செய்திக்குப் பின்னால்... மக்கள் கருத்தும் உருவாக்கப்படுகிறது

Posted by அகத்தீ Labels:




“சமீபகாலமாக பொதுமக்களின் செயல் பாடுகள் கதிகலங்க வைக்கின்றன. ‘பேங்க்ல கொள்ளையடிச்ச அஞ்சு பேரை போலீஸ் காரங்க என்கவுன்ட்டர்ல போட்டு தள்ளினது சூப்பர்’ என டி.வி. பேட்டியில் குதூகலிக் கிறார்கள். இப்படியே போனால்...”இப்படி வலுவான பீடிகை போட்டு மக் களிடம் வெளிப்படும் பொறுப்பற்ற போக்கு களை கிண்டலடித்து இருக்கிறது குமுதம் (21.3.2012) வாரஏடு. அதில் கூறுகிறது, “குடி தண்ணீர் கேட்டு, சாலை மறியல் செய்த பெண்கள் மீது துப் பாக்கிச் சூடு. (பப்ளிக் வாய்ஸ்): நல்லா வேணும்ங்க! சின்னச் சின்ன விஷயத்துக் குக்கூட சாலை மறியல்னு ரோட்டுல உட் கார்ந்திர்றாங்க. சரியான டிராபிக் ஜாம். வேலைக்கு ஒரு மணிநேரம் லேட்”.
இப்படி பல செய்திகளை மிகவும் நையாண் டியாகக் குறிப்பிட்டு மனித உரிமை மீறல் களை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என குமுதம் ஏடு உணர்த்துகிறது. சரியான சாட்டையடி. சபாஷ் மக்கள் கருத் தாக ஊடகங்கள் - குறிப்பாக காட்சி ஊட கங்கள் சொல்வதெல்லாம் உண்மையல்ல. தாங்கள் விரும்புகிற கருத்தை சிலர் மூலம் சொல்லவைக்கிற வித்தை ஊடகங்களுக்குக் கைவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன்றைய ஊடகங்கள் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமான கருத்துகளை மக்கள் கருத்துகள் என்பதுபோல் பிரச்சாரம் செய்வதில் நுட்பமாக செயல்படுகிறது என் பதே உண்மை. “மனித உரிமை” இந்த வார்த்தையைப் போல் அரசியலாக்கப்பட்ட இன்னொரு வார்த்தை காண்பது அரிது. ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகளை பாலில்லாமல் பட்டினியால் சாகவிட்ட அமெரிக்காவின் கொடூரக் கல் நெஞ்சம் மனித உரிமை மீறலாக ஊடகங் களில் இடம் பிடிப்பதில்லை.
அதேசமயம் அமெரிக்காவை எதிர்க்கிற நாடுகளில் நடக் கிற சின்னச் சின்ன விவகாரங்களும் மிகப் பெரிதாய் ஊதி காட்டப்படுவதும் நடக்கும். ஏன்? இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது வாய்மூடி இருந்த அமெரிக்கா இன்று ஜெனிவாவில் மிகப்பெரிய மனித உரிமைக் காவலராய் வேடம் போடுகிறது. அதே சமயம் பற்றியெரியும் தீயை அணைக்க ஊற்றுகிற தண்ணீர் சாக்கடையாக இருந்தால் என்ன? பன்னீராக இருந்தால் என்ன? நிச்சயம் பெட்ரோலாக மட்டும் இருக்கக்கூடாது. சரி. மனித உரிமை என்று ஆரம்பித்த உட னேயே சர்வதேச பிரச்சனைகள் நினைவுக்கு வந்து விடுகிறது. நம் நாட்டுக்கு வருவோம். சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் சட்ட விரோத சுரங்கக் கொள்ளையைத் தடுத்த நரேந்திர குமார் சிங் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார். இது பலத்த அதிர்ச்சியை உருவாக்கியது. இதை யொட்டி “இது மனித உரிமையில் வராதா?” என்ற தலைப்பில் தினத்தந்தி(12.3.2012) ஒரு தலையங்கம் தீட்டியது. இந்தக் கொலைக்கு எதிரான கோபம் நியாயமானது.
அதை எதி ரொலிப்பதில் தவறே இல்லை. அதேசமயம் அந்தத் தலையங்கத்தில் ஒரு இடத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட் டுள்ளது, “இது மனித உரிமை மீறலில் வராதா? கிரிமினலைக் கொன்றால் மனித உரிமை மீறல். போலீஸ் அதிகாரிகளைக் கொன்றால் அதற்கு என்ன பெயர்? என்று நரேந்திரகுமாருக்காக அனுதாபப்படும் சில பெண் அரசு ஊழியர்கள் ஆவேசமாகக் கேட்கிறார்கள்.” இவ்வாறு அந்தத் தலையங் கத்தில் வாதிட்டிருப்பது மேற்பார்வைக்கு நியாயம்போல் தோன்றும். அதுவும் பொது மக்கள் கருத்துபோல் வெளிப்படுத்தப்பட் டுள்ளது. கிரிமினலானாலும் அதிகாரியானாலும் அவர்களை தண்டிக்கிற அதிகாரம் நீதித் துறையைத் தவிர யாருக்கும் இருக்கக்கூடாது. அதிகார பலத்தை கையிலே கொண்டிருக்கிற காவல்துறை அத்துமீறலையும் சமூக விரோதி களின் அட்டூழியங்களையும் சமப்படுத்து வதே பிழையாகும். சமூக விரோதிகள் தனித்தி யங்க முடியாது. சுயநல அரசியல்வாதிகள், ஊழல் அதிகார வர்க்கம் இவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் உள்ள முக்கூட்டணி ஊரறிந்த உண்மை. ஏன் தமிழ் திரைப்படங் களில் கூட இந்த தகாத உறவுகள் குறித்து நிறைய வந்துள்ளன. நேர்மையான அதிகாரி கள் கொல்லப்படுவதற்கு கறுப்பு ஆடுகளாய் செயல்படும் சில அதிகாரிகளே காரணமாக ஆகிறார்கள் என்ற உண்மையும் உறுத்தத்தான் செய்கிறது.
இதை அம்பலப்படுத்துவதன் மூலம்தான் சமூக விரோதிகளுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக நடத்த முடியும். சமீபத்தில் நடந்த வேளச்சேரி, திண்டுக் கல் என இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங் களிலும் சமூக விரோதிகள் வெளியேற ஒரே வாயிலும், ஒரே குறுகிய பாதையும் மட்டுமே இருக்கிற சூழலில் சம்மந்தப்பட்டவர்களை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்பதும்; எல்லோருக்குமே நெற்றியிலோ தோளிலோ தான் குண்டு காயம் படுகிறதென்பதும் பல் வேறு ஐயங்களை விதைக்கத்தான் செய்கிறது. சமூக விரோதிகளை உயிரோடு கைது செய்து முறையாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத் தில் நிறுத்தி வலுவாக வாதாடினால் தண்டனை உறுதி என்பது மட்டுமல்ல பல உண்மைகள் வெளிவரும். திரை மறைவிலிருந்து இவற்றை ஆட்டுவிக்கும் பெரிய மனிதர்கள் யாரென்பது அம்பலப்படும். அதை விரும்பாத காவல் துறையும் அதிகாரிகளும் என்கவுன்ட்டர் களை செய்கிறார்கள்.கேப்டன் பிரபாகரன் என்றொரு திரைப் படம் வந்தது. அதை இப்போது பாருங்கள். படத்தின் கலையம்சங்களை திரைப்பட விமர்சகர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
சந்தனக் கட்டை வீரப்பனை (படம் இவரை ஞாபகப் படுத்துகிறது) என்கவுன்ட்டரில் கொல்லாமல் சரணடையச் செய்ய கதாநாயகன் முயல்வார். ஆனால் அதனால் அம்பலப்பட்டுப்போவோம் என்று கலங்கிய சுயநல அரசியல்வாதிகளின் கையாளாக அதிகாரி ஒருவர் வீரப்பனைக் கொன்று விடுவது போல் அமையும். அது தானே தொடர்ந்து நடக்கிறது.எல்லா என்கவுன்ட்டர்களும் தவறா னவை என்று நாம் சொல்லவில்லை. கையில் ஏகே 47 துப்பாக்கியோடு சண்டை போடுகிற பயங்கரவாதிகளோடு மோதும்போது சிலர் கொல்லப்படலாம். அது என்கவுன்ட்டர் டெத் - மோதல் சாவு. ஆனால் இப்போது நடப்பதெல் லாம் ஃபேக் என்கவுன்ட்டரே. அதாவது போலி என்கவுன்ட்டரே. இது மோதல் கொலையே. இதைப்பற்றிய கருத்தை ஊட கங்கள் மக்களுக்குச் சொல்லாவிடில் மக்க ளால் உண்மையை உணர முடியாது. அரை குறையாய் சொல்லி - தங்களுக்கு சாதக மானதை மட்டும் சொல்லி மக்களின் கருத் தைக் கேட்டு ஒலி - ஒளி பரப்புவது என்பது உண் மையில் ஒருவிதமான கருத்துத் திணிப்பே. ஒரு அனுபவத்தை இங்கு சொல்லலாம். பாபர் மசூதி இடிப்புக்கு முன் சென்னையில் செங்கல் ஊர்வலம் வந்தபோது வீடுவீடாக 2 ரூபாய் நன்கொடைச் சீட்டுக் கொடுத்து நிதி சேகரித்தார்கள். நான் குடியிருந்த வீட்டிற்கும் வந்தார்கள்.
என் அம்மா உட்பட அங்குள்ள குடித்தனக்காரர்கள் 12 பேரும் நிதி கொடுத் தார்கள். அந்த நேரத்தில் நான் அங்கு வந்தேன். எதற்கு நிதி என்றேன். ராமர் கோயில் கட்ட என்று அம்மா சொன்னார். நான் மசூதியை இடித்துக் கட்டப்போகிற விவகாரத்தை சொன் னேன். எங்க அம்மா கோபப்பட்டார். என்னிட மல்ல. நிதி கேட்டவரிடம். “ஏன்டா மசூதியை இடிச்சுட்டு கட்டணும். வேற இடம் இல் லையா?” அவர் பதில் சொன்னார். “அது ராமர் பிறந்த இடம்”. எங்க அம்மா திருப்பிக் கேட் டார்,“ஆமா ஆமா கோசலை இடுப்பு வலியில துடிக்கும்போது பக்கத்துல இருந்து நீதான் பாத்தியா? காசைத் திருப்பிக் கொடு” என்று நன்கொடையை திரும்பப் பெற்று விட்டார். எல்லா குடித்தனக்காரர்களும் இதையே செய் தனர். வந்தவர் என்மீது கோபத்தைக் காட்டி னார். நான் யார் என்று தெரிந்ததும் நடையைக் கட்டினார். மக்களிடம் சரியான தகவல்களை சொல்லி சரியான முறையில் கேள்வி எழுப்பினால் மக் கள் கருத்து எப்போதும் சரியாகவே இருக்கும். மாறாக, தனக்கு என்ன பதில் வேண்டுமோ அதற்கேற்ப கேள்வியை சொடுக்கினால் விடை அதற்கேற்பவே வரும்.
அதற்குமேல் விரும்பாத விடைகள் வந்தாலும் எடிட் செய்து மக்கள் கருத்தை தங்கள் விருப்பம்போல் சிதைத்துவிட முடியும். இதைத்தான் ஊடகங் கள் செய்கின்றன.கடைசியாக ஒரு செய்தி. அந்தச் செல்லப் பையன் கொள்ளிக்கட்டையோடு கூரைமேல் ஆட்டம் போடுவது ஆபத்தானது என்கிறோம். இருட்டில் திருடனை விரட்டுவதற்குத்தான் தீப்பந்தம் ஏந்தியிருக்கிறோம் என்கிறார் வீட்டுக் கார அம்மா. ஆனால், என்ன நடக்கும்? யாரா வது உத்தரவாதம் தர முடியுமா? எச்சரிக்க வேண்டியது நம் கடமை.

சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment