பெரியாருக்கு ஒரு கடிதம்

Posted by அகத்தீ Labels:

 
பெரியாருக்கு ஒரு கடிதம்…



மரியாதை மிக்க ஐயா பெரியார் அவர்களுக்கு ,

வணக்கம்.

நான் எழுதும் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் . அறிவியல் பூர்வமாக படிக்கவும் முடியாது. இதனை நீங்கள் உயிரோடு இருந்தால் உரக்கச்சொல்வீர்கள்.உயிரோடு நான் இருப்பதால் அதனை உரக்கச் சொல்கிறேன். ஆயினும் கற்பனையில் கடிதம் வடிக்கிறேன்.

இல்லாத பொல்லாத சொர்க்கம் , நரகம் கட்டுக்கதைகளை நீங்கள் நம்பியதில்லை . எனவே உங்களை அங்கே தேடுவது வீண்.இறப்புக்குப் பின் வாழ்வதென்பது தான் கைக்கொண்ட லட்சியத்தின் தொடர்ச்சியையைத்தான் கூறவேண்டும் . ஆம் வெறுமே நீங்கள் சொன்னவற்றைக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத்திரும்ப சொல்வது மட்டுமே இலட்சியத் தொடர்ச்சி ஆகாது.நாளது வரை சமூகம் சந்தித்துள்ள வளர்ச்சிகளை மாற்றங்களை உள்வாங்கி ஈடுகொடுத்து வளர்ந்து புதிய சவால்களை சந்திக்க அந்த லட்சியம் தயாராக வேண்டும் ; தொடர்ச்சி என்பதன் பொருள் அதுவே.

நலிவுற்ற சமுதாயம் மீள்வதற்காக உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் பாதம் அழுத்தமாகப் பதிந்த இந்த மண்ணில் மதவெறி விஷச்செடிகள் ஆங்காங்கு முளைத்தது எப்படி ? உங்களைவிட சாதியத்திற்கு எதிராய் அதிகம் பேசியவர்கள் யார் ஆயினும் சாதிவெறி போதை உச்சிக்கேறி காதலுக்கு எதிராக கொலைவாள் சுழற்றுவோர் மிடுக்கோடு திரிவது எப்படி ? ஐயரைத் தவிர்த்து பொதுமேடையில் திருமணம் செய்தாலும் – திருமண அழைப்பிதழில் உங்கள் படத்தையும் பொன்மொழியையும் பொறித்தாலும் - சாதியையும் வரதட்சணையையும் மட்டும் பற்றிநிற்பவர் எண்ணிக்கை பெருகுகிறதே! ஏன் ? பெண்விடுதலை குறித்து தங்களைவிட அதிகம் சிந்தித்தவர் பேசியவர் எழுதியவர் யார் ? யார் ? ஆயினும் கற்பை ஒருதலையாய் பற்றி நின்று இங்கு கூத்தடிப்பதை என்னென்பது ?

ஐயா ! சைவ மடங்கள் போல் – வைணவ மடங்கள் போல் உங்கள் வழித்தோன்றல்கள் திராவிட மடம் ஆக்கிவிடுவார்களோ என்கிற என் ஐயத்தை சொல்லாம்ல் இருக்க முடியவில்லையே ! உங்கள் பேச்சை எழுத்தை வார்த்தைக்கு வார்த்தை கிளிப்பிள்ளைபோல் – நகலெடுப்பது போல் திருப்பிச் சொல்வது போதுமா ? அது இன்றையத் தேவையை நிறைவு செய்யுமா ? காலம் மாறிக்கொண்டே இருக்கிறது – அறிவியலும் சமூகக்கண்ணோட்டமும் மாறிக்கொண்டே இருக்கிறது வளர்ந்துகொண்டே இருக்கிறது – மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூடிக்கொண்டே இருக்கிறது ; இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் யுத்தி மாறவேண்டாமா ? வளரவேண்டாமா ?

"வைதீகப் பழமைக்கு எதிராக தமிழ் மொழியும் இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட அதே வேளையில் தமிழ் பழமையும் பெருமிதங்களும் விமர்சனமின்றி பாராட்டப்பட்டன. இது பகுத்தறிவு வகைப்பட்ட அரசியல் அன்று - அறிவின் சமூக மாற்றப் பண்பு நீர்த்துப்போயிற்று. திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் வளர்த்தெடுத்த தமிழ்ப் பழமையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமிதங்களுக்கிடையில் அரசு எனும் அடக்குமுறை இயந்திரம் குறித்த விமர்சனம் அடியோடு இல்லாமல் போயிற்று. கண்ணகியின் கற்பு பற்றிய மலைப்புகளுக்கிடையில் பெண் விடுதலை என்பதே அரவமில்லாமல் மறைந்துபோயிற்று. இவையெல்லாம் சமூக மாற்றத்திற்கான பகுத்தறிவுப் பாதை அல்ல." என முத்து மோகன் நொந்து கூறுவதை புறந்தள்ளிவிட முடியுமா ?

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. இது சிங்காரவேலர் வாதம். உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்: "பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே" என்றார். இதனை தமிழ் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா?

ஐயா நீங்களும் சிங்காரவேலரும் அயோத்திதாசப் பண்டிதரும் ஜீவாவும் அம்பேத்கரும் துவங்கிய சமூகசீர்திருத்தப் பணிகளை அடுத்தகட்ட்த்திற்கு – அறிவியல் சமூக தளத்தில் முன்னெடுத்துச் செல்லும் கடமையும் பொறுப்பும் தகுதியும் ஆற்றலும் உள்ள கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் அதனை தேவைக்கேற்ப உணர்ந்திருக்கிறார்களா ? செய்கிறார்களா ? இந்த அறுவரும் உடன்படும் இடமும் உண்டு முரண்படும் இடமும் உண்டு ஆனால் இது நட்பு முரண்பாடு ; இதனை பகை முரண்பாடு ஆக்குவோர் இறுதியில் சுரண்டும் வர்க்கத்திற்கும் மநுவாதிகளுக்குமே சேவை செய்கிறார்கள் . இந்த சாதாரண உண்மையை உங்களை – இவர்களை புகைப்படமாக்கி மாலை அணிவிப்போர் உணர்வார்களா ? இன்னும் காலம் கடந்துவிடவில்லை . இன்னும் நம்பிக்கை இருக்கிறது .இப்போது விழித்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போதைய மார்க்சிய அறிஞ்ர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார், “இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம்”

ஐயா ! உங்கள் பிறந்த தினத்தன்று என் சிந்தனையில் திரண்டவற்றை கடிதம் வாயிலாக பகீரங்கமாக தெரிவித்துவிட்டேன்..விவாதங்களை எப்போதும் ஊக்குவிக்கிறவர் அல்லவா நீங்கள் ..

அன்புத் தோழன்,

சு.பொ.அகத்தியலிங்கம்.

சென்னை , 17 செப்டம்பர் 2013.

தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்.

Posted by அகத்தீ Labels:


தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்

சு.பொ.அகத்தியலிங்கம்
காபாரதமும் இராமாயணமும் வற்றாத இலக்கியச் சுரங்கங்கள் . அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாய் புதியபுதிய கற்பனைகளை ஊற்றெடுக்கச் செய்யும் . அதன் தெய்வீகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தால்  இந்திய சமூகத்தில் புரையோடிப்போன வர்ணாஸ்ரமும் , ஆணாதிக்கமும் தன் கோரப்பற்களை நிணமொழுக காட்டி நிற்கும் . இப்படி அதிரடியாய் தீர்ப்பெழுதும் போது ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . பக்தியில் தோய்ந்த பெரும்பான்மை மக்கள் காதுகொடுத்து இவ்வுண்மையை கேட்கவும் மறுப்பர் . கதை சொல்லி கதை கேட்டு வளர்ந்த மரபின் சொந்தக்காரர்களன்றோ நாம் . எந்தக் கதைகள் வழி நமக்கு மயக்க மருந்து ஊட்டப்பட்டதோ அதே கதைகளின் வழி மயக்கத்தைத் தெளியவைப்பது உன்னதமான செயலன்றோ !அதனைத்தான் இந்நாவலில் ப.ஜீவகாருண்யன் செய்துள்ளார்.

 “ கிருஷ்ணன் என்றொரு மானுடன் ” என்பது பெயர் மட்டுமல்ல இந்நாவலின் மைய இழையே அதுதான் .மக்களிடம் ஆழமாக வேருண்றியுள்ள கிருஷ்ணன் என்றொரு கடவுள் / அவதாரக் கற்பிதத்தை - பிம்பத்தை உடைத்தெறிவதுடன் கிருஷ்ணன் இறந்துவிட்டான் என அறிவிக்க மகா துணிச்சல் வேண்டும் . போகிற போக்கில் சொல்லிவிட முடியாது . வலுவான செய்திகள் நிகழ்வுகளூடே வாசிப்பவன் நெஞ்சில் பதிய வைக்கவேண்டும். ஏற்கச்செய்ய வேண்டும் . இதில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் .

 “ அல்லும் பகலும் அனவரத நேரமும் ஊண் , உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடலிலும் நிலத்திலும் ஒயாமல் உழைத்துத் துவாரகைச் செல்வம் கொழிக்கச் செய்யும் யாதவர்கள் ஓய்வு சாய்வாக கொஞ்சம் மதுவோடு உறவாடுவதில் தவறொன்றுமில்லை என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுநெறியாக இருந்த “ மது நெறி ” இன்று ” மது வெறி ” யாக மாறி ,ஒப்பற்ற இனத்தின் பேரழிவுக்கு மூலகாரணமாகிவிட்டது ” என முதல் அத்தியாயத்தில் கடல்விழா கொண்டாடி துவாரகை மக்கள் மது போதையில் அழிந்தொழிந்த கதையை விவரிக்கிறபோது நெஞ்சில் தமிழ் சமூகமும் டாஸ்மாக்கும் ஏனோ வந்து தொலைக்கிறது .

விழாவில் கூடிய அத்தனை பேரையும் விழுங்கிய மது அரக்கனுக்கு தப்பிய தாருக்கனை அர்ச்சுனனுக்கு சேதி சொல்ல அனுப்பிவிட்டு - போதை முற்றும் தெளியாத - எண்பத்தி நான்கு வயதைத் தாண்டிய - முதுமையின் தள்ளாட்டம் மிகுந்த கிருஷ்ணன் தனிமையில் -  “ ..உயிர்களிடத்தில் பாகுபாடில்லாத ஒற்றை நிச்சயமான இறப்பை எதிர் நோக்கி காத்திருப்பதுதான் ” என்ற பிரபஞ்ச உண்மை உறைக்கும் வேளையில் - கிருஷ்ணர் நெஞ்சில் பின்னோக்கிக் குமிழியிடுகிறது கடந்தகால வாழ்க்கைக்கதை .நினைவலைகளில் 1] பிறவிப் பேறு , 2] சூது - தூது - வனம் , 3] குருதிக்களம் 4] சகோதர அம்பு 5] யாத்திரை எனும் ஐந்து பாகமாக நாவல் நீள்கிறது . நினைவலைகள் ஒடுங்கும் நேரம் ஜரா மறைந்திருந்து தாக்கிய விஷ அம்புக்கு பலியாகிறான். ஆம் , கிருஷ்ணன் இறந்தே விட்டான் - அதுவும் எண்பத்தி நாலே வயதில் - நூறாண்டு கூட வாழவில்லை . அடடா! அதற்குள் எத்தனை எத்தனை புதிர் நிறைந்த நிகழ்வுகள் .

ருக்மணி ,ஜம்பாவதி , சத்தியபாமா , சத்தியவதி , காளிந்தி , மித்ரவிந்தை ,நீலாவதி , லட்சுமணை , என எட்டு மனைவிகளை மணந்த கதைமட்டுமா - ஆறு வயது மூத்த ராதையோடும் சைரந்திராவோடும் இளமையில் காமம் சுகித்தது- அது போக ;  “ சரி , எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் ! நரகனால் பாதிக்கப்பட்டு நீங்கள் ஏற்றுக்கொண்டது போக மிச்சமாயிருக்கும் இந்த இருபத்தி நான்கு பெண்களும் என் மனதறிந்த உண்மையில் எனக்குரியவர்கள் ” என அறிவித்து மனைவியாய் ஏற்று அனுபவித்த இருபத்தி நாலு பெண்களும் என கிருஷ்ணனின் பட்டியல் நீளும்.முகமது நபிக்கு 13 மனைவிகள், அதில் யுத்தத்தால் விதவையாக்கப்பட்டவர்களும் உண்டு . இதனை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இந்துத்துவ சக்திகள் கிருஷ்ணலீலை எனில் கொண்டாடுவார்கள். மதங்கள் அனைத்தும் சாராம்சத்தில் ஒன்று என்பதை சொல்லவும் வேண்டுமோ ! மது ,மாது , மாமிசம் அனைத்திலும் கிருஷ்ணன் கொண்ட மோகமும் வெறியும் இந்நாவல் நெடுக நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பேரன்களுக்காக  அவர்கள் விரும்பும் பெண்களுக்காக கிருஷ்ணன் நடத்திய யுத்தங்கள் அதற்கான நியாயங்கள் இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும் போது நாம் நேற்றைய ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து விடுபடாமலிருப்பதை உணர்த்துகிறது . திரெளபதி ஐவரின் மனைவியாக வாழ்ந்த கதை மட்டுமா ? சப்தரிஷிகளை மணந்த ஐடிலா, பிரிசேட்டகமுனி சகோதரர்கள் பதின்மரை மணந்த ரிஷிபத்தினி , பலபேரை மணந்த வார்ஷி எல்லாம் எதன் குறியீடு ? ஒருவனுக்கு ஒருத்தி வழக்கதிற்கு வரத்துவங்கினும் கட்டற்ற பாலுறவு சமூகத்திலிருந்து முற்றிலும் விடுபடா காலகட்டத்தின் விளை பொருளே பாரதம் . இந்நூல் அதனையும் கதைப் போக்கில் நிறுவுகிறது.

கிருஷ்ணன் பிறந்த கதை , கம்சனை வதைத்த கதை ,ஜராசந்தாவை போரில் தோற்கடித்தாலும் அவன் வலிமைக்கு பயந்து மதுராவை காலி செய்துவிட்டு யாதவ குலமே துவாராகவுக்கு பெயர்ந்த்து - துவாராக கட்டி எழுப்பப்பட்டது ; என விரிந்த கதையில் கிருஷ்ணன் பலராமன் இருவரும் ஆற்றிய பங்குபாத்திரம் என பலவற்றை பேசும் முதல் அத்தியாயம் பாகவதத்தின் மறுவாசிப்பு . கிருஷ்ணனை அவதாரமாக அணுகாமல் ஆசா பாசம் பலம் பல்வீனம் அனைத்தும் உள்ள மனிதனாக நிறுவுகிறார் ஜீவகாருண்யன்.

சூது - வாது - வனம் என்கிற இரண்டாவது அத்தியாயமும் , குருதிக்களம் என்கிற மூன்றாவது அத்தியாயமும் மகாபாரத்த்தின் மறுவாசிப்பு அதுவும் கிருஷ்ணன் என்ற மனிதனின் நினைவோடையில் கதை நகர்த்தப்படுகிறது .சாம்பன் சிறைப்பட்ட கதை 144 ஆம் பக்கத்திலும் 162 ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது. கட்டுரை எனில் கூறியது கூறல் தேவைப்படக்கூடும் ; ஆனால் புதினத்தில் தேவையா ? இப்படி சில வழுவுகள் இந்நூலில் உண்டு .

நியோகம் எனப்படும் கர்ப்பதானத்தில் பிறந்தவர்களே பாண்டவர்கள் ; அவர்கள் பாண்டுவின் பிள்ளைகள் அல்ல ; குந்தியும் அவள் இளையவளும் காட்டுவாசிகளிடம் கட்டற்று உறவு கொண்டு பிறந்தவர்கள் எனவே சொத்தில் பங்கேது என்பதுதான் கெளரவர்களின் வாதம் ; இது வாரிசுரிமைப் போரே தர்ம-அதர்ம யுத்தம் அல்ல . குந்தி மந்திரத்தால் பிள்ளை பெறவில்லை ; மானிடரால்தான் பெற்றாள் . கொண்டவன் ஆண்மையற்றவனெனில் அவள் வேற்றிடம் நாடலில் பிழை என்ன ? இக்கேள்வி நாவலில் வலுவாக பதிவாகவில்லை என்பது என் கருத்து.அது போல் கர்ணனின் வீரம் அர்ச்சுனனின் வீரத்தைவிட பன்மடங்கு ஓங்கி உயர்ந்தது இது போர்க்களத்தில் காட்சி படுத்தப் பட்டிருப்பினும் அர்ச்சுனன் வெற்றிக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிவலை இன்னும் வலுவாய் சொல்லப்பட்டிருக்க வேண்டுமோ !

கடோத்கஜன் சாவை அவமரியாதை செய்யும் கிருஷ்ணன் தன் தங்கை மகன் அபிமன்யு மரணத்தில் இடிந்து போவது ரத்த பாசம் மட்டுமல்ல ; வர்ணாஸ்ரமத்தின் கோரமுகமும் கூட. அது நன்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 “ஆன்மா நிலையானது . அழிவற்றது . அது உடலாகிய நைந்த ஆடையை - பழைய ஆடையைக் களைந்து விட்டு புதிய ஆடையை உடுத்திக்கொண்டு எந்நாளும் உயிர்ப்புடன் இருக்கக் கூடியது என்று போர் தொடங்கிய நாளில் போரிடத் தயங்கிய அர்ச்சுனனிடம் நான் செய்த உபதேசம் அபிமன்யு இறப்பு விஷயத்தில் பொருந்திவராதது குறித்து நான் வெட்கப்பட்டேன். ஆன்மா என்று ஒன்று உண்டா ? ஆன்மா நிலையானதுதான் என்றால் அபிமன்யுவின் ஆன்மா அடுத்து எந்த ஆடையை உடுத்திக்கொள்ளும் ? என்று என் மனம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை ” என கிருஷ்ணனை புலம்பவைத்து அவன் கீதையின் பொய்மையை தோலுரித்துவிட்டார் ஜீவகாருண்யன். மேலும் கீதையின் அடிநாதம் வர்ணாஸ்ரம்மே என்பதை கதை மாந்தர்கள் வழி சாட்சிப்படுத்திவிட்டார். கடைசியில் யுதிராஷ்டிர் பட்டமேற்புவிழாவில் சார்வாகன் எழுப்பிய கேள்விகள் மூலமும் சார்வாகன் கொல்லப்பட்டதின் மூலமும் பிராமணியத்தின் நிஜமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.பிராமணர்கள் மது மாமிசப் பிரியர்களே என்பதை பட்டவர்த்தனமாய் போட்டுடைக்கிறார். போரின் கொடுமையும் போரில் விளையும் வெற்றியின் வெறுமையும் இநாவலில் மனதை உருக்கும் விதத்தில் பதிவாகியுள்ளது.

மகாபாரதம் என்பது ஏதோ பாரத தேசம் முழுமைக்கானது என்ற கட்டுடைத்து சில இனக்குழுக்களிடையேயான யுத்தம் - ஹிரண்ய நதிக்கரையில் நடந்த யுத்தம் என்கிற அளவிலேயே நாவல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கியம் பெரும்பாலோர் பாகவதத்தையும் மகாபாரதத்தையும் முழுமையாப் படித்திருக்க வாய்ப்பில்லை .இந்நிலையில் மூலமும் இந்நாவலும் வேறுபடும் இடம் எதுவென்பதை சாதாரண வாசகன் ஊகித்துணர்வதில் சிரமம் உண்டு.
இராமாயணமாகட்டும் மகாபாரதமாகட்டும் சில இனக்குழுக்களிடையே மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் மாட்டுக்காகவும் நடந்த மோதல்களின்- கர்ணபரம்பரைக் கதைகளின் தொகுப்பாய் ; ஊதி ஊதி பெருக்கப்பட்டதின் வடிவம்தான் . ஒவ்வொரு காலத்திலும் அன்றைய தேவைக்கு ஏற்ப கருத்தூட்டம் செய்யப்பட்டுக்கொண்டே வந்ததை புரிந்து கொண்டால் ; இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப மறுவாசிப்பின் தேவையை உணர முடியும்.

குறிஞ்சி வேலனின் அணிந்துரை முக்கியமானது . பல தகவல்களைத் தருகிறது . ம்ருத்தியுஞ்செய , யுகாந்தா , யயாதி, முதலிய மராட்டிய நாவல்கள் - யாக்ஞசேனி எனும் ஒரிய நாவல் - வங்கமொழி நாவல்கள் = இனி ஞான் உறங்ஙட்டே , ரண்டாமூழம் முதலிய மலையாள நாவல் - மேலும் பைரப்பாவின் பருவம் - தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் உப்பாண்டவம் என பெரும் மறுவாசிப்பு நாவலகளை நினைவு கூரும் குறிஞ்சி வேலன் அவற்றிர்க்கு ஈடாக - அதற்கும் மேலாக ஜீவகாருண்யன் இந்நாவலில் வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறார் . சுப்பாராவ் ,அருணன்,ராஜம் கிருஷ்ணன் உட்பட பலரும் இதிகாசக் கதையின் பல்வேறு கூறுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளனர் . திராவிட இயக்கத்தினர் எதிர் நிலையிலிருந்து புராணங்களை அணுகியுள்ளனர் . இந்த இதிகாசங்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பக்தி பூர்வமாய் அணுகுவதும் ; முற்றாய் எதிர் நிலையிலிருந்து அணுகுவதும் சாராம்சத்தில் ஒரே விளைவுதான். இலகியச் செறிவும் பண்டைய வாழ்க்கைக்கூறும் ஊடுபாவாய் உள்ள இவற்றைக் கட்டுடைத்து மறுவாசிப்பு செய்வது மிகவும் தேவையானது . அவதார தெய்வீக மாயமைகளை தகர்க்கவும் பிராமணியம்,வர்ணாஸ்ரமம் , பெண்ணடிமைத்தனம் இவற்றை அம்பலப்படுத்தவும் மறுவாசிப்புகள் தொடர வேண்டியது அவசியம் . இந்நாவல் அத்தகு பணியில் தனக்குரிய சிறப்பான பங்கை ஆற்றியுள்ளது . அவதார மாய்யைத் தகர்க்கும் இந்நாவலை ஒவ்வொருவரும் வாசிப்பது அவசியம்.

கிருஷ்ணன் என்றொரு மானுடன் ,
ஆசிரியர் : .ஜீவகாருண்யன்,
வெளியீடு : சீதை பதிப்பகம் ,
10/14 ,தோப்பு வேங்கடாசலம் தெரு ,
சென்னை 600005.
பக் : 392 ,விலை ரூ.200 .

நன்றி : புதிய புத்தகம் பேசுது - செப் 2013

 

“ஆசிரியராக வாழ்வதென்றால்..?

Posted by அகத்தீ Labels:


“ஆசிரியராக வாழ்வதென்றால்..?
 
 


போயிட்டு வாங்க சார் ! குட் பை மிஸ்டர் சிப்ஸ் ,ஆசிரியர் : ச.மாடசாமி,வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் ,பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை , சென்னை - 600 016 .பக் :64 , விலை : ரூ . 35

“ஆசிரியராக வாழ்வதென்றால்..?

தொடர்ந்து வாசிக்கிறவர்தான் ஆசிரியர் என்கிறார்கள் . இது ஒரு விதத்தில் சரியாக இருக் கிறது . அதேநேரம் இலக்கணம் போல் கனமாக இருக்கிறது. எல்லோரும் தூக்கமுடியாதகனம்.தொடர்ந்து மாணவர்களோடு உறவு வைத்திருக்கிறவர்தான் ஆசிரியர் என்பது சிப்ஸ் வாழ்க்கை முன்வைக்கும் வாதம் .

இந்த வழி காட் டுதல்கனமற்றுஇலகுவாகஇருக்கிறது.யாவர்க் கும் கைகூடக்கூடிய வித்தையாக இருக்கிறது ”மேலே சொன்ன அனைத்தும் ச. மாடசாமி எழுதிய போயிட்டு வாங்க சார்!.. குட் பை மிஸ் டர் சிப்ஸ் என்ற 64 பக்க சிறிய புத்தகத்தில், நெஞ்சை நெகிழவைக்கும் புத்தகத்தில் இடம் பெற்றவரிகள்.மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரி யராக வாழ்ந்த சிப்ஸின் கதையே இந்நூல். சிப்ஸ் என்கிற சிப்பிங்கை கதை நாயகனாக வைத்து ஜேம்ஸ் ஹில்டன் 1933 ல் எழுதியது . 1934 ல் நூலாகவும் வெளிவந்தது.

திரைப்படமாகவும் வெற்றி பெற்றது.“ அதிகாரம் எப்போதும் கசப்பை அல்லவா விதைக்கிறது ?.....ரிசல்டை குறிவைக்கும் திற மைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நேசிக்கப்படுவதில்லை ”ஆஹா !! ஆயிரம் பொன் பெறும் முத்திரை வாக்கியமன் றோ இது . அதுவும் கல்வி வெறும் கடைச் சரக்காக் கப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் இதன் வீரி யம் அளவிடற்கரியது. சிப்ஸ் மாணவர்களால் நேசிக்கப்படவர் .அவர் கதை நமக்கு எளிய சாளரங்களைத் திறந்து அன்பெனும் தென்ற லின் சுகத்தை அனுபவிக்கச் சொல்கிறது .

“சிப்ஸ் திறமைசாலி இல்லை . அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைக ளிலும் பொறுப்புகளிலும் அமரும்போது அக் கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கி றார் கள் . அப்படி அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை . ” அப்படி வாழ்ந்த சிப்ஸ் முன்னுதாரணமாய் ரோல்மாட லாய் நம் நெஞ்சுக்குள் நிறைகிறார் . இதயத் தோடு உரையாடும் இந்நூலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ; மாடசாமியோடு நீங்க ளும் சிப்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள்

.- சு.பொ.அகத்தியலிங்கம்.









 
 

சின்ன சின்ன மாநிலங்கள் : தீர்வா? சிக்கலா?

Posted by அகத்தீ Labels:

 
சின்ன சின்ன மாநிலங்கள் :
தீர்வா? சிக்கலா?


- சு.பொ.அகத்தியலிங்கம்

குட்டி குட்டி மாநிலங்களாக இருப்பின் உள்ளங் கைக்குள் பொத்திபொத்தி வளர்ப்பது போல் சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என் றொரு வாதம் வலுவாக முன்வைக்கப்படு கிறது. மாநிலங்களை துண்டு துக்காணியாகப் பிரித்துக் கொண்டே போனால் வெங்காயத்தை உரித்த கதையாக மாறிவிடாதோ என ஆழ்ந்த கவலை இன்னொரு பக்கம் வீரியமாக வெளிப் படுத்தப்படுகிறது. முன்னதின் நம்பிக்கையும் பின்னதின் கவலையும் புறங்கையால் தள்ளி விடக் கூடியதல்ல. ஒரு அர்த்தமுள்ள விவாதம் தேவைப்படுகிறது.

“இந்திய துணைக் கண்டம் அரசியல் ரீதியில் 56 தேசங்களாக இருந்த காலமும் உண்டு. ஏன்? பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இந்தி யாவை ஆளும் பொறுப்பை ஏற்ற போதுகூட பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே 600 சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சுதந்திர ராஜ்யங்களுக்குத்தான் சமஸ்தான இந்தியா என்ற பொதுப்பெயரைத் தந்தது” என்கிறார் ம.பொ.சிவஞானம்.இந்த நேரத்தில் இன்னொன்றை நினைவு படுத்துவதில் தப்பில்லை. காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதம் ஒன்றில் - பிரிட் டிஸார் இந்தியாவை அடிமைப் படுத்திவிட்ட தாகக் கூறாதீர்கள்; நீங்கள் அடிமைப்பட்டீர்க ளென்று முதலில் ஒப்புக்கொள்ளுங்கள் என்றா ராம். முப்பது லட்சம் மக்களை வெறுமே 30 ஆயிரம்பேர் 3000 கி.மீ தொலைவிலிருந்து வந்து அடிமைப்படுத்தியது எப்படி? நீங்கள் பிளவுண்டு கிடந்தீர்கள், சண்டையிட்டுக் கொண்டு கிடந்தீர்கள், அதனால் அவன் அடிமைகொள்வது சுலபமானது என விளக் கினாராம்.

மீண்டும் அதே சூழலை உருவாக்கி அந்நிய ஏகாதிபத்தியத்தை - நம் நாட்டு கனிம வளங்களை கபளீகரம் செய்ய மலைப்பாம்பாய் வாய்பிளந்து நிற்போர்களை வெற்றிலை பாக்குவைத்து அழைக்கப் போகிறோமா ?இந்தியா விடுதலை அடைந்த போது பிரிட்டிஸார் தங்கள் அடக்குமுறைக்குத் தோதாக அமைத்திருந்த மாநிலங்களும் சமஸ் தான ஆளுகையிலிருந்த பிரதேசங்கள் என அறிவியல்பூர்வ அடிப்படையின்றி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு குழம்பிக்கிடந்தன. ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச்சந்தை, பொது கலாச்சார அமைப்பு போன்ற காரணங்களைவிட மொழி தான் மிகமுக்கிய காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார்.

அதுதான் அறிவியல் அணுகுமுறையாகவும் இருக்க முடியும். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்களும் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழிபேசும் மக்கள் குறித்து ஆய்வு செய்தார். 1942 ல் ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு “ஒன் றே கால்கோடி மலையா ளிகள்” என்பதாகும். அன்றைய மக்கள் தொகை அவ்வளவுதான் இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் தோழர் “பி.சுந் தரய்யா விசாலாந் திரா” என்ற ஆய்வுகட்டுரை யை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன் றிணைப்பதற்கான அடிப்படை யாக விளங் கியது. அதே காலகட்டத்தில் தோழர் பவானி சென் வங்க மொழி பேசும் மக்களைத் திரட்ட “புதிய வங்கம்” என்ற நூலை எழுதினார்.

செழிப்பான நாஞ்சில் நாடும் குமரி மாவட் டமும் செங்கோட்டையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் அடக்கப்பட் டிருந்தன. அவையும் புதுக்கோட்டை சமஸ்தா னமும் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்று “ஐக்கிய தமிழகம்” என்ற நூலை ப.ஜீவானந்தம் எழுதினார்.விடுதலைக்குப் பிறகு மொழிவழி உணர்வு வலுப்பெற்றது. விசால ஆந்திரா கோரி 1953 ஆம் ஆண்டு பிரபல தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து 58 - வது நாளில் உயிர் துறந்தார். ஆந்திரா பற்றி எரிந்தது. துப்பாக்கிச் சூட்டில் 7 வயது பள்ளிச் சிறுமி உட்பட மூவர் பலியானார்கள். நேரு அரசு இறங்கிவந்தது. ஆந்திர மாநிலம் அமைக்கப் பட்டது. கூடவே மாநில புனரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 1956 ல் மொழிவழி மாநிலங் கள் உருவாயின. அது காலத்தின் தேவை.இப்போது காங்கிரஸ் கட்சி குறுகிய கணக் குப் போட்டு தெலுங்கானா, சீமந்தரா ஆந்திரா என பிரித்திட முடிவெடுத்து அறிவித்துவிட் டது.

அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும். ம .பி .இரண்டாக, மேற்கு வங்கத்தை இரண்டாக, அசாமை ஜம்மு-காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண் டும். கோலார் மாவட்டத்தை மாநிலமாக்க வேண்டும் ஐதராபாத் - கர்நாடக மாநிலம் கொங்கு சோழன், பாண்டியன், பல்லவன் மாநி லங்கள் இப்படி கரையான் புற்றைக் கலைத் ததும் அது வேகமாய் எங்கும் பரவுகிறது. சிறிய மாநிலங்கள் கேட்பது ஏன் ? யார் ? இக்கேள்வி முக்கியமானது. ஏன் என்பதற்கு பல காரணங்களை முன்வைத்தாலும்; 1. பின் தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி காணவும் 2. நிர்வாகத் திறமை மேம்படவும், 3. வட்டாரப் பண்பாட்டை பாதுகாக்கவும், 4. வட் டார அல்லது உள்ளூர் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கிடைக்கவும் - சிறிய மாநிலங்கள் தேவை என வாதிடப் படுகிறது. இது சரியா? ஒவ்வொன்றாய் அலசுவோம். மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்துக்கு பிரதேசம் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மையே.

இதன் அடிப்படைக் காரணம் மாநில, மாவட்ட விஸ்தீரணமோ, சிறிதா பெரிதா என்ப தோ அல்ல. மாறாக மத்திய அரசு கடைப் பிடித்துவரும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அது சார்ந்த அரசியல் பாரபட் சமுமே காரணமாகும். உலகமயமும் தாராள மயமும் இந்த ஏற்றத்தாழ்வை குறைக்கவில் லை, தீவிரப்படுத்தியிருக்கிறது.அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், திரிபுரா என்கிற ஏழுசகோதரிகள் என்றழைக்கப்படு கிற வடகிழக்கு மாநிலங்கள் அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியவையே. ஆயினும் அங்கெல்லாம் வளர்ச்சி இல்லவே இல்லை யே. நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறதே ! அங்கெல்லாம் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் தோன்றி ஏழு மாநிலங்களையும் இணைத்து தனி நாடு வேண்டும் என்றே கோரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறதே !

ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் திறமையான நிர்வாகத்தின் பொருட்டு என்று சொல்லித்தானே தனி மாநிலங்களாக்கப் பட்டன. பின்தங்கிய நிலைமையும் வளர்ச்சி இன்மையும் தானே அங்கே நக்சலிசத்தின் பிடியை இறுக்கி இருக்கிறது. கனிம வளங் களை கொள்ளை அடிக்க உள்நாட்டு, வெளி நாட்டு சுரங்க முதலைகளும் உள்ளூர் அரசி யல் தலைமையும் கூட்டணி அமைத்து செயல்படுகிறதே! ஊழல் முறைகேட்டில் முன்னிலை வகிக்கிறது, அன்னியில் கண்ட மாற்றம் என்ன? சுரங்கப் பணக்காரர் கொஞ்சம் பெருகியதால் சராசரி தனிநபர் வருமானம் உயர்ந்ததாக புள்ளிவிவர மாயாஜாலம் நிகழ் கிறதே ஒழிய பெரும்பான்மை மக்கள் வறுமை யிலிருந்து அறியாமையிலிருந்து, விடுபடவே இல்லையே!

வட்டாரப் பண்பாட்டைக் காத்திட சிறிய மாநிலங்கள் தேவை என்பதும் அர்த்தமற்றது . உலகமயப் பண்பாடு ஆக்டோபஸ் போல எல் லோரையும் விழுங்கி ஜீரணித்துக் கொண்டி ருக்கும் போது துண்டுதுக்காணியாக உடைந்து நின்று எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்கப் போகிறோம்?யார் யார் இக்கோரிக்கைகளை ஆதரிக் கிறார்களெனப் பார்ப்பதும் அவசியம். முதலா வதாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் - ஏற்கெ னவே மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ் சமாக அரித்து தின்று எதேச்சதிகார பசியோடு அலைகிறது.

சின்னச் சின்ன மாநிலங்கள் அவர்களின் எதேச்சதிகாரக் கொடுங்கன வுக்கு உயிர் கொடுக்கும் . அடுத்து சங்பரிவார்- ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக - இவர்களின் இந்துராஷ்டிரக் கனவுக்கு மொழிவழி மாநிலங் கள் இடைஞ்சல். இந்து, இந்தி, இந்துராஷ் டிரம் என்பதே அவர்கள் இலக்கு. ஆகவே குட்டி குட்டி மாநிலங்களை அமைக்கத் துடி யாய்த் துடிக்கிறார்கள்.அப்போதுதானே தங்கள் வலையில் பிடித்து இந்துத்துவக் கூடைக்குள் கொட்ட முடியும்.மூன்றாவதாக முக்கியமான வில்லன் பன்னாட்டு முதலாளிகள். கனிம வளங்களை மொத்தமாய் முழுங்க - சிறிய மாநிலங்கள் எனில் அரசியல் சதுரங்க காய் நகர்த்திகாரி யத்தை எளிதாக முடிக்க இயலும். வேண்டிய வரை முதல்வராக்க குதிரை பேரமோ கழுதை பேரமோ எளிது. ஆகவேதான் குட்டி குட்டி மாநிலக் கோரிக்கைகளை எழுப்புவோருக்கு போராட பணமுடை இல்லை. தாராளம் அள்ளி வழங்குகிறார்கள்.

இறுதியாக இந்திய ஜனநாயகமும் வலி மையும் கண்ணை உறுத்த; ஒற்றுமையைக் குலைத்து ஊடுருவவும் - தன் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் - மீண்டும் நவகாலனி யாக்க கனவு காணும் ஏகாதிபத்தியம் இது போன்ற கோரிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதை அறியாதவன் அரசியலில் ஏமாளியே!சின்ன மாநிலக் கோரிக்கைகளை இடது கோடியிலிருந்து ஆதரித்தாலும் - வலது கோடியிலிருந்து ஆதரித்தாலும் போய்ச் சேரு மிடம் ஒன்றே. அது யாருக்கு லாபம்? அது யாருடைய கோரிக்கை? இன்னுமா சந்தேகம். ஆயின் மக்கள் ஆதரிப்பது ஏன் என்கிற கேள்வி எழலாம். ஒரே பதில் தான் வளர்ச்சி யின்மை, வேலையின்மை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் - நிஜ வில் லனை அடையாளம் காணமுடியாமல் திணறு கிற போது அல்லது சாதுரியமாக நிஜவில்லன் கள் முகமூடி அணிந்து நிழல் வில்லன்களை முன்னிறுத்தும் போது; தடுமாறுகிறார்கள் அல்லது திசை திருப்பப்படுகிறார்கள்.

லியோ டால்ஸ்டாய் அன்று காந்திக்கு எழுதிய கடி தத்தை இப்போது மீண்டும் அசைபோடுவோம். விழித் துக் கொள்வோம். தேசம் மீண்டும் களவு போவதைத் தடுத்திட ஒன்றுபட்டு எழுவோம்.

**************

நன்றி : தீக்கதிர் (29 08 2013)

போராடப் புதிய வழிமுறைகள்

Posted by அகத்தீ Labels:







சோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்


இடதுசாரிகளைப் பொறுத்தவரை , அரசியல் என்பது முடியாது என்பதை முடித்துக் காட்டும் கலையாக இருக்க வேண்டும் ..... காது கொடுத்துக் கேட்கக் கற்றுக் கொள்வதும் மக்களுடன் உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம்.. ஒரு சமூக சக்தியைக் கட்டியமைக்காமல் நம்மால் ஒரு அரசியல் சக்தியைக் கட்டியமைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது ; இப்படி நறுக்குத் தெறித்தார் போல் நம்மோடு உரையாடுகிறார் மார்த்தா ஹர்னேக்கர் .
இவர் நம் வாசகர்களுக்கு புதியவரல்ல . இடதுசாரிகளும் புதிய உலகமும்  (பாரதி புத்தகாலய வெளியீடு 2010 ல் பிரசுரமானது)  எனும் புத்தகம் மூலம் அறிமுகமான சிலி தேசத்து கம்யூனிஸ்ட் . பாரீஸில் அல்தூசரோடு பயி ன்றுவிட்டு சிலியில் அலண்டேக்கு தோள்கொடுக்க 1968 ல் தாய் நாடு திரும்பியவர்.  அலண்டே ஏகாதிபத்திய சதியால் படுகொலை செய்யப்பட்ட சூழலைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் . கியூபாவில் குடியேறி எழுத்தாளராய்; பத்திரிகையாளராய் லத்தின் அமெரிக்க வரலாற்று பின்புலத்தில்  இன்றைய நவீன தாராளமயச் சூழலை இடதுசாரிகள் வெற்றி கரமாக எதிர்கொள்ள வழிகாட்டியவர். இவர் ஓர் உளவியல் வல்லுநர்.
இவரின் போராட்ட வழிமுறைகள் எனும் இந்நூல் 56 பக்கங்கள்தான் ஆனால் விவாதிக்க, விடைதேட, வழிகாட்ட பின்பற்ற ஏராளமான கருத்துப் பொறிகளை தன்னுள் அடக்கியுள்ளது .


 வீடுவீடாகச் சென்று கையெழுத்துப் பெறுவதற்கு மேற்கொண்ட பிரச்சாரம் ஊடகத்தின் இருட்டடிப்பு முயற்சியை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது என்கிறார் . மறியலைவிட மக்களிடம் கையெ ழுத்து பெறு வது எவ்வளவு சிரமமானது , வலிமையானது என்பதை மக்கள் ஊழி யர்கள் அனுபவத்தில் நன்கு அறிவர். நமது அனைத்துப் பேச்சுகளும் செய்திகளும் ஒரே துணியிலிருந்து வெட்டப் பட்ட துண்டுகளாக இருக்கிறபோது , ஒரே சொல்லால் , ஒரே விதத்தில் எடுத் துச் சொல்லப்படுகிறபோது , ஒரே ஒலி பெருக்கியில் ஒரே தொனியில் உச்சரிக் கப்படுகிற போது , மேலும் பல ஆண்டுகள் செல்லச் செல்ல சுவரொட்டிகளும் முழக்கங்களும் மாறாதபோது , நமது சொற்கள் தமது மதிப்பை இழக்கின்றன . அவை எந்த ஒருவரின் கற்பனையையும் இதற்கும் மேலும் வெல்ல முடியாது.   ஹர்னேக்கரின் இந்த வரிகள் நம் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகத் தோற்ற மளிக்கவில்லையா? எழுச்சிகளா , புரட்சிகளா ? அரசியல் கருவியின் பாத்திரம் என்கிற முதல் அத்தியாயம் தொடங்கி - விருப்பங்களை உண்மை நிலை யுடன் குழப்பிக் கொள்ளாதீர் என்கிற 12 வது அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தி யாயத்தின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புக் கங்காய் நம் இதயத்தில் விழுகிறது .



 நம்பிக்கை பெறச் செய்யுங்கள் ; திணிக்காதீர்கள் என்று அவர் சொல்லும் போதும் சரி ; சிறுபான்மை சரியாக இருக்கலாம் என நுட்பமாக பகுத்துக்கூறும் போதும் சரி ; அரசியலையும் அரசியல்வாதிகளையும் மக்கள் சந்தேகப் படுவதற்கான காரணங்களை அலசும் போதும் சரி ; கட்சி இடதுசாரிகளையும் சமூக இடதுசாரிகளையும் ஒன்றிணைப்பதின் தேவை குறித்து வாதாடும் போதும் சரி ; ஒவ்வொன்றிலும் அவரது எழுத்து வீரியத் தோடு நம்முடன் உரையாடுகிறது  நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது . லத்தின் அமெரிக்க அனுபவங்களூடேதான் அவரது கருத்துகள் முகிழ்த்தாலும் ; நமது அனுபவங்களோடு உரசிப்பார்க்கத் தக்கனவாகவே உள்ளன . அப்படியே பொருத்த இயலாமல் போயினும் கற்றுக்கொள்ள, சோதித்துப் பார்க்க நிறைய செய்திகள் உண்டு . 

படிக்கவும் விவாதிக்கவும் தகுதியான நூல் என்பது மட்டு மல்ல ; செயல் ஊனத்தைக் களைந்து செயல்வேகத்தை தூண்டிவிடும் வல்ல மையும் இந்நூலுக்கு உண்டு . சோதித்து  - உரசி -  அலசிப் பாருங்களேன் !


போராடப் புதிய வழிகள் , ஆசிரியர் : மார்த்தா ஹர்னேக்கர் ,
தமிழில் : நிழல்வண்ணன் ,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அமபத்தூர் , சென்னை  600 098, பக் : 56 . விலை : ரூ. 40 .

ஜூதான்....

Posted by அகத்தீ Labels:


சுயத்தின் முடிச்சுகள்        அவிழும் கணத்தில்


 சு.பொ.அகத்தியலிங்கம்.


//த்திரப்பிரதேசத்தில்  சுஹ்ரா சாதியில் பிறந்தவன்  நான் என்று வெளிப்படையாகச் சொன்னேன் .
அவள் கண்களில் நீர் முட்டியது.  “  நீங்கள் பொய் சொல்கிறீர்கள் , அப்படித்தானே ?” என்று அழுதபடி கேட்டாள்.

  “ இல்லை சவி..நான் உண்மையைத்தான் பேசுகிறேன் . நீ இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் .” என்று இதமாக எடுத்துச் சொன்னேன்.
நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகப் பிறந்தது குற்றம் என்பதுபோல் அழத்தொடங்கினாள் . வெகுநேரம் அழுதாள் . எனக்கும் அவளுக்கும் இடைவெளி திடீரென அதிகரித்தது . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வந்த வெறுப்பு எங்கள் மனதில் புகுந்து கொண்டது . பண்பாடு , நாகரீகம் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான பொய்கள் .//

- மேலே உள்ளவை நாடக வசனமல்ல , வெறுமே நாவல் வரிகளல்ல . நம் கதாநாயகனின் சுய அனுபவம் நாவலாய் விரிந்துள்ளது. ஒம் பிரகாஷ் வால்மீகி எழுதிய  ஜூதான் [ எச்சில் ] நாவலா சுயசரிதையா ? இரண்டும் கலந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை , உண்மையைத் தவிர வேறில்லை என நீதிமன்றக் கூண்டிலேறி சத்தியப்பிரமாணம் செய்யவில்லை . ஆனால் , எழுத்தின் ஒவ்வொருவரியிலும் பொதிந்திருக்கும் உண்மையின் கங்குகள்  நம்மைச் சுட்டெரிக்கின்றன.

// இப்பவெல்லாம் யார் சாதிபார்க்கிறாங்க..யார் சாதியைக் கேக்கிறாங்க..// இப்படி வித்தாரம் பேசுகிறவர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம் . தர்மபுரி ரணத்தைக் காட்டிப் பேசினால்கூட மழுப்புகிறார்கள் . // அதுவா ? அது ஒரு அய்சலேட்டட் இன்சிடெண்ட் .. ஆமாம் விதி விலக்கான நிகழ்வு.. டோண்ட் ஜெனரலைஸ்ட் ..பொதுமைப்படுத்தக்கூடாது // இப்படி வியாக்யானம் வேறு செய்கிறார்கள் . இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்களா அல்லது அப்பாவிகளா ? முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம் . ஆனால் நாம் வாழும் இந்த யுகத்திலும் சாதி மனித்ததை எப்படி குத்திக் கிழிக்கிறது என்பதை இரத்தமும் சதையுமாய் இந்நூல் உரக்க்கப் பேசுகிறது .

// நீங்கள் தலித் என்று அடையாளம் தெரியாதவரை அனைத்தும் சுமுகமாகவே நடக்கிறது . உங்கள் சாதி என்னவென்று தெரிய வந்த அடுத்த கணமே அனைத்தும் மாறிவிடுகிறது. அவர்களின் முணுமுணுப்புகள் உங்கள் இரத்த நாளங்களில் கத்தியாய் இறங்குகின்றன . வறுமை , அறியாமை , உடைந்துபோன வாழ்க்கை , வெளியே நிற்பவர்களின் வேதனைகள் ......// இவை நுல் நாயகனின் வாக்குமூலம் மட்டுமல்ல - இவற்றின் படப்பிடிப்பே இந்நூல் .

உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் சுஹ்ரா எனப்படுகிற தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் வால்மீகி. இறந்த மாட்டின் தோலை உரிப்பது - மலம் அள்ளுவது , சுமப்பது , இப்படி சமூகத்தில் இழிவாய்க் கருதப்பட்ட தொழில்கள்  அவர்கள் சாதிக்கென விதிக்கப்பட்டிருந்தது . இதனூடே இந்த இழிவிலிருந்து கரையேற கல்வி மட்டுமே ஒரே மார்க்கம் என அவன் தந்தை நம்பினார் . பள்ளியில்  சேர்க்க அவர் பட்ட கஷ்டம் தனி . பள்ளியில் என்ன நடந்தது ?

// ஒரு நாள் தலைமையாசிரியர் என்னைத் தன் அறைக்கு அழைத்துடேய் உன் பெயர் என்ன ?” என்று கேட்டார்.

ஒம்பிரகாஷ்என்று அச்சத்துடன் மெதுவாகப் பதில் சொன்னேன் . தலைமையாசிரியர் எதிரில் வந்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள் . பள்ளியே அவரைப் பார்த்து நடுங்கியது .

 “ சுஹ்ரா சாதிக்காரனா? ” தலைமையாசிரியர் இரண்டாவது கேள்வியை வீசினார்

 “ ஆமாம் ” 

 “ சரி, அங்கே ஒரு தேக்கு மரம் தெரியுதுபார் . அதில் ஏறி சில கிளைகளை உடைத்து ஒரு விளக்கு மாறை தயார் செய் . பள்ளி முழுவதையும் கண்ணாடி போல சுத்தமாகப் பெருக்கு . இதுதான் உன்னுடைய குடும்பத் தொழில் தெரியுமா ? ” //

இது ஒரு நாள் ஒரு சமபவம் அல்ல . ஒவ்வொரு நாளும் சாதியின் பெயரால் அவன் பட்ட பாடு.. அதன் வலிகள் .. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் குத்தூசியாய் நம் இதயத்துள் இறங்குகிறது .

// நான் பள்ளியில் படித்த கவிஞர் சுமித்திரா நந்தன்  பந்தின்  “ ஆகா , கிராம வாழ்க்கைதான் எவ்வளவு அற்புதம்.. ” என்ற கவிதையின் ஒவ்வொரு வரியும் செயற்கையானது ; பொய்யானது . // என வால்மீகி  சொல்வது வெறும் அனுபவம் மட்டும்தானா ? தலித்தாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அதை உணர முடியும் .

// ஏதேனும் ஒரு வழியில் வறுமையையும் , ஆதரவற்ற நிலையையும் கடந்து விடலாம் . ஆனால் , சாதியைக் கடப்பது என்பது முடியவே முடியாது. //  இந்த வார்த்தைகள் வால்மீகி தன் வாழ்க்கை ரணங்களோடு சமூகத்தின் நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் உண்மை .

கல்லூரி வாழ்க்கையும் பெரிதாய் மாறுபடவில்லை. ஆசிரியப் பணி எவ்வளவு உயர்வானது. ஆனால் ஆசிரிய நெஞ்சங்களுக்குள்ளும் சாதிய வன்மம் குரூரமாய் சிரிக்கும் போது ; ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்கு விடிவேது ? சேலத்தில் கண் குருடாக்கப்பட்ட தனம் நினைவில் வந்து போகிறாள் . வால்மீகியின் கல்லூரி வாழ்க்கையும் தடைபட்டது சாதியநஞ்சாய்ப் போன ஆசிரியர்களால் .

ஆயுதப்படை தொழிற்சாலையில் பயிற்சி பெற்றதும் மும்பை சென்றதும் கூட் அவனை சாதி சகதியிலிருந்து மீட்கவில்லை .மேலும்மேலும் தான் சுஹ்ரா சாதியில் பிறந்தவன் என்பதை உணரவைத்தது , ஆனால் மேம்பட்ட நிலையில் தலித் என்ற வார்த்தையையே அதன் பின்னரே அறிகிறான் . அவனுள்  போர்க்குண்மிக்க விழிப்புணர்வு மெல்ல வேர்பிடித்தது .
மரத்வாடா பல்கலைத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்தைத் தொடர்ந்து உசுப்பிவிடப்பட்ட எதிர்ப்பு கலவரம்அதன் எதிர்வினையாய் தலித் மக்களிடையே முகிழ்த்த போர்க்குணம் மிக்க எதிர்ப்புணர்வுமராத்திய அரசு தன்முடிவில் பின்வாங்கியதுதலித் பாந்தர் அமைப்பின் உதயம்தலித் இலக்கியம் என்றொரு புதியபோக்கு முளைவிட்ட்து என அண்மைக்கால சமூக அரசியல் நிகழ்வுகளில் வால்மீகி பங்கேற்றது என ஒவ்வொன்றும் இயல்பாய் நுட்பமாய் பதிவாகியுள்ளது . வால்மீகியின் அனுபவப் பதிவுகள் எல்லாமே நம் கன்னத்தில் அறைந்து சாதிய ஆணவம் இன்னும் தொடர்வதைப் பார்த்தாயா எனக் கேட்கிறது

// சாதியச் சக்திகளின் கைகள்தான் அன்றைய தினம் ஓங்கியிருந்தன . தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பை விதைத்திருந்தார்கள் . “ தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குகஎன்று முழக்கமிட்டுவந்த தொழிற்சங்கங்களால்கூட இந்த வெறுப்புணர்வு வளர்வதைத் தடுக்க முடியவில்லை . // இவ்வாறு வால்மீகி சொல்வது மிகையல்ல . இங்கு தமிழகத்திலும் சாதிக் கலவரம் மூண்டபோதெல்லாம் நம் கசப்பான அனுபவமும் அதுதானே!

வால்மீகி என்றதும் இராமாயணம் எழுதியவர் என்றே தமிழக மக்கள் கருதுவர் . ஆயின் , அது தலித் சாதியில் ஒரு பிரிவினர் என்பதை அறியும் போது  அதிர்ச்சியாக இருக்கிறது . இவர் வால்மீகி பெயரைத் தாங்கித் திரிவதால் பலநேரம் தப்பாக புரிந்து கொண்டு நட்பு பாராட்டியதும் , சுஹ்ரா சாதியின் அடைமொழி என அறிந்தபோது அவமானப்படுத்தப் பட்டதும் கொஞ்சமா ? பிடிவாதமாய் வால்மீகி பெயரை போர்க்குணத்தோடு இவர் சுமந்து வாழ்ந்த கதை நெஞ்சைப் பிசைகிறது .

பெயரில் வார்த்தையில் என்ன இருக்கிறது எனக் கேட்போருண்டு. வால்மீகியின் சமூகவலியை இந்நூல் சொல்லும்.தியாகி என்றால் நாமறிந்த பொருள் வேறு அதுவும் ஆதிக்க சாதியின் பெயர் என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது . தமிழ் நாட்டில் சண்டாளத்தனமாய் உள்ளது என சில கொடுமைகளைச்  பொதுவழக்கில் சொல்வதுண்டு . ஆயின், அது தலித்தில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல் என்று அறிந்த பின்அந்தச் சொல்லின் சமூகவேர் பிடிபட்டபின் அந்த சொல்லை இனி பயன் படுத்துவது தவறு அல்லவா ? ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று மார்க்சியம் சொல்லும் . இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் மட்டுமல்ல ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வர்க்க்த்தின் நலன் மட்டுமல்லஒரு வர்ணத்தின், சாதியின் நலனும் ஒளிந்திருக்கிறது என்று கூறுவது சற்றொப்ப சரிதான்.

இந்நாவல் எதிர்மறையான ஆட்களை மட்டுமல்லசிமன் லால்ஜி போன்ற சாதி வேற்றுமை பாராட்டாத மனிதர்கள் சிலரையும் நமக்கு அடையாளம் காட்டி இன்னும் நம்பிக்கை வற்றிவடிந்துவிடவில்லை என கோடிட்டுச் செல்கிறத// ஒரு சமூக நோயோடு நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலோடு இப்போது இந்தப் பிரச்சனையை அணுகுகிறேன் . மரியாதைக்கும் , திறமைக்கும் , சமூகமேலாண்மைக்கும் அடிப்படையாகச் சாதி இருக்கும்போது , இந்தப் போராட்ட்த்தில் ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது . இது நீடித்த போராட்டம் , வெளி உலகிலும் , நம் உள்ளங்களிலும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரப்  போகின்ற ஒரு போராட்டம் . சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுகின்ற உணர்வை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்ற போராட்டம் நமக்குத் தேவைப்படுகிறது . // இப்படி அனுபவ நெருப்பில் புடம் போட்டு நூலாசிரியர் வால்மீகி சொல்லி இருப்பது மிக முக்கியமானது

// என்னுடைய எழுத்துகள் பிரச்சாரமாகவும் முரட்டுத்தனமாகவும் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள் .//  - என நூலின் கடைசி பத்தியில் வேதனைப் பட்டு

// அதாவது , நான் தலித்தாக இருப்பதும் , என்னுடைய சூழல் , என்னுடைய சமூகப் பொருளாதாரச் சூழல் ஆகிவற்றிற்கேற்ப நான் ஒரு கண்ணோட்ட்த்துக்கு வந்து சேருவது ஆணவமாம் . காரணம் அவர்கள் கண்ணோட்ட்த்தில் , நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் . கதவுக்கு வெளியே நிற்பவன் // - இந்த கடைசி வரிகள் அவர் பட்ட வலியின் உச்சம்.

// இந்த நூலை நான் எழுதிக்கொண்டிருந்தபோது ஆழமான மனவேதனைக்கு உள்ளானேன் . ஒவ்வொரு அடுக்காக என் சுயத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பது என்பது ஒரு பயங்கரமான வேதனை என்பதை உணர்ந்தேன் . // - ஆம், நூலை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அதே மன உழைச்சல் ஏற்படும் . அதுதான் இந்நூலின் வெற்றி .


ஜூதான் [ எச்சில் ],

ஆசிரியர் : ஓம் பிரகாஷ் வால்மீகி,

தமிழில் : வெ . கோவிந்த்சாமி,

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர் , சென்னை – 600 098 .

பக் :194  , விலை : ரூ.150. 

                       நன்றி : புத்தகம் பேசுது 8/13

மார்க்சை படிக்காமலே ஒப்பீடு செய்வதா.....

Posted by அகத்தீ Labels:


மார்க்சை படிக்காமலே 

 

ஒப்பீடு செய்வதா..... 

சு.பொ. அகத்தியலிங்கம்


உலகத்தத்துவ சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பீடு செய்து ஒரு ஆய்வு நூல் வந்திருப்பது நல்ல முயற்சி. அதற்காக பாராட்டலாம். ஆனால் இந்த ஒப்பீடு எந்த நோக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை இந்த நூல் நிறைவேற்றுகிறதா? சாக்ரட்டிஸ், பினோசா, ரூசோ, வால்டேர், காரல்மார்க்ஸ், கான்ட், சங்கரர் என எழுவரோடு பெரியாரை ஒப்பிட்டு பெரியாரே அனைத்திலும் விஞ்சி நிற்பதாக நூலாசிரியர் நிறுவமுயன்றிருக்கிறார். அது தான் அவருடைய நோக்கமும் கூட. அதில் பிழையில்லை.  நூலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அத்தகைய உணர்வுக்கு வந்து சேரவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என்பது தான் இந்த நூலின் பலவீன மான பகுதி.

காரல்மார்க்ஸ், சங்கரர் தவிர மற்றவர்களுடைய தத்துவங்களை யாம் முழுமையாக கற்றவனில்லை. ஓரளவே அறிவோம். இந்நிலையில் ஆசிரியரின் ஒப்பீடு எந்த அளவு சரி, தப்பு என்று கூறுகிற நுண்மான் நுழைபுலம் எமக்கில்லை: என்று கருதுவதால்  யாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
அதே சமயம் காரல்மார்க்சை முறையாக பயிலாமலும், மார்க்சியத்தின் அடிப் படையை அறிந்து கொள்ளாமலும் நூலாசிரியர் ஒப்பீடு செய்ய முனைந்திருப் பது நகைப் பிற்குரியது. மேலும் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பி விட்டு இது தான் மார்க்ஸ் என்று சித்திரம் வரைய முயல்வது சிறுபிள்ளைத்தனம். இந்நூல் நெடுக நூலாசிரியர் அதைத்தான் செய்திருக்கிறார். இது மார்க்சுக்கு மட்டுமல்ல பெரியாருக்கும் செய்திருக்கிற பெருந்துரோகம் ஆகும். ஏனெனில் பெரியார் மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவில் செயல்படும் கம்யூனிஸ் டுகள் மீது பெரியாருக்கு சில விமர்சனங்கள் இருந்த போதும் மார்க்சை அவர் கொச் சைப்படுத்தியதில்லை. ஆயினும் நூலாசிரியர் இந்த அடிப்படை உண்மையைக் கூட தெரியாமல் ஒப்பீடு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அந்த குறிப்பிட்ட அத்தியாயத்திலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். இடம் கருதி ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்ட விழைகிறோம்.
 "பொதுவுடமை தோற்றுபோன கனவாகி விட்டதே "என தொடங்கும் வரிகளிலேயே நூலாசிரியருக்கு மார்க்சின் மீது உள்ள வெறுப்பை விதைப்பதாக உள் ளது. அடுத்து " மார்க்சின் மூலதனம் என்பது அரைகுறையான தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும்" என நூலாசிரியர் முதல் பத்தியிலேயே விஷம் கக்குகிறார். உலகமயச் சூழலில் உலகம் கடும் பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டு திணறுகிறது.  உலகமே மார்க்சின் மூலதனத்தில் தான் இதற்கான விடையை தேடிக் கொண்டிருக் கிறது என்பது உலகெங்கிலும் நடக்கும் விவாதத்தில் வெளிப்பட்டுள்ள பேருண்மை இதனை நூலாசிரியர் அறியாமல் இருப்பது வியப்புதான். " மார்க்சின் அழிவு தரும் கற்பனை உலகசிந்தனை" என போகிற போக்கில் நூலாசிரியர் புழுதி வாரிதூற்றுகி றாரே தவிர அதற்கான சான்றாதாரம் எதையும் சமர்ப்பிக்கவும் இல்லை.  சமர்ப்பிக்கவும் முடியாது.
கம்யூனிச சமுதாயம் என மார்க்ஸ் வரைந்து காட்டிய சமூகம் எங்கும் நிறுவப்பட வில்லை என்பதே உண்மை. ஆனால் ரஷ்யாவில் அமலிலிருந்த சோஷலிச அமைப் பிற்கு ஏற்பட்ட பின்னடைவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக சித்தரிப்பது மார்க்சைப் பற்றிய, மார்க்சியத்தைப்பற்றிய அடிப்படை ஞானமின்மையால் ஏற்படுவதே ஆகும்.  ஒவ்வொருவரும் தன் சக்திக்கு ஏற்ற உழைப்பை வழங்கிவிட்டு தேவைக்கேற்ற பங்கீட்டை பெறுகிற ஒப்புயர்வற்ற சமூகமே கம்யூனிச சமூகம். அதற்கு முந்தைய கட்டம் சக்திக்கு ஏற்ற உழைப்பு, உழைப்பிற்கு ஏற்ற கூலி என்கிற சோஷலிச கட்ட மைப்பு. அதையும் கூட ஒரே பாய்ச்சலில் அடைய முடியாது என்பதால் தான் சீனா மக்கள் ஜனநாயக புரட்சி என்றது. எது எப்படி இருப்பினும் சுரண்டலை மையமாக வைத்தி ருக்கிற முதலாளித்துவத்தைக் காட்டிலும் இந்த அமைப்புகள் பன்மடங்கு உயர்ந் தவை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நூலாசிரியர் முதலாளித்துவத்தை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார். மறுபுறம் மார்க்சை இகழ்கிறார். அவருடைய நோக்கம் பிசிறில்லாமல் சுரண்டும் வர்க்கத்திற்கு சேவகம் செய்வது என்பதாகவே இருக்கிறது.   
மதம் என்பது ஒரு அபின் (ஓபியம்)  என மார்க்ஸ்  சொன்னது ஏதோ கிறுத்துவ மதத்தின் மீது செய்யப்பட்ட விமர்சனம் எனத் தோற்றம் அளிக்கும் வகையில் நூலாசிரியர் எழுதிச் செல்வது நேர்மையற்றது. அனைத்து மதங்கள் குறித்தும் மார்க்ஸ் சொன்னது அது. ஆனால் அதற்குமேல் மதம் என்பது இதயமற்றவர்களின் இதயம் என்றும், ஏழைக ளின் ஏக்கப் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியதை நூலாசிரியர் படித்ததாகவே தெரிய வில்லை. அதற்கான சுவடே இந்நூலில் இல்லை. 
பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்தோட்டங்களை அங்கொன்றும் இங்கொன்று மாக திருடி கோர்க்கப்பட்ட ஒரு முரண்பாட்டு மூட்டை தான் மார்க்சியம் என நூல் நெடுக  தவறான சிந்தனையை நூலாசிரியர் விரவியிருக்கிறார். இது தான் ஆகப்பெரும் பிழை. மார்க்ஸ் வானத்திலிருந்து குதித்தவராக தன்னை ஒரு போதும் அறிவித்தவர் அல்ல. மார்க்சிஸ்டுகளும் அப்படிச் சொல்வதில்லை. மார்க்சியம் என்பது ஜெர்மன் தத்துவம், பிரஞ்சு அரசியல், பிரிட்டிஷ் பொருளாதாரம் என மூன்று அடிப்படைக் கூறுகளின் மீது கட்டப்பட்டது என்பதை மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் மறைத்ததில்லை.  இளம் ஹெகலி யாராக கல்லூரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ்  கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பாயர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கிய படிமலர்ச்சி அடைந்தார் என்பது தான் வரலாறு.  தலைகீழாக நின்ற ஹெகலை நிமிர்த்தியது, நிறுத்தியது தான் என் பணி என்று மார்க்சே கூறியுள்ளார்.  டூரிங்கிற்கு மறுப்பு என்கிற நூல் ஒன்றே மார்க்ஸ் மற்றவர்களுடைய கருத்துக்களோடு எவ்வாறு உரசி, மோதி தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார் என்பதற்கு சாட்சிகூறப்போதும்
மார்க்சை பயில்வது என்பது நூலாசிரியர் செய்வது போல் மேலோட்டமானதாகவோ அல்லது எதிர்நிலையிலிருந்தோ அணுகுவதாகாது. முதலில் நூலாசிரியர் மார்க்சை முழுமையாக புரிந்து கொள்ள முயலட்டும்.  அதன் பிறகு  விமர்சனம் செய்யவோ, ஆய்வு செய்யவோ முன் வரட்டும். சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆய்வாளர்களுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல. மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத் தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும்   மார்க்ஸ் பிறந்தார்  எனும் நூல் , ஒன்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த   கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு  உள்ளிட்ட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக  டெவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ், எங்கல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் நூலை  வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையை யும் உருவாக்கும். மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச் சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை  பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள முடியும் . 
 "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான்  சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடை யப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத் திலிருந்து அவன் உதிக்கவில்லை"  இவ்வாறு கூறும் ரியாஜெனோவ் 9 அத்தியாயங் களில் வரலாறு எப்படி மார்க்சை செதுக்கியது ? ; வரலாற்றை  பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார்,  இதில் எங்கெல்ஸின் பாத்திரம்யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கண்டிருக்கிறார். இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு  தொடர்ந்து விக் டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய, லெனினிய தத்துவம் என்ற நூலையும் வாசிப்பது அவசியம்.  இவற்றை எல்லாம் வாசிக்குமாறு யாம் நூலாசிரியருக்கு சிபாரிசு செய்வது மார்க்ஸ் மீதும் பெரியார் மீதும் கொண்ட பெரும்பற்றினால்தான்.
ஈரோட்டு திட்டத்தைப் பற்றி பேசுகிறபோது அதை வடிப்பதில் முதன்மைப் பாத்திரம் வகித்த தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் - செயல் முன்னோடி .சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் என்பதை நூலாசிரியர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஈரோட்டுத் திட்டமே பெரியார் ரஷ்யாவிற்கு போய் விட்டு வந்த பின்னர் பொதுவுடமை யின் பால் கொண்ட ஈர்ப்பால் உருப்பெற்றதே. இதனை நூலாசிரியர் உள்வாங்கியதாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலில் மொழி பெயர்த்து குடி யரசு ஏட்டில் வெளியிட்டவர் பெரியாரே. அதுவும் சோவியத் யூனியனுக்கு போவதற்கு முன்பே செய்தார். பிரிட்டிஷாரின் கடும் நெருக்கடிக்குப் பயந்து ஈரோட்டுத் திட்டத்தை  பெரியார் கைவிட்டார் என்று கூற இயலாது. மாறாக சமூக சீர்திருத் தமா கம்யூனிச பிரச்சாரமா எதற்கு முதலிடம் என்பதில் பெரியார் சமூக சீர்திருத்தத்திற்கே முன்னுரிமை வழங்க விரும்பினார். அதற்காக ஈரோட்டுத் திட்டத்தை கைவிட்டார். அதே சமயம் மார்க்சியத்தை அவர் என்றைக்கும் முற்றாக நிராகரித்ததில்லை. இந்திய கம்யூனிஸ்டுகள் மீது பெரி யாருக்கு விமர்சனங்கள் உண்டு. அதை பகிரங்கமாக சொல்லவும் அவர் தவறி யதில்லை. 
 மார்க்சையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவதும்; பெரியாரையும் அம் பேத்காரையும்  எதிர் எதிராக நிறுத்துவதும் சுரண்டும் வர்க்கம் மற்றும் மநுவாதிகளின் சூழ்ச்சியாகும். இன்றைய உலக மயத்தை எதிர்க்கவும் இந்துத்துவாவை எதிர்க் கவும் மார்க்சும், பெரியாரும், அம்பேத்கரும் தேவைப்படுகிறார்கள். இந்த கூரியபார்வை கூட நூலாசிரியருக்கு இல்லை என்பது தான் வேதனைக்குரியது. 
பிற தத்துவ ஞானிகளோடு பெரியாரை ஒப்பிட்ட நூலாசிரியர் அம்பேத்கரோடு ஒப்பிட ஏன் தவறினார்? என்கிற பெருங்கேள்வி நம்முன் உள்ளது.  அதுபோல எந்த தத்துவத்தை எடுத்தாலும் அனைத்துமே இந்துத்துவ சிந்தனையிலிருந்து பெறப் பட்டது என்பது போல் நூலாசிரியர் நூல் முழுவதும் விவரிக்கிறார். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்படி பொத்தாம் பொதுவாகக் கூறுவது ஒப்பியல் ஆய் விற்கு அழகாகாது. 
1953 ல் ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வித் திட்டம் என்பதை நாம் அறி வோம். அப்படிச் சொன்னால் தான் வாசகர்  பிழையின்றி புரிந்து கொள்ள இயலும். ஆனால் மொழி பெயர்ப்பாளர் மாற்றி அமைக்கப்பட்ட கல்வி என்று கூறுவது எதனால்? இப்படி மொழி பெயர்ப்புக்காக கையாண்ட பல சொற்களும் கூறவந்ததை  தெளிவாக புரிந்து கொள்ள தடையாக அமைந்துள்ளது. 
 பெரியாரியம் என்றால் அது வெறுமே கடவுள் மறுப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் மட்டும் தானா? தீண்டாமை எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு முதலியனவும் உள்ளடக்கியது அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக பெண் விடுதலை குறித்து பெரியாருக்கு நிகராக  தமிழ் நாட்டில் வேறு யாரும் சொன்னதில்லை. ஆனால் அந்த அம்சத்தை மொத் தமாக நூலாசிரியர் மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா? 
இந்தநூலுக்கு  மரியாதைக்குரிய கி. வீரமணி முன்னுரை எழுதியிருக்கிறார். எப்போதும் எதைப்பேசினாலும் எழுதினாலும் காரணகாரியங்களோடு தர்க்க நியாயங் களோடு எழுதவல்லவர் அவர். அவரோடு முரண்படுகிறவர்களும் அவர் எழுத்தை மதிப்பர். எமக்கும் பெருமதிப்புண்டு.  ஆனால் இந்த நூலை முழுமையாக  ஐயா வீரமணி அவர்கள் வாசித்துத் தான் முன்னுரை எழுதினாரா? என்கிற ஐயம் எமக்கு ஏற்படுகி றது. ஏனெனில் பெரியாரையே சரியாக நூலாசிரியர் உள்வாங்கவில்லை என்பது எம்முடைய தாழ்மையான கருத்து. இந்நூல் குறித்து வீரமணி அவர்கள் மறுபரிசீலனை செய் வார்கள் என்று நம்புகிறோம்.  குறைந்த பட்சம் காரல்மார்க்சை மிகத் தவறான கோணத் திலேயே கையாண்டிருக்கும் நூலாசிரியரின் அணுகுமுறையின் போதாமையை உணர்ந்து அந்த இயலை மட்டுமாவது திரும்பப்பெற  வீரமணி அவர்கள் முயற்சி எடுப்பார் என நம்புகிறோம்.


உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்
ஓர் ஒப்பியல் ஆய்வு
ஆசிரியர்:  பேரா. ஆர். பெருமாள்
தமிழாக்கம்: முனைவர் ப. காளிமுத்து
வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர், வல்லம்,
தஞ்சாவூர் - 613403
பக் : 144,  விலை ரூ. 60/-