வருணன் , வாயு , பூமாதேவி

Posted by அகத்தீ Labels:

 


நேற்று இனிப்பு காரம் பஜ்ஜி வடை எல்லாம் சாப்பிட்டதால் இன்னும் சோம்பேறித்தனம் தொற்றிக்கொண்டிருக்கிறது . ஊரெங்கும் பட்டாசு வெடிப்பதால் நடை பயிற்சி

யும் இல்லை . காலை உணவு முடிந்ததுமே கண்ணை மூடி சாய்ந்துவிட்டேன் .

 

வருணன் , வாயு , பூமாதேவி மூவரும் கனவில் வந்தனர் .

 

   மிஸ்டர் ! எனக்கொரு நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுங்கள் ..” என என்னை உசுப்பினார்கள் .

 

“ நல்ல வழக்கறிஞர்ன்னா யாருன்னு புரியலையே ?  கட்சி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , நீதியை விலைக்கு வாங்கித் தரும் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , மத வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , சாதி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , விலை போகும் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , நல்ல நீதிபதிகளோ நிதி மன்றமோ எங்கே இருக்கு ? நீங்க நல்ல வழக்கறிஞரைக் கேட்கிறீங்க…”

 

“ மிஸ்டர் ! தூக்கத்திலகூட இப்படித்தான் பேசுவீங்களா ? ஏற்பாடு செய்ய முடியுமா ? முடியாதா ?”

 

“ நல்ல … நல்ல … உங்க கேசு என்னண்ணு முதல்ல சொல்லுங்க … அப்புறம் .. நல்ல…”

 

“ சரி ! சரி ! விஷயத்துக்கு வர்றோம்… நான் வருணன் மழை சுத்தமாகத்தான் பெஞ்சுகிட்டு இருந்தேன் . இப்போ ஊரை நாசமாக்கி என்னை அமில மழை பெய்ய வச்சிட்டாங்க … நான் பெய்ற கொஞ்ச நஞ்ச மழை நீரு தேங்குற குளம் ,குட்டை ,கம்மாய் .சமுத்திரம் எங்கும் புள்ளையாரை தூக்கிப் போட்டு என் சுத்தத்தை நாசமாக்குறாங்க …  நாங்க விநாயகரைக் கேட்டோம் … நான் அப்படிச் செய்யச் சொல்லலைன்னு சத்தியம் பண்றார்… மனுஷங்கதான் இதுக்கு காரணம் அவங்க மேல வழக்குப் போடணும் …”

 

“ உங்க கேசு !”

 

“ நான் வாயு ! சுத்தமான காற்றாக வீசி உயிர்களை வாழவைத்தேன் … இப்போ நான் மாசுபட்டுட்டேன் … நாம் மகாவிஷ்ணுவைக் கேட்டேன்  ஊரெங்கும் பட்டாசு வெடிக்க நீங்கதான் சொன்னீங்களான்னு … அவரு சொல்றாரு எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை எல்லாம் இந்த மனுஷாள் பண்ற அட்டகாசம் … அவாளத்தான் தண்டிக்கணும்…”

 

“ நீங்க ! சொல்லுங்க…”

 

“ நான் பூமாதேவி … நான் எல்லா உயிரும் வாழ இடம் தந்தேன் … தீபாவளி ,ஆயுத பூஜை , விநாயகர் சதுர்த்தின்னு என்னைக் குப்பைக்காடாக்கிறாங்க .. நானும் எல்லா சாமிகிட்டேயும் கேட்டுட்டேன் … சத்தியமா நாங்க சொல்லவே இல்லைன்னு தலையில் அடிச்சு சத்தியம் பண்றாங்க … மனுஷங்கதான் குற்றவாளி அவங்க மேல வழக்குப் போடணும் …”

 

“ உங்க மூணு பேருக்கும் வருணன் ,வாயு ,பூமாதேவி மூவருக்கும் மனுஷங்கதான் எதிரியா ?”

 

“ ஆமாம்…ஆமாம்…”

 

“ உச்சி மன்றம் போனா மனுஷாள இல்லாத பேய் பூதம்தான் விசாரிக்குன்னு சொல்லிருவாங்களே…”

 

“ அப்படியா ?”

 

 சரி !சரி ! அவங்க வெளிநாட்டுக்காரங்களா..”

 

“ இல்லை … இல்லை…”

 

“ இவங்களா  ?”

 

 “இல்லை…”

 

“ அவங்களா ?”

 

“ இல்லை …”

 

“ எந்த நாட்டுக் காரங்க … எந்த ஊரு காரங்க … என்ன மதம் … என்ன  சாதி…”

 

காதைக்கொடு ரகசியமாகச் சொல்றேன் .சத்தமாச் சொன்னால் தேசவிரோதின்னு சொல்லி ஜெயில்ல போட்டிருவாங்க …”

 

[ காதில் மூவரும் கிசிகிசுத்தனர்…]

 

 “ஐயையோ …. ஐயையோ …. வாயு .வருணன் ,வாயு ,பூமாதேவி மூவரும் இந்து விரோதியாகிட்டீங்க….” நான் அலற….

 

[ மூவரும் தலைதெறிக்க ஓடினார்கள் ]

 

தூக்கம் கலைந்தது .

 

சுபொஅ.

21/10/25.

 


0 comments :

Post a Comment