அணையா பெரும் அடுப்பு

Posted by அகத்தீ Labels:




அணையா பெரும் அடுப்பு

 

 


வெப்ப அலை அணல் காற்று

வெறும் சொற்களாகவா இருக்கிறது ?

இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பிரளயத்தின் முன்னறிவிப்பாக அல்லவா இருக்கிறது.

 

தோட்ட நகரம் பெங்களூரு

காங்கிரீட் காடாகிவிட்டது

தப்பிப் பிழைத்த மரங்கள்

மூச்சுவிடவும் காற்று இல்லை .

நீரைத் தேடித் தேடி நீண்ட வேர்கள்

சோர்ந்து வறண்டுவிட்டன .

 

பெங்களூரில் வீடுகளுக்கு

ஜன்னல் என்பதே அநாவசியம்

அப்படி ஒரு காலம் இருந்தது .

ஏசி குளிரூட்டி இல்லாமல்

குடியிருக்கவே முடியாதென்கிற

கொடுங்காலமும் வந்துவிட்டது .

 

ஓடும் வாகனங்களில் தண்ணீர் லாரியே

அதிக எண்ணிக்கை என்பது வெறும்

புள்ளிவிவரமல்ல ! பேரிடரின் குறியீடு !

காவிரித் தண்ணீர் குழாய்களில்

வெப்பக் காற்று மட்டுமே வருகிறது !

வேதனையின் உச்சமல்லவா இது ?

 

மரங்களை வெட்டும் போது

காடுகளை அழிக்கும் போது

நீர்நிலைகளை தூர்க்கும் போது

இலக்கின்றி அடுக்குமாடிகளை எழுப்பும் போது

யோசிக்கவும் இல்லை

எச்சரித்தோர் குரலுக்கு செவி சாய்க்கவும் இல்லை

இப்போது அழுது புலம்பி என்ன பயன் ?

 

பெங்களூர் மட்டுமா ?

வெற்றி எக்காளமிடும் ஒவ்வொரு நகரமும்

அணையா பெரும் அடுப்பு ஒன்றை

மறைத்து வைத்திருக்கிறது !

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை

விழித்துக் கொள்ள….

 

 


சு.பொ.அகத்தியலிங்கம் .

24/4/2024.


0 comments :

Post a Comment