அழகானதாம் எங்கள் கிராமம்

Posted by அகத்தீ Labels:

அழகானதா எங்கள் கிராமம் ?

- சு.பொ.அகத்தியலிங்கம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..



                             பசுமை போர்த்திய வயல்களை

                             லேஅவுட் போட்டு விற்கிறோம் ; - ஆனால்

                              சாதிச் சனியனை விடாமல் இன்றும்

                              கட்டிக் கொண்டு அழுகிறோம்..



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 ஆறு ,குளத்தை விழுங்கிவிட்டோம்

                                 ஒரு வாய்த் தண்ணிக்கு அலைகின்றோம் ; - ஆனாலும்

                                 மூட பழக்க வழக்கங்கள் ஒன்றுவிடாமல்

                                 மூட்டைகட்டி சுமக்கின்றோம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 கழிப்பறை இல்லை சுகாதாரமில்லை

                                 வழிந்தோடும் சாக்கடை வண்டி வண்டியாய்க்  குப்பை

                                 மூக்கைமூடி வாழ்ந்தாலும் - கோவில்

                                 சண்டையில் மண்டை உடைகிறோம்.



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 வயிற்றைக் கழுவவும் வேலையில்லை

                                 பஞ்சம் பிழைக்கப் பட்டிணம் போனோம்

                                 சாதி வீம்பை விட்டுவிடாமல் மூடப் பகைமையை

                                 நெஞ்சில் சுமந்தே செல்கிறோம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                     ஊரையும் சேரியையும் இணைக்கும்

                                     சாலையோ பாதையோ  உண்டு நிச்சயம்

                                     உள்ளத்தை இணைக்கவோ ஒர்வழி இல்லை

                                     சுருங்கிய உள்ளம் விரிந்தபாடில்லை.

எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                                                        - நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர்  27-10-2013

                                                                                  



0 comments :

Post a Comment