மாவோயிஸ்டுகள் சுயரூபம் அறிய....

Posted by அகத்தீ Labels:


மாவோயிஸ்டுகள் வன்முறை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினசரி கேள்விப் படுகிறோம். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் சிலர் இந்த மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் நலனுக்காக நிற்பதாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆக ஒரு பக்கம் அராஜக முகமும் மறுபக்கம் பழங்குடிகள் காவலர் முகமும் என இரு தோற்றமளிக்கும் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? தத்துவம் என்ன? இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? இவர்களின் மூலம் எது? இவர்கள் இரக்கமற்ற வன்முறை மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இவர்கள் பால் ஊடகங்கள் சில அக்கறை காட்டுவது ஏன்? இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு விடையாக நக்சலிசம் முதல் மாவோயிசம் வரைஎனும் நூல் வெளிவந்ததுள்ளது. அன்வர் உசேன் இந்நூல் மூலம் ஒரு தத்துவப் போராட்டத்திற்கு வாசலைத்திறந்துள்ளார். பாராட்டுகள்.

ஒரு நூலின் முன்னுரையை படித்துவிட்டு நூலுக்குள் செல்வதா? அல்லது நூலைப்படித்த பின் முன்னுரையை படிப்பதா?இரண்டு வழக்கமும் நடப்பில் உண்டு. முன்னுரையை, அணிந்துரையை படிக்காமல் போகிறவர்களும் உண்டு. இதில் எது சரி? இது அவரவர் தேர்வு. ஆயினும் இந்நூலைப் பொறுத்தவரை வே. மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானது இதில் இந்த பயங்காரவாத நோய் எப்படி பிரெஞ்சுப் புரட்சியின் போது உருவானது என்பதை விவரிப்பதை கட்டாயம் முதலில் படிப்பது அவசியம். நூலைப் புரிந்து கொள்ள அது சாவி ஆகிறது.

வரலாற்றைக் கவனித்தால் அரசு அடக்கு முறைக் கருவியாக இருக்கும் வரை பயங்கரவாதஅரசியலும் விளைந்து கொண்டே இருக்கும் என உறுதிபடக் கூறுவதுடன் மார்க்சியவாதிகள் மட்டுமே இதனை எதிர்ந்து சித்தாந்தப் போரை பிரெஞ்சுப் புரட்சி காலம் தொட்டு இன்றுவரை நடத்தி வருகின்றனர் என்கிறார் வே. மீனாட்சி சுந்தரம்

பயங்காரவாத அரசியலை ஒரு அரசு எதிர்கொள்வது எப்படி என்ற சர்ச்சை இன்று உலகளவிலும் நாட்டிற்குள்ளும் சூடாக நடைபெறுகிறது என்று கூறும் இவர்; சரியான அரசியல்,பொருளாதார மேம்பாடு, மக்களின் உன்னத உணர்வுகளை மதிக்கும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு எனப்பாதையும் காட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் போது மாக்சிமிலியன் ராபஸ்பியர் தொடங்கிய இந்த தீமை அவரையே பலிவாங்கியதையும் இன்றும் தொடர்வதையும் முன்னுரை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகத்தோடு அன்வர் உசேன் எழுத்துகளுக்குள் நுழைவது புரிதலை வலுவாக்கும்.

152 பக்கங்களில் 40 அத்தியாயங்களில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை பாட்டிலிருந்தும் ஆவண ஆதாரங்களிலிருந்தும் எளிமையாக ஆனால் வலுவாக இப்பிரச்சனை குறித்து எடுத்து வைக்கிறார் அன்வர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்த தீவிரவாத குழுக்கள் பிளவு பட்டவர்கள் எனினும். இவர்கள் அடிப்படையான மார்க்சியப் பார்வையைக் கைவிட்டவர்கள் என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு கூறுகிறார். மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற இடத்தில் பிறந்த இந்த இயக்கம்; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆரம்பத்தில் செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறார்.
ஆரம்பத்தில் உற்சாகமான எழுச்சி என்கிற தோற்றத்தோடு எழுந்த இயக்கம் எப்படி சீரழிந்து உடைந்து உருமாறி இணைந்து பிரித்து என பல அவதாரம் எடுத்ததை காட்டுகிறார்.

நக்சல்பாரிகள் ஆரம்பத்தில் கொன்றழிக்கும் வேலைகளில் ஈடுபட்டபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இந்நூலை படிக்கிற யாருக்கும் இவர்களின் குரூரமனம் நிச்சயம் புலப்படும்

இடது சாரிகள் என்று கூறிக் கொண்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எதிராக அவர்கள் இருப்பது ஏன்? ஜோதிபாசு தலைமையில் அன்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை எப்படி எதிர்கொண்டது?ஒருபுறம் சித்தாந்தப் போராட்டம்; மறுபுறம் சிபிஎம் தொண்டர்களின் உயிர்த்தியாகம், அரசின் உறுதியான அரசியல் நடவடிக்கைகள், நிலவிநியோகம் இவற்றை நாம் அறிய இந்நூல் உதவுகிறது. இதனைபிரச்சாரம் செய்தாக வேண்டும்.

அதுபோல நக்சலிசம் முதல் இன்றைய மாவோயிசம் வரை எல்லோரும் தங்களை தெலுங்கானா வீரப்போராட்டத்தின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் அந்த தியாக பராரம்பரியத்தின் வாரிசு அல்ல என்பதையும்; தரகு முதலாளித்துவம், தனிநபர் படுகொலை போன்றவை தவறான கணிப்புகள் என்பதையும்; கொன்றழிக்கும் பயங்கரவாதம், போன்ற அச்சுறுத்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் கடந்தகால வரலாற்று அனுபவம் மூலம் நன்றாக இந்நூலில் அன்வர் வாதிடுகிறார்.

சில வாதங்களும், பதில்களும் திரும்பத் திரும்பச் சொல்லுவது பல அத்தியாயங்களில் உள்ளன. ஆனால் அவர்களின் தவறான தத்துவத்தை தவறான பாதையை திரும்பத் திரும்ப எடுத்துக் காட்டுவது தவிர்க்க முடியாதது. காங்கிரஸ் கட்சி, மம்தா கட்சி, ஊடகங்கள் இவைகள் கண்மூடித்தனமாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு மனோநிலையில் பயங்கரவாதத்துக்கு துணைபோவதும்; அதன் நாசகர விளைவுகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களே தொடர்ந்து இவர்களின் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர். என்ற உண்மையை இந்நூல் சரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.

மாவோயிஸ்டுகள் செயல்பாடு இடதுசாரி சக்திகளை சீர் குலைக்கவே பயன்படுகிறது. என்று கூறுகிற அன்வர்; அவ்வாறு இடது சாரிகள் பலவீனப்பட்டால் பலனடைவது யார்? என்ற கேள்வியை எழுப்புகிறார். சிபிஐ (எம்) ஐ பலவீனப்படுத்த மாவோயிஸ்டுகள் செய்யும் ஒவ்வொரு செயலும் வலதுசாரி சக்திகளுக்கு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர் என்பதை அழுத்தம் திருத்தமாக அன்வர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

காவிப்படை வலுவாக உருவான கடந்த பத்து ஆண்டுகளில் பல நக்சல் அமைப்புகளும் சரி, ஆயுதப் போராட்டத்தினரும் சரி -ஏனையோரும் சரி-எந்த எதிர்ப்பையும் காட்டாமலே இருந்தனர். அத்வானியின் ரதயாத்திரையையோ அல்லது அர்எஸ்எஸ் பஜ்ரங்கள் கொலைக்காரக் கும்பலையோ எதிர்த்து எந்த நக்சல் அமைப்பும் வீதிக்கு வரவில்லை அல்லது தமது ஆயுதக் குழுக்களை சங்பரிவாரத்திற்கு எதிராக அனுப்பவில்லை (EPW நவம்பர் 1,2003) சுமந்தர் பானர்ஜியின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி இந்த பயங்கரவாத அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றார் அன்வர்.

அது மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகள் இவர்களுக்குள் எப்படி ஊடுருவி உள்ளனர். என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எப்படி ஏகாதிபத்தியம் காசு பணத்தைக் கொட்டி இவர்களை விலைக்கு வாங்கியது என்பது அதிர்ச்சியான உண்மை.

குட்டி பூர்ஷ்வாக்கள், மத்திய தர வர்கத்தினர், உதிரிப்பாட்டாளிகள் என சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியினரே இவர்களின் அதிதீவிர பேச்சிலும் செயலிலும் மயங்குவதை, தடுமாறி திசைமாறுவதை; தாக்குதலை எதிர்கொள்ளும் போது சிதறி ஒடுவதை வரலாற்று அனுபவங்களூடே இந்நூலில் அன்வர் பதிவு செய்துள்ளார்.

அதே சமயம் நேற்றை நக்சலைட்டுகள் அல்ல இன்றைய மாவோயிஸ்டுகள்; இவர்களுக்கு பழங்குடி மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்கிற மயக்கம் ஊடகங்களால் ஊட்டப்பட்டுள்ளது. அதை அன்வர் அவருக்கே உரியபாணியில் எதிர்கொள்கிறார். 160 மாவட்டங்களில் இவர்கள் பரவி உள்ளதாகக் கூறுவது உண்மையல்ல; இம்மாவட்டங்களில் இருக்கும் எல்லா குழுக்களும் ஒன்றல்ல; இவர்களுக்குள் இணைப்பும் இல்லை ஒற்றுமையும் இல்லை. 12476 காவல் நிலையங்களில் உள்ள நிலப்பரப்பில் 509 காவல் நிலைய எல்லைக்குள் அதாவது 4 சதவீத காவல்நிலையப் பகுதிகளில் மட்டுமே இவர்கள் செயல்பாடு ஒரளவு உள்ளது என்பதைக் காட்டுகிறார்.

மேலும் இவர்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி எப்படிக் கிடைக்கிறது? கஞ்சா பயிரிடுவது, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் என இவர்களின் நிதி திரட்டும் வழிகள் குறித்து அன்வர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அது முக்கியமான அம்பலப் படுத்தலாகும் முன்னுரையில் வே. மீனாட்சிசுந்தரம் கஞ்சா பிடிபட்ட விபரங்களை சுட்டிக் காட்டி பயங்கரவாத அரசியலுக்கு எது விளை நிலமோ அந்த இடம் கஞ்சா அபினி உற்பத்திக்கும் விளை நிலமாக உள்ளது என்கிறார். இந்த அம்சமும்; ஆயுத வியாபாரம், போதை மருந்து கடத்தல் இவற்றோடு சட்டவிரோத கனிம சுரங்கங்கள் செய்லபட இவர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படுவதும் அவர்களிடம் பெருமளவு பணம் கறப்பதும் முக்கியம். இவர்கள் வனக் காவலர்களோ, பழங்குடி நலன்பேணுபவர்களோ, சுற்றுச் சூழல் அக்கறையாளர்களோ அல்ல என்பதை நிறுவ இச் செய்தியை அன்வர் அடுத்துவரும் பதிப்புகளில் விரிவாக பதிவு செய்யவேண்டும்.

70களில் இடது தீவிரவாதம் மேலோங்கிய சூழலில் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டியது. மாணவர், வாலிபர் அமைப்புகள் களம் கண்டுதும் இளையதலைமுறையினரை ஆகர்ஷித்ததும் வரலாறு இன்று மீண்டும் அதே இடது சாரி அதி தீவிரம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முயலும் போது வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இவற்றில் செயல்பாடு வேகப்படுத்தப்படவேண்டும். விரிவுபடுத்தப்பட வேண்டும். இளைஞர்களிடையே சரியான தத்துவ அரசியல் விவாதம் எடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். அதற்கு இந்நூலும் உதவும். இளைஞர்கள் மாணவர்கள் இந்நூலைப் படித்து விவாதிப்பது அவசியம். தக்க நேரத்தில் தக்க நூலைத் தந்த அன்வருக்குப் பாராட்டுகள்
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது வெனில் மிகை அல்ல.

நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை
-அன்வர் உசேன்
பாரதி புத்தகாலயம் 7, இளங்கோதெரு,
சென்னை 600018
பக். 152. விலை ரூ. 80

நன்றி: தீக்கதிர் 18.07.2010

2 comments :

  1. vimalavidya

    Certainly the "Maoists" murders/attacks on CPI-M cadres cannot be accepted.It cannot be viewed as a revolutionary actions.How the CPI-M became the class enemies of Maoists?
    Again they are doing wrong deeds like the past.Let them go to people and mobilize them.Do they think that CPI-M is more anti people than the Congress-cum-Mamta bannerji ?
    The CPI is taking leaning/ soft view on Maoists.
    If a party follows Marx,Engels and Mao truly it cannot consider another left party as their enemy..But at the same time the left loving people should not undermine/assess the growth,expansion and strength of the Maoists in proper way..What is urgent need is to strengthen the base of left parties beyond the 3 islands...(Kerala,Tripura and West Bengal)
    Left Unity and strength is the need of the hour..All we have to strengthen the unity.

  1. ஹரிஹரன்

    இன்றைய சூழ்நிலையில் அறிவுஜீவிகள் என்று கூறிக்கொள்கிற சில பத்திரிக்கையாளர்கள், மேதா பட்கர், சுவாமிஅக்னிவேதாந்தா போன்றோரும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்க மம்தாவுடன் அணிசேர்ந்துள்ளனர். மனித உரிமைப் போராளிகள் என்று பேர்போன மேதாபட்கர் மாவோயிஸ்ட்கள் நடத்தும் கொடூரக்கொலைகளை ஆதரிக்கின்றார்களா?

    அழித்தொழிப்பு நடவ்டிக்கையின் மூலமாக இந்திய அரசை தூக்கியெறிய முடியும் என்று நம்பிகிறர்களை மனநோயாளிகள் என்று தான் கூறமுடியும். தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்” வாசித்தபோது நக்சல்கள் அல்லது மாவோயிஸ்டுகளின் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சித்தாந்ததை உணரமுடியும். முக்கியமாக மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் போன்றோர்களின் நூல்களை அவர்கள் படிக்கவேயில்லை. மேலும் லெனின் முதலாளித்துவ பாராளுமன்றத்தை “பன்றித்தொழுவம்” என்று கூறியதை ம்ட்டும் வைத்துக்கொண்டு அவர் கூறிய அனைத்து முதலாளித்துவ அமைப்பில் இருக்கும் பாராளுமன்றம்,நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை மறைத்துவிட்டார்கள். இந்தியாவில் காடுகளே இல்லையென்றூல் எங்கேசென்று ஓடிஒளிவார்கள்.

Post a Comment