நியாயத் தீர்ப்பு நாளில் ……..
“நீ! அர்பன் நக்சல் ! திமாகி நக்சல் !”
“ குற்றச்சாட்டை மறுக்கிறேன்…”
“ நீ கம்யூனிஸ்ட் தானே !
“ இல்லை…. இல்லை…..”
“எதனடிப்படையில் மறுக்கிறாய் ?”
“ நான் கோவில்கோவிலாகச் சுற்றுபவன்…ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ இதைக் கொண்டு முடிவு செய்ய முடியாது “
“ நான் எல்லா பூஜை புனாஸ்காரம் ,சடங்கு,சம்பிரதாயமும் பார்ப்பவன்… ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ சரி ! இந்தக் காரணம் போதுமானதல்ல…. ”
“ நான் எல்லாவித மூடநம்பிக்கையும் உடையவன்… ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ கொஞ்சம் ஏற்கலாம் ஆனாலும் போதாது “
“ நான் சாதி மத வெறி உச்சத்திற்கொண்டவன் … ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ ஏற்கத்தக்கதுதான் …. இன்னும்….??”
“ நான் அநீதி அராஜகம் அக்கிரமம் ஏற்றதாழ்வு தீண்டாமை வெறுப்பு அரசியல் அனைத்துக்கும் துணைபோகிறவன் … ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ வலுவான காரணம்தான் … இன்னும்…??”
“ ரீல்ஸிலும் பொய்களிலுமே ஜெயிக்கிறவன் … உண்மை எனக்கு ஒரு போதும் ஆகாது ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ மெய்தான் இன்னும் கொஞ்சம் சொல்லலாமே…. !
“ இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லாதவன் ; மனச்சாட்சியைக் கொன்றவன் …வன்மத்தை விதைப்பவன்… ஆகவே நான் நக்சலும் அல்ல…கம்யூனிஸ்டும் அல்ல”
“ இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டி இருந்தால் சொல்லுக …
“ மனிதமே இல்லாத நான் திமாகி நக்சலாக …கம்யூனிஸ்டாக எப்படி இருக்க முடியும் ?”
“ மிகச்சரி…. மனிதம் மிக்கவர்கள் மட்டுமே கம்யூனிஸ்டாக முடியும் என்பதால் நீர் சொன்னதைக் கொண்டு பார்த்தால் நீவிர் சங்கி !உம்மை விடுதலை செய்கிறேன்….. தோழர்கள் கண்ணில் பட்டால் காட்டிக்கொடுங்கள் !”
”நிச்சயமாக …. அதுதான் இனி என் முழு வேலை…”
நீதி மன்றம் கலைந்தது….
சுபொஅ.

0 comments :
Post a Comment