இன்னொன்றாகவும்….

Posted by அகத்தீ Labels:




இன்னொன்றாகவும்….

சு.பொ.அகத்தியலிங்கம்.

ரணம் என், உன் கதவைத் தட்டும் வரை
அடுத்தவர் மரணம் பற்றி பேசலாம் !

ஒவ்வொரு மரணமும் இழப்பு அவர் சார்ந்தவருக்கு
ஒவ்வொரு மரணமும் மகிழ்ச்சி எதிரிகளுக்கு
ஒவ்வொரு மரணமும் செய்தி ஏனையோருக்கு
எப்படியோ ஒவ்வொரு மரணத்திலும்
ஏதோ இருக்கிறது ஒவ்வொருவருக்கும் மெல்ல

அது என்னவோ  தெரியவில்லை  -இங்கே
மரணத்தை பற்றி பேசுவதே தத்துவம் ஆகிவிட்டது
ஆனாலும் இறந்தவரைத் தவிர யாருக்கும்
வாழ்க்கை எந்த மரணத்தோடும் முடிவதில்லை


பட்டினி சாவுகளும், கடன் தற்கொலைகளும்.
ஆணவக் கொலைகளும்,ஆதாயக் கொலைகளும்
பசு புனித படுகொலைகளும்,காதல் கொலைகளும்,
சாதி ,மத வெறிக் கொலைகளும்,
சிசுக் கொலைகளும் ,கருக்கொலைகளும்,
மருத்துவக் கொலைகளும் ,கல்விக் கொலைகளும்,
வழக்கம் போல் மரணப்  பட்டியலில் அடங்குமோ ?

ஆக, மரணங்கள் எல்லாம் ஒன்றல்ல
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு செய்தி உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு துக்கம் உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு விழிப்பு உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு கோபம் உண்டு
ஒவ்வொரு மரணமும் இன்னொன்றாகவும் ஆவதுண்டு
எல்லாவற்றையும் அப்படியே கடந்து போவது நன்றன்று !

மரணம் மட்டுமே தத்துவத்தின் உள்ளுறை அல்ல
வாழ்வதற்கானது தத்துவம்
போராடுவதற்கானதே தத்துவம்
சமூகவாழ்வை தலைகீழாய் மாற்றும்
தத்துவம் உண்டு அதன் பெயர் மார்க்சியம் .

மரணத்தைப் பற்றிய கவலையை மிஞ்சட்டும்
வாழ்வதற்கான போராட்ட கலை !



0 comments :

Post a Comment