வேதம் புதிது.

Posted by அகத்தீ Labels:








வேதம் புதிது.



எல்லா கண்களையும்
ஒரே நேரத்தில் குருடாக்க வேண்டும்
எல்லா காதுகளையும்
ஒரே நேரத்தில் செவிடாக்க வேண்டும்
எல்லா வாய்களையும்
ஒரே நேரத்தில் ஊமையாக்க வேண்டும்
சர்வ வல்லமை மிக்க
அதிகாரத்தின் பேரால் ஆணையிட்டார் …
மாமன்னர்.


மயாண அமைதியில் மன்னர் புன்னகைத்தார்
திடீரென்று வானம் இருண்டது இடி இடித்தது
பெருமழை ஊரைப் புரட்டிப் போட்டது .


பார்வை அற்றவரும்
நெற்றிக் கண்ணைத் திறந்தனர்
கேட்கும் திறனிழந்தோரும்
காற்றுக்கும் காதுகொடுத்தனர்
பேசமுடியாதோரும்
அடிவயிற்றிலிருந்து ஆங்காரக் குரலெழுப்பினர்


அதிசய சுகமளிக்காது ஆராதனைகளென
ஆர்ப்பரித்து திரண்டனர் வீதிகளில்
அதிகார வெறி பொடிந்து தூளாகும்
சமிக்ஞை விண்ணில் பளிச்சிட்டது
தேவதூதரின் வருகையை அல்ல
மக்கள் எழுச்சியை முன்னறிவித்தது …

சு.பொ.அகத்தியலிங்கம்.


0 comments :

Post a Comment