காஷ்மீரும் உத்தர்கண்டும் தமிழகதுக்கு சொல்லும் சேதி..

Posted by அகத்தீ Labels:

காஷ்மீரும் உத்தர்கண்டும் தமிழகதுக்கு சொல்லும் சேதி..

சு.பொ.அகத்தியலிங்கம்

ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரழிவைக் கண்டு இதயம் கசியாத யாரும் மனிதனே அல்ல . 2004 ல் தமிழகத்தைத் தாக்கிய சுனாமியின் கோர வடுக்கள் இன்னும் முற்றாய் மங்கி மறைந்த பாடில்லை . மும்பையை 2005 ல் புரட்டியெடுத்த வெள்ளத்தின் கொடும் நினைவுகள் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது . 2013 ல்  இயற்கை புரட்டிப் போட்ட உத்தர்கண்டு இன்னும் நிமிர்ந்த பாடில்லை . ஜம்மு காஷ்மீரில் எங்கும் அழுகையும் பற்கடிப்புமாய் வேதனையின் கூக்குரல் .

நிவாரணப்பணிகள்  நடந்து கொண்டிருக்கின்றன ; இழந்தது எவ்வளவு இன்னும் கணக்கிட்டு முடியவில்லை ; உயிரிப்பின் முழுவிவரம்கூட தெரியவில்லை . இந்த சோகத்திலும் அரசியல் விளையாட்டும் நடந்து கொண்டேதான் இருக்கிறது .

இதற்கிடையில்  இன்னும் பல முறை வரலாறுகாணா பெருமழை இந்தியாவை மீண்டும் மீண்டும் தாக்கும் . பேரழிவுகள்  தொடரும் . அடுத்த பத்து ஆண்டுகள் இயற்கை பேரிடர்களும் பேரழிவுகளும் நிச்சயம் அதிகரிக்கும் . இவ்வாறு இயற்கை பேரிடரை ஆய்வு செய்யும் விஞ்ஞானக் கழகம் எச்சரித்துள்ளது . இக்கழக துணை இயக்குநர் சாந்தி பூஷன் பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார் .

ஏன் இந்த கொடுமை ? இயற்கையை நாம் அளவுக்கு அதிகமாகச் சுரண்டினோம் ; அழித்தோம் ; அழிச்சாட்டியம் செய்தோம் . இப்போது இயற்கை பதிலடித் தரத்துவங்கிவிட்டது . “ துட்டுக் கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வது போல ” என்றொரு வழக்குச் சொல் உண்டு ; அது போல இயற்கைச் சீண்டி வட்டியும் முதலுமாய் வாங்கிக் கட்டிக்கொள்கிறோம் .

இப்போது ஜம்மு காஷ்மீரில் பெய்த மழை இதற்கு முன்னர் நூறு ஆண்டுகளில் பெய்ததில்லை என்பது உண்மையே . ஆயினும் மனிதன் பேராசையினால் இயற்கையைச் சீர்குலைத்ததினால்தான் இழப்பு மிகமிக அதிகமாகிவிட்டது என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஆம் , வூலூர் ஏரி முன்பு 20,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாக இருந்தது ; அது இப்போது வெறும் 2400 ஹெக்டேராக  கிட்டத்தட்ட பத்திலொரு பங்காகச் சுருங்கிவிட்டது . ஆம் 90 விழுக்காடு ஏரியை ஆக்கிரமித்து விட்டனர் . ஸ்ரீ நகரின் பேரழகே தல் ஏரி . அங்குள்ள படகு வீடுகள் புகழ் பெற்றவை . அந்த ஏரி முன்பிருந்ததின் பாதி அளவுக்கும் கீழாகச் சுருங்கிவிட்டது . இப்போது வெறுமே 1200 ஹெக்டேர் மட்டுமே இப்போது உள்ளது ; அதாவது மீதமுள்ள சுமா1200 ஹெக்டேர் நிலமுதலைகளால் ஏப்பம் விடப்பட்டுவிட்டது . ஜீலம் நதியின் வடிகால்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி சுருங்கி ஓடையாகி விட்டது . நதி பெருக்கெடுத்து ஓங்காரமாய் வந்த போது அனைத்தையும் குதறி எறிந்துவிட்டது . அதற்கு நதியா குற்றவாளி ? இல்லை . நதியின் இருமருங்கிலும் வரமுறையின்றி ஆக்கிரமித்து நதியின் பாதையை அடைத்தவர்கள் யார் ? நாம் தானே ? அப்படியானால் இது மனிதன் செய்த பேரழிவு என்றுதானே சொல்லவேண்டும் ? இம்மாநிலத்தில் முன்பிருந்த ஏரிகளில் சரிபாதியை இப்போது காணவில்லை . ஆக்கிரமித்துவிட்டனர் . அப்புறம் பழியை இயற்கை மீது எப்படிச் சுமத்தலாம் ?

உத்தர்கண்டு அனுபவம் என்ன இதுவே தான் ? ‘மழையும் வெள்ளமும் இயற்கையின் சீற்றமாக இருக்கலாம். ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீதுபோடுவது தவறு. மனிதர்களின் செயலே இதற்குக் காரணம்’ என்கிறார்  உத்தர்கண்ட் பகுதி சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட். டெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலியல் பிரிவின் பேராசிரியர் இவர்.  இந்தப் பகுதியின் இயற்கை வளங்கள் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவருபவர் இவர்.

வெள்ளத்தால் அழிந்த கட்டடங்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் அனுமதி பெறாதவை. சுயநல அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. வேறு எந்த முக்கியத் தொழில் வளமும் இல்லாத இந்தக் குட்டி மாநிலத்தின் மக்கள் தொகை ஒரு கோடி. வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கை 2.5 கோடி. இவர்களை மையப்படுத்தியே விடுதிகளும் ஹோட்டல்களும் கட்டப்படுகின்றன. பிப்ரவரி 2013ல் உத்தரகண்ட் நீதிமன்றம் நதிக்கரையிலிருந்து 200 மீட்டருக்குள் இருக்கும் அத்தனை கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது. ஆனால் அரசு அமுலாக்கவில்லை . பெருக்கெடுத்த வெள்ளம் எல்லாவற்றையும் சூறையாடிவிட்டது .

மீண்டும் மீண்டும் இயற்கை பேரிடர் நமக்குச் சொல்லும் சேதி ஒன்றுதான் . இயற்கை நமக்கான கொடை . அதை போற்றிக் காக்க வேண்டியது நம் கடன் . வரமுறையின்றி நாம் அதனைச் சீண்டினால் அது ஒரு நாள் தன் சீற்றத்தைக் காட்டும் . நாம் அதனைத் தாங்க முடியாது .

தமிழகம் இழந்துவிட்ட ஏரிகள் , கண்மாய்கள் ,குளங்கள் , ஆறுகள் , வாய்க்கால்கள் , மொட்டையடிக்கப்பட்ட காடுகள் நம்மை எச்சரிக்கின்றன ; அளவின்றி நிலதடி நீரை உறிஞ்சப்படுவதும் நம்மை திருப்பித்தாக்கும் . வெள்ளமும் வறட்சியும் நம்மை புரட்டிப்போட வாய்பிழந்து நிற்கிறது ; சுனாமியைவிட பேரழிவு நம்முன் படுத்துக் கொண்டிருக்கிறது . எந்த நேரமும் அது தன் கோபவிழியால் நம்மைச் சுடலாம் . எச்சரிக்கை . இப்போதேனும் விழிப்போமா ?

0 comments :

Post a Comment