எத்தனை எத்தனை கட்சிகள்? [தொடர்] - 1

Posted by அகத்தீ Labels:

 





 

எத்தனை எத்தனை கட்சிகள்? [தொடர்]

 

எத்தனை எத்தனைக் கொடிகள் ? – 1

 

25 January 2026

 

நான் பஸ்ஸில் பயணிக்கும் போது வழியில் விதவிதமான கட்சிக் கொடிகளைப் பார்க்கிறேன். பல நேரங்களில் அவை எந்தெந்தக் கட்சிக் கொடி என அடையாளம் காண முடியாமல் திணறுவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்க் கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அது போல் காணாமலும் போய்க்கொண்டே இருக்கின்றன. கட்சி என்பது என்ன வியாபாரமா? கடை திறப்பதும் மூடுவதுமாக இருக்கிறதே! இவ்வளவு கட்சிகள் தேவையா? ஏன்? எதற்கு? இது பற்றிக் கொஞ்சம் உரையாடலாமே!

 

தமிழ்நாட்டில் 44 கட்சிகளின் பதிவைத் தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. அவற்றில் ஓரிரு கட்சிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் உண்டு. ஆனால் வேறு கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டதால் இந்த இழப்பு. பல கட்சிகள் பெயரையே கேள்விப்பட்டதில்லை. இந்தியா முழுவதும் 343 கட்சிகள் பதிவை இழந்துள்ளன.

 

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள்

தற்போது இந்தியா முழுவதும் அகில இந்திய அளவில் சின்னம், கொடியோடு தேர்தல் ஆணையத்தால் ஏழு தேசியக் கட்சிகள் (National Parties) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் 67 (State Parties) கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது போக 2854 கட்சிகளுக்கு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் RUPP (Registered Unrecognised Political Parties) என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

 

இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி எனப்படும் தேசிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய ஏழும்தான் தேசியக் கட்சிகள். நாடு தழுவிய முறையில் கொடி, சின்னம் இவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இவை. இதில் கடைசி இரண்டும் அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை உள்ளது.

 

திமுக, அஇஅதிமுக, விடுதலை சிறுத்தைகள், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரளா காங்கிரஸ், சிவசேனா, அகாலிதளம் போன்ற 67 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகள். இவற்றின் கொடி, சின்னம் போன்றவை மாநில எல்லைக்கு உட்பட்டவை. உதாரணம்: மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், என்.டி. ராமராவின் தெலுங்கு தேசம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்குமே சைக்கிள் சின்னம்தான்.

 

ஒவ்வொரு கூட்டணியிலும் டஜன் கணக்கில் கட்சிகள் இருக்கும். ஆனாலும் வேட்பாளரை நிறுத்திப் போட்டியிடும் கட்சிகள் குறைவே. இவ்வளவு கட்சிகள் ஏன்? கட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமா? இரு கட்சி ஆட்சிமுறை சாத்தியமா? இவ்வளவு கட்சிகள் இயங்க அல்லது உருவாக யார் செலவு செய்கிறார்கள்? எதிர்பார்ப்புகள் என்னென்ன? கேள்விகள் எழுகின்றன. தொடர்ந்து பார்ப்போம்.

 

அரசியல் கட்சிகளின் தோற்றம்

அரசியல் கட்சிகள் என்றால் என்ன? எப்போது தோன்றியவை இவை? முதலில் இக்கேள்வியிலிருந்து நம் அலசலைத் தொடங்குவோம்.

 

வேட்டைச் சமூகத்தில் வேட்டைக்குழுக்களுக்குத் தலைவன் இருந்திருப்பான். அவன் உடல் வலிமையே அவனைத் தலைவனாக்கி இருக்கும். பின் அடிமைச் சமூகத்தில் எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கிய ஸ்பார்ட்டகஸ்களுக்கு அரசியல் கட்சி இருந்ததாகத் தெரியவில்லை; அவை தன்னெழுச்சிப் போராட்டங்கள்தாம்.

 

நிலப்பிரபுத்துவ சமூகத்தில்தான் அரசு உருவாக்கம் பெற்றது. அப்போதே அரசியல் வந்து விட்டது. வள்ளுவன் கூட அரசியல் போதித்தான். சில அதிகாரங்களை அதற்காகவே ஒதுக்கினான். மன்னருக்கு எதிராகக் கலகங்கள் தோன்றின. ஆனால் அவை கட்சிகளாக வடிவம் கொள்ளவில்லை. அரசியல் முதலில் வந்து விட்டது; கட்சிகள் வரவில்லை.

 

தொழிற்புரட்சியின் விளைவாகச் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. மறுமலர்ச்சி யுகம் தோன்றியது. கத்தோலிக்க மதம் புதிய சூழலுக்கு ஈடு கொடுக்கப் போதுமானதாக இல்லை என்கிற நிலையில் ஐரோப்பாவில் புராட்டஸ்டண்ட் மதம் உருவானது. ஆக, அரசியல், சமூக, பொருளாதார நிர்ப்பந்தங்கள் புதிய வழிகளைத் தேடின. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி எங்கும் அரசியல் தட்பவெப்பம் மாறியது; பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளும் எழுச்சியும் முளைவிட்டன.

 

தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க மன்னராட்சி போதுமானதாக இல்லை. மன்னராட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் கொந்தளிக்கும் போது ஜனநாயகக் கருத்தோட்டம் கருக்கொள்கிறது. மன்னர் என்பவர் கடவுளின் பிரதிநிதி என்கிற பழைய கருத்தோட்டம் காலவதியாகத் தொடங்கியது.

 

இதன் ஒரு முனையாகத் தங்கள் கோரிக்கைகளைத் தேவைகளைச் சொல்லத் தனித்தனியாக முயல்வதைக் காட்டிலும் நாலு பேராகச் சேர்ந்து கேட்டுச் செய்தால் நல்லது, நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலு பேர் அவசியம் என்கிற கூட்டுணர்வு காரணமாகப் பல்வேறு அமைப்புகளாகப் பல்வேறு பிரிவினர்களால் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் என்ற வடிவம் மெல்ல முகிழ்த்தது.

 

ஒரு குழு அல்லது ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தில் தம் பங்கைப் பெற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பே கட்சி எனக் கொள்ளலாம். ஆரம்பத்தில் தெளிவான சித்தாந்த அடிப்படையிலோ கறாரான அமைப்பு வடிவிலோ கட்சிகள் உருப்பெற்றிருக்க வாய்ப்பில்லை. காலகதியில் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தின் முக்கியப் பங்காளிகள் ஆகத் தொடங்கின. கட்சி அமைப்பு ஒரு திட்டவட்டமான வடிவம் பெறலாயிற்று.

 

ஐரோப்பாவில் கட்சிகளின் வளர்ச்சி

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், அரசியல் கட்சிகள் முழு வடிவம் பெறத் தொடங்கின எனில் மிகையல்ல. ஐரோப்பாதான் அவற்றின் பிறப்பிடம் எனில் பிழை இல்லை. லண்டனில் 1682-ல் தி டோரிக் கட்சி (The Tory Party) உருவானதாக ஒரு செய்தி உள்ளது. கிட்டத்தட்ட அதே ஆண்டு தி விக் கட்சி (The Whig Party) உருவானதாகவும் கூறப்படுகிறது.

 

1688-89 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் புரட்சி ஏற்படுகிறது. கத்தோலிக்க அரசர் ஜேம்ஸ் என்பவர் கையில் இருந்த அதிகாரம் மகள் மேரி கைக்கு மாறியது. ஜேம்ஸின் மகள் மேரியோ டச்சுத் தேசத்தவரும் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்தவருமான வில்லியம் ஆரஞ்சைக் கணவராக ஏற்றுக் கொண்டவரே. இதுவே அன்றைக்குப் பெரிய செய்தி. மேரியின் மறைவைத் தொடர்ந்து 1694-ல் வில்லியம் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மூன்றுக்கும் மன்னராகிறார். அப்போதுஜாக்கோபிசம்எனும் அரசியல் இயக்கம் பழைய மன்னர் ஜேம்ஸைக் கொணர முயற்சி மேற்கொள்கிறது.

 

இந்தப் பின்னணியில்தான் ஒப்பீட்டளவில் புரட்சிகரக் கட்சி எனக் கருதப்படும் தி விக் கட்சி (The Whig Party), பழமைவாதக்கட்சி எனக் கருதப்படும் தி டோரிக் கட்சி (The Tory Party) இரண்டும் களத்துக்கு வந்தன. ஒப்பீட்டளவில் இரத்தம் சிந்தாப்புரட்சி எனப்படும் இங்கிலாந்து எழுச்சியில் மன்னராட்சியும் ஜனநாயக ஆட்சியும் சமரசம் செய்து கொண்டன. வலிமையான பாராளுமன்றமும் இருக்கும், மன்னராட்சியும் ஆட்சித் தலைமையாகத் தொடரும். இந்த ஏற்பாடு, அங்கு இன்று வரை தொடர்கிறது. மன்னரின் அதிகாரம் படிப்படியாக நீர்த்துப் போயினும் அதே பாணி அரசமைப்புத் தொடர்கிறது.

 

தி விக் கட்சி, தி டோரிக் கட்சி இரண்டும் ஒன்றாக இணைந்து 1859-ல் லிபரல் கட்சி உதயமானது; பின்னர் இவை பிரிந்தன. கட்சிகள் இணைவதற்கும் பிரிவதற்கும் கூட அவர்களே முன்னோடிகள் போல. 19-ஆம் நூற்றாண்டில் கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி எனப் பல கட்சிகள் தோன்றின. இடது, வலது என்கிற சிந்தனை ஓட்டம் பிரெஞ்சு தேசத்திலிருந்து இங்கிலாந்துக்குள் பரவியது.

 

அமெரிக்காவிலும் தி பெடரலிஸ்ட் கட்சி (1789), தி டெமாகிரட்டிவ் ரிபப்ளிக் கட்சி (1794), தி டெமாக்ரட்டிக் கட்சி (1828), ஆண்டி மொசானிக் கட்சி (1882), தி விக் கட்சி என பல கட்சிகள் உருவெடுத்தன. அங்கு தற்போது ரிபப்ளிக்கன் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளே வலுவாக உள்ளன. அண்மையில் எலான் மஸ்க் ஒரு கட்சியைத் தொடங்கி உள்ளார். வேறு பல சிறிய கட்சிகளும் உண்டு.

இப்படியே ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இதே காலகட்டத்தில் முன்னும் பின்னுமாகப் பல அரசியல் கட்சிகள் உருவெடுத்தன.

 

ஜனநாயகத்தின் வருகை

ஜனநாயகக் காற்று வீசத் தொடங்கியது. பல்வேறு அரசியல் கொந்தளிப்புகள் மையம் கொண்டன. சொல்லப் போனால் நாம் இன்று அனுபவிக்கும்வாக்குமுறை ஜனநாயகம் / ‘தேர்தல் ஜனநாயகம்என்பது மேற்கின் கொடைதான். இதைச்சொன்னால்குடவோலை போட்ட நம் மரபுஎன உருட்ட வேண்டாம். அது குறுகிய எல்லைக்கு உட்பட்ட, அதிகாரமற்ற ஆலோசனைக் குழு, அவ்வளவே. மன்னராட்சிக்கு உட்பட்டதே அது. நாம் இன்று நடைமுறையில் அனுபவிக்கும் ஜனநாயகம் மன்னராட்சியில் கிடையாது; அது வேறு, இது வேறு. கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஜனநாயகம் என்ற கருத்தாக்கமே நவீன உலகுக்கு உரியது. கொடுங்கோல் ஆட்சி, செங்கோல் ஆட்சி என்பதுதான் பழைய பார்வை. இரண்டுமே மன்னர் ஆட்சி பற்றிய சொற்களாகவே அப்போது புழங்கின.

 

நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால், யானுயிர் என்பது அறிகை

வேன் மிகு தானை வேந்தற்குக் கடனே

 

என்பார் புலவர் மோசிகீரனார். “திறமையான படைபலம் மிக்க மன்னா! தானைத்தலைவா! நீ கேள். மக்களுக்கு உயிராக இருப்பது மன்னனாகிய நீ மட்டும்தான். நெல்லும் வாழ்வளிக்காது. நீரும் உயிர் கொடுக்காது. அதை உணர்ந்து நல்லாட்சி கொடு! மன்னவா!” என்று பொருள் கூறுவார்கள். இந்த அரசனுக்கு ஆலோசனை சொல்ல அவை இருக்கலாம். அவை பெரும்பாலும் மன்னனின் பொம்மை மண்டபமே! ஆக, ஜனநாயகம் என்பது நவீன காலத்தின் ஆக்கமே!

 

எப்படித் தொழில் புரட்சி முதலில் ஐரோப்பாவில் பரவி பின்னர் மெதுவாக சந்தை தேடி காலனி நாடுகளுக்கு வந்ததோ, அதே போல், அந்தத் தொழில் புரட்சி வழியும், வியாபாரம் வழியும், அவர்களின் ஆங்கிலமும் அதன் வழியுமாகவே ஜனநாயகச் சிந்தனையும் நம்மை எட்டின என்பதே வரலாறு. இந்த ஜனநாயகம் முழுமையானதா? யாருக்குச் சாதகமானது? ஜனநாயகம் ஏன் தொடர வேண்டும்? இந்த ஜனநாயகத்துக்கு மாற்று எது? இப்படி எழும் கேள்விகளுக்குள் நுழையும் முன்பு இந்தியாவில் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு பருந்துப் பார்வை செலுத்தலாம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்.


அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

Posted by அகத்தீ Labels:

 


அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

 

 

[ 11 /01 /25 ஞாயிற்றுக் கிழமை ஓசூரில் நடை பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு ‘ அறிவியல் அறிவோம் ; அறிவியலால் இணைவோம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை .]

 

1]

நண்பர்களே ! அறிவியல் இயக்க செயல்வீரர்களே ! உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

 

[ “ குடும்பம் நடத்தவும் அரசியல் நடத்தவும் அறிவியல் தேவை” என தொடர்ந்து நமக்கு அறிவுறுத்திய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை நினைவு கூர்ந்து உரையைத் துவக்கினார் . 1930 களில் தள்ளாத வயதில்  முழுக்க முழுக்க அறிவியலுக்காக ‘ புது உலகம்’ எனும் ஏடு தொடங்கிய சிங்காரவேலரை சுட்டிக்காட்டிப் பேச்சை ஆரம்பித்தார் .]

 

“ அறிவியல் அறிவோம்.அறிவியலால் இணைவோம்” என்பது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு . தலைப்பைப் பார்த்ததும் மிரண்டுவிடாதீங்க ! நான் சயின்ஸ் வாத்தியாரும் அல்ல . நான் சயின்ஸ் பாடம் நடத்தவும் வரவில்லை .

 

அறிவியல் துணையின்றி நம் வாழ்க்கையின் ஒரு நொடியேனும் நகர்கிறதா ? உங்களில் எத்தனை பேர் கையில் அலைபேசி [ mobile ] இருக்கிறது ? பார்த்தீர்களா அனைவரும் அறிவியலோடுதான் நக்ர்கிறோம் .ஆனால் அறிவியலாய் வாழ்கிறோமா ? இதுதான் கேள்வி .

 

என்ன சார் ! விசு மாதிரி குழப்ப ஆரம்பிச்சிட்டீங்க !

 

அறிவியல் என்பது நெட்டுருப் போட்ட சூத்திரங்களோ , மெத்தப் படித்த மேதாவித்தனமோ அல்ல ; வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நம் கையைப் பிடித்து வழி நடத்துவதாகும் . இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் துணையின்றி ஒரு நிமிடம்கூட நாம் நகரவில்லை . உங்கள் கைபேசி உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ? பிறகு பார்ப்போம் .

2]

முதலில் ,ஒரு கவிதை சொல்கிறேன் . புனிதா ஆறுமுகம் எழுதியது .

 

“ அக்னி மூலையில்

அழகான விறகடுப்பு

அம்மாச்சிக்கு…

 

அடுத்துவந்தது

 பாட்டிலை

நடுவில் வைத்த

மரத்தூளால்

அச்சமைக்கப்பட்ட

பொடி அடுப்பு …

 

அம்மா காலம்

சீமை எண்ணை

ஸ்டவ் அடுப்பு

 

பம்ப் ஸ்டவ்

அக்கா காலம்….

 

இண்டேன் பார்த்ததும்

இலவசங்களும்

இன்றே விநியோகமாச்சு

சிலிண்டரில்

எரிவாயு அடுப்பாக …

 

அடுப்புகள் மாறின

அடுக்களை நவீனமாச்சு

ஆனால்

சமைக்கிற ஆள் மட்டும்

அதே அம்மா…”

 

இந்தக் கவிதையில் கடைசி பத்தி தவிர மற்றவை அறிவியல் வளர்ச்சியின் தகவல்கள் . ஆம் அறிவியல் நம் அடுக்களையில் எரிவாயு அடுப்பாக , குக்கராக ,மிக்ஸியாக ,கிரைண்டராக ,குளிர் சாதனப் பெட்டியாக நுழைந்து கொண்டே இருக்கிறது. வீட்டின் மூலையில் இருண்ட சமையல் அறை இல்லை . நல்ல வெளிச்சமான மாடுலர் கிட்சன் வந்துவிட்டது .ஆனால் நம் மூளையில் பாலின சமத்துவத்தை வேர்விடச் செய்திருக்கிறதா ? வீட்டு வேலையை ஆணும் பெண்ணும் பகிரச் செய்திருக்கிறதா ? அது வரும் போதுதானே அறிவியலின் பலன் வந்து சேரும் . இதுதானே அறிவியல் பார்வை .

3]

சரி இப்போது அலைபேசி [ மொபைல் ]க்கு வருகிறேன் .

 

தினசரி நாலு சாவுச் செய்தியாவது கண்ணில் படாமல் விடியாது . நாலு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் பொழுது அடையாது . சரி ! உங்கள் கொள்ளுத் தாத்தா காலத்தில் சாவுச் செய்தியை எப்படிச் சொன்னார்கள் ? யாரோ ஒருவர் ஓடி ஓடி பல மைல் கடந்து பலநாடுகளுக்குப் பிறகுதான் சாவு செய்தியே தெரியும் .

 

ஊருக்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும் பறையடித்து செய்தி சொல்லுவார்கள் .

 

இதற்கென ஒரு சாதியையே உருவாக்கி இழிவு படுத்தி அடிமைப் படுத்தி அவமானப்படுத்தி வைத்திருந்தோமே நியாயமா ?

 

பின்னர் தபால் அட்டை வந்தது. 1836 இல் தந்தி வந்தது .

 

இன்று ஒவ்வொருவரும் சாவுச் செய்தியை பரிமாறுகிறோம் வாட்ஸ் அப்பில் . ஆனாலும் பழைய சாதி இழிவை தூக்கி எறிந்துவிட்டோமா ?

4]

அலைபேசி நமக்கு நல்லது செய்கிறதா தீமை செய்கிறதா ?

“இடும்பைகூர் அலைபேசி..” தலைப்பில் 2011 செப்டம்பரில் நான் எழுதிய கவிதை .

 

 “அலைபேசி,கைபேசி

செல்.மொபைல் - உன்

பெயர் எதுவானால் என்ன?

பிரச்சனை பிரச்சனைதான்

 

உன்னோடு

வாழவும் முடியவில்லை

நீ இன்றி

வாழவும் முடியவில்லை..

 

அரக்கப் பரக்கவேலைசெய்து

கொண்டிருக்கும்போதும்...

அவசரமாக கழிப்பறையில்

ஒதுங்கும்போதும்...

பசி பொறுக்காமல்

உணவுக் கவளத்தை

விழுங்கும்போதும்..

ஒலி எழுப்பி

நிம்மதி கெடுக்கிறாய்..

 

உரையாடலை முறிக்கிறது

உன் டயல் டோண்..

தொடர்புஎல்லைக்கு வெளியே

இருப்பதாய்க் கூறி

உறவையே முறிக்கிறாய்

 

நீ இன்றி

எந்த ரகசியமும் இல்லை

உன்னிடம்

எதுவும்

ரகசியமாய் இல்லை..

 

கடன்காரன்

அழைக்கும்போது

சட்டென இணைக்கிற நீ

தேவையான நேரத்தில்

கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..

 

படம் பிடிக்கிறாய்

பாட்டும் படிக்கிறாய்

போட்டும் கொடுக்கிறாய்

 

நீ கூட இருந்தால்

கூட்வே ஒரு ஆள்

துணை இருப்பதாய்

ஒரு ஐதீகம்..

ஆனால்

கூடவே ஒரு

ஒற்றன் இருப்பதை

அனுபவம் சொல்லும்

 

இடும்பை கூர்

அலைபேசி

உன்னோடு வாழ்வதரிது

நீஇன்றியும்

வாழ்க்கை அரிது..

என் செய்வேன்

நோக்கியோனே!”

 

இந்த அலைபேசியால் நொந்துபோனவர்கள் மேலைநாடுகளில்  ’ 0 போஸ்டிங்’ என ஒரு இயக்கம் தொடங்கிகின்றனர் . முகநூலில் ,இன்ஸ்ட்டா கிராமில் , வாட்ஸ் அப்பில் எதையும் பகிராத நாள் ,வாரம் ,மாதம் என கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர் .

 

இப்போதெல்லாம் அலைபேசி பணம் பரிவர்த்தனைக்கு மட்டுமா பயன்படுகிறது ; பணம் பறிக்கவும் ; ஏமாற்றவும் , மிரட்டவும் , பின் தொடரவும் பயன் படுகிறது . வாட்ஸ் அப்பில் வருவதெல்லாம் உண்மையா ? அறிவியலா ? சரியா ? எதையும் நம்பாதே . கேள்வி கேள் . வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் படிச்சு மேதையாக முடியாது . சொடக்குப் போடும் நேரத்தில் தகவல்கள் கொட்டும் ஆனால் அவற்றை கேள்விக்கு உட்படுத்தி உண்மையை சோதித்து அறிவதுதான் அறிவியல் பார்வை ஆகும் .

 

இது உணர்ச்சி வேக முடிவாக இருக்கலாம் . ஒரு போதும் தீர்வாகாது . அறிவியல் கருவியை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வியே தவிர .கருவியே பிழை அல்ல . சமூக வலைதளமோ அலைபேசியோ பிழை அல்ல . பயன்படுத்தும் நம்மிடம்தான் கோளாறு உள்ளது .கத்தியே கூடாது என முடிவெடுக்க முடியுமா ?கத்தி வேண்டும் .அதன் பயன்பாட்டை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் .அறிவியலும் அப்படித்தான் .

 

“ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று புரசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே!  அந்த விசாலப் பார்வையை உன்னில் விதைக்கத்தானே அறிவியல் !

5]

என் பெயரன் இப்போது ஐந்தாவது படிக்கிறான் .அடிக்கடி என்னிடம் வானவியல் பற்றி கேள்வி கேட்பான் . பெரும்பாலும் தெரியாது .முழிப்பேன் .அவன் சொல்லுவான். அந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, இந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, அந்தக் கிரகம் என்ன நிறம் ,இந்தக் கிரகம் என்ன நிறம் ; எல்லாம் அவனுக்கு அத்துப்படி . துளிர் விநாடிவினாவில் பங்கேற்போருக்கும் இவை தெரியும் . இது அறிவியல் தகவல் ஞானம் . இதுவே அறிவியல் பார்வையாகாது .

 

செவ்வாய் [ mars] ஓர் அழகான கிரகம் . சூரியக் குடும்பத்தில் உள்ள ஓர் கிரகம் .சூரியனுக்கு நான்காவது உள்ள கிரகம் . இதன் மேல்பரப்பில் இரும்புத் தாது இருப்பதால் செந்நிறமாக இருக்கும் . சூரியனைச் சுற்றிவர கிட்டத்தட்ட 780 நாட்கள் ஆகும் . நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் பூமிக்கு அருகில் வரும் போது மூன்றரைக் கோடி மைல் தூரத்தில் இருக்கும் . விலகிப் போகும் போது 23.5 கோடி மைல் தூரத்தில் இருக்கும் .அது அதன் போக்கில்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது . நம்ம வீட்டில் கல்யாணம் ஆகாமல் ஒரு பெண் இருந்தால் , பழி செவ்வாய் மேலே . செவ்வாய் தோஷம் எனச் சொல்லிவிடுவோம் . சாதி ,மதம் , வரதட்சணை , ஆணாதிக்கம் , குடும்ப கவுரம் என்கிற வறட்டுத்தனம் ,விருப்பமின்மை , பொருளாதார நெருக்கடி இப்படி நம்மிடம் ஆயிரம் போலிக் காரணங்களை வைத்துக் கொண்டு பழியை செவ்வாய் மீது போடுவது என்ன நியாயம் ?இந்த செவ்வாய் தோஷம் சீனனை ,ஜப்பானியரை , ஐரோப்பியரை ஏன் பிடிப்பதில்லை ?

6]

சனி அழகான கிரகம் . சுற்றி ஓர் வட்ட வளையத்திற்குள் நடுவில் சுழலும் பந்துபோல் ரம்மியமாக இருக்கும் . பந்து மஞ்சள் நிறமாகவும் வளையம் வெள்ளையும் ஜொலிப்பும் கொண்டதாக இருக்கும் . பூமியைவிட ஒன்பது மடங்கு பெருசு . பூமியிலிருந்து சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது . சூரியனுக்கு ஏழாவதாக இருக்கும் . சூரியனை ஒரு முறை சுற்றிவர 29.5 வருடமாகும் . சனியைச் சுற்றி 61 நிலாக்கள் இருக்கும் மேலும் 200க்கும் மேற்பட்ட குட்டி நிலாக்களும் இருக்கும் .அது யார் வாழ்க்கையையும் எப்போதும் பாதிக்காது .

 

ஏழரைச் சனி ,அஷ்டமத்து சனி , பொங்கு சனி ,மங்கு சனி ,விரையச் சனி ,பாதச் சனி ,ஜென்மச் சனி இப்படி விதவிதமாய்  நாமம் இட்டு பயந்து சாகிறோம் . எந்தச் சனியும் நமக்கு கெட்டதும் செய்யாது . நல்லதும் செய்யாது .அது அதன் வேலையே அல்ல

 

வானில் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் .இயங்கிக் கொண்டே இருக்கும் . அதன் விண்வெளி வானவியல்  அறிவியலை அறிந்ததால்தான் . விமானம் இயக்குகிறோம் . ராக்கெட் விடுகிறோம் . பல அறிவியல் முயற்சிகளைச் செய்கிறோம் .

 சோதிடக் குடுவைக்குள் அடைத்தால் நம் முன்னேற்றம்தான் தடை படும் .செய்யலாமோ சொல்லுங்கள் !

7]

 “விடைகளைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல ; வினாக்களை எழுப்புவதும் அறிவியல் பணியே !” என்றார் அறிவியல் அறிஞர் ஜன்ஸ்டின் .

 

அண்மையில் முட்டை சாப்பிட்டால் புற்று நோய் வரும் .  உணவு ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சித் தகவல் என சன் டிவியில் பரபரப்பு செய்தி ஓடியது .

 

உண்மை என்ன ? ஒரு பிராண்ட் கம்பெனி ”தாங்கள் விற்கும் முட்டை , “ முழுக்க முழுக்க இயற்கை உணவைக் கொடுத்து வளர்த்த கோழி முட்டை” என விளம்பரம் செய்தது .

 

அதை ஆராய்ந்த பின் அவர்கள் சொல்வது பொய் கோழித்தீவனம் போட்டிருக்கிறார்கள் . அதில் இன்னென்ன ரசாயணம் உள்ளது . புற்று நோயை உருவாக்கும் ரசயாணம் மிக மிகக் குறைந்த அளவு உள்ளது .அதுவும் எந்தப் பாதிப்பையும் உருவாக்காது . நாம் சாப்பிடும் பல உணவுகளில் இருப்பதுதான் . இந்த கம்பெனி முழுக்க முழுக்க இயற்கை உணவு ஊட்ட்டப்பட கோழியின் முட்டை என்று விளம்பரம் செய்ததுதான் பொய் . அந்த முட்டை தடை செய்யப்படவே இல்லை . மரச் செக்கு எண்ணை எனச் சொல்லி விற்கும்  மோசடி போல.

 

கோழி ,ஆடு ,மாடு , பன்றி ,முட்டை எல்லாம் மனிதர் சாப்பிடும் உணவே . தாவர உணவோ புலால் உணவோ எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை .தேர்வு . இதில் மதப் புனிதம் காட்டி பழிப்பது அறிவியலற்றது .இந்தப் புனித கோஷ்டிதான் கோழிமுட்டைக்கு எதிராய் கூப்பாடு போட்ட கோஷ்டி .

 

தினசரி வாட்ஸ் அப்பில் அறிவியல் என்கிற பெயரில் வரும் போலி அறிவியல் செய்திகள் நம்மை மலைக்க வைக்கிறது . இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே! இப்படிச் செய் !அப்படிச் செய் !மருந்தே வேண்டாம் !இப்படி வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் . எல்லாவற்றையும் சந்தேகி . கேள்விக்கு உட்படுத்து ! அறிவியல் வழி அது ஒன்றுதான்.

8]

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்கிற மேலை தேசத்து மரபணு விஞ்ஞானி தம் பத்து வயது மகளுக்கு எழுதிய கடிதம் உலகப் புகழ் பெற்றது .கோடிக்கணக்கானோர் வாசித்துவிட்டனர் . இன்றும் கூகுளில் போய்

Richard Dawkins letter to his 10 years old daughter on Science and Faith என டைப் செய்தால்  எட்டு பக்கக் கடிதம் வாசிக்கக் கிடைக்கும் .தேடி வாசியுங்கள் .

 

அதில் அவர் சொல்கிறார் ,

” The way scientist use evidence to learn about the world is mauch cleverer and  more complicated than I can say in short letter . But now I want to move on from evidence , which is good reason for believing anything and warn you against three bad reasons for believing anything. They called ‘tradition’, ‘authority’,’revelation’.”

 “அறிவியலாளர்  இந்த உலகத்தைப் உரிந்து கொள்ள ஆதாரங்களைப் பற்றி நிற்பர் .  அது கடினமானதும் மிகவும் சிக்கலானதும் கூட . ஆதாரம் கோருவது என்பதிலிருந்து விலகி ஏதாவது ஒன்றை நம்புவதற்கு மூன்று தவறான காரணங்களை ஏற்கக்கூடாது என எச்சரிக்கிறேன் . அவையாவன ,’பாரம்பரியம்’ ,’ அதிகாரபீடம்’,’அருள்வாக்கு’.

9]

1 ]எதையும் சோதித்து அறியலாம் …

அதற்கு எப்போதும் எங்கும் போதிய வாய்ப்பு இல்லாத போது 

2 ]ஆதாரங்களைக் கேட்கலாம் .தேடலாம்.

அதற்கும் வாய்ப்பு அமையாத போது

3] திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால் . அதன் உண்மை வெளிப்பட்டுவிடும் .

அதற்கும் தயங்குகிற போது ,

4 ] நேர்மறை என நிரூபிக்க முயலுவது போல் எதிர் மறையாகத் தவறென நிரூபிக்க கேள்விகள் கேட்டு முயலலாம் .

ஆனால்

அடிப்படை இரண்டு நிபந்தனைகள்

அ]நேர்மையாக எதையும் அணுக வேண்டும்

ஆ] திறந்த மனதோடு [ open mind ] இருக்க வேண்டும் .

 

விடை கிடைக்காத போது

May be or May not be

‘இருக்கலாம் ; இல்லாமலும் இருக்கலாம்’ என்று கூறவும் தயங்கக் கூடாது .

10]

அண்மையில் கூட நியூயார்க் டைமஸில் வந்த ஓர் அறிவியல் கட்டுரையில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது .

 

 “So when should we trust science? The view that seems to emerge from Popper, Oreskes and other writers in the field is we have good, but fallible, reason to trust what scientists say when, despite their own best efforts to disprove an idea, there remains a consensus that it is true.”

 

”ஆக ,நாம் எப்போது அறிவியலை நம்புவது ? பாப்பர் ,ஒரஸ்கேஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் சொல்வது என்ன ? அறிவியலில் சரியும் இருக்கும் பிழையும் இருக்கும் ; அது தவறானது என நிரூபிக்க முயன்று  முடியாது  போன பின்னும் உயர்ந்து நிற்கும் உண்மையே அறிவியல் .”

 

’அறிவியலை அறிவோம் . அறிவியலாய் இணைவோம்’ என நாம் உரக்கச் சொல்வோம் .அதன் வழி செல்வோம் .

 

11]

பண்டிட் ஜவஹர்லால் நேரு தன் அருமை மகள் இந்திரா காந்திக்கு பிரியதர்ஷினி என அழைத்து எழுதிய கடிதங்களின் தொகுப்பாய் இருக்கும் ‘உலக சரித்திரம்’ எனும் ஆழமான வரலாற்று நூலில் சொல்வதைச் சொல்லி முடிக்கிறேன்.

 

 “…. அறிவியல் தவறிழைக்காது என்று அர்த்தமில்லை .அடிக்கடி அது தவறிழைக்கிறது . அடிக்கடி அது சொன்னதை மாற்றிக் கொள்கிறது. ஆயினும் ஓர் பிரச்சனையை அணுக ‘அறிவியல் முறையே’ தகுந்தது என்று தோன்றுகிறது . தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல் கொண்டிருந்த இறுமாப்பு போய்விட்டது .அது தன் சாதனைகளைப் பற்றிப் பெருமை கொள்கிறது .ஆனால் ,’ கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலக அளவு’ என்றறிந்து ‘ஆன்றவிந்து அடங்கி’ நிற்கிறது.அறிவுடையவன் அறிவின் போதாமையை உணர்கிறான் . அறிவில்லாதவனோ முற்றும் உணர்ந்த ஞானி என சுயதப்பட்டம் அடித்துக் கொள்கிறான் .’நிறைகுடம்’ தழும்புவதில்லை ; ’அரைகுடமே’ தளும்புகிறது .அறிவியலும் அப்படியே .

 

[ இதனிடயே சொல்லப்பட்ட இரு கதைகள் இங்கு தரப்படவில்லை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

19 /01 /26.