கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்

Posted by அகத்தீ Labels:

“ பசு பூஜை ,சைவ உணவுவாதம் ,புண்ணியநதிபோன்ற சொல்லாடல்கள் பிறமதத்தினர் மேல் வெறுப்பை வளர்க்கவும், ஆக்கிரமிப்பதற்கான நியாயமாகக் காட்டுவதிலும் காவிப்படை வெகுவாக வெற்றி பெற்றிருக்கிறது” என சொல்லும்ஆசிரியர் பாலித்தான என்ற சிறுநகரில் அசைவம் முட்டை உட்பட தடை செய்யப்பட்டதை விவரிக்கிறார் .எப்படி பிராமணிய மயமாக்கல் அதிகார வெறியோடு நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் பாடம் .


கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்






“ தெய்வம் மரணித்திருக்கிறது
இங்கே எங்கும் பேரழிவு மட்டும்..”

ஜீவன் தாக்கூரின் இந்த கவிதை வரிகள் குஜராத்தின் உண்மை முகத்தை பளிச்சென படம் பிடிக்கிறது . குஜராத் என்றதும் கோத்ரா நிகழ்வும் அதன் தொடர் வன்முறையாட்டமும் உடனே நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது ; அதேபோல் “குஜராத்தின் வளர்ச்சி” என்கிற மயக்கமும்கூடவே பேசுபொருளாகும் . முன்னதை எதிர்மறையாகச் சொல்லுகிற ஊடகங்கள் பின்னதை வியந்தோதுவதைக் காணலாம் . ஊடகங்களின் வாயையும் அடைத்துவிட்ட குஜராத்தின் உண்மை நிலையை ஸ்கேன் ரிப்போர்ட்டாக இந்நூல் வழங்குகிறது எனில் மிகை அல்ல .

நுட்பமான விவரங்களுடன் -துல்லியமான வரலாற்றுப் பின்னணியுடன் – நெடிய சதித்திட்டத்தை அழகாக அம்பலப்படுத்துகிறது இந்நூல். “ ரிலையன்சும் ராமஜென்ம பூமியும் இணைந்து பின்னப்பட்ட இந்துத்துவ கலவை ,ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளைப் போல சிறுபான்மையோருக்கு மரணமணியை உறுதிப்படுத்திய போதுகூட மத்தியதரவர்க்கம் அபாயகரமான மௌனத்தில் ஆழ்ந்தது.

நினைவுகளும் எதிர்குரலுமற்ற இத்தகைய செயலற்ற நிலை வரலாறு முழுவதும் நாசகரமான விளைவையே ஏற்படுத்தியுள்ளது .சமூகமறதி நோயும் மௌனமும் கைகோர்த்து நிற்கிறது .” என நூலாசிரியர் சொல்லுகிறார் . இந்நூல் அந்த மௌனத்தை உடைக்க முயற்சிக்கிறது. இந்நூலின் 14 அத்தியாயங்களும் 14 கூறுகளைப் படம் பிடிக்கிறது.

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தமிழ்நாட்டின் அவமானம் . அது தகர்க்கப்பட்டது . ஆனால் தகர்க்கப்படாத பிரிவினைச் சுவர் அஹமதாபாத்தில் இன்னும் நிற்கிறது .“ கிழக்கு அஹமதாபாத்தின் வட்வாவில் சுவரால் பிரிக்கப்பட்ட மக்தூம் நகரும் தர்மபூமி சொசைட்டியும் இரண்டு வேறுபட்ட நிலைகளின் நினைவுச் சின்னங்கள்” என்று நூலாசிரியர் தருகிற தகவல் மோடியின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறது .

சகல வசதிகளுடன் தர்மபூமி . அங்கே முஸ்லிம்களுக்கு இடம் இல்லை . மக்தூம் நகர் வெறும் குப்பைத் தொட்டி .இங்குதான் முஸ்லிம்கள் வாழவேண்டும் . மோடியின் ‘ஸ்வச் பாரத்’ இன்னும் எட்டிக்கூட பார்க்காத இடம் அது. “சலவைத்தூளிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு” என்ற அத்தியாயத்தில் நிர்மா சோப்பு வியாபாரி கல்வி வியாபாரத்தில் இறங்கிய கதையையும் , கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டதையும் கல்வி காவிமயமாக்கப்பட்டுவிட்டதையும் உரக்கச் சொல்கிறது.“ அம்பானிகளும் அதானியும்,சிரிபால் குழுமமும் ,கடிலாவும் பிறரும் குஜராத்தின் மேற்கல்வித்துறை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொண்டனர். .கலை,வரலாறு,அறிவியல் துறைகளுக்கு மாற்றாக வணிகக் கல்வியை அவர்கள் வளர்த்தனர்” என நூலாசிரியர் சுட்டுகிறார் .

“ பசு பூஜை ,சைவ உணவுவாதம் ,புண்ணியநதிபோன்ற சொல்லாடல்கள் பிறமதத்தினர் மேல் வெறுப்பை வளர்க்கவும், ஆக்கிரமிப்பதற்கான நியாயமாகக் காட்டுவதிலும் காவிப்படை வெகுவாக வெற்றி பெற்றிருக்கிறது” என சொல்லும்ஆசிரியர் பாலித்தான என்ற சிறுநகரில் அசைவம் முட்டை உட்பட தடை செய்யப்பட்டதை விவரிக்கிறார் .எப்படி பிராமணிய மயமாக்கல் அதிகார வெறியோடு நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் பாடம் .

தமிழகத்தில் பெண் சிசுவை கள்ளிப்பாலில் கொல்லும் கொடூரம் பற்றிப் பேசும் யாரும் குஜராத்தில் “ தூத் பீத்தி” பாலில் மூழ்கடித்துக் கொல்லும் கொடூரம் குறித்து சொல்லுவதே இல்லை. ஒரு வேடிக்கை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிகூட அவரது தாயின் முற்போக்கு பார்வையால் “ தூத் பீத்தி”யிலிருந்து தப்பியவரே! இதுவும் இந்நூல் தரும் செய்தி.

ஆண் பெண் விகிதம் 1971ல் 1000க்கு 965 ஆக இருந்தது. மோடியின் இந்துத்துவ எழுச்சிக்கு பிறகு 861 ஆக வீழ்ந்திருக்கிறது . “பைரானி புத்தி பாணியே” என்கிற குஜராத்தி பழமொழியை – ( “பெண் புத்தி பின் புத்தியே” என்பது போன்ற ஒரு பழமொழி) தலைப்பாகக் கொண்ட அத்தியாயம் வன்புணர்ச்சி , வேலைவாய்ப்பு ,கல்வி , ஒடுக்குமுறை , பாலியல் தொழிலுக்கு விரட்டப்படல் என பெண் தொடர்பான சமூகக் குறியீடுகள்அனைத்திலும் குஜராத் மிகவும் பின் தங்கி இருப்பதையும் ; மதக்கலவரங்களில் ஈடுபட்ட பெண்களையும் அவர்களை வழிநடத்திய மாயாபென் கோத் நானியையும் சரியாக அடையாளம் காட்டுகிறது.கவுரவக் கொலை என்கிற தொற்றுவியாதி தமிழக நற்பாரம்பரியத்தை அழித்துவிடுமோ என கவலைப்படுகிறோம் .
இந்தப் படுகொலை சித்தாந்தமும் இந்துத்துவாவின் ஒரு பகுதியே.குஜராத்தில் 98.4 கிராமங்களில் சாதி மீறிய திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்கிற வெளிச்சத்திற்கு வராத அதிர்ச்சித் தகவலை இந்நூல் அடிக்கோடிடுகிறது .

குஜராத்தில் 2084 கிராமங்களில் 98 விதமான தீண்டாமை கொடிகட்டி வாழ்கிறது . “ஆர் எஸ் எஸ் ஒரு பண்பாட்டு இயக்கம் – அதனால் மட்டுமே சாதிக் கொடுமையை ஒழித்து இந்துக்களிடையே சமத்துவத்தை கொண்டுவர முடியும்” என இங்கே சில அறிவுஜீவிகள் வாதிடுவது எவ்வளவு தவறானது என்பதை குஜராத் அனுபவம் நிரூபிக்கிறது .மோடியின் ஆடம்பரத்தை அம்பலப் படுத்தும் அத்தியாயத்தைத் தொடர்ந்து காந்தி ,பட்டேல் அத்தியாயங்கள் மிகுந்த வரலாற்று பின்புலத்தோடு சங்பரிவாரின் நயவஞ்சக அரசியலையும் சேர்த்து நமக்குப் பாடம் சொல்லுகிறது. இந்த அத்தியாயங்கள் மோடியின் கபடநாடகத்தை சரியான வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறது. 56 இஞ்ச் எனப் பெருமை பீற்றும் மோடி, பட்டேலுக்கு பிரமாண்டமான இரும்பு சிலை; இவற்றுக்கு பின்னே உள்ள உடலரசியலை நுட்பமாக இந்நூல் பேசுகிறது. காந்தி உருவாக்கிய சபர்மதி ஆஸ்ரமமும்கூட மோடி ஆட்சியில் கலவரத்தால் பயந்து ஓடிய இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம்தர மறுத்தது கொடுமையிலும் பெருங்கொடுமை.சீக்கியர்கள் தில்லியில் வேட்டையாடப்பட்டதையும் குஜராத்தில் முஸ்லிம்கள் வேட்டையாடப் பட்டதையும் இணைத்துப் பார்ப்பதும் ; காங்கிரஸின் பலவீனங்கள் சங்பரிவார் வளர உதவியதையும் சேர்த்தே இந்நூல் பேசுகிறது ! அடடா! எவ்வளவு செய்திகள்! எவ்வளவு ஒப்பீடுகள்! அருமை! அருமை!

இந்தியாவின் மான்செஸ்டர் என புகழப்பட்ட அஹமதாபாத்திலும் சூரத்திலும் ஜவுளித் தொழில் சர்வநாசமாக்கப்பட்ட செய்திகள் மோடியின் வளர்ச்சித் தம்பட்டத்தின் வெறுமையை உணர்த்துகிறது . இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிய கவிதைவரி இதனையொட்டி எழுதப்பட்ட கவிதையின் கடைசி வரிகளாகும்.

“அழித்தொழிப்பு நிகழ்கிறது இங்கே”என கவிதையின் ஓரிடத்தில் சொல்வது மிகை அல்ல; அது முழு குஜராத்துக்கும் பொருந்தும்.`ஹிட்லர் , முசோலினி உள்ளிட்ட உலகறிந்த பாசிஸ்டுகளின் வரலாற்று உண்மைகளும் குஜராத் நிகழ்ச்சிப் போக்குகளும் எப்படி ஒத்துப் போகின்றன என்பதை மிகவும் துல்லியமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் இந்நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .மோடி என்கிற பிம்பம் எப்படி கட்டி அமைக்கப்பட்டது என்பதை; அதில் மோடியின் வஞ்சகக் காய் நகர்த்தல்களை; மனம் பதறாத படுகொலைகளை அழுத்தமாய் இந்நூல் பதிகிறது .
பெருமுதலாளிகள் நலனுக்கு – அந்நிய முதலாளிகள் நலனுக்கு எப்படி மோடியும் தேவையாகிப் போனார் என்பதையும்; மோடியின் வளர்ச்சியில் அம்பானி ,அதானி போன்ற முதலாளிகளின் பங்கையும் அவர்கள் விதைக்கும் வெறுப்பு அரசியலையும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது .இந்நூலை நல்ல முறையில் மொழியாக்கம் செய்த உத்திரகுமாரனுக்கும் வெளியிட்ட வம்சி புக்ஸ்சுக்கும் பாராட்டுக்கள். மோடிக்கு எதிராக – சங்பரிவாருக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் பேராயுதம் எனில் மிகை அல்ல.

கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்
மலையாள மூலம் : ஏ.வி.அனில் குமார்,
தமிழில் : மா. உத்திரகுமாரன் ,
வெளியீடு : வம்சி புக்ஸ்,19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை – 606 601.
பக்: 256 , விலை : ரூ.200/- - சு.பொ.அகத்தியலிங்கம் . நன்றி : புத்தக மேசை , தீக்கதிர், 07-08-2016


0 comments :

Post a Comment