராய்ப்புகளும் மோதலும் கூடலும் இல்லாமல் வாழ்க்கை வறட்டு இயந்திரமாகிவிடுமே என்னைப்போல !

நான் : ஆமாம் . ஆமாம் . ஆமாம். பட்டறிவின்றி வாழ்க்கை ஏது ?

TM : சரியாகச் சொன்னீர்கள் ! நிச்சயமாக நேற்று என்பது முடிந்து போனது .அசை போடலாம் . அனுபவம் பெறலாம் . நேற்றில் வாழ முடியாது . நாளை என்பதை கனவு காணலாம் அதற்காக விதை போடலாம் இன்றில் காலூன்றாமல் நேற்றின் பாடம் கற்காமல் நாளையில் பறக்க இயலாது …

நான் : மெய் … மெய்… அப்புறம் ஏன் உன் மீது ஏறி பின்னோக்கி பயணம் போக வேண்டும் ?

TM : நேற்றின் பாடம் கற்க . ஒரு கற்பனை .ஓர் அசை போடல் . வேர்களை அடையாளம் காண அவ்வளவுதான் … இன்றும் நாளையும் நம் கையில்தான் … நேற்றும் அப்படித்தான் இருந்தோம்… கால இயந்திரம் விரைந்து கொண்டே இருக்கிறது … சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது …கருவிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன … அதனை ஒட்டி … கருத்துகளும் …கலாச்சாரமும் ..வாழ்வின் ஒவ்வொரு கூறும் மாறிக்கொண்டே இருக்கின்றன … நீயும்தான் …

நான் : அப்படியானால் உன் பணி யாது ?

TM : நேற்றில் உன்னை பயணிக்கச் செய்து பரிணாம மாற்றங்களை சமூக மாற்றங்களை தனிமனித மாற்றங்களை வாழ்க்கை மாற்றங்களை உனக்கு உணர்த்துவதும் மாற்றங்களை சாதிக்க உன்னைத் தூண்டுவதும் மட்டுமே என் பணி …

நான் : ஆஹா ! என்னுள் ‘அக்னிக் குஞ்சு’ ஒன்று படபடக்கிறது .நன்றி !

TM : மிக்க மகிழ்ச்சி ! நன்றி !

சுபொஅ.
06/09/25

பிள்ளையாரப்பா !

Posted by அகத்தீ Labels:

 


பிள்ளையாரப்பா !



குட்டி குட்டி மண்பிள்ளையாரை

டிரம் தண்ணீரில் போட்டு

மூடிவைத்து கரைந்ததும்

வெளியே கொட்டும்

அடுக்கக பக்தர்களை

பிள்ளையாரப்பா ! நீ

பாராட்டி இருக்கவேண்டாமா

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதற்காக ?

 

 

குத்துப்பாட்டும்

மூச்சுமுட்டும் மதுநெடியும்

வசூல் வேட்டையும்

வாரிச் சுருட்டலும்

மனதைக் குமட்டுவதால்தான்

தூக்கி வீசும் போது

“அப்பாடா ! தப்பித்தோம்

இந்த ஆண்டு கலவரத்திலிருந்து” என

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாரா ?

பாவம் ! அந்தப் பிள்ளையாரப்பா !

 

 

மராமத்துப் பணிக்காக

நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட

ஏரியின் ஓரத்தில்

வழிந்தோடிய சாக்கடையில்

வீசிஎறியப்பட்ட பிள்ளையாரப்பா

என்ன நினைத்துக்கொண்டிருப்பார் !

 

 

இரண்டு மூன்று நாட்களாய்

ஒவ்வொரு தெருவிலும்

சுண்டல் ,வடை , இனிப்பு

கொழுக்கட்டை , புலவு என

தன் வாடிக்கையாளர்கள்

வயிற்றை பிள்ளையாரப்பா நிரப்பிட

ஐந்து நாட்களாய்

போண்டா பஜ்ஜி கடையை

மூடிவைத்திருந்த பாட்டி

இன்று கடை திறந்து

சாமியைக் கும்பிடும் நொடியில்

என்ன வேண்டி இருப்பார்

”அடுத்த ஆண்டாவது மூன்று நாளில்

முடித்துக் கொள்ளப்பா பிள்ளையாரப்பா!” என்றா ?

 

சுபொஅ.

06/09/25.


பொம்மலாட்ட ஸ்கிருப்ட்

Posted by அகத்தீ Labels:

 


தலையைத் தடவு
கட்டியணை
சிறையில் போடு
மகுடம் சூட்டு
தர்ம யுத்தம் செய் !
சபதம் எடு
தனி ஆவர்த்தனம் வாசி
முட்டி மோது
பிரிந்து போ
தனிக்கடை போடு
கூட்டுச் சேர்
நட்டாற்றில் விடு
அவரைத் தூக்கு
இவரை மிதி
இவரை அவரை
விடாதே துரத்து கைவிலங்கோடு
ஆட்டுவி ! உன் விரல் அசைவில்
வாய் அவனுடையது பேச்சு உன்னுடையது
ஒற்றுமை உதடு சொல்க
சுக்கல் சுக்கலாய் உடைத்தெறி
இனி இவர்களை நம்புவதைவிட
சாணி நக்கியிடம்
சரணடைந்து விடுவதே மேலென
புத்தி பேதலிக்க விடு !
இது அரசியல் இல்லப்பா
நவீன பொம்மலாட்ட ஸ்கிருப்ட் !
'நாக்பூர் ஸ்டைல் கபளீகரம்' !

சுபொஅ.
05/09/25.

சொல்லித் தீராத உண்மைகள் .

Posted by அகத்தீ Labels:

 





 

சொல்லித் தீராத உண்மைகள் .

 

 

இன்றைய ஊடகங்கள் மீதான கோவமும் விமர்சனமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . அவை எல்லாம் ஒரே கோணத்தில் இருக்காது , அவரவர் அரசியல் பார்வைக்கு ஏற்ப இருக்கும் . ஆயினும் உண்மை எது ? தேடுக தொடர்ந்து .

 

களப்பணியாளர்களும் ,ஊடகப் பார்வையாளர்களும் ஊடகத்தில் பணியாற்றுகிறவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை ‘ விலக மறுக்கும் உண்மைகள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக தந்துள்ளார் அ.ப.அருண்கண்ணன் . தாமதமாகத்தான் படித்தேன் . சொல்கிறேன்.

 

இந்நூல் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு .இதில் நான்கு கட்டுரைகள் ‘வளரி’என்கிற குறைவான வாசகர் பரப்பைக் கொண்ட ஏட்டில் வெளிவந்தவை .ஒன்று ’தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்தது .   

 

 சினிமாவை முன்வைத்து பேசுகிறது கட்டுரை ஒன்று .  ஆவணப்படங்களை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் . புகைப்பட கலைஞனை முன்வைத்து பேசுகிறது இன்னொன்று . கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் பற்றி பேசுகிறது ஒன்று .இப்படி ஐந்தும் தனித்தனியே முகம் காட்டினாலும் இதன் ஊடும் பாவுமாக இருப்பது பாசிச அரசியல் மீதான விமர்சனப் பார்வையே ! பாசிசம் எப்படி ’பொய் பொதிந்த கருத்துத் திணிப்பில்’ மிகவும் நுட்பமாக வினையாற்றுகிறது என்பதை அறிய இக்கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் .

 

இந்தோநேசியாவில் ஒரு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொடுங்கோலன் சுகர்னோ படுகொலை செய்ததை நியாயப்படுத்தி  கம்யூனிஸ்டுகளை தேசவிரோதிகளாகச்  சித்தரிக்கும் ‘பெங்கியானன் ஜி30எஸ்/பி.கே.ஐ’ [ pengkhianatan G30S/PKI ]என்றொரு பிரச்சாரப் படத்தை இந்தோநேசிய இராணுவ ஆட்சி தயாரித்து இளைஞர்களை கட்டாயம் பார்க்க வைத்து , அதை ‘ உண்மைவரலாறு ‘ போல் நம்பவைக்க முயன்றது .இதனை முன்னுரையில் சிந்தன் குறிப்பிடுவதை கவனத்தில் வைத்துக்கொண்டே முதல் கட்டுரையை வாசிக்க வேண்டும் .

 

“ வரலாற்று உண்மையை சொல்ல மறுக்கும்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற படம் விவேக் அக்னி ஹோத்திரி என்பவரால் இயக்கப்பட்டது .1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தியை ’கொடூர உண்மை வரலாறு போல்’ சித்தரித்து இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிட உருவாக்கப்பட்ட திரைப்படமே அது .  மோடியும் சங்பரிவார்களும் இதனைத்தூக்கிச் சுமந்ததில் இருந்தே அது ’புராணப் புளுகு’ போன்ற ’வரலாற்றுப் புளுகு’ என்பது வெளிச்சமாகவில்லையா ? இதனை காஷ்மீர் வரலாற்றுடனும் சங்பரிவாரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்தியும் கட்டுரைக்கு நியாயம் வழங்கியுள்ளார் அருண் கண்ணன் .

 

இதனைப் படிக்கும் போது ‘கேரள ஃபைல்ஸ்’ மற்றும் மராட்டிய திரைப்படம் ‘சாவா’ ஆகிவை எப்படி சிறுபான்மை மக்களை எதிரிகளாக்கியது என்பது நினைவுக்கு வராமல் போகாது . தமிழ்நாட்டிலும் சில திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியும் இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்தரித்தும்  வருவது கவனத்துக்கு உரியது .ஆக ,திரைப்படத்துறையில் மதவெறி சாதிவெறி அரசியல் தொழில்படத்துவங்கி உள்ளதை மிகவும் கவலையோடும் எச்சரிக்கையோடும் பார்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை நம்மிடம் சொல்லுகிறது .

 

 “தந்துரா : உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா ?” இது பாலஸ்தீனத்தின் கதையைப் பேசும் ஆவணப்படம் . 1948 ஆம் ஆண்டு தந்துரா என்ற கடற்கரை கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் . இது செய்தி .இதனை இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது . இரதரப்பையும் அலசுவது போல் இந்த ஆவணப்படம் தோற்றம் காட்டினும் படுகொலை நடந்தது என்பதை வலுவாகவே முன்வைக்கத் தவறவும் இல்லை .ஆயினும்  ,’” ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவிலும் பூர்வகுடிகளை கொன்றதை ஒத்துக்கொண்டதுபோல் நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் .  படத்தில் இறுதியில் நினைவுச் சின்னம் அமைப்படுவதுடன் முடிகிறது ,அதில் ’சுதந்திரப்போர் நினைவுச் சின்னம்’ என்றே பொறிக்கப்படுவது இஸ்ரேலின் பக்கத்தில் பார்வையாளரைப் பிடித்துத் தள்ளுகிறது .இப்படத்தை இயக்கியவர் அலோன் ஸ்வாரஸ் .இவர் இஸ்ரேலைச் சார்ந்தவர் .இவர் இடதுசாரி முகாமைச் சார்ந்தவர் எனச் சொல்வதுதான் அதிர்ச்சி . இது உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா என்பதுதான் கேள்வி . விடை . ஒவ்வொருவரிடமும் மாறுபடும் .

 

இன்னொரு ஆவணப்படம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை ’பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா’   சோபியா ஸ்காட் மற்றும் ஜார்ஜியா ஸ்காட் இயக்கிய ‘டுமாரோஸ் ஃபிரீடம்’ எனும் ஆவணப்படத்தை முன்வைத்து பாலஸ்தீனப் போராளி ’மர்வான் பர்குதி’யின் வாழ்க்கையையும் பாலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் முக்கிய கண்ணியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை .

 

“ அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசிய புகைப்படக் கலைஞன்’ டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் போரின் போது தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் .உலகமே கண்ணீர் விட்டது . ஆனால் அந்த மாபெரும் இந்திய புகைப்படக் கலைஞனுக்காய் மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . இது போதாதா அவர் யார் என்று சொல்ல ? அவரின் புகைப்படக் கருவி எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவுமே படம் பிடித்தது .அவரது புகைப்படங்கள் உண்மையை உரக்கச் சொல்லின . ஊடகங்கள்  மீது ‘இன்னும் நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்ல இத்தகையவர்கள் சாட்சியாகிறார்கள் . ஊடகத்துறையில் செயல்படும் சமூக அக்கறை மிக்க ஊடகக்காரர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணம் . வாசியுங்கள் நண்பர்களே !

 

எண்டிடிவி என்கிற தனியார் கார்ப்பரேட் ஊடகம் எப்படி அம்பானியால் விழுங்கப்பட்டது என்பதைச் சொல்லும் கட்டுரை ; ” ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல்’.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற ஊடகங்கள் ஆட்சி அதிகாரத்தால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறது ஆட்டுவிக்கப்படுகிறது என்பதன் சாட்சி .

 

இந்நூலை எழுதிய அருண்கண்ணனுக்கு வாழ்த்துகள் !

 

ஊடகம்  சினிமா தொடர்பான நம் பார்வையையைக் கூர்மைப் படுத்த இதுபோன்ற நூல்களை வாசிப்பது களப்பணியாளர்கள் கடமையாகும் . ஊடகங்கள் குறித்தும் ’பொய் பொதிந்த கருத்தித் திணிப்பு’ முயற்சிகள் குறித்தும் எத்தனை நூல்கள் வந்தாலும் சொல்லித் தீராத உண்மைகள் நிறைய இருக்கும் .

 

விலக மறுக்கும் உண்மைகள்  : சினிமா ,ஊடகம் தொடர்பான கட்டுரைகள் ,அ.ப.அருண்கண்ணன்,  பாரதி புத்தகாலயம் ,  www.thamizhbooks.com    / 8778073949  ,

பக்கங்கள் : 72 , விலை  :ரூ. 70 /  

 

சுபொஅ.

05/09/25.

 

 

 

 

 

 


நம்மை சுற்றி சுற்றி………………….

Posted by அகத்தீ Labels:

 


நம்மை சுற்றி சுற்றி………………….

 

குறுக்குசால் ஓட்டுவது” என்றொரு சொற்றொடர் உண்டு . அதாவது நீ ஒன்றை பேசும் போது திசை மாற்றி வேறொன்றாக திரிப்பது . பொதுவாக இதனை எதிரிகள்தான் செய்வார் . ஆனால் சில நேரம் நண்பர்கள் இப்படிச் செய்யும் போது மிகவும் வருத்தம் மேலிடும் .ஏனெனில் நாமும் அதே தொணியில் பதில் சொல்ல முடியாது அல்லவா ? அப்படி ஒரு சங்கடம் அண்மையில் நேர்ந்தது .

 

பொதுவாக தோழர்  சுபவி யோ அவரது குழுவினரோ பேசுவதை பலநேரங்களில் பகிர்ந்து இருக்கிறோம் . பாசிச எதிர்ப்பு போரில் ஆயுதமாக்கி இருக்கிறோம் . தற்போது சிபிஎம் செயலாளர் ப.சண்முகம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் போது , காதல் திருமணம் சாதிமறுப்பு செய்வோரை ஆணவக்கொலை செய்யும் சூழலில் அப்படி செய்வோர் எங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் . அவர் பேசுகிறபோது அதற்கு இப்போது ஏற்பாடு இல்லை என்று சொன்னது ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைத்தான் . அவர் எங்கேயும் ‘ சுயமரியாதைத் திருமணம்’ என்று சொல்லவே இல்லை .அப்படி இருக்க தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இருப்பது சண்முகத்துக்கு தெரியாதா என நீட்டி முழக்கி ஒரு சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார் . சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி பதில் சொல்வது முறையல்ல . சகோதரியின் மாமா கம்யூனிஸ்ட் என்றும் அவர் காதல் திருமணத்திற்கு எதிராக இருந்தாரென்று பதிவிட்டிருக்கிறார் . உண்மையாக இருக்கலாம் . சிபிஎம் கட்சியில் இப்படிபட்ட சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . நானும் என் அண்மைப் பதிவொன்றில் இதனைச் சுட்டியுள்ளேன் . திமுக ,தி.க கட்சிகளும் இப்படி சில தர்ம சங்கடங்களை சந்தித்திருக்கும் . நம் சமூக அமைப்பில் சாதி உணர்வை ஒழிப்பதென்பது இடைவிடா தொடர் போராட்டமே ! அதை சகோதரியும் ஒப்புக் கொள்கிறார் .ஆயினும் சண்முகத்தையும் சிபிஎம் யும் தனிமைப்படுத்தி தாக்க முயல்வது தோழமைக்கு அழகா ? நட்போடுதான் இப்போதும்  கேட்கிறோம்.

 

இப்போது நீயா நானாவின் நாய் விவாதம் பேசுபொருளாகி இருக்கிறது . அது ஒரு ரிக்கார்டட் அண்ட் எடிட் ஷோ தான் . நெடுங்காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது . மொழிப் பிரச்சனை குறித்த ஓர் விவாதத்தை வெளியே வரவிடாமலே சங்கிகள் தடுத்தனர் என்பது அண்மைச் செய்தி .மறக்க முடியுமா?  நீயா நானா தலைப்பும் விவாதமும் எப்போதும் பட்டிமன்ற பாணி  ஒரு வெகுஜன ஊடகத்தின் சமரச வழியே ! அதில் கொஞ்சம் முற்போக்கு சாய்மானம் சில வேளை தென்படலாம் . அதற்கு மேல் செல்ல முடியாது ஏனெனில் அந்த நிகழ்ச்சி விளம்பரதாரரை சார்ந்து வாழ்வதே . நாய் விவாதத்திலும் அதுவே . அரசின் அலட்சியப் போக்கு தொண்டு நிறுவன ஊழல் போன்ற பலவற்றை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோர் மீது அனுதாபத்தோடு மட்டுமே அணுகியது . வெறிநாய் ரேபிஸ் நாய்க்கு எதிரான கோபமாக குவிமையமாக்காமல் பொதுவான நாய் எதிர்ப்போர் ஆதரிப்போர் என மாற்றியது இதெல்லாம் கார்ப்பரேட் மீடியா ஸ்டைலே . ஆனால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் கோபம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவிட்டது நல்ல அம்சம். இப்போது விலங்கபிமானிகளான தொண்டு நிறுவனப் புள்ளிகள் தங்கள் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிட்டது முழுவீடியோ போடுக என கூக்குரல் போடுவதும் , நீதிமன்றம் போவதும் அவர்களின் தோல்வியைப் பறை சாற்றுகிறது . அந்த ஷோ ’எப்போதுமே எடிட்டட் ஷோதான்’ என தெரியாமலா வந்தார்கள் ? அவ்வளவு அப்பிராணிகளா அவர்கள் ? நம்பமுடியவில்லை … நம்பமுடிய வில்லை…

 

யூ டியூப்பர்களின் ,டிவிக்களின் அரசியல் பரபரப்பு பேச்சுகளின் தரம் கவலை அளிக்கிறது .ஒற்றைவரி , ஒற்றைச் சொல் , அங்கும் இங்கும் வெட்டி ஒட்டிய துண்டுப் படங்கள் இவைதான் நம்மை பரபரப்பாக அரசியல் சமுதாய பிரச்சனைகளை பேசவைக்கும் எனில் சமூகத்தின் மீதான் அக்கறை அல்ல அது ; முழுக்க முழுக்க நாம் எதை பார்க்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என நமக்கு கடிவாளம் போடும் கார்ப்பரேட் யுக ஆளும் வர்க்க கருத்துத் திணிப்பு நாடகமே ! எங்கும் இப்போது நடப்பது அதுவே !

 

ஆக , உண்மையை ஊடகங்களில் தேடுவது தரையில் மணலில் விழுந்த ஊசியைத் தேடுவதே !

 

சுபொஅ.

03/08/25.

 


தண்ணீர்… தண்ணீர் …

Posted by அகத்தீ Labels:

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.