நீ தேசபக்தனாகிட எளிய வழி

Posted by அகத்தீ Labels:

 

நீ தேசபக்தனாகிட எளிய வழி

 

சாப்பிட மட்டுமே வாயைத் திற

அப்போதும்

நீ எதைச் சாப்பிட வேண்டும் என்பதை

”அவர்களே” தீர்மானிப்பர் . சரிதானே !

 

பதில் சொல்ல ஏன் வாயைத் திறக்கிறாய் ?

 “ஆம்.” ,”இல்லை” என்பதற்கு

தலையாட்டினால் போதுமே அப்போதும்

 “அவர்கள்” சொல்லுகிறபடி ஆட்டினால் போதுமே !

 

பணிவு என்பதும் அடிமைத்தனம் என்பதும்

வேறுவேறு என ஏன் தப்பாக நினைக்கிறாய் ?

அதுவே இது .இதுவே அது  அறிவாய் இதை

அடிமைத்தனம் சுகமானது எனச் சொல்!! .

 

அவர்களால் அவர்களுக்காக அவர்களே ஆளுவதே

அரசு என்பதை இன்னுமா அறியாமலிருக்கிறாய் ?

பிறக்கும் போது நீ எதைக் கொண்டுவந்தாய்

போகும்போது நீ எதை கொண்டு போகப்போகிறாய் ?

 

அழுது  கொண்டே பிறந்தாய் அழுது அழுதே சாகு

உனக்கு விதிக்கப்பட்டதை நீ ஏற்றுக்கொள்

ஆண்டவன் அனுகிரகமோ ஆட்சியின் அனுசரணையோ

அவர்களுக்கு மட்டுமே என்பதை அறியாயோ ?

 

தவறியும் முணுமுணுக்காதே ! தவறியும் வாயைத் திறக்காதே !

தவறியும் முஷ்டியை உயர்த்தாதே ! தவறியும் கண் சிவக்காதே !

தவறியும் சிந்திக்காதே ! தவறியும் கரம் கோர்க்காதே !

தவறியும் போர்க்குணத்தோடு எழுந்து நின்றுவிடாதே !

 

சுபொஅ.

0 comments :

Post a Comment