இதுவும் கடந்துபோகும்

Posted by அகத்தீ Labels:


இதுவும் கடந்துபோகும்...




இன்று காலை நடை பயிற்சியின் போது உள்ளுக்குள் ஒரு வருத்தம் ; செங்கல்பட்டுத் தோழர் நரசிம்மன் மறைவுச் செய்தி உடனே அறிந்தும் இறுதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லையே ! பெங்களூரில் வாழ்நேர்ந்த வாழ்க்கைச்சூழலில் வசதிக்கு குறைவில்லை ஆயினும் நெடுநாள் பழகிய தோழர்கள் , நண்பர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பது இழப்பாகவே சில நேரங்களில் தோன்றுகிறது . உறவுகளைப் பொறுத்தவரை என்னுடைய நெருக்கம் குறைந்து நாளாயிற்று ; ஒரு சிறு வட்டத்தோடுதான் இப்போது போக்குவரத்து ஆகவே பிரசனை இல்லை . ஆனால் தோழமையும் நட்பும் அப்படி இல்லையே விரிந்தது பரந்தது நன்கு வேர்விட்டுத் தழைத்தது . திருமணம் , இறப்பு ,குடும்ப விழாக்கள் , பொது நிகழ்வுகள் என தோழமைமிகுந்த கைக்குலுக்கல்களுக்கு ….. விரும்பியபடி செல்ல முடியவில்லையே !

 பிறந்தது குமரிமாவட்டத்தில் சுசீந்திரத்தில் .. முதல் 15 ஆண்டுகளோடு அந்த உறவு விட்டுப்போனது ; அப்புறம் சென்னை 30 ஆண்டுகள் ; அடுத்து திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை திரூரில் 15 ஆண்டுகள் , ஆயினும் 45 ஆண்டுகளும் சென்னையோடு பின்னிப்பிணைந்தேன் . இப்போது 19 மாதங்களாக பெங்களூரில் ..ஆனால்  அவசரகாலம் தொடங்கி [ 1975 ] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடையேதான் என் வாழ்க்கை ; என் சுக ,துக்கம் அனைத்திலும் அவர்களே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் ….. எங்கிருந்தாலும் என் உணர்வில் கட்சி கலந்தே நிற்கிறது .. கருத்துப்பரப்பலில் எங்கிருந்தாலும் என் பணி தொடர்கிறது ஆயினும் வெகுநாள் பழகிய தோழர்களின் நல்லது கெட்டதில் உடன் பங்கேற்க இயலவில்லையே என்கிற வருத்தம் சில நேரங்களில் மேலிடத்தான் செய்கிறது ...

நான் கட்சிக்கு வந்தபின்னர் 1978ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னை மாவட்ட மாநாட்டில் முதன்முறையாகப் பங்கேற்றேன் . தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற கட்சியில் 10 வது மாநிலமாநாட்டில் பங்கேற்றேன் அது தொடங்கி கடைசியாய் 2012ல் நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 20 வது மாநில மாநாடுவரை அனைத்திலும் பங்கேற்றுள்ளேன் . சில அகில இந்திய மாநாட்டிலும் பங்கேற்றுள்ளேன் . முதன் முறையாக 21 வது கட்சி மாநில மாநாடு  பிப்ப்ரவரி 16-19 சென்னையில் நடக்கும்போது பிரதிநிதியாகப் பங்கேற்காமல் – அடிப்படை உறுப்பினராக மட்டும் நின்று  மாநாட்டுத் திடலில் தோழர்களுடன் கைகுலுக்கப் போகிறேன் ; அனுபவம் புதிதாகிறது . இலட்சியம் உதிரத்தில் கலந்துவிட்ட பிறகு  காலங்களையும் தூரங்களையும் கடந்து அது நம்மோடு பயணிக்கும் .

வாழ்க்கைப் பயணத்தில் தடம் பதித்த நிகழ்வுகள் மனதிலாடுகிறது .எல்லாவற்றையும் கடந்தே இங்கு வந்துள்ளேன். இதுவும் கடந்து போகும் . மாறாதது எதுவுமில்லையே ! நான் தப்பாய் புரிந்து கொண்டவர்கள் – நிகழ்வுகள் , என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டோர் – நிகழ்வுகள் ; எல்லாவற்றையும் நின்று நிதானமாய் அசைபோட காலம் கனிந்திருக்கிறது . காலநதியில் காயங்கள் வடுக்கள் பல மங்கி மறைந்து போகும் ; சிலவற்றை சுமந்தபடியே வாழ்க்கை நகரும் .

0 comments :

Post a Comment