குட்டிக் கதை …

Posted by அகத்தீ Labels:

 


குட்டிக் கதை …

 

நேற்று நடை பயிற்சியின் போது , அவர்கள் வழக்கமாகக் கடக்கும் ஒரு கோயிலை நெருங்கிய போது அக்கோயில் பூட்டப்பட்டிருப்பதையும் அங்கு பலர் கூட்டமாக நின்று கொண்டு உரக்க வாதம் செய்வதையும் கண்டனர் . ஏதோ சண்டையில் கோயிலுக்கு இருதரப்பாரும் பூட்டு போட்டுவிட்டதாக் கேள்விப்பட்டனர் .

 

ஒருவர் கோயிலுக்கு போகும் வழக்கமில்லாதவர் . அவருடன் வருபவர் கடவுள் நம்பிக்கையாளர் .அவருக்கு தாய்மொழியாம் மலையாளத்துடன் கன்னடமும் தமிழும் தெரியும் . அன்றைய உரையாடல் கோயிலை சுற்றி வட்டமிட்டது .

 

 “என்ன பிரச்சனை?”

 

 “கோயிலில் பிராமணிய முறையில் பிராமணரே பூஜை செய்ய வேண்டுமா ? பிராமணரல்லாதவர் பூசை செய்ய வேண்டுமா ? இதுதான் சண்டையின் மையப்புள்ளி..”

 

 “அப்படியானால் அங்கு இதுவரை யார் பூஜை செய்தது” .

 

“முதலில் கட்டப்பட்டது அம்மன் கோயில் . வழக்கப்படி அம்மனுக்கு பிராமணல்லாத இன்னொரு சாதியைச் சார்ந்த பூசாரியே பூசை செய்து வந்தார் .பொதுவாக அம்மன் கோயில்களில் அப்படித்தான் இருக்கும் . புது வாகனம் வாங்குவோர் அங்கு வந்து பூசை செய்து பூசனிக்காய் உடைப்பார்கள் .”

 

“ அப்புறம் என்ன ? பிரச்சனை ?”

 

“ அங்கு ஓர் சிவன் சன்னதியும் பின்னர் உருவாக்கப்பட்டது .பிள்ளையார் சன்னதியும்  ,நவக்கிரஹ பீடமும்  பின்னர் வந்தது ..”

 

“ அதில் என்ன பிரச்சனை ?”

 

“ சிவனுக்கும் பிள்ளையாருக்கும் பிராமண பூஜாரி பூஜை செய்வார் . நவக்கிரஹ பீடத்தில்  பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்…”

 

“ அப்படியே நடந்தால் என்ன ?”

 

“ பொதுவாக அது அம்மன் கோயில் என்பதால் வரும் பக்தர்கள் அம்மனையே முதலில் கும்பிடுகிறார்கள் . அம்மன் பூசாரிக்கு அதிக தட்சணையும் கிடைக்கிறது .அதன் பின் மற்ற சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டு சென்று விடுகின்றனர் .தட்சணை அதிகம் பிராமண பூஜாரிக்கு கிடைப்பதில்லை ….”

 

“ அங்கே இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர் .அம்மன் பூசாரியிடம் சிவ பூஜை பற்றி கேட்டால் தெரியாது அங்கே போய்க் கேள் என்பதும் ; சிவ பூஜாரியிடம் அம்மன் பற்றி கேட்டால் அங்கே போய்க் கேள் என்பதுமாக முறுக்கிக் கொண்டனர் .

 

அங்கே கோயில் நிர்வாகத்தில் முன்பு பொறுப்பாக இருந்தவர் அண்மையில் இறந்து விட்டார் . நிர்வாகம் மாறி இருக்கிறது . இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் கோயில் வாசலில் உள்ள காலி வீட்டு மனையில் ஆர் எஸ் எஸ் சாகா கூட்டம் நடப்பதை நடை பயிற்சியின் போது கண்டனர் .

 

இனி நடந்ததை வாசகர் யூகத்துக்கு விட்டுவிட்டோம்.

 

ஓர் முன் கதை : அந்த இடம் பஞ்சாயத்தால் சிறுவர் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் .அங்கு அதற்கான ஏற்பாடு தொடங்கப் பட்டபோது பிரச்சனை வெடித்தது .அங்கு குடியிருப்போர் பெரும்பாலும் போலீஸ் இலாகாவைச் சார்ந்தவர்கள் . ஒரு பகுதி கோயிலுக்கு என்றும் ஒரு பகுதி பூங்காவுக்கும் என முடிவானதாகச் சொன்னார்கள் .

 

கோயிலுக்கு பூஜை போடும் போது அந்த மைதானத்தில் நடுவில் பூஜை போட அந்த மைதானம் முழுவதும் மெல்ல மெல்ல கோயில் வசமானது .

 

அந்த சமயத்தில்  அங்குள்ள ஒரு மூத்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சொன்னார் , “ பார்க்ன்னு சொன்னா கண்டவங்க வருவாங்க கவனிப்பார் இல்லேன்னா பாழடைஞ்சு போயிடும் கிரிமினல்கள் கூடும் இடமாகி விடும் அம்மன் கோயில்ன்னா எல்லோருக்கும் நல்ல புத்தி வரும் … அமைதி இருக்கும் … வாழ்வு சுகமாய் இருக்கும் … கோயில் முக்கியம்  …. “

 

இப்போது அங்குள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளெல்லாம் இரண்டு கி.மீ தள்ளி இன்னொரு நகரில் உள்ள பூங்காவிற்கு சென்று உடற் பயிற்சி செய்கின்றனர் …

 

கோயிலில் புத்தி ரொம்ப வளர்ந்து … ஒழுக்கம் ஓங்கி ….. சிண்டைப் பிடித்துக் கொள்கின்றனர் …..

 

[ இது ஓர் உண்மைக் கதை . ஊர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் [ தன்னிலை முன்னிலை இல்லாமல் ] படர்க்கையில் எழுதப்பட்டுள்ளது …]

 

சுபொஅ.

11/02/25.

 


0 comments :

Post a Comment