சாலையே ! தெருக்களே ! நன்றி !

Posted by அகத்தீ Labels:

 

சாலையே ! தெருக்களே !
நன்றி ! நன்றி !
எம் முதியோர்களை
தினசரி
அஷ்டாவதானியாகவும்
தசாவதானியாகவும்
மாற்றுகிறாயே !
உனக்கு
கோடான கோடி நன்றி !
கண்கள் குனிந்து
சாலை மேடு பள்ளங்களைப் பார்க்க
கண்கள் நிமிர்ந்து
சாலை விதிகளை மதிக்காமல்
எதிர்வரும் வாகனங்களை கவனிக்க
காதும் கண்ணும்
பின் தொடர்ந்து முந்த எத்தணிக்கும்
வாகனங்களை கவனித்து வழிவிட
சுற்றுப்போடும் தெருநாய்களை
சாமர்த்தியமாய் விரட்ட
ஹெட் ஷெட்டில் பாட்டு கேட்டபடியும்
செல்போணை நோண்டியபடியும்
குறுக்கே ஓடும் இளைஞரை
இடிக்காமல் கடக்க
உடன் நடப்பவரோடு
உரையாடல் அறாமல் தொடர
வழியில் கடையில்
வாங்க வேண்டியதை
ஞாபகமாய் வாங்கி நகர
அடடா ! எத்தனை எத்தனை
கவனக் குவிப்புகள் ஒரே நேரத்தில்
முதியோரை இப்படி எல்லாம்
அஷ்டாவதானியாகவோ
தசாவதானியாகவோ
மாற்றிக்கொண்டே இருக்கும்
சாலையே தெருவே
நன்றி !நன்றி !

சுபொஅ.
26/11/25.

குறிப்பு : ’அஷ்டாவதானி’ எனில் எட்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர். ’தசாவதானி’ எனில் பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் .அக்காலத்தில் இதனை பாராட்டி பட்டம் பட்டம் வழங்குவர் .

கவிதையில் விடை கிடைக்காது….

Posted by அகத்தீ Labels:

 



கவிதையில் விடை கிடைக்காது….      

 

கொஞ்சம் அறிவியலைப் புரட்டினேன்

காதலிக்கத் தொடங்கும் அகவை முன்பே

அவனுக்கும் அவளுக்கும்

இதயமும் மூளையும் முழு அளவை எட்டிவிடுமாம்.

ஆனாலும்  அவனுக்கும் அவளுக்கும்

காதலிக்கும் போது இருந்த

இதயமும் மூளையும்

கல்யாணத்துக்குப் பின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் பிறந்தபின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் வளர வளர இருந்த

இதயமும் மூளையும்                                                    

ஒவ்வொரு காலத்திலும் களத்திலும் இருந்த

இதயமும் மூளையும்

முதுமையில் இப்போது இருக்கும்

இதயமும் மூளையும்

அளவு மாறாமலே

குணம் மாறிக்கொண்டே இருப்பது ஏன் ?

உள்ளுக்குள் நிகழும் மாற்றங்களா ?     

அனுபவ நெருப்பில் வெந்த பக்குவமா ?

கவிதையில் விடை கிடைக்காது

காலத்திடம் கேட்டுப் பார்ப்போம்.

 

சுபொஅ.

21/11/25.

 


அர்பணிப்பின் அளவீடு

Posted by அகத்தீ Labels:

 



என் மகள் பானு நவீன் கனடாவில் இருந்து அவ்வப்போது கவிதைகள் எழுதி அனுப்புவாள் . அகம் சார்ந்து புறம் சார்ந்து சமூக கோபம் சார்ந்து பல கவிதைகள் தெறித்து விழும் . அவற்றை புத்தகமாக்க வேண்டும் என்பது அவளது ஆர்வம் . அண்மையில் ஒரு கவிதை அனுப்பி இருந்தாள் . இங்கு பகிர்கிறேன் .

சுபொஅ. 2/11/25.

அர்பணிப்பின் அளவீடு


நேசத்தை சோதிப்பது போல்

அர்ப்பணிப்பைக்கூட அளவீடு கொண்டு அளக்கிறார்கள் ....

100 க்கும் 99 க்கும் இடையே குறைந்த இடைவெளி
என்று எண்ணியிருக்கையில்
10-ஐயும் 100-ஐயும் ஒரே சமகூட்டில் நிறுத்துகிறார்கள்..

கிள்ளியெடுக்கையில் கணக்கு சொல்ல முடியும்
அள்ளுவது என்றான பின் எதைக் கொண்டு
அதை நிறுத்துவது (அளவிடுவது)?

தூறுவதோ
பொழிவதோ
மேகத்தின் முடிவு

விழும் அத்தனையும் மீண்டும் வந்து சேராது
என்று மேகத்திற்கு எப்போதோ தெரியும் ...

எறும்பும்
ஆமையும்
ஒன்றென கருதும் உங்களிடம்
வேகம் குறித்து விவாதிப்பது வீண் .

பெயரிடப்பட்ட அத்தனை தெய்வங்களுக்கு
பின்னும் பெயர் தெரியா
சிற்பியும், உளியும் உண்டு ....

எல்லா அர்பணிப்பின் எதிர் வினையில்
ஏமாற்றமும், இகழ்ச்சியும் உண்டு
என்பது அறிவோம் ..

அறியாமல் போனது
இதை பற்றிய விளக்கங்களும், விவாதங்களும்
நிகழ்த்துவது நம் நேசத்திரிக்குரியவர்கள் என்பது ....

பானு நவீன் .

சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

Posted by அகத்தீ Labels:

 

சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

[ என் மகள் பானுநவீனின் இன்னொரு கவிதையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்: சுபொஅ .]                                 

 

பெருங்காதலோடு உன் கை மணம் கூட்டி,

 நீ கொடுக்க விழையும் பிரிய பிரியாணிக்கும்,

அதற்கானப் பிரயத்தனங்களுக்கும்,  காதல் கோடி ....

 

எத்தணிப்பு உண்மை எனினும்,

செயல்முறை பிழை, சேர்வது என்னை மட்டும் தான்,

 

அரிசி, எண்ணெய் தேடி கலைத்து, களைகிறாய்...

அணுதினம் புழங்கும் அதே சமையலறையில்,         

 

பொருள் தந்து, கலைந்ததை நேர் படுத்தும் என்னுள்ளும் தவறுண்டு,

நேர்த்தியைப் பற்றி கொண்டு, நேரத்தை தொலைப்பேன்  எப்போதும்,

 

சின்ன நேர இடைவெளியில்,  பாத்திரம் தேடி உருட்டும், உன் பெரு மூச்சின் சத்தங்கள் எட்ட,

 உன் கைகளுக்கு மிக அருகில் இருக்க்கும் வேண்டியவைகளை எடுத்து, கொடுத்து,

மீண்டும் சிதறியவைகளை சீர் செய்து வருவேன்,

 

காய் நறுக்க,

தொலி உரிக்க,

மசால் அரைக்க,

அவ்வப்போது விஜயம்... ,

அதன் தொடர்ச்சியாய் துடைத்தலும், கழுவுதலும் ..

 

முக்கால் தயாராகி, உப்பு சரிபார்க்க  உதவுகையில் ,

கையோடு வெங்காயத்  தோல்களையும் ,

கொத்தமல்லி மற்றும் இதர மிச்சங்களையும் சேர்த்து குப்பையில் வீசுவேன்,

 

மணக்கும் உன் சமையலின் ருசி பார்க்கும் மகிழ்வை விடவும் ,    

அடுப்பை துடைத்து,

மலை போல் குவிந்து கிடக்கும்,  பாத்திரம் கழுவும்  அயர்ச்சி சூழ்ந்து கொள்கிறது,

என்ன செய்ய ......

 

சிதறிய ,

கலைந்த ,

மிச்சமுள்ள,

ஒழுக்கற்ற ,

 

அத்தனையையும்  சரி செய்வது ஒன்றும் புதிதல்ல

என்பினும் சலிப்பும் இயல்பு தானே ....

 

சிதறும் உதிரத்தை   

ஒற்றைப் பஞ்சில் சேர்த்து

அனிச்சையாய் அப்புற படுத்தும் வித்தை பழகிய எமக்கு,

 

அழுக்கும்சுத்தமும் ….

எப்போதும் துரத்தி கொண்டே இருக்கும்

வரமும்... சாபமும் .....

 

பானுநவீன்

17/11/25

 


சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்

Posted by அகத்தீ Labels:

 



      


                                                                                                                                    

சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்         

கற்பிக்க அல்ல கற்க ஒரு கையேடு.                    

 

நான் கல்வியாளனும் அல்ல , ஆசிரியனும் அல்ல ;  ஆயினும் ‘சமூக ஜனநாயக் கையேடு ‘ எனும் நூல் கிளர்த்திய ஆர்வத்தில் நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் . காரணம் இந்நூல்  செய்திருக்கிற பிரகடனமும் ; அதற்கொப்பச் செயல்வடிவம் கொடுத்திருப்பதும்தான் .       

 

ஆம் .” சாதிய வன்கொடுமைகளின் தோற்றுவாய் எது ? சாதிய  வன்கொடுமைகள் நிகழாமல் எவ்வாறு தடுப்பது ? சாதிய வன்கொடுமை     நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? என்பன குறித்து ஒரு புரிதலைப் பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் ,ஆசிரியர்களுக்கும் , ஊழியர்களுக்கும் ஏற்படுத்துவதே இக்கையேட்டின் நோக்கம் .” என்கிற பிரகடனப் படுத்திய தம் நோக்கத்தை நிறைவேற்ற கடும் உழைப்பை நல்கி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது . வாழ்த்துகள் .

 

21 அத்தியாயங்கள் . ஒவ்வொன்றும் எந்தெந்த வயதினருக்கு என்கிற நுட்பத்துடன் ; ஆசிரியர்களின் பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது . காலிஃப்ளவர் ,முட்டைக் கோஸ் ,நூக்கல்  என காய்களின் பரிணாம அறிவியலோடு சாதியை நன்கு உருவகப்படுத்தி “ நாம் ஒருத் தாயின் பிள்ளைகள்’ என அறிவுறுத்தும் அழகிய கதை வடிவம் முதல் அத்தியாயத்திலேயே முத்திரை பதித்துவிட்டது .      

 

பொதுவாய் இந்நூல் உரையாடல் வழி கற்பிக்கவே அல்ல கற்கவே [ முன்னுரையில் விளக்கம் உள்ளது ] மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது . இரத்தம் , அணுக்கள் ,மரபணு ,நடசத்திரத் துகள்கள் என பல்வேறு அறிவியல் செய்திகளோடு சாதி மறுப்பையும் நன்கு பிசைந்து வலியுறுத்தி உள்ளது மிக முக்கியமானது. கூர்மையானது .  

          

அதுபோல் அரசியல் சட்டம் சார்ந்து பல செய்திகளை மாணவர்களின்   நெஞ்சில் பதிய வைக்க முயலுவது நன்று . “சகோதரத்துவம் இல்லை எனில் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்கள்.” எனும் பாபா சாகேப்             அம்பேத்கரின் கருத்துக்கு இந்நூல் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறது .   வென்றிருக்கிறதா என்பதை கல்வியாளர்கள்தாம் சொல்ல வேண்டும் .    

   

அண்மையில் ’biason காளமாடன்’ என்றொரு திரைப்படம் பார்த்தேன் .அதில் ஒரு இடத்தில் பள்ளியில் மாணவர்களிடையே கபடிப் போட்டி நடக்கையில்  ஆசிரியர் ஒவ்வொரு மாணவன் கையிலும் கட்டி இருந்த சாதிக் கயிற்றை கத்திரியால் வெட்டி எறிகிற காட்சி  அமைக்கப்பட்டிருந்தது .நாம் செல்ல வேண்டிய தூரத்தை அது எனக்குச் சொன்னது ? இந்நூலில்’வீதியில் விளையாட சாதி எதற்கு ?’ , ’நாம் பார்வையாளர்களாக அல்ல பகுத்தறிவாளர்களாக’  [ இருப்பதிலேயே பெரிய அத்தியாயம் இதுதான் ] என்கிற அத்தியாயங்களைப் படிக்கிற போது அப்படக்காட்சி என்னுள் வந்து போனது .  

 

என் நெஞ்சைக் கவர்ந்த எங்க ஊர்க் கவிஞர் கவிமணி தேசிய விநாயகத்தின் எளிய ஆயினும் ஆழமான கவிதை வரிகள் தொடங்கி கவிஞர் தமிழ் ஒளி வரை பல கவிஞர்களின் வீரியமிக்க வரிகள் ஆங்காங்கே அர்த்தச் செறிவுடன் பொருந்தி மிளிர்கின்றன . நன்று .

 

ஆழ்ந்த படிப்பறிவுமிக்க பலரின் பொறுப்பான பங்களிப்பாய் இந்நூல் மலர்ந்துளது . ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள் . பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் சீரிய முயற்சியை எவ்வளவு பாராட்டினும் தகும் .

 

 

அதேநேரத்தில் , சாதிய மறுப்பு போலவே பள்ளியிலேயே வேரூன்ற வேண்டிய இன்னொரு சிந்தனை ‘ பாலின சமத்துவம்’ . இந்நூல் அதிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டுமல்லவா ?                    

 

நடைமுறையில் இந்நூலில் பயன்பாடு , எதிர்கொள்ளும் சவால்கள் , விமர்சனங்கள்  இவை பற்றி எல்லாம் பேசுவது , இத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வம் மிக்க செயல்பாட்டாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் . நான் இப்போது தூரத்துப் பார்வையாளனே !

 

சமூக ஜனநாயக் கையேடு Manual  for Social Democracy  , பொதுப் பள்ளிக்கான மாநில மேடை , தொடர்புக்கு : spcsstn2025@gmail.com ,9445683660 ,பக்கங்கள் : 136 , விலை : ரூ.300 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

17/11/25 .

 


குழந்தைக் கதை

Posted by அகத்தீ Labels:

 




 


 

 

 

 

தோழரே ! [ அமெரிக்காவிலிருந்து எழுதியது

என் பேத்தி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது . உடனே என் வழியில் மொழியாக்கிவிட்டேன் .

உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.                                                            

 

ஒவ்வொரு பக்கத்துக்கும் வண்ணப்படம் முக்கியம் .

 

நூலாசிரியர் அனுமதி இல்லாமல் வெளியிட முடியாது .

 

சுபொஅ.

02/04/25.

வர்ஜீனியா

 

 

 

 நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

Be Who You Are

ஆசிரியர் : டாட் பார்

Todd Barr

 

https://www.bing.com/ck/a?!&&p=1bb3a006a30d9a811aff5383bf89b3fabe1bcb7efdffe7d8d7e8ed21c5ef1485JmltdHM9MTc0MzU1MjAwMA&ptn=3&ver=2&hsh=4&fclid=3f4e9636-41d8-6ab4-3063-841e406a6b0e&u=a1L3ZpZGVvcy9yaXZlcnZpZXcvcmVsYXRlZHZpZGVvP3E9YmUrd2hvK3lvdSthcmUmbWlkPTc5QjBFQkIxQUEwQTJDN0FFQjI1NzlCMEVCQjFBQTBBMkM3QUVCMjUmRk9STT1WSVJF&ntb=1

 

Be Who You Are

 

[1]

Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[2]

Be old . be young.

வயது மிகக்குறைந்த சிறுவராக இருங்கள்

இளைஞராக இருங்கள்

 

[3]

Be different colour .

எந்த நிறமாக வேண்டுமாயினும் இருங்கள் !

எந்த மதமாக சாதியாக வேண்டுமாயினும் இருங்கள்

 

[4]

Wear everything you need to be you .

நீங்கள் எப்படியாக இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே ஆடை அணிகலன் அணியுங்கள் !

 

[5]

Speak your language

உங்கள் மொழியில் பேசுங்கள் !

 

[6]

Learn in your own way

உங்களுக்கு பிடித்தமான வழியில் கற்றுக்கொள்ளுங்கள்

 

[7]

Be proud of where you’re from

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்

 

[8]

Be your own family

நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்தோடு இருங்கள்

 

[9]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[10]

Be silly

ரொம்ப வாலாக விளையாட்டுத்தனமாக இருங்கள் !

 

[11]

Be brave

தைரியமா இருங்கள் !

 

[12]

Dance

ஆட்டம் போடுங்கள் !

 

[13]

Play

Discover

Learn

Read

விளையாடுங்கள்

கண்டுபிடிங்க

கற்றுக்கொள்ளுங்கள்

படிங்க ள்

 

[14]

Share your feelings

 உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

 

[15]

Happy

Mad

Sad

Silly

Scared

Proud

மகிழ்ச்சியாக இருங்கள்

பைத்தியம் போல குதிங்கள்

சோகமா இருங்கள்

விளையாட்டுத்தனமான இருங்க

பயந்து இருங்கள்

பெருமையா திரியுங்கள்

 

[ 16 ]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[17]

Try new things

புதியன  முயற்சி செய்யுங்கள்

Eat

Tacos

சாப்பிடுங்க

பிரியாணி ,சமோசா

இட்லி , கொழுக்கட்டை

 

[18]

Pizza

Noodles

பீசா , நூடுல்ஸ்

பருப்பு சாதம் ,

முட்டை ஆம்ப்லெட்

 

[19]

Be confidence

நம்பிக்கையோடு செயல்படுங்கள் !

 

[20]

Stand up for yourself

உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள்

 

[21]

Be energetic

சுறுசுறுப்பாக இருங்கள் !

 

[22]

 

Be peacefull

நிம்மதியாக இருங்கள்

நிம்மதியாய் உறங்குங்கள் !

Be calm and do yoga

அமைதியாக இருங்க சந்தோஷமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

 

 

 

[23]

Be the  best that u can be

முடிந்தவரை நல்லவராய் இருங்கள்

 

 [24]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

 

[25]

It doesn’t matter what colour you , where you are from , Or who is in your family . Every one needs to be loved . Always Love yourself and be who you are !

 

Love !

நீங்கள் எந்த நிறம்,

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்,

நீங்கள் எந்த சாதி , எந்த மதம் , எந்த இனம்

உங்கள் மொழி யாது

அல்லது உங்கள் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் அல்லது இல்லை

நீங்கள் ஏழையா பணக்காரரா  

என்தெல்லாம்  முக்கியமல்ல.

 

ஒவ்வொருவரும் நேசிக்கப்பட வேண்டும்.

எப்போதும் உங்களை  நீங்களே நேசியுங்கள் !,

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்!

 

அன்பென்று கொட்டு முரசே !

 

 

 

 

 

 


சமூகத்தைத் தோலுரிக்கும் வரலாற்றின் வலி மிகுந்த பக்கங்கள் .

Posted by அகத்தீ Labels:

 



சமூகத்தைத் தோலுரிக்கும்

வரலாற்றின்

வலி மிகுந்த பக்கங்கள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம். 

 

[ கனமான 744 பக்கங்கள் கொண்ட நூலென்பதாலும் அடர்த்தி அதிகம் கொண்டது என்பதாலும் அறிமுகமும் நீண்டிவிட்டது .அருள்கூர்ந்து முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன். ] 

 

’சாதிப் பெருமை’  நூலின்  துணைத் தலைப்பான ‘ இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கானப் போராட்டம்’ என்பது ,  உள்ளடக்கத்தை உரக்கச் சொல்வது மட்டுமல்ல ; இந்தியாவின் சமூக உளவியலில் ஆழப்புதைந்துள்ள பாசிச வேர்களைச் சுட்டுவதுமாகும்.   

 

1795 இல் பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி சனாதன மநு அதர்மத்தை அடியொற்றி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது தொட்டு இன்றுவரை ஏதோ ஒரு வகையில் மநு அநீதி தொடர்வதையும் ; அதற்கு எதிரான போராட்டம் எவ்வளவு கடினமானது வலிமிகுந்தது என்பதையும் இந்நூல் நெடுக  நிறுவுகிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா . சட்ட உருவாக்கத்தின் போதும் , வழக்கு மன்றங்களிலும் நடந்த விவாதங்களில் வழிதான் இந்நூல் நகர்வதால் அசைக்க முடியா சான்றாதாரங்களைச் சார்ந்து நிமிர்ந்து நிற்கிறது .

 

நம்ம ஊர் ஆளுநர் ரவி மட்டுமல்ல துணிந்து பொய் பேசும் அனைத்து சங்கிகளும் என்ன சொல்கிறார்கள்  ? ‘சாதிக் கொடுமை நம்மிடையே கிடையாது … எல்லாம் பிரிட்டிஷ்காரன் திணித்ததுதான்’ . ஆயின்  உண்மை என்ன ? இந்தியாவில் நிலவிய வர்ணாஸ்ர அநீதியை பிராமணிய மேலாண்மையே சூத்திரர் , பஞ்சமருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டும் காணாமல் நடந்து கொண்டது .   

 

ஆயினும் ,சமூக நிர்ப்பந்தத்தால் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய சூழல் உருவான போதும் எப்படித் தட்டிக் கழித்தது ,தாமதப்படுத்தியது , பிராமணர்களுக்கு வலிக்காமல் எப்படி நடந்துகொள்ள முயற்சித்தது பிரிட்டிஷ் அரசு என்பது நெடிய வரலாறு.   அதாவது இந்த மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கொடிய புற்றுநோயே சாதியும் சனதனமும் என்பதற்கான  ஆதாரமாகவும் இந்நுல் உள்ளது எனலாம்.   சாதி மற்றும் சனாதனத்தின் ரணமொழுகும் காயங்களும் வலிகளும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களும்தான் இந்நூல் எனில் மிகை அல்ல.

 

இந்நூல் முக்கியமாக ஐந்து பகுதிகளாக உள்ளது ;  அநீதிகளுக்கு எதிராக ஐந்து முனைப் போராட்டங்களைச் சொல்கிறது ; 

 

1]  தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ’காலில் மரச்சட்டகம் பூட்டும்’ ’ஸ்டாக்ஸ்’ எனும் கொடிய தண்டனையை நீக்க நடந்த போராட்டமும் ; பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட அநீதியும் … மார்பங்களை மறைக்க கீழ்நிலை சாதிப் பெண்களுக்கு இருந்த தடையை நீக்க நடந்த போராட்டங்களும் … மனைவியை உயிரோடு எரிக்கும் உடன்கட்டை எனும் ஸதிக் கொடுமை  ஒழிக்க எடுத்த முன்னெடுப்புகளும்… இப்படி நடந்த  “ஆரம்பச் சட்டப்” போராட்டங்கள் .

 

2] வாரிசு ,தத்துஎடுத்தல் ,திருமணத்தில் பிராமணர் பங்கு ,கலப்புத் திருமணம்  இவற்றில் சாதி சனாதனத்தின் கோரப்பிடி இவற்றிலிருந்து மீள நடந்த கடும் முயற்சிகள் சாதரணமானதல்ல ”அசுத்தப் பெரும்பான்மை”யின் மீது ஏவப்பட்ட சனாதன கிடுக்கிப் பிடி… திருமணம் என்பது எப்படி சனாதன சமூகத்தில் மட்டுமல்ல இன்றும் பெரும் சாதிய நெருக்கடியாக இருக்கிறது ; பாலின சமத்துவமற்ற சாதிய ஆதிக்கம் மிகுந்த  ஓர் சடங்காகவே திருமணம் இன்றும் அணுகப்படுகிறது . 1918 இல் வித்தல்பாய் பட்டேல் தொடங்கிய கலப்புத் திருமண சட்ட அங்கீகார  முயற்சி ; தமிழ்நாட்டில் அண்ணாவல் கொண்டுவரப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம் ‘ வரை நீள்கிறது .முயற்சி முடியவில்லை .  ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் இன்றைக்கும் தேவைப்படுகிறதே ; கோரிக்கையாகிறதே …          

      

3] சாலைகள் ,நீர்நிலைகள் ,சத்திரம் , சுடுகாடு , மண்டபம் , கல்விக்கூடம்  உள்ளிட்ட பொது இடங்களை அணுக இருந்த சாதித்தடை ,தீண்டாமை இவற்றுக்கு எதிராக நடந்த நெடிய போராட்டங்களும் , சட்டப் போராட்டங்களும்,  எப்படி எல்லாம் விதவிதமாக வியாக்கியானம் செய்து தடுத்தார்கள் என்பதும் ‘தடுக்கப்பட்ட வழிகளும்’ …அப்பப்பா !!!

 

4] எல்லோரும் இந்து என வாய்ப்பறை ஒரு புறம் ; கோவிலில் நுழைந்து சாமி கும்பிடக்கூட எவ்வளவு பெரிய நெடிய வலிமிகுந்த போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது . 1897 இல் கமுதியில் தொடங்கி இன்னும் தொடர்கிறது … கோவில் நுழைவு போராட்டங்கள் சனாதனத்தின்  முகமூடியை கிழித்தெறியும் …

          

5] வெண்மணி , சுண்டூர் , கயர்லாஞ்சி ,பெல்ச்சி என எங்கும் நடந்த சாதிய மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயக் கூலிகள் மீதான வன் தாக்குதல்கள் ; நீதி தேவனின் வர்க்க ,வர்ண வாசமும் மயக்கமும் எப்படி ‘ வன்முறைக்கு பாதுகாப்பாயின’…

 

இந்த வரலாற்றை படிக்கும் போது

 

அ] இதுவரை நாம் பொதுவெளியில் அதிகம் அறியாத பலரின் கடும் முயற்சிகளும் போராட்டங்களும் நமக்குத் தெரிய வருகின்றன …

ஆ] முற்போக்காளராய் நாம் கொண்டாடும் சிலர்கூட சில சந்தர்ப்பங்களில் தடுமாறி சனாதன பிடியில் விழுந்ததையும்….

      படுபிற்போக்காளரான சிலர் அரிய சந்தர்ப்பங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியாக முகங்காட்டியதையும்….

     சனாதனக் கூட்டம் சகுனியாட்டம் ஆடி காய் நகர்த்துதலில் காட்டிய சாதுரியத்தையும்   

வரலாறு நெடுக நிறைந்து கிடக்கும் ’சுடும் உண்மை’களையும் , இந்நூல் தக்க  ஆதாரங்களுடன்  நிறுவி இருக்கிறது .    

 

ஈ] ‘ உண்டு’ என்று சொல்வது ஓர் வகை ; ‘இல்லை’ என்று சொல்வது அதன்  எதிர் ;  ’உண்டு ’ஆனால் ’நாக்குபடாமல் நக்கு’ எனச் சொல்வது எவ்வளவு வஞ்சகமானது ; குறுமதியானது ; அது நம் சனாதனிகளுக்குக் கைவந்த கலையாய் இருக்கிறது என்பதே இந்நூல் நெடுக நாம் நுட்பமாகக் காண்பது.  

 

உ] பிரிட்டிஷ் அரசு உள்நாட்டு ’மத விவகாரங்களில் தலையிடாமை’ என நேர்மையாளர் போல் காட்சி அளித்து ‘ பிராமணியம் ,சனாதனம் , தீண்டாமை , பெண்ணடிமைத்தனம் இவற்றை நிலை நிறுத்த மறைமுகமாக உதவியதை இந்நூல் வெட்ட வெளிச்சமாகிறது . இப்போதும் பலசந்தர்ப்பங்களில் ஆளும் வர்க்க செயல்பாடு அதனை அடியொற்றித்தான் இருக்கிறது . 

 

ஊ] இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் சில பிரிட்டிஷ் அதிகாரிகள் மனித உரிமை ,பெண்கல்வி ,பெண்ணுரிமை , தலித் மற்றும் சூத்திரருக்கு கல்வி ,பால்ய விவாகத்தடை ,ஸதிக்குத்தடை போன்ற விழுமியங்களுக்காக எடுத்த முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அளித்த ஊக்கங்களையும் மறந்துவிடலாகாது . இதில்    வேடிக்கை என்ன வெனில் அவர்களின் இந்த நல்ல முயற்சிகளைத்தான் சனாதனிகள் கடும் குரோதத்துடன் அணுகினார்கள் .

 

இப்படி இந்த நூலில் நாம் அறிய வேண்டிய செய்திகளும் பாடங்களும் மிகமிக அதிகம் …

 

1829 ஆண்டு பெண்டிங் பிரபு ஸதி எனும் உடன் கட்டை ஏறுதலை ’கொலைக்குற்றம்’ என அறிவித்தார் அதை ஒட்டி சதிக்கு எதிராகத் தொடங்கியப் பெரும் முயற்சியையும் தொடர் போராட்டங்களையும் மீறி வஞ்சகமாய் ஸதி தொடர்ந்தது . ரூப்கன்வர்  உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட பின்னர் 1987 இல் ராஜீவ் காந்தி கொண்டுவந்த சட்டம்தாம் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளிவைத்தது . இடையில் கிட்டத்தட்ட 157 ஆண்டுகள் . இதில் ஒரு வேடிக்கையும் உண்டு நேருவின் தந்தை ராஜீவின் கொள்ளுத்தாத்தா மோதிலால் நேரு ஒரு வழக்கில்“ சிதை தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரிந்ததது” , ”அற்புதம்”   என கதைவிட்டார் . ஸதிக்கு எதிராகப் போராடிச் சட்டம் கொணர முயற்சித்த ராம் மோகன் ராய் கூட வர்ணாஸ்ரமத்தை குலைக்கு விரும்பவில்லை என்பது நகை முரண்  .நேரு ,இந்திரா காந்தி ஆகியோர் சனாதனிகள் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ளத் திணறியதும் சுட்டப்பட்டுள்ளது .

 

தீண்டமைக்கு விளக்கம் சொல்வது ; தடுப்பது ; தண்டனை விதிப்பது இவற்றுக்கான போராட்டத் தடங்களை வாசிக்க வாசிக்க இச்சமூகத்தின் இரட்டை நிலை [hypocriti ] மிகநுட்பமாக எங்கும் வியாபித்திருப்பதைப் பார்க்க முடிகிறது . சாதி வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொருவர் மூளையிலும் இன்றைக்கும் இது ஆழமாக உள்ளது . அளவு மாறுபடலாம் அவ்வளவுதான் . இன்றும் இதுதானே நிலைமை .

 

வித்தல்பாய் பட்டேல் , மனெக்ஜி தாதாபாய் ,பி.வி.நரசிம்ம ஐயர் ,காளிச்சரண் நந்த்கோவ்லி ,ஹரிசிங் கவுர் ,எம் .ஆர் .ஜெயகர் ,எம்.சி.ராஜா , இரட்டை மலை ஆர்.சீனிவாசன், ஆர்.வீரையன் , எஸ்.கே.போலே , ஜி ஏ காவாய் , தாகூர்தாஸ் பார்க்கவா  போன்ற  அதிகம் புகழப்படாத வீரர்களின் சமூக சீர்திருத்த சட்ட முயற்சிகளை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது .இதில் பார்ப்பனர் ,சூத்திரர் ,தலித் என அனைவரும் உண்டு .

 

அதுபோல டி.மாதவராவ் , எம் ஜி ராணடே , பாலகங்காதரத் திலகர் , மோதிலால் நேரு , மதன் மோகன் மாளவியா ,சுரேந்திரநாத் பானர்ஜி , சி.ராஜகோபாலாச்சாரி  போன்றோர் எப்படி சமூக சீர்திருத்தத்தை பின்னோக்கி தள்ள உதவினர் என்பதும் இந்நூலில் பதிவாகி உள்ளது .

 

அம்பேத்கர் , மகாத்மாகாந்தி மோதலும் இருவரின் பங்களிப்பும்  தடுமாற்றமும் ,பதித்த தடங்களும்  உரிய முறையில் பதிவாகி உள்ளது இந்நூலில் .அம்ரித் கவுர் , ஹன்சா மேத்தா , துர்க்காபாய் தேஷ்முக் போன்ற பெண் ஆளுமைகள் பங்களிப்பும் , அரசியல் சட்ட வரைவு குழுவில் இருந்த ஒரு தலித் பெண் உறுப்பினரான கேரளாவைச் சார்ந்த தாட்ச்ஷாயினி வேலாயுதத்தின் தடுமாற்றங்களும் நூலில் பதிவாகி உள்ளன. 

 

சமூக சீர்திருத்தத்தை கடுமையான சட்டங்களினாலும் தண்டனைகளாலும்தான் சாதிக்க முடியுமா ? மனமாற்றம்தானே நிரந்தரமான தீர்வு என இன்றைக்கும் வாதிடுவோர் உண்டு .அனறைக்கும் அதுவே விவாதங்களின் மையமாகிப் போனது வியப்பில்லை . இரண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் .ஆம் . ஒரு புறம் கடுமையானச் சட்டங்கள் ; மறுபுறம் தொடர் விழிப்புணர்வு கருத்துப் பரப்புரை .இரண்டும் வேண்டும் . அத்துடன் கல்வி ,வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் . இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவும் வேண்டும் என்பதே நூல் உணர்த்தும் செய்தி .கூடவே நாரயணகுரு ,சாட்டாம்பி சுவாமிகள் ,அய்யன் காளி ,வைகுண்டசாமி ,வள்ளலார் , திருமூலர் ,இராமனுஜர் , பசவய்யா ,கபிர்தாஸ் ,துக்காராம் , சொக்கமேளா , சைதன்யர் உட்பட நிறைய ஆன்மீகப் பெரியோர்கள் மனமாற்றத்துக்கு பெரிதும் பாடுபட்டனர் . இது இந்நூலில் சொல்லப்படாவிட்டாலும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

 

இந்நூலைப் படித்த பிறகு என் கருத்து : சமூக சமத்துவதுக்கான இப்போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் . வர்க்கப் போராட்ட வரலாற்றோடு இந்த வர்ணப் போராட்ட வரலாற்றையும் கம்யூனிஸ்டுகள் தங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் . 

 

அதே போல் எனக்கொரு கேள்வியும் எழுகிறது இக்காலகட்டம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி வர்ண எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பின்னின்று விட்டனரோ ?  அது குறித்த தகவலோ பார்வையோ இந்நூலில் இல்லை. ஆனால் விடுதலைப் போராட்ட காலங்களில் வீறுகொண்டெழுந்த புன்னப்புரா வயலார் , வோர்லி ,தெலுங்கான போன்ற பல்வேறு போராட்டங்களில் வர்க்க ஒடுக்குமுறையையும் சமூக ஒடுக்குமுறையையும் ஒரு சேர எதிர்த்தது கம்யூனிஸ்ட் வரலாறு அல்லவா ?

 

“குரூரமான பழைய பாகுபாட்டு வடிவங்களுக்கு பதிலாக மேலும் நவீனமான நுட்பமான புதிய முறைகளை மேற்கொண்டு சாதி தன்னை உருமாற்றம் செய்து கொண்டே இருக்கிறது.” இந்நூலின் கடைசி பத்தியில் சுட்டி இருப்பது மிகச் சரியானது .அதை உள்வாங்கவும் போராடவும் இந்நூல் நல்ல உந்துசக்தி ஆகும் .     744 பக்கங்கள் கொண்ட இந்நூலை மிகச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்து ; முற்போக்கு இயங்களுக்கு ஆயுதமாகத்  தந்திருக்கும் ஆர் .விஜயசங்கருக்கு என் நெஞ்சம் நிறைந்த  பாராட்டுகள் . 

 

சாதிப் பெருமை ,[ இந்து இந்தியாவில் சமத்துவத்துக்கான போராட்டங்கள்],

ஆசிரியர் : மனோஜ் மிட்டா , தமிழில் : ஆர். விஜயசங்கர் ,

எதிர் வெளியீடு , ethirveliyeedu@gmail.com 04259 226012 / 99425 11302 ,

பக்கங்கள் : 744 , விலை : ரூ.899 /