நான் நாம் நான் நாம்

Posted by அகத்தீ Labels:

 

’நான்’ என்பதைவிட

 ‘நாம்’ என்பது நல்லதுதானே

அப்படித்தான் நினைத்திருந்தேன் நானும்

அவன் ‘நாம்’ என்று சொன்னபோது

முதலில் புரியவில்லை

புரிந்த போது உரக்கச் சொன்னேன்

அந்த ‘நாம்’ இல் நான் இல்லை .

வெறுப்பை விதைக்கும் ‘நாம்’இல்

‘நான்’ ஒரு போதும் இருக்கவே மாட்டேன்

யாருக்கு எதிரான ’நாமிலும்’’நான்’இல்லை.

இப்படி ‘நான் ‘ சொல்வது திமிரல்ல

நல்லிணக்கம் .பன்மையின் வலிமை .

’நான்’ சொல்வது புரிந்ததா ?

 

சுபொஅ.

13/12/25.


கொலையின் வேர் சாதியத்தின் வழி கனிம வளத்தில் …

Posted by அகத்தீ Labels:

 





கொலையின் வேர் சாதியத்தின் வழி கனிம வளத்தில் …

 

 

’ ஆர்ட்டிகிள் 29’ முஹம்மது யூசுப்பின் எட்டாவது நாவல் ; இரண்டு சிறுகதைத் தொகுப்பையும் சேர்த்தால் பத்தாவது நூல் . பத்து நூல்களையும் வாசிக்க எனக்கு வாய்ப்பளித்துள்ளார் . எல்லாமே ஏதேனும் நுட்பமான தகவல் சார்ந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் சமூக அலசலாககவே விரிந்திருக்கிறது . அவர் பார்வையோடு ஒருவர் முரண்படலாம் அல்லது உடன்படலாம் .ஆயின் அவர் எழுத்து எல்லாமே இலக்கு நோக்கி எய்யப்படுகிற அம்புதான் . டாக்குபிகேஷன் எனப்படும் ஆவணப் பதிவுதான் .யூசுப்பின் எழுத்தின் தடம் இதுதான் .இந்நாவலும் அதன் சாட்சியே !

 

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் கொலையை விசாரிக்க ஏ.எஸ்.பி ராகவன் என்கிற வீரராகவன் , சங்கரன்கோவிலுக்கு வருவதில் நாவல் தொடங்குகிறது .  ’நேர்மையின் சிகரம்’ என பாராட்டுப் பத்திரம் வாங்கிய பலர் முகமூடி அணிந்த காவிக் கயவர்களாய் இருப்பது நம் பொது அனுபவம் ; அதுபோலவே  வீரபத்திரன் கொலை விசாரணைப் போக்கில் அவரின் சாதி வெறி , சமூக விரோதிகள் சவகாசம் எல்லாம் வெளிப்படுவது ஆச்சரியமல்ல வழக்கமானதுதான் .

 

ஆனால் முஹம்மது யூசுப்பின் புலனாய்வு அதையும் தாண்டி பழங்குடியினர் வேர் ,பண்பாடு அவற்றின் மீதான ஆக்கிரமிப்பு ,சாதிய ஆணவம் என மெல்ல மெல்ல விரிந்து தொல்லியல் ஆய்வு வழி இன்னொரு சித்திரத்தை வரைந்து காட்டுகிறது.  நில உரிமைக்காகப் போராடிய பண்டைய சித்திரமேழி என்ற சொல்லை எடுத்து  ’சிமே’ என்கிற அமைப்பாக்கி ஓர் பெரிய வரலாற்றோடு முடிச்சுப் போடுகிறார் .இதுதான் யூசுப்பின் கதை சொல்லும் பாணி என்பது நாமறிந்ததுதானே !

 

ஆக ,வீரபத்திரன் கொலை வழக்கு என அறியப்படினும் இறுதியில் சாதிய ஆதிக்கம் வழி , கனிமக் கொள்ளைக்கான நிலப் பறிப்பு வரை அதன் சதிக்கரங்கள் நீள்வதும் ; சாதிய ஆதிக்கம் எந்த அளவு காவல்துறையிலும் புரையோடிப் போயிருக்கிறது என்பதும் இந்நாவலின் பேசுபொருளாகி இருக்கிறது . கொலையாளி என காவல் துறை முதலில் கைநீட்டும் இலஞ்சி கொலைகாரனல்ல ; தன் காதலி தொல்பொருள் ஆய்வாளர் மைதிலியோடு கொலை செய்து புதைக்கப் பட்டுவிட்டார் என்பது  கதையின் ஒரு முடிச்சு .

 

இந்த முடிச்சோடு சமந்தப்பட்டவர்  கஞ்சா வியாபாரி சமூகவிரோதி ஆனால் பெரும் தோட்ட அதிபர் , கோயில் தர்மகர்த்தா , சகலத்தையும் ஆட்டுவிக்கும் பெரும் சதிக்கரம் பத்மனாபன் . அவருக்கும் உயர் போலிஸ் அதிகாரி நகுலனுக்கும் இருக்கும் நெருக்கம்தான் காவல் துறையின் லட்சணம் .

 

கோமதி என்ற கோமதி நாயகம்  எனும்  காவலர் பாத்திரம் மூலம் காவல்துறையில் சாதியம் எப்படி நுட்பமாய்ச் செயலாற்றுகிறது எனச் சித்தரித்திருக்கிறார் .ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டே அதனைச் சாதிய ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் .

 

வாசுகி ,மைதிலி , திவ்யா போன்ற ஒரிரு பெண் பாத்திரங்களே இந்நாவலிலும் உலவவிட்டுள்ளார் . இதில் மூவரையும் மன உறுதியும் பரந்த பார்வையும் உள்ள பெண்களாகவே சித்தரித்துள்ளார் .                                            

 

அதே நேரம் இந்நாவலில் புழங்கும் நிலவியலை  ஒரு எல்லையோடு அளந்து அமைத்துவிட்டார் .வழக்கமாக இவர் நாவலில் ஒரு நெடும் பயணம் இருக்கும்.  கட்சி சார்பு அரசியல் குறியீடுகளையும் பெருமளவுத் தவிர்த்துவிட்டார் ; அண்மை வரலாறு சார்ந்த கதையில் ஏன் இப்படி அடக்கி வாசிக்க நேர்ந்தது என்பது புரியவில்லை .

 

மைதிலியின் தந்தை வாசுதேவன் ,பேரின்பன் ,காளி ,சக்கரையாண்டி , நாகராஜ் , வழக்கறிஞர்கள்  மாடசாமி மற்றும் ராஜகோபால் , காவலர் ஆவுடையப்பன் ,ரவி  , இன்ஸ் பெக்டர் நவநீத கிருஷ்ணன் , வில்லன் ஸ்டிக்கர் பாபு , கண் தெரியாதவராக நடிக்கும் முதியவள் ராக்காயி  உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மூலம் பல செய்திகளை நம்மிடம் கடத்துகிறார் .  ஊர் கோவில் திருவிழா , லாரி ஏற்றி 17 பேர் படுகொலை  , சாதிப்பிரச்சனை , உரமாக்கப்படும் படுகொலைகள் ;  சங்கரன் கோயில் ,தென்காசி,       செங்கோட்டை  வட்டார நிலவியல் மற்றும் பண்பாட்டு வரலாறு ; சமண ,சைவ ,வைணவ தொன்ம ஊடாட்டம் என பலவற்றைப் பிசைந்து ஒரு        சித்திரம் தீட்டி இருக்கிறார் . 

 

ஒரு கொலையை விசாரிக்கப் புகுந்து பல கொலைகளைச் சமூகவிரோதச் செயல்களை வெளிக்கொணர்வது நடக்கிறது . ஆயினும் சூத்திரதாரி பத்மனாபன் கைதாகாமல் வெளியேதான் நிறுத்தப்படுகிறார் . ஆனால் அவரது வலது கரம் ஸ்டிக்கர் பாபு மேல் அனைத்து குற்றக் கணக்கும் எழுதப்படுகிறது .நாட்டு நடப்பு அதுதானே !

 

” ஓ ! ஆர்ட்டிகிள் 29 [1] இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பின் பற்றும் சமயம் , பண்பாடு ,மொழி மற்றும் எழுத்து முறையைப் பாதுகாக்கும் உரிமையைக் கொடுக்குது அதுக்காக இந்த டைட்டிலை வச்சிருக்கீங்களோ?” என வாசுதேவனிடம் எஸ் பி ராகவன் கேட்கிற கேள்வி . இந்த ஆர்ட்டிக்கிளுக்கு நாவல் இறுதியில் யூசுப் கொடுக்கும் விளக்கம் அதனுள் பலதைக் கொண்டு வருகிறது . ஒவ்வொரு மாநில எல்லையிலும் பிரச்சனைகள் உண்டு என்பதும் உள்ளடக்கியது .இந்திய சமூகத்தின் பன்மையை உள்வாங்க இன்னும் நெடும்பயணம் போயாக வேண்டும் .சரிதானே !

 

கடைசியில் பேரறிஞர் அண்ணா உருவத்தில் சாமண்ணா என்கிற ஒருவரை அறிமுகம் செய்வதில் ஓர் அரசியல் இருக்கிறது . தமிழ்தேசியத்தையும் பொருளாதார ,பண்பாட்டு மேலாதிக்கத்தையும் சார்ந்து யூசுப் சுட்ட விரும்புகிற அரசியலின் குறியீடா அது ? இதில் மாறுபடவும் விவாதிக்கவும் நிறைய செய்தி இருக்கிறது . இந்த 23 வது அத்தியாயமே நாவலின் பிற்சேர்க்கையாகத் தோற்றமளிக்கிறது எனக்கு மட்டும்தானா ? “ பிராமணன் கறி திங்க ஆரம்பிச்சா நாட்டு வரலாறே மாறிடும்.” என்று போகிற போக்கில் கடைசியில் சொல்லிவிட்டு செல்கிறார் ; நோக்கத்தோடுதான்.

 

ஆர்ட்டிகிள் 29 , முஹம்மது யூசுப் ,யாவரும் பப்ளிஷர்ஸ் , 90424 61472 , www.yaavarum.com;   , www.be4books.com  , 246 பக்கங்கள் , ரூ.320 /

 

சு.பொ.அகத்தியலிங்கம். 

14/12/25. 

 

 


நேற்று பயணத்தில் ஓர் காட்சி .சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

Posted by அகத்தீ Labels:

 

நேற்று பயணத்தில் ஓர் காட்சி .

சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

 

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் .  அநேகமாக பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் . கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை  மணி நேரம் அவரோடு பயணம் .

 

 ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என் பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .

 

அவர் நம்பிக்கை .அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது அவருக்கு உறுத்தலாகிறது .

 

“ சார் ! கிறிஷ்டியனா ? ”

 

இல்லை என தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .

 

“ நீங்க முஸ்லீமா இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”

 

“ தலையாட்டி .புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?

 

“ எல்லாமே பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும் லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .

 

“ சார் ! அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி  சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…  வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”

 

இதுவரை பேசாமல் இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி குறைவாக உள்ள சாமிகளோ….”

 

நான் கேட்டதும் , “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு ’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன் … சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”

 

அவரின் அப்பிராணித்தனத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் .

 

அவர்  , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”

 

தொடர்ந்து வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே  சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள் சிரித்தபடி பயணித்தேன் .

 

வழியில் ஒரு தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக இருக்கும் போலும் …

 

ஓய்வு காலக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும் அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர் அப்படித்தான் .

 

இவர்களைப் போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?

 

[ சேலம் ஆத்தூர் பயண அனுபவம் ]

 

சுபொஅ.

11 /12 /25 .

 

 

 

 


தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

Posted by அகத்தீ Labels:

 

தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

 

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதா ? இல்லவே இல்லை . நேரு தேசபக்தியே இல்லாதவர் . விடுதலைப் போரில் சிறையில் வாடிய கம்யூனிஸ்டுகள் தேச பக்தி அற்றவர்கள் . அப்போது காட்டிக் கொடுத்ததுதான் மாபெரும் தேசபக்தி .வாஜ்பாய் ,சாவர்க்கர் வழிதான் தேசபக்தி . பிரிட்டிஷாரின் ஷூவை நக்கியதுதான் தேசபக்தி . இன்னும் புரியலையா ?

 

கிரிக்கெட்டில் விளையாட்டு என்பதை மறந்து வெறுப்பை உமிழ்வதுதான் தேசபக்தி . தேசபக்தியும் மதவெறியும் ஒன்றுதான் .மதவெறியும் வெறுப்பு அரசியலும் ஒன்றுதான் . வெறுப்பு அரசியலும் மோடி பஜனையும் ஒன்றுதான் .ஆக , மோடி பஜனையே தேசபக்தி .

 

தேசபக்தி என்பது இந்து பக்திதான் .இந்து பக்தி என்பது பிராமணிய பக்திதான்.பிராமணிய பக்தி என்பது மனுஸ்மிருதி பக்திதான் . மனுஸ்மிருதி பக்தி என்பது ஆர் எஸ் எஸ் சொற்படி ஆடுவதுதான் . கலவர பக்திதான் . ஆக தேசபக்தி என்பது கலவர பக்தியே . அது கார்ப்பரேட்டை காக்கும் பக்தியே . அம்பானி அதானி நலமே தேசநலம் .கார்ப்பரேட் நலமே தேசநலம் .கார்ப்பரேட் பக்தியும் பிராமணிய பக்தியுமே தேசபக்தி .பொய்களையும் புராணங்களையும் கொண்டாடுவதே தேசபக்த அறிவு என்பதறிக !

 

இன்னும் தேசபக்தி என்பது இந்த மண்ணை ,மக்களை ,பன்மைப் பண்பாட்டை , பல்வேறு மொழிகளை , பல்வேறு மதங்களை ,வனத்தை ,கடலை , விவசாயிகளை ,உழைப்பாளிகளை நேசிப்பது என விளக்கம் சொல்லலாமோ ? அது முழுக்க முழுக்க தேசவிரோதம் என்பதறிக ! ஜனநாயகம் ,மதச்சார்பின்மை , சமத்துவம் ,சகோதரத்துவம் என்பதெல்லாம் தேசவிரோதச் சொல்களென அறிக ! வறுமை ,வேலையின்மை பற்றி கூப்பாடு போடுவது தேசவிரோதம் என்பதறிக !

 

இப்போது சொல் நீ தேச பக்தனா ? தேஷ்விரோதியா ?

 

சுபொஅ.

09/12/25.


ஏன் நினைக்கிறாய்

Posted by அகத்தீ Labels:

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

உன் காலம் வேறு !

உன் அனுபவம் வேறு !

இன்று எல்லாம் மாறிப்போனது

இன்றைய வேகமான வாழ்க்கைக்கு

ஈடுகொடுக்க நாடே திணறுகிறது !

உன்னை நினைக்க கொண்டாட

அவர்களுக்கு ஏது நேரம் ?

பாஸ்ட் புட்

பாஸ்ட் டிராக்

எல்லாம் ரெடி மேட்

எல்லாம் ஆண் லைன்

எல்லாம் கையடக்க மொபைலில்

வாழ்க்கை முழுவதும்

அப்படித்தான்…

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

[ நேற்று நடை பயிற்சியில் என்னோடு வந்தவருக்கு ஆறுதலாகச் சொன்னது ]

 

சுபொஅ.

08/12/25.

 

 

தோழர் டி.ராமன் நூல்

Posted by அகத்தீ Labels:

 




ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் எப்படிப் போராட்ட நெருப்பில் புடம் போடப்படுகிறார் என்பதன் உயிர் சாட்சி தோழர் டி.ராமன் . எம் ஜி ஆர் ரசிகராய் இருந்து ஓர் கிராமப்புற விவசாயக் குடும்பத்து இளைஞன் வேலைதேடி சென்னைக்கு வந்து தொழிலாளிவர்க்க அரசியலைப் படிப்படியாக உள்வாங்கிய அனுபவம் எளிமையாய் ஆனால் வலுவாய் சொல்லப்பட்டிருக்கிறது .

 

தோழர் டி.ராமன் எழுதிய “ ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம்” எனும் நூல் ஒரு தொழிலாளியின் ஐம்பதாண்டு கால பிசிறற்ற அரசியல் பயணத்தை நமக்குச் சொல்லுகிறது . அதில் உழைக்கும் வர்க்க நலன் மட்டுமே மைய இழை . போராட்டம் ,அடி ,உதை ,சிறை எதுவும் அவர் உறுதியைக் குலைக்கவில்லை . புடம் போட்டது என்பதுதான் செய்தி . திருவான்மியூர் பகுதியின் உழைக்கும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் தோழர் .டி .ராமன் . உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன் ,பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோர் வார்த்தெடுத்த அன்புத் தோழர் டி .ராமன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய உறுதி மிக்கப் போராளித் தோழன் .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கிய காலத்தில் எம்மோடு தோள் இணைந்தவர் டி.ராமன் . அன்று தொட்டு எனக்கும் அவருக்குமான தோழமை உறவு தொடர்கிறது . ஆட்டோ சங்கர் வழக்கு , தோழர் பிரதீப் குமார் கொலை வழக்கு , கல்லுக்குட்டை குடியிருப்பு மக்கள் போராட்டம் , பெத்தேல் நகர் வழக்கு , காலவாய் கரையோர மக்கள் போராட்டம் ,பர்மா காலனி போராட்டம் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களோடு இவர் நின்ற உரிமைப் போராட்டங்கள்தாம் இவர் வாழ்க்கை .

 

கம்யூனிஸ்டுகளை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் ’குபீர் அறிவாளிகளுக்கு’ தோழர் ராமன் போன்ற உழைப்பாளி மக்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க வாழ்க்கைதான் பதிலடி .

 

 “வகித்த பதவிகள் அல்ல போரட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்” என்பதன் சாட்சியே தோழர் டி.ராமன் . பேரன் தூண்டிவிட்ட தாத்தாவின் எழுத்து இந்நூல் .

 

ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம் , டி.ராமன் , தூவல் கிரியேஷன்ஸ் , 90945 74500 , vedhaperumal@gmail.com , பக்கங்கள் : 112.