உள்ளத்தின் உள்ளறைகளை ஊடுருவி...

Posted by அகத்தீ


உள்ளத்தின் உள்ளறைகளை ஊடுருவி...
சு.பொ.அகத்தியலிங்கம்


கரமசோவ் சகோதரர்கள்ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி,தமிழில்: கவிஞர் புவியரசுவெளியீடு : நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்(பி)லிட், 41,பி சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை - 600 098பக்: 1560 விலை: ரூ. 1300/-

‘‘மனித உள்ளங்களின் ஆழ்ந்த உள்ளறைகளைத் திறந்து பார்த்து அகப்பார்வை பெற்றிருந்த அவர்” - இவ்வரிகள் இந்நாவலில் இடம் பெற்றுள்ள ஜொசீமா என்ற துறவியைப் பற்றி ஆசிரியர் கணிப்பு. இதே வரிகள் நூலாசிரியருக்கும் கச்சி தமாகப் பொருந்திப் போவதை இந்நாவல் நெடுகக் காணலாம்.வழிப்பறிக் கொள்ளைக்காரராய் திரிந்த வியாசர் பின்னர் மாபெரும் ரிஷியானதும், மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம் படைத்ததும் நம் இந்திய அனுபவம்.

ரஷ்ய சக் கரவர்த்திக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு , மரணதண்டனை விதிக் கப்பட்டு - சுட்டுக்கொல்லப்பட வரிசையாக நிற்கவைக்கப்பட்டனர் 21 இளைஞர்கள். தூரத்தி லிருந்து குதிரைவீரன் பாய்ந்து வருகிறான். வாழ்வின் செய்தி இருந்தது அவனது கையில். மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்த யேவ்ஸ்கி அவர்களுள் ஒருவர். நூலிழையில் மரணதண்டனையிலிருந்து தப்பியவர் மாபெரும் இலக்கிய கர்த்தாவானார். மரணதண்டனையை வலுவாக எதிர்க்கும் ஜீவசாட்சி இந்நூலாசிரியரும் இந்த நாவலும் எனில் மிகைஅல்ல. ஆம் இந்நாவலைப் படித்து முடிக்கும் போது ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கி தூக்கிலிடப்பட்டிருந்தால் நாம் எவ்வளவு பெரிய இலக்கியப் பொக்கிஷத்தை இழந்திருப்போம் என ஒரு நிமிட மாவது நம்மை யோசிக்க வைக்கும்.

பொறுப்பற்ற தந்தை, அவரது மூன்று பிள்ளைகள் இவர்களைச் சுற்றியே நாவல் பின்னப்பட்டுள்ளது. தந்தை கரமசோவ் பொறுப்பற்றவர் என்பது மட்டுமல்ல பணத் தாசையும் , பெண்ணாசையும் கொண்டு அலைகிற ஒரு கேடுகெட்டப் பிறவி. தன் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் ஒருவர். பெற்ற பிள்ளைகளையே வஞ்சிக்கத் துணிந்தவர். அவரின் மூத்த மகன் திமித்ரி, அடுத்த மகன் இவான், மூன்றாவது மகன் அல்யோஷா மூன்றுவித குணநலன்களோடும் அதே நேரத்தில் கரமசோவ் குடும்ப குணநலன்களைச் சார்ந்தும் மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளனர்.மூத்தவன் திமித்ரி கற்றவன். ஆனால் முரடன், நெறிகெட்ட வாழ்க்கை கொண்ட வன். அடுத்தவன் இவான் பல இன்னல்களை அனுபவித்தவன், அறிவு பூர்வமாக செயல்பட எண்ணுபவன். மூன்றாமவன் அல்யோஷா புத்திசாலி, துறவு மனப்பான்மை கொண்டவன், ஜொசீமாவை குருவாக ஏற்றவன். அவரே“உலகச் சேவைக்கு செல்ல வேண்டும். திருமணம் புரிந்து இல்லற அனுபவம் பெற வேண்டும். கர்த்தர் உன்னுடன் உள்ளார்” என வாழ்த்தி அனுப்பினார்.

லிசா, கோக்லகோவ், லிசவேத்தா, குரூசென்கா, கத்ரினா போன்ற பெண்பாத்திரங் கள் சித்தரிப்பு நம்மை பிரமிக்க வைக்கின்றன. கத்ரினா, குரூசென்கா இவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்கிற கோணமும் அதே சமயம் அவர்களின் அப்பழுக்கற்ற உள்ள உணர்வுகளும் நம்முன் ஆழமாய் ஊடுருவிவிடும். அத்தகைய சித்தரிப்பு.வித்தியாசமான எழுத்து நடை, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குணஇயல்பு களோடு நாவலாசிரியர் நமக்கு அறிமுகம் செய்யும்போது, ஒரு முதியவர் நம் எதிரே உட் கார்ந்து நம் கண்களையும், நெஞ்சையும் ஊடுருவி கதைசொல்லுவதாகவே உள்ளது.நாவல் நெடுக வாழ்க்கை குறித்தும், மனிதர்களின் போக்குகள் குறித்தும், கடவுள் குறித்தும், நாத்திகம் குறித்தும் ஆழமான நுட்பமான விவாதங்கள், அவை நம்மை கிறங்க வைக்கின்றன. சில நேரங்களில் மதப் பிரசங்கம் போல் தோன்றுவதும் அடுத்த சில அத்தியாயங்களில் நிலைமை தலைகீழாவதும் சமூகத்தின் ஞானத்தேடலை பிரதிபலிக்கிறது.

தந்தையை மகன் திமித்ரி கொலை செய்து விட்டதாக ஊரே நம்புகிறது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் அப்படியே நிறுவுகின்றன. தீர்ப்பும் அதனையே உறுதி செய் கிறது. ஆனாலும் நாவலைப் படிக்கிறவர்கள் திமித்ரி கொலைகாரன் அல்ல என்ற உண்மையை உணர்வுப்பூர்வமாக ஏற்பார்கள்.
தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடுவரோ? இந்நாவல் இக்கேள்வியை நம் மூளையில் அலையடிக்க வைத்துவிடுகிறது.“

"மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு பொது வழிபாட்டிற்கான பொருள் ஒன்று வேண்டும் என்பதே, அதன் நீங்காத தவிப்பாக இருந்து வந்திருக்கிறது. அந்தப் பொதுக் கடவுளை நிலை நாட்டுவதற்காகவே மக்கள் காலங்காலமாகத் தம் வாட்களை உருவி எண்ணற்ற படுகொலைகள் புரிந்தார்கள்! உன் கடவுளை தூக்கி எறி! என் கடவுளை ஏற்றுக் கொள்! இல்லாவிட்டால் உன்னையும் உன் கடவுளையும் ஒழித்துக் கட்டு வோம்! என்று அறைகூவல் விட்டுக் கொ க்கரித்தார்கள். இது தான் காலமுள்ளளவும் நடக்கப்போகிறது” என்று நாவலில் வரும் வரிகள் இன்றும் பொருந்திப் போகின்ற னவே. ‘மாபெரும் விசாரணை அதிகாரி’ என்ற அதிகாரம் முழுவதும் ஆழமான ஆன் மிக விவாதம். இயேசு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையும் பிரச்சாரமும் இன்றும் வலுவாக உள்ளது. இந்த விவாத முடிவில் “போய்விடு! இனி திருப்பி வராதே! எப் போதும் ,எப்போதும் ,எப்போதும் திரும்பி வந்துவிடாதே” என வாசலைத்திறந்து வெளி யேற்றுவது யாரை? மத பீடங்களின் அதிகார வன்மம் எவ்வளவு கொடூரமானது. அதை நாத்திக மொழியில் அல்லாமல் ஆன்மீக மொழியில் தஸ்தயேவ்ஸ்கி மிக அழுத்தமாய் நூல்நெடுக ஊரும் பாவுமாய் கொண்டு வருகிறார்.“கடவுள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு கற் பனைதான்!... ஆனால் ஒழுங்கு முறை நிலவுவதற்காகக் கடவுள் தேவைப்படுகிறது. ஒரு வேலை கடவுளே இல்லை என்றாலும் கூட ஒன்றைக் கண்டு பிடித்துக் கொள் வது நல்லது தான்” என்று ஓரிடத்தில் வாதிடுவதும்.“சாத்தான் என்று எதுவும் கிடையாது என்பதால், மனிதன் தன் சாயலாக சாத் தானை உ ருவாக்கிக் கொண்டு விட்டான்” “அவன் கடவுளை உருவாக்கிக் கொண் டது போல” என விவாதத்தினூடே நெற்றியடியாக உண்மைகளை போட்டுடைப்பது தஸ்தயேவ்ஸ்கியின் நுட்பமான உத்தி.

மனச்சாட்சி என்பது எது? ஒழுக்கம் என்பது எது? எதைக் கொண்டு இதை நிர்ணயிப்பது? யார் நல்லவர்? யார் கெட்டவர்? கெட்ட வனுக்குள் நல்லிதயமும், நல்லவனுக்குள் கெட்ட சிந்தனையும் காலங்காலமாய் தொடர்கிறதே? இதுபோன்ற சிக்கலான அதே சமயம் மிகவும் பொருள் பொதிந்த பார்வைகளால் மனிதர்களையும் சம்பவங்களையும் போக்குகளையும் தஸ்தயேவ்ஸ்கி அலசி எடுத்துவிடுகிறார்.

ஒருவரின் அகத்தையும், புறத்தையும் நல்லதையும், கெட்டதையும் அவர் இல்லாத போது பொரணிபேசும் இயல்பு நம்மிடையே ஊறிவிட்ட இயல்பு. அதையே கதை சொல்லி கையாளும்போது அது ஆக்கபூர்வமான ஆயுதமாகிவிடுகிறது. இந்நாவலாசி ரியரின் உத்தி அதுதான் என்று நான் சொன்னால் அது சிறுமைப்படுத்துவதாகி விடுமோ? எனினும் எனக்கு அப்படித் தோன்றுகிறதே! அது என்தவறோ! ஆக நூலா சிரியர் என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்த நாவல் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாக்கப் பட்டுள்ளது. இருத்தியலிய தத்துவத்திற்கு அடித் தளமிட்ட நாவல் என்ற பெருமையும் இதற்குண்டு. இந்த நாவல் நம் உள்ளுணர்வு களை ஊடுருவி காண்பிக்கும் அதே வேளையில் நம்பிக்கையையும் நம்பிக்கை இன் மையையும் ஒரு சேர கலந்தே தருகிறது. ஒரு வேளை அதுவே வாழ்க்கை யதார்த்தம் என்பதாலா?

“வாழ்க்கை அதன் இயல்பான போக்கில் தான் சென்று முடியும். தகுதிபடைத் தவன் சரியான இடத்தை அடைவான். தகுதியற்றவன் ஏதோ ஒரு இருண்ட சந்தில் சென்று காணாமல் போய்விடுவான். அப்புறம் அவனை எல்லோரும் மறந்துவிடு வார்கள்” இது ஓரிடத்தில் பேசப்படினும் இந்நூலின் செய்தியே இது தானோ என்று சொல்லத் தோன்றுகிறது.

குழந்தைகளின் மனஉலகம், வஞ்சிக்கப்பட்டவர்களின் பழிவாங்கும் வெறி, அநீதிகளை எதிர்கொண்டு வாழும் பெண்களின் உள்மன ஓட்டங் கள், துறவிகளுக்குள்ளும் ததும்பும் பொறாமை, யதார்த்தங்களை ஏற்க மறுப்பவர் களுக்கும் ஏற்ப வர்களுக்கும் இடையான உரசல்கள், அடுத்தவர் வலியில் இன்பம் தேடும் இயல்பு, இப்படி மனிதமனங்களின் சகல கூறுகளினூடே இந்நாவல் பயணப்பட்டுள்ளது.


மிகநெடிய வழக்கு மன்ற விசாரணை வெறும் சட்ட நுணுக்கங்களோடு பின் னப்படாமல் மனிதபலம், பலவீனம் இவற்றை விவாதப் பொருளாக்கி இருப்பதும், உன் அதீத வாயும் செயல்பாடுகளும் நீ செய்யாத குற்றத்திற்கு உன்னை பழிவாங்கிவிடும் என்பதன் சாட்சியாய் திமித்ரியும், அவனுக்காக அந்த இரண்டு பெண்களும் செய்கிற முயற்சிகளும் அடேயப்பா மனிதம் என்பது எது என நம்மை யோசிக்க வைக்கிறது. பல கதாபாத்திரங்கள் மனப்பிறழ்வுடன் சித்தரிக்கப்படுவதும், உண்மையான கொலை காரன் ஸ்மெர்டியாகோ தற்கொலை செய்து கொள்வதும் நாவலை யதார்த்த இலக்கிய பாணியிலிருந்து நகர்த்தி வேறுதளத்துக்கு கொண்டு சேர்க்கிறது.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில்

இந்தநாவல்தடைசெய்யப்பட்டது.சோஷலிசத்தின் மீது நம்பிக்கை எதையும் இந்நாவல் பிரகடனம் செய்யவில்லை. மாறாக ஐயம் எழுப் பியது என்பதால் இருக்கலாம். ஆயினும் ரஷ்ய சமூகத்தின் இருண்ட தாழ்வாரங்களில் இந்நாவல் ஒளிப்பாய்ச்சியது எனில் அதுமிகை ஆகாது. டால்ஸ்ட்டாயும் இவரும் சமகாலத்தவர். எனினும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததும் இல்லை. தொடர்பு வைத்துக் கொண்டதும் இல்லை. இது இரண்டு இலக்கிய மேதைகளின் தனிப்பட்ட இயல்பா? அல்லது அன்றைய சூழலா தெரியவில்லை.

கடைசியாக சில வார்த்தைகள் இயந்திர வேகத்தில் ஒடிக்கொண்டிருக்கும் இன் றைய வாழ்க்கையில் 1500 பக்க நாவலை படிக்க பொறுமையும் நேரமும் கிடைக்குமா? மருத்துவமனை எனக்கு அந்த வாய்ப்பை வழங்கிவிட்டது. நெடிய பயணம், நெடிய ஓய்வு எல்லோருக்கும் எப்போதாவது வாய்த்தே தீரும். அப்போது உங்கள் ஆத்ம தரிசனத்துக்கு அந்நாவல் கருவியாகும். கட்டாயம் படியுங்கள். கவிஞர் புவியரசின் கவித் துவமிக்க மொழிபெயர்ப்பு இந்த நாவலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. படைப்பாளிகள் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள் . உள்ளத்தை ஊடுருவும் கலையை இவரிட மிருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்கலாமே!










0 comments :

Post a Comment