ஒவ்வொரு நொடியையும்…

Posted by அகத்தீ Labels:

ஒவ்வொரு நொடியையும்
[ அகவை அறுபதில் ஒரிரு வார்த்தைகள் ]


இன்று[ 15 ஜூன் 2013 ] எனக்கு அகவை அறுபது . பிறந்த நாளன்று தமிழ் நாட்டுக்கு வெளியேபெங்களூரில் வசிக்க நேர்வது இதுவே முதல் முறை . வாழ்வில் இன்று இன்னொரு நாளே . ஆயினும் முதுமையின் தலைவாசலில் நுழைவது வளர்ச்சியின் அடுத்தகட்டமல்லவா ?அந்த பூரிப்பு என்னுள் சில்லென்று வருடுகிறது.

 2011 தொடங்கி பிறந்த நாளன்று சில செய்திகளை தெரிவிப்பதை வாடிக்கையாக்கி உள்ளேன் .அகவை 58 ல் ஓய்வெனப்படுவது யாதெனக்கேட்டு என் கருத்துகளை பதிவிட்டிருந்தேன். அகவை 59 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவருவது குறித்து திருப்தி தெரிவித்திருந்தேன் .


http://akatheee.blogspot.in/2012/06/2.html

 ஆம், இப்போது நான் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினராகவோ - தீக்கதிர் இணை ஆசிரியராகவோ - வேறு எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை . என் சுயவிருப்பத்தினை ஏற்று என்னை இவற்றிலிருந்து விடுவித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் - கட்சியின் முழுநேர ஊழியராகவும் - தீக்கதிர் ஆசிரியர் குழுவிலும் தொடர்கிறேன். என்னால் இயன்ற அளவு கட்சிப் பணிகளில் கட்சி வழிகாட்டுதல்படி தொடர்வேன் .என் எழுத்துப் பணிக்கும் கருத்துப்பரப்பல் பணிக்கும் இறுதி மூச்சுவரை ஒய்வு இல்லை. மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை பின்பற்றி நடந்ததற்காக வாழ்வில் பெருமிதம் கொள்கிறேன் . தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பதையே பெரும்பேறாகக் கருதுகிறேன்

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொறுப்புகளிலிருந்து விலகி - அதே சமயம் அனுபவத்தை வீணாக்காமல்  அமைதியாகப் பணியாற்றும் பக்குவம் பெறவேண்டும் என்பது எனது நெடுநாள் வாதம் . அந்த சோதனை முயற்சியில் என்னை நான் ஈடுபடுத்தியுள்ளேன். அதன் சிரமங்களும் வலியும் இருக்கத்தான் செய்கிறது .சில சமயங்களில் தர்மசங்கடமான சூழலில்  சிராய்ப்புகளோடு தப்புவது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே வரலாற்று எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் இது குறித்து எச்சரித்திருந்தார் , எனவே   அதிர்ச்சிகள் எதிர்பாராததாக இல்லை.சமாளிப்பதும் சாத்தியமாயிற்று . எது எப்படி இருப்பினும் இப்பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதி பூண்டுள்ளேன் . வலியில்லாமல் வாழ்க்கை ஏது ? தயங்கிநின்றால் ஆகுமா ? காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டே காலடியை உறுதியாக முன்வைக்கிறேன் .  

சொந்த வாழ்வில் என்  மனைவியும் மகளும் மகனும் என் இலட்சியத்தை மதிப்பவர்களே .பின் தொடர்பவர்களே !  மகளும் சரி - மகனும் சரி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதும் - அதுவும் காதல் திருமணமாக அமைந்ததும் பெருமகிழ்ச்சி.சாதி மறுப்புத் திருமணம் - காதல் திருமணம் என்கிற உயர் நோக்கத்தைவரதட்சணை இன்றி இருவீட்டாரும் மனமுவந்து ஏற்று முன்நின்று நடத்த சில சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளவேண்டி இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான திருமணமே.

சொந்த வாழ்வில் பணம் பண்ணும் வித்தையை இன்றுவரை கற்றேனில்லை. இதனால் ஏற்பட்ட உரசல்களும் மன உழைச்சலும் இந்த நொடிவரைத் தொடரத்தான் செய்கிறது . சொத்தாக எதையும் சேர்த்துவைக்கவில்லை கடனைத் தவிர... இன்னும் இரண்டு மாதங்களில் தொல்லை தரும் பெரும் கடன்களிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிடுவேன்..பெங்களூரில் மகன் வீட்டிலும்  - சென்னையில் மகள் வீட்டிலும் எஞ்சிய காலம் இனிதே கழியும் என நம்புகிறேன்.
மனைவியின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் - ஆயூர்வேத சிகிட்சை தொடர்ந்து மூன்று வருடங்கள் செய்யவேண்டும் என்பதால் விரைவில் மீண்டும் மனைவி சிகிட்சைக்காகத் திருவனந்தபுரம் செல்வோம். எனது உடல் நிலை மருத்துவர் வழிகாட்டுதல்படி சீராக உள்ளது.

இதுவரை என் எழுத்துப்பணியில் மலர்ந்தவை :

1]சிந்திக்கும் வேளையில் குறள்
2]என் கேள்விக்கு என்ன பதில் ? [ அறிவியல் விழிப்புணர்வு சிறார்  சித்திரக்கதை ]
3]பாசிசம் பழசும் புதுசும் [ மொழி பெயர்ப்பு ]
4] விடுதலைத் தழும்புகள் [ தமிழக அரசு விருது பெற்றது ]
5] மனித உரிமை வரலாறும் அரசியலும் [ திருப்பூர் தமிழ் சங்க விருது ]
6]காதலும் வாழ்வும் : பழந்தமிழ் இலக்கியத்தில்
7]ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
8]சமுத்திரத்தின் படைப்புலகம் [ தொகுப்பாசிரியர் ]
9]கீதை தரும் மயக்கம்
10]சிங்காரவேலரைப் பயில்வோம்
11]சாதியம் : வேர்கள் - விளைவுகள் - சவால்கள்
12]பார்வை புதிது பயணம் நெடிது [ ஆர். உமாநாத் வாழ்க்கை ]
13] பொதுவுடைமை வளர்த்த தமிழ்
14]பூக்களோடும் போர்முரசுகளோடும் [ வாலிபர் சங்க ஆரம்பகால வரலாறு ]
15]கோடிக்கால் பூதமடா : ஜீவாவின் கவிதைப் பயணம்
16]குடும்பத்தில் கூட்டாட்சி

 [இவற்றுடன் இயக்கம் சார்ந்து எழுதிய பிரசுரங்கள் பலவும் உண்டு. மேலும் நூலாகாத எழுத்துகளும் உண்டு. பாதியிலே நின்று போயுள்ள - முடிக்க வேண்டிய நூல்களும் உண்டு]

புதிய நூல்கள் சில விரைவில் எழுதி முடிக்கும் எண்ணம் உள்ளது. பெங்களூரில் வசிக்கும் நாட்களை அதற்குப் பயன் படுத்த திட்டமும் உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்  [ டி.ஒய்.எப் . ]பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட துடிப்பான காலமாகட்டும் - அனுபங்களையும் பக்குவத்தையும் கற்றுத்தந்த இருபதாண்டுக்கு மேலாகத் தொடரும் தீக்கதிர் பணியாகட்டும் - பொதுவாக 35 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட எழுத்துப்பணி , கருத்துப்பரப்பும் பணி , கட்சி இயக்கப் பணியாகட்டும் அனைத்தும் என்னுள் மறக்க முடியாத ஆழமான முத்திரைகளைப் பதித்துள்ள..

நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த ஏமாற்றங்கள் , தோல்விகள் , பெற்ற காயங்கள் அநேகம். அவை எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
நான் சமூகமாற்றம் விழைகிற போராளி ; ஆனால் பதவி மோகமும் சுயநலமும் மிகுந்த அரசியல் களத்தில் ஏமாளி ; என் மனைவி மக்களின் இந்த விமர்சனத்தை நான் வழிமொழியவும் முடியாதுமறுதலிக்கவும் முடியாது. கையறு நிலை எனக்கு…..
 
நண்பர் வீரமணி டெல்லியிலிருந்து என் பிறந்த நாள் வாழ்த்தாக வீரம் விளைந்தது நாவலில் இருந்து ஒரு மேற்கோளை - அதுவும் நான் வாலிபர் சங்க மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய மேற்கோளை அனுப்பி இருந்தார் . அதனையே நிறைவாக இங்கு பதிவு செய்கிறேன்.

“Man's dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying, he might say: all my life, all my strength were given to the finest cause in all the world──the fight for the Liberation of Mankind”

மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

― Nikolai Ostrovsky in the How the Steal was tempered.
(
வீரம் விளைந்தது)

ஆம், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்ஒவ்வொரு அடிவைப்பையும் அந்த திசைவழியில் செலுத்தவே முயல்கிறேன்; எனது பலத்தோடும் பலவீனத்தோடும்..

நன்றி
சு.பொ.அகத்தியலிங்கம்

சிலையை ரசித்தோம்... ஆனால்... ?

Posted by அகத்தீ Labels:





சிலையை ரசித்தோம்... ஆனால்... ?
சு. பொ. அகத்தியலிங்கம்
கோயிலுக்கு ஆத்திகர்களும் போவார்கள். நாத்திகர்களும் போவார்கள். ஆத்திகர்கள் அங்குள்ள சாமி சிலைகளை பக்தி சிரத்தையோடு கும்பிடுவார்கள். ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நாத்திகர்கள் புராணங்களைக் கிண்டல் அடிப்பார்கள், வேறு சிலர் அங்குள்ள சிற்பங்களை கலைக்கண்ணோடு பார்த்து ரசிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் வந்து கோயில் சிற்பங்களில் அழகில் சொக்கி நிற்பதை நாம் கண்டிருக்கிறோம்.  ஆனால் எப்போதாவது ஒவ்வொரு சிற்பத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சமூக கண்ணோட்டம் ஒளிந்து கொண்டிருப்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா ? அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது? ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது? எவ்வளவு உயரத்தில் வைக்கப்படுகிறது? என்பதை எல்லாம் நாம் கூர்ந்து பார்த்ததில்லை. முனைவர் பெ. நிர்மலா ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து பார்த்திருக்கிறார். ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.  பெண் சிற்பங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருப்பதை; புராணக்கட்டுக்கதைகள் மூலம் பெண் அடிமைத்தனம் வலுவாக வேருன்றப்பட்டிருப்பதை; மூடநம்பிக்கைகள் விரவப்பட்டிருப்பதை ஆசிரியர் அலசி நமக்கு எடுத்து காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
  "மநு கூறும் ஆதிக்க மரபினரின் குறியீடுகளே  கோயில்கள். இக்கோயில்களை உருவாக்கிய ஆதிக்க சக்திகள் இயற்கை மரபு மற்றும் உலோகாயத மரபுகளை அழித்து , அந்த இடத்தில் வைதீக மரபை, கட்டமைத்தார்கள். இதற்கான காட்சி வழித்தரவுகளே கோயில்கள். இக்கோயில்கள் சார்ந்த கலை ஆய்வுள் முன்னேடுக்கப்படும் அளவுக்கு அவற்றிலிருக்கும் கருத்துநிலை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. சிற்பங்களின் கலை நுணுக்கம் குறித்து பேசும், வல்லுநர்கள், அவற்றிலிருக்கும் பெண் அடிமை கருத்துநிலை குறித்து அக்கறை கொள்வதில்லை; ஏனெனில் இவ்வகையான கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மன நிலையினராகவே உள்ளனர். சிற்பக்கலையின் அழகியல் என்பது பெண்களை கட்மைப்பதில் செய்திருக்கும் தில்லு முல்லுகளை வக்கரங்களை அதிகாரங்களை இனங்காண்பதில்லை. சிற்பங்களின் கோணங்களில் சொக்கிப்போகும் வல்லுநர்பெருமக்கள் பெண் தொடர்பான கேவலங்களை அவை காட்சிப்படுத்தப்படுவதைக் கவனத்தில் எடுத்தார்களா என்பது சந்தேகம். நிர்மலாவின் இந்நூல் மேல் குறித்த அவலங்களை மிகவும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் பணியை செய்கிறது. ஆணாதிக்க மரபில் உறுவான இன்னொரு காமசூத்திரங்களாகவே கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது"என்று முன்னுரையில் அரசு கூறுவது மிகையல்ல.
பொதுவாக பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன்? சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால்? வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன் நிர்மலா நிறுவுகிறார்.
 பெண் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம்  பெண்ணை நிறுத்துவதும், ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்து போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பது இந்நூலில் வலுவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், இவ்வாறு உயர்வு தாழ்வு அடிப்படையில் தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர் நிலை கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது. 
சிற்பங்களைப் பற்றி கூறுகிற போது  அதனோடு இணைந்த பல்வேறு புராணகதைகளின் வக்கிரமான ஆதிக்க மனோபாவத்தை மிக நுட்பமாக நிர்மலா நூல் நெடுக அம்பலப்படுத்தி கொண்டே செல்கிறார்.  சிலை செய்கிற கல்லைத் தெர்ந்தெடுக்கிற போது கூட மணியோசை போன்ற நாதம் என்றால் அக்கல்லில் ஆண்சிலை வடிப்பதையும் தாளம் போன்ற ஓசையிருந்தால் அதில் பெண் சிலை வடிப்பதையும்; இவர் சுட்டிக்காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது . சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிற ஆதிக்க கருத்தோட்டத்தின் குரூரம் பளிச் என புலப்படுகிறது.  அதேபோல ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் தொன்மங்களையும் , பெண் கடவுள்களையும் அது தொடர்பான சிற்பங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்திற்குள் பெண் விடுதலை சாம்பல் பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை தக்க உதாரணங்களோடும் புராண கதைககளோடும் சொல்லி சென்றிருப்பது பாராட்டுக்குரியது. சூரிய சந்திர பற்றி கருத்தோட்டம் கூட எப்படி ஆண் பெண்ணாக கையாலப்பட்டிருப்பது என்பதை -  ராசிகள் வர்னாசரம அடிப்படையில்  பிரிக்கப்பட்டிருப்பது என்பதை அந்த கருத்துக்கேற்பவே செதுக்குகிற சிற்பங்களும் அதற்குரிய இடம் வழங்கப்படகிறது என்பதை, பெண்களை வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அடக்கியே வைத்திருக்கிற சமூக இழிவு சிற்பக்கலையிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை  இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டுகிறார். 
வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், கைலாச நாதர்கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என பத்து கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த சிற்பங்களுக்குள் மட்டும் நின்று விடாமல் பொதுவாக பெண் பற்றிய பார்வை இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து வர்ணாஸ்சரம அமைப்பில் எவ்வளவு கீழானதாக இருந்தது என்பதை சிற்பங்கள் மூலம் ஆணித்தரமாக நிறுவுகிறார்.

இந்நூலினுடைய மொழி நடை மிகவும் நுட்பமானது.   மொழி பிறந்தது பெண் கடவுளர்களிடமிருந்து  என்று பொதுவாக கதைகள் புனையப்பட்டதை ; வாழ்க்கை அனுபவத்தில் தாய்வழியாகவே குழந்தை பேசக்கற்று கொள்கிறது என்பதை; சொல்லுவதோடு நின்றுவிடாமல்; தற்போது சொல்லாடல் (மொழி) பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது என்பதை நிர்மலா உதாரணங்களோடு எடுத்து காட்டுகிறார்.  ஆணுக்கும் , பெண்ணுக்கும் இறுதியான பண்புகளை ஏற்றிச் சித்தரிக்கும போக்கு அறிவியல் சார்ந்ததாக இல்லை என்பதை ஏங்கெல்ஸ் மேற்கோளோடு எடுத்து காட்டுகிறார்.   இந்த நூல் ஒருவகையில், சிற்பக்கலையில் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது. இன்னொரு வகையில் நமது புராண மரபில் வேரோடி இருக்கிற ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்கம் இவற்றின் கோர முகத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. நூலை படித்து முடித்த பிறகு சிற்பம் ஓவியம் எதைப் பார்த்தாலும் அதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்தாதிக்கத்தைப் பற்றி  கொஞ்சநேரமாவது மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்படத்தான்  செய்யும். 
தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்
முனைவர். பெ. நிர்மலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் , சென்னை - 600 024
பக்: 408 விலை ரூ. 280/-

ஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...

Posted by அகத்தீ Labels:








ரு கவிதை
கொஞ்சம் சுயபுராணம்...
சு.பொ.அகத்தியலிங்கம்
 நான் எழுதிய கவிதை  தீக்கதிர் 1977 மேதின இதழில் வெளியானபோது  பெற்ற மகிழ்ச்சி இன்று  மீண்டும் அதனைப் பார்த்தபோது என்னுள் ஊற்றெடுத்தது.
பொன்விழாவையொட்டி தீக்கதிர் வெளியிட்டுவரும் காலப்பெட்டகத்துக்காக பழைய ஏடுகளை அன்றாடம் புரட்டும் மதுரைத் தோழர்கள் முருகனும் விஜயகுமாரும் அருள்கூர்ந்து இதனை தேடி எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்தனர்.அவர்களுக்கு நன்றி.
அந்தக் கவிதை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் . ஒரு தொழிலாளியை முழுநேர கட்சி ஊழியனாக மாற்றிய திருப்புமுனையில் பிறந்ததல்லவா அது !
நினைவுகள் அலையடிக்கிறது .
கிண்டி சி.டி.ஐ யில் டூல் அண்ட் டைமேக்கர் படித்துவிட்டு - சில தொழிற்சாலைகளில் அத்துக்கூலியாய் பணியாற்றி - என் அரசியல் செயல்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டு -  பெஸ்ட் அண்ட் கிராம்டன் [ லிப்ட் பேக்டரி தண்டையார் பேட்டை]யில் தினக்கூலியாக பணியாற்றி வந்தேன். தினக்கூலி ரூ.10.
அங்கு தினக்கூலிகள் படும்வேதனையை கவிதையாக்கி தீக்கதிருக்கு அணுப்பினேன். மேதின இதழில் வெளியானது. கம்பெனி தொழிற்சங்கச் செயலாளர் கோபிநாத் அதை நோட்டீஸ்போர்டில் ஒட்டியதோடு தொழிலாளிகளிடம் சுற்றுக்கும்விட்டார். அவ்வளவுதான் மேனஜர் கொதித்தார் . என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று மற்ற தொழிலாளிகள் பேசத்தொடங்கிவிட்டனர்.
சில நாட்களுக்குப்பின் தொழிற்சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருபகுதி தினக்கூலிகள் நிரந்தரமாக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயர் இல்லை. நான் சங்கச் செயலாளரைக் கேட்டேன் . “ நாங்கள் உன் பெயரைத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் பத்தாவதாக வைத்திருந்தோம். அந்த நாற்பது பெயரில் உன் பெயரை ஏற்க முடியாதென நிர்வாகம் உறுதியாக நின்றது. பேச்சுவார்த்தை முறியும் சூழலில் தலைவர் வி.பி.சி. அவனை விட்டுவிடுங்கள் , நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி ஒப்பந்த்தத்தை இறுதியாக்கினார்.”
செயலாளர் இப்படிச் சொன்ன பின் மேனஜரிடம் சண்டை போடச் சென்றேன் அவர் சொன்னார் , “ நன்றாக கவிதை எழுது! கட்சி வேலை செய்! உனக்கு இங்கெதற்கு வேலை

எண்4 [இப்போது 16 ] ஸ்டிரிங்கர் தெரு அலுவலகத்தில் தோழர். வி.பி.சியைச் சந்தித்தேன். அவர் கூறினார், “ நாங்களெல்லாம் எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறோம். முதலாளி கொள்ளைக்கு உன் சக்தியை ஏன் விரயம் செய்கிறாய் ? பேசாமல் கட்சி முழுநேர ஊழியராகிவிடு. கட்சிக்கு நீ தேவை. நாங்கள் கட்சி செயற்குழுவில் ஏற்கெனவே பேசிவிட்டோம். அதனால்தான் உன் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்க சம்மதித்தேன் . அதன் மூலம் மற்றவர்கள் நிரந்தரமாக்கலும் எளிதானது.. உங்கள் அம்மா அப்பாவிடம் நான் பேசுகிறேன்.. நீ நாளையே மாவட்டச் செயலார் பி.ஆர்.பி யைப்பார்..
அந்த மணிக்குரலின் கட்டளை என்னைக் கட்டுப்படுத்தியது. .யோசிப்பதாகச் சொல்லி விடைபெற்றேன். வழியில் மின்சார ரயிலில் சந்தித்த கே.எம். ஹரிபட்டும் இதையே சொன்னார். உ.ரா. வரதராசன் அப்போது ரிசர்வ் வங்கி ஊழியர் , “ எனக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளது மறுக்காதே என்றார். து. ஜான்கிராமனும் அப்படியே வழிமொழிந்தார். மறுநாள் தோழர் பி.ஆர். பரமேஸ்வரனை 81 வடக்குக் கடற்கரைச் சாலையில் செயல்பட்டுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில் சந்தித்தேன் . முழு நேர ஊழியர் ஆனேன்.
சு.பொ.அலி என்ற என் புனைப்பெயரிலேயே கவிதை வெளியாகி இருந்தது. பல்வேறு சிற்றேடுகளின் என் கவிதைக்ள் அப்போது வெளிவந்தன. எதையும் சேகரித்து வைக்கவில்லை. “ சு.பொ.அலி என்ற ஒரு வீரியமிக்க கவிஞர் சிற்றிதழ்களில் அவசரகாலத்தில் தென்பட்டார். நிறைய நம்பிக்கை இருந்தது. இப்போது அவரைக் காணவில்லை. அவர் உயிரோடு இல்லை என்று கருதுகிறேன்என்று ஒரு இலங்கை கவிதாவிமர்சகர் எண்பதுகளில் எழுதினார்.
 பிறகு வாலிபர் சங்கப் பணியில் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். எழுத்துப் பணி சற்றே தடை பட்டது. இளைஞர் முழக்கம் ஏட்டின் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியபோது என் எழுத்தாயுதம் அன்றைய தேவைக்கு ஏற்ப சுழன்றது.1993 ஆம் ஆண்டு தீக்கதிர் சென்னைப் பதிப்பு துவக்கப்பட்டது. அதில் பொறுப்பேற்றபோது என் எழுத்துப் பணி வேறு தளத்தில் விரிவடைந்தது. அதன் பின் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிவிட்டேன். விடுதலைத் தழும்புகள், மனித உரிமைகள் வரலாறும் அரசியலும் , சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், பொதுவுடைமை வளர்த்த தமிழ், ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் , குடும்பத்தில் கூட்டாட்சி போன்ற என் நூல்கள் காலம் கடந்து நிற்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.
கவிதை மீதான என் காதல் இன்னும் மீதமிருக்கிறது...
மீண்டும் 1977ல் வெளியான அக்கவிதைக்கு வருகிறேன்...அதன் உயிர்துடிப்பு இன்றைக்கும் மெய்தானே!!!
படியுங்கள்... உங்கள் கருத்தைப் பதியுங்கள்..........

 வாழ்க்கைப்  பாடலில் சில வரிகள்

சு. பொ. அலி
 
ரசியல் சட்டத்தில் தினக்கூலிகள் - நாங்கள்
அனுபவ நடப்பில் அபாய நோயாளிகள்
கனவில் வாழ்வதும் வாழ்வில் நைவதும்
வாடிக்கையான எங்கள் வாழ்க்கைப் பதிகம்

ஒருகவளம் சோற்றுக்காகவே
எங்கள் உழைப்பை! எங்கள் திறமையை!
சோரம் செய்கிறோம்...
சோரம் செய்தும் ஒரு கவளம் சோறும்
நிரந்தரமில்லை அழுது  சாகிறோம்

குறைந்த கூலியில் அதிக உழைப்பை
தந்திடும் மனித மாடுகள் எந்திர ஜீவன்கள்
இது தான் சமுதாய வீதியில் எங்கள் மதிப்பு

நேற்றைய மழையில் சரிந்த சுவரை
அப்புறப்படுத்த அவசரமாக தேவைப்படுவோன்
தினக்கூலியாவான்
சட்டம் எங்களை இப்படித்தான் நிர்ணயம் செய்கிறது.

குண்டுசி முதல் ஆர்யப்பட்டா வரை
ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்திடும்
நாங்கள் எப்படி தினக்கூலி யாவோம்?
உற்பத்தி என்பது அவசரத் தேவையா?
ஒரு நாள் கூற்றுக்கு வைத்திடும் மீசையா?
கேள்விகளை எல்லாம் கோஷங்களாக்கி
நாங்கள் முழங்கத் தொடங்குகிறோம்

சட்டமடாயலங்களில் எங்களுக்காக
நியாயத் தீர்ப்புகள் வாசிக்கப்படுகிறது
அமலாக்கப்படுவதில்லை
காகித சர்க்கரை கண்ணில் காட்டப்படுகிறது
சப்புக் கொட்டியே நாட்கள் நகர்கிறது

இருநூற்றி நாற்பது நாட்கள் உழைத்தால்
இதுவரை உழைத்ததின் பயனைக்காணலாம்
வேலை அங்கே நிரந்தரமாகும்
சலுகைகள் அனைத்தும் உடனே கிடைக்கும்

நீட்டி முழக்கி காகிதப் புலிகள்
கர்ஜனை செய்கிறது!
எங்களை கழுதைகளாக்கி
கழுத்தில் காரட்டை கட்டி ஒடவிடுகிறது!!

ஆண்டுகள் ஐந்தாய்
காரட்டை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கிறோம்
நாட்கள் என்னவோ?
இன்னும் இரு நூற்றி நாற்பது ஆகவே இல்லையாம்!
ஓய்வையும் இதுவரை உணரவே இல்லை
விந்தை இது தான்! எங்கள் வேதனை இது தான்!

வெளியே இருக்கும் வேலை இன்மையை சுட்டிக்காட்டி
நிரந்தர மின்றியே நியாயப்படுத்துவார்

எங்கள் கூடவே உழைப்பவர்
எங்கள் ரத்தம் பிழிபடும் போதும்
பார்த்து கண்ணீர் விடுகிற
எங்கள் சகாக்கள்
எங்களுக்காக போராடும்போது
காட்டிக்கொடுக்கும் கருங்காலிகளாக
நாங்கள் மாற்றப்படுவோம்

அடித்து உதைத்து
ஆசை வார்த்தைகள் ஆயிரம் காட்டி மிரட்டி
எங்கள் தலையில் நாங்களே
மண்ணை போடச் செய்வதில்
முதலாளிமார்கள் ரொம்ப சமத்தர்கள்

நியாயமான போர் குரல் ஒடுக்க
சகாக்கள் மீது வேலைப்பளு திணிக்க
லாபம் மேலும் உறிஞ்சி கொழுக்க
பயன்படும் நாங்கள்
கருவேப்பிலையாகவே எறியப்படுகிறோம்

தள்ளாதவயதில் விழுதுகள் தன்னை தாங்குமென்றே
நம்பிவளர்த்த எங்கள் தாய்கள்
இன்றோ
தள்ளதாத வயதிலும் தாய் விருட்சமே
இன்னும் விழுதை தாங்கி நிற்கும் சோகச்சித்திரம்
இது தான்
எங்கள் வாழ்க்கைச் சித்திரம்

சோக விதியை தூளாய் மாற்ற
சொந்தக்காவில் விருட்சமாய் வளர
ஆண்டுகள் பலவாய் முயன்றுபார்க்கிறோம்
ஆனகதை ஏதுமில்லை
எங்கள் படை எடுப்புகளெல்லாம்
தோல்வியில் முடிகிறது.

ஒவ்வொருமுறையும்
சோலை இதுவென எங்கோ நடந்தோம்
பாலைவனத்து சுடுமணல் நெருப்பில்
பாதம் வெந்ததும்! பாதைதெளிந்தோம்

ஒவ்வொருநாளும்
வேலை இன்று உண்டா? இல்லையா?
கேள்வியுடனே பொழுதுகள் விடிகிறது
இன்றைக்கு வேலையில் ! நாளைக்கு வீதியில்!
வள்ளுவர் பாஷையில் நெருதல் உள்னெருவன் இன்றில்லை
என்றபெருமை உடையவர்கள் நாங்கள்
நடமாடும் நடைபிணங்கள்

குறைந்த கூலியில்! அதிக உழைப்பை
தந்திடும் மனிதமாடுகள்? எந்திர ஜீவன்கள்
கனவிலே வாழ்வதும்! வாழ்விலே நைவதும்
வாடிக்கையான வாழ்க்கை பதிகம்
ஆகமொத்தம்
அரசியல் சட்டத்தில் தினக்கூலிகள்
அனுபவநெசப்பில் அபாய நோயாளிகள்
எங்கள் அபாயநோய்க்கு
காகித மருந்துகள் எதுவும்
கறுப்புக் கோட்டு டாக்டர் எவரும்
பயன்படமாட்டா! பயன்படமாட்டா!
வேதாந்த ஓத்தடம் வேண்டாம்! வேண்டாம்!

வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை
வேலை கொடுப்பது அரசின் கடமை

எங்கள் கோஷம் வானை கிழிக்க!
எங்கள் பயணம் இன்றே தொடங்கும்

இன்குலாப் ஜிந்தாபாத்

விசாரணைக் கூண்டில் கடவுள்

Posted by அகத்தீ Labels:

 
 
 
விசாரணைக் கூண்டில் கடவுள்

- சு.பொ. அகத்தியலிங்கம்



து கடவுள் குறித்த கதை அல்ல; வரலாறு. இப்படிச் சொல்வதால் கடவுள் என்பது மெய்யானது என்றாகிவிடுமோ?; இச்சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே கடவுளின் கதை என இந்நூலுக்கு பெயர் சூட்டினாரோ அருணன்.

இந்நூல் இன்றைய தேவை. ஆம். விஞ்ஞான ஒளி பரவப்பரவ மூடநம்பிக்கைகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும் என்கிற கருத்து இன்றைய யதார்த்தத்தோடு பொருந்தவில்லை. அறிவியல்  தகவல் ஞானம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. அறிவியல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. வாழ்வின் ஒரு நொடிகூட அறிவியல் சாதனங்களின் துணையின்றி நகராது என்கிற உண்மையும்; அதே நேரத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமே மூடநம்பிக்கைகள் வலுவாக தூக்கிநிறுத்தப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது.  உலகமயத்தின் பண்பாட்டு தத்துவ விளைவாய் மதவாதம் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது. இச்சூழலில் மதம், கடவுள் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமாய் முன்னெடுத்துச் செல்லப்படுவது காலத்தின் கட்டாயம் . இந்நூல் அப்பணிக்கு பெரிதும் உதவும் என்பதால் முதலாவதாக இந்நூலை வரவேற்போம்.

ஆங்கிலத்தில் இது குறித்து ஆழமான நூல்கள் பல வந்துள்ள போதிலும் அவை தமிழ் வாசகர் பரப்பை இன்னும் போதுமான அளவு எட்டவில்லை. ஆகவே உலகெங்கும் மதம், கடவுள் தோற்றம் குறித்து நடக்கும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை விவாதங்களை உள்வாங்கி அத்தகைய நூல்களை தேடிப்படித்து சாறு பிழிந்து, மார்க்சிய சல்லடையில் வடிகட்டித் தருவது பெரும் சேவையாகும். அந்த வகையில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.

கடவுளின்கதை யானது நம்பிக்கை நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையாலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுள் கொண்டு வரத்துடித்த தீவிரம், அதற்கு பல கடவுள் காரர்களே தெரிவித்த  கடும் எதிர்ப்பு , அப்படிக் கொண்டு வரப்பட்ட போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது. என்று நூலாசிரியர் அருணன்  முன்னுரையில் தந்துள்ள வாக்கு மூலம் நூல் நெடுக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று சில லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த கடவுள் - மத நம்பிக்கையின் ஆதிக்கூறு - அமானுஷ்ய நம்பிக்கை கருக்கொண்டு சமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தாம் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரணம் குறித்த அறியாமையும் பயமும் ஆதிமனிதனிடம் தோற்றுவித்த அமானுஷ்ய நம்பிக்கை தொடங்கி அல்லா என்கிற ஏகக்கடவுள் சிந்தனை வரை கடவுள் கற்பிதம் வளர்ந்த பாதை நெடுக இரக்கமற்ற கொலைகளும் மோதல்களுமே வரலாற்றின் பக்கம் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பதை நூலாசிரியர் வலுவாக வரைந்து காட்டுகிறார்.

வேட்டை சமூகம் , விவசாய சமூகம் என ஒவ்வொரு சமூகத்திலும் உருவான வழிபாட்டு முறைகள் எப்படி அந்த சமூகத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதையும்; வெவ்வேறு நாடுகளில் தோன்றிய கடவுள்களும் மதங்களும் அவர்களில் புவியியல் சமூகவியல் சூழலோடு இணைந்தது என்பதையும் மிக நுட்பமாக குறித்துச் செல்கிறார். 
 
வெறுமே புராண ஆபாசங்களையோ கடவுள்கதைகளின் ஆபாசங்களையோ நம்பிக்கை யாளர்கள் மனம் நோகும் படி பிரச்சாரம் செய்வது பகுத்தறிவுப்  பிரச்சாரம் ஆகிவிடாது. ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள சமூக வாழ்வியல் தேவைகளோடும் காலத்தின் பின்னணியோடும் இணைத்துப் பார்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். சிங்காரவேலர் அத்தகைய பிரச்சாரத்தை அன்றைக்குக் கிடைத்த அறிவியல் தகவல்களின் அடிப்படையில் கூர்மையாகச் செய்தார். பெரியாரைமறுத்து அல்ல அவரது சிந்தனைகளை சரியான திசைவழியில் மேம்படுத்தி சிங்காரவேலர் தொடங்கிய பணி பின்னர் உரியவர்களால் தொடராமல் விடுப்பட்டுவிட்டது. தற்போது புரட்சியில் பகுத்தறிவு என ப.கு. ராஜன் எழுதிய நூல் உட்பட பல நூல்கள். இடதுசாரி வட்டத்தில் இருந்து வெளிவரத்துவங்கி உள்ளன. இது நம்பிக்கை யூட்டும் நல்ல செய்தி. அதன் இன்னொரு அடிவைப்பே இந்நூல் எனில் மிகை ஆகாது.

இறந்தோர் வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, விக்ரக வழிபாடு, பல தெய்வ வழிபாடு, இப்படி வேர்விட்டு கிளைபரப்பிய கடவுள் கற்பிதத்தின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. சட்டென்று கடவுளை மனிதன் நம்பி விடவுமில்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எல்லாம் காலகதியில் எப்படி அரங்கேறியது? யார் அரங்கேற்றினர்? கேள்விகளுக்கு இந்நூலில் விடை உண்டு.

மோசே, இயேசு, முகமது நபி என தொடர்ந்துவந்த ஒவ்வொருவரும் சமூகத்தில் வழிபாட்டில் தங்கள் தாக்கத்தை ஆழமாகவேரூன்றினர். மோசே மலையில் இருக்கும் போது யோகாவா எனும் கடவுளின் கட்டளைகள் பெற்றார். இயேசு மலைப்பிரசங்கம் செய்தார். முகமது நபியும் மலையில் இருக்கும் போதே அசரீரிகேட்டார். இப்படி மலைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? இந்நூலில் சொல்லிச் செல்கிறார். 
 
கடவுள் மனிதனைப் படைக்க வில்லை; மாறாக மனிதனே கடவுள் கற்பித்ததை சிருஷ்டித்தான் என்பதை ஆணித்தரமாய் இந்நூல் நிறுவுகிறது. அதுவும்  விதவிதமாக தன்தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அவன்படைத்த கடவுள் எண்ணிக்கை அநேகம். அதில் செத்துப்போனவை பல. இன்னும் மீதமிருப்பவை பல. இவற்றையும் கொன்று ஏகமாக்க நடக்கும் தொடர்முயற்சிகள் எல்லாம் நம்மை வியக்கவைக்கின்றன.  விழிகளைத்திறக்கின்றன.

சமூகம் என்பது ஆயுதபலத்தால் மட்டுமல்லாது, புத்தி பலத்தாலும் உணர்வு பூர்வமான ஓப்புதல் பலத்தாலும் ஆளப்படுகிறது என்பதை ஆண்டான்கள் கிறுத்துவத்தின்  மூலம் பரிபூர்ணமாக உணரந்தார்கள் என ஐரோப்பிய அனுபவத்தை சொல்லும் போது சரி; பிராமணியம் வர்ணாசிரமத்தை காக்க தனது கற்பனைகளை ஆயுதங்களாக்கியதையும் மிகச்சரியாக வரைந்துள்ளார்.

யூதம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம்,  இந்து என இன்று உலகில் நின்று நிலைக்கும் முக்கிய மதங்கள் தோன்றிய சூழல்; தன்னை தக்கவைத்துக் கொள்ள அவை மேற்கொண்ட சாகசங்கள்; ஆட்சியாளர்கள் தலையீடு என வரலாற்றுப் பார்வையோடு மதம், கடவுள் கற்பிதங்களின் தோற்றத்தை இந்நூலில் பதிவு செய்கிறார் அருணன்.

ஆண்டான் அடிமை யுகத்தில் நிகழ்ந்த செய்திகளே இந்நூலின் பிரதான சுருதி, ஆனால் நிலபிரபுத்துவகாலம், முதலாளித்துவ காலம், என தொடரும் இந்த கடவுள் மத நம்பிக்கை குறித்து அடுத்த பாகத்தில் அலசப்போவதாக நூலாசிரியர் வாக்குறுதி தந்துள்ளார். அதே சமயம் இதில் கூறப்பட்ட செய்திகளையே உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது. 
 
வழக்கமாக நாத்திகம் பேசுவோர் மீது ஒரு அம்பு வீசப்படும். அதாவது நீங்கள் இந்து மதத்தையே தாக்குகிறீர்கள் கிறுத்துவம், குறித்தோ இஸ்லாம் குறித்தோ பேசப் பயப்படுகிறீர்கள் என்பது தான் அந்த குற்றச் சாட்டு.  இந்நூல் கிறுத்துவம், இஸ்லாம் அதற்கு முந்திய யூதம் இவற்றின் தோற்றம்,  மோதல்,  பலி என பலதை ஆதாரபூர்வமாகப் பேசுகிறது என்பது வெறும் செய்தி அல்ல பகுத்தறிவாளர்களுக்கு கிடைத்துள்ள கருத்தாயுதம் என்றே பொருள்.

ஒரு சின்ன செய்தி சுன்னத் என்கிற விருத்தசேதனம் பொதுவாக இஸ்லாமியர் உலகுக்கு கொண்டுவந்த நடைமுறை என்றே கருத்து பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது. ஆனால் ஆது யூத மதத்திலிருந்தே பெறப்பட்டதாக நூலாசிரியர் வாதிட்டுச் செல்வது மிக முக்கியம். அதசமயம் புத்தமதத்திலும் இச்சடங்கு இருந்ததா? சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே! அருணன் அடுத்த பதிப்பில் இதற்கான பதிலையும் இணைப்பார் என நம்புகிறேன்.

வெண்கலயுகம், இரும்பு யுகம் என ஆயுதங்களின் மாற்றங்களோடு கடவுள் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விரிவாக பதிவாகி உள்ளது.
சாக்ரட்டீஸ் துவங்கி இந்தியாவில் லோகாயாவாதிகள் நடத்திய பகுத்தறிவு போராட்டமும் கூடவே உள்ளது. இஸ்லாம் பிற மதநம்பிக்கையாளர்களை கூட நாத்திகர்களாகவே கருதுவதை; ஏன் கிட்டத்த அனைத்து மதங்களும் பிற மதங்களை மத நம்பிக்கையாளர்களை நாத்திகர்களை விட அதிகமாக வசைபாடுவதை விமர்சிப்பதை தாக்குவதை படிக்கிறபோது அன்பைப் போதிக்கவே மதங்களும் கடவுள்களும்உருவாயின என்ற கருத்து ஆட்டம் காண்கிறது.

தமிழகத்தில் நிலவிய ஆதி வழிபாட்டுக் கூறுகள்; நம்பிக்கைகள் திணைவழி சமூகத்தின் அம்சங்கள், வேல்வெறியாட்டு, கொற்றவை வழிபாடு, போன்றவைகள் உரியமுறையில் இந்நூலில் இடம் பெற்றிருந்தால் புரிதல் மேம்பட உதவி இருக்கும். தமிழர் தத்துவமரபு என இரு நூல் தொகுதிகள் எழுதிய அருணனுக்கு அது அறியாத செய்தி அல்ல. ஒரு அத்தியாயம் சேர்திருக்கலாமே? ஏன் தவறவிட்டார்? அடுத்த பதிப்பில் எதிர்பார்க்கிறோம்.

மதம் , கடவுள் தோற்றம் குறித்த செய்திகளை படிப்பது கதை படிப்பதோ வரலாறு படிப்பதோ அல்ல; மாறாக சமூகத்தின் பொது புத்தியில் ஊறியுள்ள கற்பிதங்களை அடையாளம் காணவும் அதன் பொருளற்ற நம்பிக்கைகளை அடித்து நொறுக்கவும் கருத்துப்போராட்டத்தின் ஒரு கூறு . அதாவது பகுத்தறிவை கூரேற்றும் முயற்சி அதற்கு இந்நூல் உதவும்.

இடதுசாரிகள் தாம் சரியான கோணத்தில் சமூகசீர்திருத்தத்தை இனி முன்னெடுத்துச் செல்லமுடியும். அதற்கு இந்நூல் குறித்த  விமர்சனங்களும் விவாதங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள் பரப்புங்கள். 
 
கடவுளின் கதை
ஆதிமனிதக் கடவுள் முதல் அல்லாவரை
ஆசிரியர்: அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்   69/21, ஏ, அனுமார் கோயில் படித்துறை  சிம்மக்கல் , மதுரை 635 001 பக்: 360,    விலை: ரூ. 250/-

அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்

Posted by அகத்தீ Labels:

 
 
 
 
அறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்  
 
சு.பொ.அகத்தியலிங்கம்.
 
 
     தமிழுக்கு    புதிதாக  வந்துள்ள   காத்திர        மான  வரவு  இந்நூல்.    A Short   History   of  Nearly  Everything      என்கிற ஆங்கில  நூலின் தமிழாக்கம்.கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறுஎன்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும்  - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித  அறிவுத் தேட லின் முழுக்கதை   என  விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று. 
 
ஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த -  பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த - உயிரினம் குறித்த  - மனிதன் குறித்த - சரியான  உண்மைகளைச் சென்றடைய அறிவியல் உலகம்  நடத்திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல்.    
 
அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
 
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என  பிரபஞ் சத்தில் தொலைந்து போனது  என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது . சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .
 
மண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது;  தோல்விகளும், ஏமாற்றங்களும், பலிகளும்,பழிவாங்கல்களும், அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கிறது ; இவற்றை எல்லாம்  புவியின் அளவு என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கிலம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .
 
அறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும்  பல தவறான நம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.
 
அணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை  ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் சாட்சியாகும்.
 
ஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.
 
புவியில்   130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .
 
உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர்.  நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? 
 
உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல “அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.
 
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா?
 
 “திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை “ என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது.
 
 மொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.
 
அனத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
மனித அறிவுத்தேடலின் முழுக்கதை
ஆசிரியர்: பில் பிரைசன்,
தமிழில் : ப்ரவாஹன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
பக் : 640 , விலை : ரூ. 640.