எந்தக் கோயிலுக்கு போனால்… சிறுகதை .10.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .10.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 

எந்தக் கோயிலுக்கு போனால்…

 

 

அன்றாட அலுவலக பரப்பை சொற்களில் சொல்லிவிடவே முடியாது .பணியாற்றுகிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் . அலுவலகம் திறக்கும் முன்பே வந்து காத்திருந்து ,காலை டிபனையே அலுவலகத்தில் சாப்பிடும் வேணுகோபால் முதல் .அரக்க பரக்க ஓடிவந்து அட்டெண்டன்ஸ்சை குளோஸ் செய்வதற்கு முன்னால் கையெழுத்திடும் ராமசுப்பு , சியாமளாவரை எல்லோரும் எந்நாளும் அப்படியேதான் இருக்கிறார்கள். மாற்றம் பெரிதாக இல்லை .

 

ஆனாலும் முக்கியமாக ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது .முன்பு வந்தததும் கூடிக்கூடி கதை அடித்தபின்னர்தான் பணி தொடங்கும் .இப்போது வந்து உட்கார்ந்ததும் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தால் எப்போது பணியைத் துவங்குவார் என சொல்ல முடியாது . இந்த தனியார் அலுவலகத்திலேயே இதுதான் நிலைமை எனில் அரசு அலுவலகத்தில் சொல்லவே வேண்டாம்.

 

இன்றும் அப்படித்தான் . சியாமளா வந்ததும் வாட்ஸ் அப்பில்  வந்த ஒரு செய்தியை பக்தி பரவசத்துடன் படித்தாள் . கர்ம சிரத்தையோடு அதை சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினாள் . கொஞ்ச நேரத்தில் அந்தச் செய்தி அவ்வலுவலக விவாதப் பொருளானாது .

 

 “சியாமளா மேடம்! அனுப்பின செய்தியை படிச்சீங்களா ?” பக்கத்து இருக்கை நாகபூசனத்திடம் கேட்டார் ராமசுப்பு.

 

“ படிச்சேன் … அது என்ன தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் பவரு?”ன்னு நாகபூசனம் கேள்வியை வீச ,

 

“ எங்க திருநெல்வேலியில கோயில் இல்லையா ? அங்குள்ள சாமிக்குகெல்லாம் பவர் இல்லையா ? ஒவ்வொரு ஊர்லேயும் கோயில் இருக்கே .. தஞ்சாவூருக்கு என்ன கொம்பு ?” கோமதி உரையாடலில் குதிச்சாள்

 

 

 “ இங்க இருக்குற திருச்செந்தூர் முருகனுக்கும் , வடபழனி முருகனுக்கும் ,  காளியம்பாளுக்கும் பவர் இல்லேன்னுதானே திருப்பதிக்கும் சபரிமலைக்கும் இங்கிருந்து படை எடுக்குறாங்க … விச் காட் இஸ் பவர்புள் ?” வேணுகோபால் கேள்வி .

 

“ நாத்திகன் இந்த சாமி அந்த சாமின்னு கூறுபோடலை இந்த ஆத்திகன்தான் எல்லா சாமியையும் ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க ..” ராமலிங்கம் சொல்ல அலுவலகத்தில் கலகலப்பு கூடியது .

 

அந்த நேரத்தில் டீ கொண்டு வந்த அலமேலு ,” காலையில இருந்து எல்லோரும் போண நோண்டி பேசிக்கிட்டே இருக்கீங்க என்னங்க சமாச்சாரம் ?”

 

அலமேலுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ரெஜினா அலமேலுக்கு விளக்கினாள்.

 

“ கருத்தரிக்க அதிலும் பெண் குழந்தை அல்ல புத்திர பாக்கியமே கிடைக்க  கருவளர்ச்சேரி எனத் தொடங்கி ,கல்விபெற ,பதவிபெற ,செல்வம்பெற ,குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க ,வழக்குகளில் வெற்றி கிடைக்க , கிரக பெயர்ச்சிக்கு ,என தஞ்சாவூர்ல ஒவ்வொரு கோயிலா சொல்லிட்டு நீண்ட ஆயுள் பெற திருக்காடையூர்னு கடைசியா சொல்லி  தஞ்சை மாவட்டத்தில இருபது கோயில்கள் பட்டியல போட்டு மகிமையை அளந்துவிட்டுருக்காங்க  அதுதான் பேச்சா கிடக்கு…”

 

 “ ஆமாம் இருபது கோவில் இல்ல எண்பது கோயில் ஆனாலும் எங்க பொளப்பு இப்படித்தான் என சலித்துக் கொண்டே ..” அலமேலு நகர்ந்தார் .

 

“ சார்! திருவண்ணாமலை ,திருப்பரங்குன்றம் போகாமல் திருக்கார்த்திகைக்கு இங்கே உட்கார்ந்திருக்கீங்க …” என ராமசுப்புவை நாகபூசனம் வம்புக்கிழுத்தார் .

 

மெல்ல குனிந்து காதோடு கிசிகிசுத்தார் ராமசுப்பு ,” பினான்சியல் டைட் .. அங்க கூட்டம் வேற அதிகம் இருக்கும் …”

 

 “ அங்க என்ன சார் கிசிகிசு ! சபைக்கு சொல்லுங்க ராமலிங்கம் சந்தியில் இழுத்துவிட்டார் .

 

 “ இரண்டு நாள் லீவு போட முடியுமா ? லாஸ் ஆப் பே ஆகிடும்…”ன்னு இன்னொரு உண்மையை போட்டுடைத்தார் ராமசுப்பு .

 

 “ அதத்தான் லைவ் காட்டுறானே அதப் பார்த்தால் போதாதா ? மனுஷந்தானே அங்கே மலையில ஏறி விளக்க ஏற்றுறான் …. அங்க போயி கும்பிட்டாத்தான் சாமி ஏற்பாரா ?” வேணுகோபால் சந்தேகம் .

 

 ஏன் வேணு ! தோஷத்துக்கு பரிகாரம் இருக்காம் , கிரக பெயர்சிக்கு பரிகாரம் இருக்காம் … அப்படின்னா ஐயரு சொல்ற மந்திரம்தாம் எல்லாவற்றையும் மாற்றுன்னு சொல்றாங்களோ ….”

 

 “ மந்திரத்தால ,பரிகாரத்தால ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது ; சும்மா வெட்டிச் செலவு ; அதிகக் கடன் அம்புடுத்தான்..”

 

 “ ஆமாம் ஆமாம் இவரு பெரிய ஞானி சொல்றாரு ! எல்லாமே ஒரு மன தைரியத்துக்குத்தான் .கோயில் குளம்னு போய்வந்தால் மனசு தெளிவாகும் நல்லா யோசிச்சு வழி காணலாம் அம்புடுத்தான் .. பரிகாரம்ங்கிறதும் ஒரு சைக்காலஜிகல் டிரீட்மெண்ட்தான்…” ராமசுப்பு சயின்சையும் ரிலீஜியஸ் செண்டிமெண்டையும் கலந்து கட்டி சாமாதானம் சொன்னார் .

 

“இப்படி சயின்ஸையும் மூடத்தனத்தையும் முடிச்சு போட்டு விக்கிறது இப்ப பேஷன்… சந்திரமுகின்னு ஓரு படத்தில கூட மனோதத்துவதையும் மந்திரவாதியையும் கூட்டணியாக்கி ஒரு உடான்ஸ் விட்டிருப்பாங்க … அது சினிமா … இப்ப நெஜத்திலேயே அப்படி டகால்ட்டி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க..” வேணுகோபால் சொல்ல .

 

 “ நீங்க அது எப்படி ஏமாற்றுன்னு சொல்லலாம்..” சியாமளா சண்டைக்கு வந்தாள் …

 

”வைபிரேஷன் ,பாசிட்டிவ் என்ர்ஜி ,சைக்காலஜி எல்லாம் கலந்து விக்கிற சாமிகளா உங்க பவரைக் காமிச்சு விலையைக் குறையுங்க , எல்லோருக்கும் வேலை கொடுங்க , கொரானாவை கேன்சரை தொற்றுநோய்களை விரட்டி அடிங்க …. நாங்களும் கோவிந்தா போட்டுட்டு போறோம்… காசு டைமும் வேஸ்ட் ஆகுதே தவிர இவற்றால என்ன பிரயோசனம் ?” ராமலிங்கம் தன் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

 

 “ ஆள விடுங்க ! சீக்கிரம் ஆபீஸ் வேலையை முடியுங்க … மேனஜர் வர்ற நேரம்..” ராமசுப்பு நல்ல பிள்ளை அவதாரம் எடுத்து விவாதத்தைத் தவிர்த்தார்.

 

“ ஆமா ஆமாம் ! இன்னிக்கு ஏதோ முக்கிய அறிவிப்பு இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காரு …”

 

“ சம்பள உயர்வா இருக்குமோ ?”

 

“ ஏதோ பெரிய இடியை இறக்கப் போறாரு தயாரா இருங்க “

 

ஆளுக்கு ஆள் பேச மெல்ல அவரவர் பணியில் மூழ்கினார் .

 

அன்று வெள்ளிக் கிழமை . ராகுகாலம் 10.30 -12 எனவே வழக்கம் போல் ராகுகாலம் தாண்டியே மேனஜர் உள்ளே நுழைந்தார் .

 

மேனஜர் வந்த சிறிது நேரத்தில் சுற்றறிக்கை வந்தது ; அது நோட்டிஸ் போர்டிலும் ஒட்டப்பெற்றது …

 

கம்பெனி பொருளாதார நிலவரம் மோசமாக உள்ளதால் . ஊழியர் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க உள்ளோம் . விருப்ப ஓய்வில் போவோர் போகலாம் .அதற்கு தனி பேக்கேஜ் உண்டு . இல்லாவிடில் வயசு ,சர்வீஸ் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் ..” என மொட்டையான அறிவிப்பு

“எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகை . கனத்த மவுனம் .பெருமூச்சு . வேலைபோனால் அடுத்து என்ன செய்வது ? கடன் ,குழந்தை படிப்பு , இஎம்ஐ ,வட்டி எல்லாம் நினைவுக்கு வர ஒவ்வொருவரும் தலை சுற்ற உடகார்ந்தனர் .

 

ராகுகாலம் தாண்டி மேனஜர் வந்தாலும் செய்தி என்னமோ எமகண்டமாப் போச்சே

 

மதிய உணவு இடை வேளை .எல்லோரும் சாப்பிட மறந்தனர் .ஆட்குறைப்பை பேசிப்பேசி சோர்ந்தனர் .லீவிலிருந்த சங்கப் பொருளாளர் யூசுப்பும் வந்து சேர்ந்தான் .ராமலிங்கம் ,யூசுப் ,ரெஜினா எல்லோரும் கூடிப் பேசினர்.சங்கத் தலைவரோடும் பேசினர் .பின் வாயில் கூட்டம் நடைபெற்றது .

 

“ கம்பெனி கொரானா காலத்திலேயும் லாபத்திலதான் ஓடி இருக்கு ,இந்த ஆண்டும் லாபம்தான் .அப்புறம் ஏது பொருளாதார நெருக்கடி ? இன்னும் அதிக லாபம் வேணும்னு நம்ம வயிற்றில அடிக்கிறாங்க .. சட்டப்படியும் நம்ம சக்தியைத் திரட்டியும் ஒரு கை பார்ப்போம் .நம்பிக்கையோடு இருங்க ..” என ராமலிங்கம் பேசினார் .

 

“ கைவிடு ! கைவிடு ! ஆட்குறைப்பைக் கைவிடு !” என்கிற முழக்கம் ஓங்கி ஒலித்தது .வழக்கமாய் இக்கூட்டங்களில் நழுவும் சியாமளாவும் வேறு சொலரும்கூட பங்கேற்றனர் .

 

சிலர் தாமதமாகச் சாப்பிட்டனர் . பலர் சாப்பிடவும் மனமின்றி இருக்கைக்கு திரும்பினர் .

 

“ காலையில கோயில் லிஸ்ட் போட்டீங்களே மேடம் ! எந்த கோயிலுக்கு போனா ஆட்குறைப்பு போகும்னு ..” அலமேலு அப்பிராணித்தனமாகக் கேட்க..

 

வேதனை கலந்த சிரிப்பு எங்கும் பரவியது .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

6/12.2022.

 

 

1 comments :

  1. புலியூரான் ராஜா

    அருமை தோழர்

Post a Comment