நெய்தலின் கேள்விகள்

Posted by அகத்தீ Labels:

 சென்னை பெருநகரமாகாமல்

ஐநூறு ஆண்டுகளுக்கு 
முந்தைய நெய்தல் நில 
பாக்கங்களும் பட்டணங்களுமாய்
மட்டுமே இருந்திருந்தால் 
இந்த புயல்மழையில்
யாரேனும் பேசியிருப்போமா ?
கடலோரக் கிராமங்களை
கடல் வாரி முழுங்கினும்
பேச வாய் இருக்குமோ ?
பார்க்க கண் இருக்குமோ ?
நெய்தலின் துயரை 
பேசுவோர் யாரிங்கு
காலங்காலமாய் காட்சி இதுவே!

சென்னையின் வளர்ச்சியிலும் 
நெருக்கடியிலும் துயரத்திலும் 
பங்குதாரரான  மக்களே ! நீங்கள்
பஞ்சம் பிழைக்க வந்தவரோ !
இம்மாநிலத்தோரோ ! அல்லாதோரோ !
துறைமுகம் உருவாக்கப்பட்டு பின்
தொழில் நகராகவும் தலைநகராகவும்
வர்த்தக நகராகவும் இல்லாவிடில்
வந்திருப்பீரோ ! வந்திருப்பீரோ !
நெஞ்சைத் தொட்டுச் சொல்வீர் !

சென்னையின் துயரம் ஒற்றை நாளில்
ஓரிருவரால் வந்ததாமோ ?
யார் யார் பங்கு எவ்வளவு என
காய்தல் உவத்தலின்றி ஆயப்புகின்
குற்றவாளிக் கூண்டில்தான் 
ஒவ்வொருவரும் நின்றாக வேண்டும் !
சம்மதமோ ஒவ்வொருவருக்கும் …
குறைந்த பட்சம் வெள்ளைக்காரன்
தொடங்கி இன்று வரைக்கும்
ஒவ்வொரு ஆட்சிக்கும் 
ஒவ்வொரு அடிவைப்புக்கும்
பிரமாண்ட வளர்ச்சியிலும்
பிரச்சனை புதைசகதியிலும்
பங்குண்டே ! மறுப்பீரோ !

இனி திரும்பிச் செல்லல் என்பது
ஒரு போதும் நடக்க முடியாது
அறிவு –அனுபவம் –நடைமுறை
அனைத்தும் கலந்து
ஆட்சி –வல்லுநர் –மக்கள்
கூட்டிணைவில் காணவேண்டும் 
இனியொரு நல்வழி ! புதுவழி !
காலம் சொல்லும் பாடம் கற்றவழி
நடக்குமா ? நடக்க விடுவாரோ ?

சுபொஅ.
13/12/2021.
---


0 comments :

Post a Comment