Showing posts with label சொற்கோலம். Show all posts
Showing posts with label சொற்கோலம். Show all posts

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

Posted by அகத்தீ Labels:

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

[ மேதினத் தியாகிகளும் மேதினம் கொண்டாடும் இன்றைய உழைப்பாளர்களுக்கும் இடையே ஓர் தோழமை மிக்க உரையாடல் ]

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் காதைத் திருகினார் மேதினத் தியாகிகள் .

 

நாங்கள் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? கொஞ்சம் உரக்கவே பதில் சொன்னோம்.

 

ஓ ! அப்படியா ? மே தினத்தின் பெருமையை ஆற்றலை உணர்ந்தோர் எத்தனைபேர் ? மேதினத்தை இன்னொரு விடும்முறை நாளாய்க் கருதி பொழுதைக் கொல்லுவோர் எத்தனை பேர் ?

 

மே தினத் தியாகிகளே ! உங்கள் கோபம் நியாயந்தான் .. விழிப்புணர்வை  ஊட்டுவதில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது .செல்வோம் ! ஆயினும் கொண்டாடும் எங்களை கோபவிழியால் பார்க்காதீர் !

 

ஜெர்மனியில் ,பிரான்ஸில் , பிரிட்டனில் இன்னபிற நாடுகளில்  உழைப்பாளிகள் லட்சம் லட்சமாய் வீதியில் திரளுகிறார்களே அவர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்க நீங்கள் செய்தது என்ன ?

 

மேதின தியாகிகளே ! உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தோம் ; மவுனமானோம்.

 

உங்கள் வீடுகளில் பணிக்கு வரும் பெண் உழைப்பாளிகளுக்கு எட்டு மணி நேர வேலை உண்டா ? வார விடுமுறை உண்டா ? சட்டச் சலுகைகள் உண்டா ? என்றைக்கேனும் இதை யோசித்ததுண்டா ?

 

சத்தியமாக அதை எல்லாம் ஒரு நிமிடம்கூட யோசித்ததே இல்லை . தப்பு செய்துவிட்டோம் ! மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் தந்தோம்.

 

மலக்குழி மரணங்களும், தீண்டாமை இழிவுகளும், சாதி ஆணவப் படு கொலைகளும் உழைக்கும் வர்க்கத்திற்குள்ளாகவே எனில் வெட்கித் தலைகுனிய வேண்டாமா ? இதனை எதிர்க்காமல் மேதினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

கேள்வியின் நியாயச் சூட்டில் நெளிகிறோம் விடைதேடி . தலைமுறை தலைமுறையாய் மரத்துப்போன இதயத்தை உசுப்பிவிட இப்படிப்பட்ட கேள்விச் சவுக்குகள் அவசியம்தான். நேர்மையோடு கேள்வியை எதிர்கொள்கிறோம்.

 

பெண்ணடிமை நீங்கி பாலின சமத்துவம் ஓங்க பேசுகிறீர் ! மறுக்க வில்லை . ஆயினும் உங்கள் வீட்டில் - உங்கள் உறவில்- உங்கள் பணி இடத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க உங்கள் குரல் உயர்ந்ததுண்டா ?

 

முயற்சிக்கிறோம் . போக வேண்டியது வெகுதூரம் .பழமைவாதம் எம் மூளையில் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டே இருக்கிறது ! தூக்கி எறியமாட்டாமல் மதம் ,சாதி ,பண்பாடென சமாதானம் சொல்லி ஓய்கிறோம் ! எங்கள் முயற்சி தொடரும் !!

 

முயற்சியைக்  கைவிடாதீர்கள் ! தொடருங்கள் ! உள்ளூரில் முறைசாரத் தொழிலாளிகள் கோடிக்கணக்கில் வேலை நேரமும் இன்றி உரிய சட்ட சலுகைகளும் இன்றி வறுபடுகிறார்களே அவர்களுக்காய் நீங்கள் எத்தனை முறை வீதிக்கு வந்தீர்கள் ?

 

வந்தோம் ,ஆனால் வெறும் சடங்காகத்தான் இருக்கிறதோ ? முறைசாராத் தொழிலாளர் துயரம் நீள்கதை ஆகிறதே ! பேசிக் கொண்டே இருக்கிறோம்.

 

சரி ! அது போகட்டும்! விவசாயிகள் கோபம் கொப்பளிக்க ஓராண்டாய் வீதியில் நின்றார்களே ! அரசு இயந்திரத்தின் கோரப் பற்சக்கரங்களை தடுத்து நிறுத்தும் தடையரண் ஆனீர்களா ?

 

சும்மா சுருண்டு கிடக்கவில்லை .குரல் கொடுத்தோம் ஆயினும் கேளாக் காதினரான அரசின் செவிப்பறை கிழிய உரத்து முழங்கவில்லை .

 

உண்மையை ஒப்புக் கொண்டதே முதல்படி . சரி! வேலையின்மை வாட்டி வதைக்கிறதே அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்தீர்களா? வேலையில்லா இளைஞர்களை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக கொம்பு சீவுமே ஆளும் வர்க்கம் ? இதனை உணர்ந்தீர்களா ?

 

உணர்ந்தோம் அரசியல் உணர்வு பெற்ற சிறுபகுதியினர் . தொழிலாளி வர்க்க உணர்வாய் இதனை பதியம் செய்யத் தவறிவிட்டோம் !

 

மெல்ல சரியான தடம் நோக்கி நகர்கிறீர்கள் !கொரானா கொடுந் தொற்று உலகையே புரட்டிப்போட்டதே ! சக உழைப்பாளிகள் சொந்த ஊருக்கு மைல் கணக்கில் பாதம் நோக நடந்தார்களே நீங்கள் செய்தது என்ன ?

 

சில இடங்களில் உணவும் நீரும் அளித்தோம் ; ஆனால் அரசின் கன்னத்தில் நாலு அறைவிட்டு இக்கொடுமையைத் தடுக்கத் தவறிவிட்டோம் !

 

பெரும்பாலோர் ஊதியமும் வருவாயும் இன்றி முடங்கிக் கிடக்கையில் அரசு ஊதியம் பெற்றோர் சக உழைப்பாளிக்கு செய்த கைமாறென்ன ? அண்டை வீட்டு அன்றாடங் காய்ச்சி கல்வி கற்க துணை நின்றீர்களா ?

 

வர்க்க உணர்வு பெற்ற சிலர் தன்னார்வ தொண்டில் இறங்கினர் ; பாடம் சொல்லிக் கொடுத்தனர் .ஆனால் அது மிகமிக சொற்பம். பெரும் பாலோர் தூங்கினர் . பொறுப்பற்று இருந்தனர் .

 

போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாய் ஆளும்வர்க்க கடித்து ருசித்து சாப்பிடுகிறது ;ஜனநாயகம் முடமாக்கப்படுகிறது ; உங்கள் எதிர்வினை அவர்களை நடுங்கச் செய்ய வேண்டாமா ?

 

வெறுமே சடங்குத்தனமாய் சில கண்டனங்களோடு ஓய்ந்துவிடுகிறோம் ; தன் மனைவி தன் பிள்ளை தன் வீடு தன் சுற்றம் என சுருங்கி விடுகிறோம் .சுருண்டு விடுகிறோம் ; அலைபேசியில் அமிழ்ந்து தூங்கிவிடுகிறோம்.

 

தூங்குகிறவன் தொடையில்தானே கயிறு திரிக்க முடியும் .12 மணி நேர வேலை மூக்கை நுழைத்தது அப்படித்தானே ! கொஞ்சம் நிமிர்ந்தபோதே இரண்டடி பின்னால் போனது எனில்  நீங்கள் வர்க்கப்படையாய் திரண்டால் … கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! வர்க்க உணர்வு பெற யார் தடை ? எது தடை ? போதிக்க வேண்டியவர் தவறா ? கற்க மறுத்த நீங்களா ?

 

பதில் தேட வேண்டும் . குற்றம் இரு பக்கமும் இருக்கும் போல்தான் தெரிகிறது …

 

 

சாதி ,மத வெறியில் ஆயுதம் ஏந்துவதும், கொலையுண்டு வீழ்வதும் உங்கள் சகோதர சகோதரிகள்தானே … தடுக்கவும் - சரியான பாதைக்கு வென்றெடுக்கவும் நீங்கள் செய்தது யாது ? பேராபத்தை எதிர்கொள்ள என்ன வியூகம் உள்ளது உங்களிடம் ?

 

சில ஆர்ப்பாட்டங்கள் … கொஞ்சம் துண்டுப் பிரசுரங்கள் … யானைப் பசிக்கு சோளப்பொரியாய் சில … அவ்வளவே …

 

ஆம் . சுயவிமர்சனம் சரியாகத்தான் செய்கிறீர்கள் ! இந்நிலை மாற்ற என்ன செய்தீர்கள் ? கார்ப்பரேட் காவிக் கூட்டணியில் பாசிசம் இரத்தக் காட்டேரியாய் எங்கும் உயிர் குடித்து அலைகிறது … என்ன செய்யப் போகிறீர்கள் ?

 

தேர்தலில் தோற்கடிக்க ஒற்றுமை தேவைப் படுகிறதே ?

 

பார் ! பார்! மீண்டும் மீண்டும் ! தேர்தல் சக்கரத்துக்குள் அரைபடவே யோசிக்கிறீர்கள் ? தேர்தல் ஒரு தற்காலிக தடுப்பு .அவ்வளவுதான் .தொழிலாளி வர்க்க அரசியலை முதலாளித்துவ கூட்டணியில் எதிர்பார்த்து எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

 

வேறென்ன வழி ?அதிகாரம் அவர்கள் கையில் அல்லவா ?

 

தப்பு ! தப்பு ! தேர்தலும் கூட்டணியும் பாசிச எதிர்ப்புப் போரில் தவிர்க்க முடியாததே ! சேர்ந்தீர்கள் ! இனியும் சேர வேண்டும் ! பிழை இல்லை அதில் ; வர்க்கப் போராட்ட கனல் அணைய  விடலாமோ ? தேர்தல் மாயை கண்ணை மறைக்காமல் காத்திடல் வேண்டாமோ ?

 

எல்லாமே எம் தவறுதானா ? ஆளும் வர்க்க லாபவெறிக்கும் நாங்கள்தான் பலி ! சாதி மத வெறிக்கும் நாங்கள்தான் பலி ! அதை எதிர்க்கத் தவறியதற்கும் நாங்கள்தான் குற்றவாளியா ? வெடித்து கேட்கிறோம் .

 

வருத்தமாகத்தான் இருக்கிறது .வர்க்கமாகவும் வர்ணமாகவும் பிளவுண்டு மிதியுண்டு கிடக்கிற நீங்கள் விட்டில் பூச்சியல்ல விளக்கில் விழுந்து மடிய ! நீங்கள் கோடிக்கால் பூதம் !விழித்தால் குவலயம் நடுங்கும் ! எழுக ! ஏன் இன்னும் கும்பகர்ண தூக்கம் என்பதுதான் கேள்வி !

மெய்தான்…மெய்தான்.. இந்த விழிப்புணர்வை வரவைக்க இன்னும் வலுவாய் இன்னும் கூர்மையாய் இன்னும் பரவலாய் இன்னும் தெளிவாய் இன்னும் எளிமையாய்  …. சொல்லிக்கொண்டே போகலாம் செய்ய முனைவோம்…

 

தோழர்களே !மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் மீண்டும் இதயத்தோடு உரையாடினர் மேதினத் தியாகிகள் .

 

தோழா !நாம் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? உழைக்கும் வர்க்கம் நாங்கள் தவறு செய்வோம் ! தடுமாறி விழுவோம் ! சதிக்கு ஆளாவோம் ! நம்பி ஏமாறுவோம் ! எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம் ! இறுதி வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!

 

மேதினத் தியாகிகள் புன்னகைத்தனர் . அதில் ஆயிரம் பொருள் மிளிர்ந்தது !

 

அவர்கள் தொடங்கிய போராட்டம் இப்போது எம் தோள்களில் ; தொடர்வோம் ! வெல்வோம் !

 

மேதினம் வாழ்க ! உழைக்கும் வர்க்கம் வெல்க !

 

 

சுபொஅ.

30/4/2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


ஞானியாவதற்கு அல்ல………..

Posted by அகத்தீ Labels:

 ஞானியாவதற்கு அல்ல………..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் படிக்கும்போதும் இதை இவ்வளவு நாள் அறியாமல் இருந்தோமே என நினைத்துக் கொள்கிறேன் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் செயலையோ எதிர்வினையையோ பார்த்து நாம் இன்னும் பட்டுத் தெளிய வேண்டியது நிறைய இருக்கிறது என கருதிக் கொள்கிறேன்.
அனுபவும் அறிவும் ஒற்றை நாளில் யாருக்கும் வந்து விடுவதில்லை ; ஒவ்வொரு நாளும் பட்டறிவும் படிப்பறிவும் புதுப்புதுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
முதியோரிடம் கற்பதற்கு நிறைய செய்திகள் இருப்பது போலவே , இளைஞர்களிடமும் இருக்கிறது . ஆனால் ,இரு பக்கமும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தேவைக்கு ஏற்ப இல்லையே !
ஞானியாவதற்கு அல்ல மனிதனாவதற்கே இங்கு பெரும்பாடாய் இருக்கிறதே ! என்ன செய்ய ?
சுபொஅ
12/11/2021

அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

Posted by அகத்தீ Labels:






அவர் பொய் சொல்ல மாட்டார் !!!





ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

குழந்தை அழும் சத்தம்கூட
அமைதியைக் குலைக்கக்கூடாது
என்பதற்காகவே
பெல்லட் குண்டுகளால்
குழந்தையைக்கூட மவுனிக்கச் செய்யும் !
காஷ்மீர் பனிமலையில்…

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

ராகுலும் ,யெச்சூரியும் ,ராஜாவும்
திருச்சி சிவாவும் இன்னபிறரும்
உள்ளே நுழைந்து
மயாணத்தை
அமளி துமளி ஆக்கவிடலாமா ?

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

சு.பொ.அகத்தியலிங்கம்
25 அக்டோபர் 2019.


முதலில் அதற்குப் பதில் சொல் !!!

Posted by அகத்தீ Labels:

முதலில் அதற்குப் பதில் சொல் !!!
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ நடக்கிற சாலை… இனி நீஅதில் நடக்காதிருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உடுத்துகிற உடை… இனி உடை உடுத்தாமல் அம்மணமாய் அலைவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயணிக்கும் வாகனம் … இனி அதில் பயணிக்காமல் புஷபவிமானத்தை தேடுவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவும் .. இனி உண்ணா நோன்பு இருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
உன் நோய் தீர்க்கும் மருந்து … இனி கோமூத்திரமே கதியென நோயில் அழுந்துவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் … இனி எதையும் பயன் படுத்தாமல் தன்னந்தனியாய் பசியோடும் நோயோடும் பஜகோவிந்தம் பாடுவாயாக
நீ அகோரியோ ,துறவியோ, யோகாவியாபாரியோ , இந்து புனிதரோ யாராக வேண்டுமானாலும் இரு …
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர்,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர்,இதரர் என்போர் வியர்வையில் நனையாத மூளையில் யோசிக்காத ஏதேனும் ஒற்றைப் பொருள் இருக்குமாயின் அதனைத் தாராளயாய்ப் பயன்படுத்திக் கொள்ள சாஸ்திரம் தடைவிதிக்கவில்லை .
எல்லோரையும் தீண்டிவிட்டு உன்னிடம் வரும் காற்றை நீ எப்படித் தடுக்கப் போகிறாய் … முதலில் அதற்குப் பதில் சொல் !!!!!
சு.பொ.அகத்தியலிங்கம்
1 ஆகஸ்ட் 2019.

சொற்கோலம் 10

Posted by அகத்தீ Labels:



சொற்கோலம் .10….

அனைத்துக்கும் ஆசைப்பட வேண்டிய பருவம் ஒன்றுண்டு . ஒவ்வொன்றாய் ஆசையை அறுத்தெறியும் பருவமும் ஒன்றுண்டு .

பின்னது போல் முன்னதில் ஆசையை அறுப்பதென்பது பிஞ்சில் பழுத்ததாகாது ; பிஞ்சில் வெம்பியது ஆகும் .

பின்னதிலும் ஆசையைத் தொலைக்க முடியாது அலைவது ஆரோக்கியமும் அல்ல ஆளுமையும் அல்ல ; ஆதிக்கமும் வெறியும் ஆகும் .

பற்றறு பற்றறு என்பது சுலபம் .பற்றறுப்பது சுலபமல்ல . மணல் கடிகாரம் போல் கடைசி சொட்டுவரை ஏதோ ஒரு பற்றிருக்கும் .

அதிகாரப் பற்றைத் துறப்பது ஆகப் பெரும் துறவாகும் .துறவியும் துறக்காத பற்று அது . அதிகாரம் செய்யாமலிருந்தாலே முதுமை மரியாதையை மாண்பைத் தக்க வைக்கும் .

தவறுகளிலிருந்தே நீ கற்றுத் தெளிந்தாய் ; அடுத்த தலைமுறையும் அவ்வாறே கற்றுத் தெளிவார்கள் . நீ இல்லாமலும் உலகம் இயங்கும் .உணர்ந்து அதிகாரப் பற்றறு !


 “என் அனுபவத்தில் … “என சொல்லுவதை நிறுத்து … உனது அனுபவத் தெளிவே இறுதியானது அல்ல .அனுபவமும் என்பது உன்னோடு முடிந்து போவதுமல்ல .தலைமுறை தலைமுறையாய் அடித்துத் திருத்தி தேவைக்கு ஏற்ப செப்பனிட்டுக் கொண்டே இருப்பது .

எல்லாவற்றிலும்  மூக்கை நுழைப்பதை நிறுத்து ! மூக்கு உடைபடாது .முதுமைக்கு அழகாகும் . கேட்டால் மட்டுமே சொல் .அதுவும் இறுதித் தீர்ப்பாக அல்ல ;பரிசீலனைக்கான முன்மொழிவாய் .

சொன்னதை அப்போதே மறந்துவிடு .நீ சொன்னதை ஏற்பதும் உதறுவதும் அவரவர் முடிவு . அவரவர் தேவை .சூழல் .இதை உணர்ந்து கொள் .

ஒட்டி வாழ வேண்டும் ஆயின் பாசப்பசையோ வெறெந்த பசையோ குழைத்துத் தடவி ஒட்டி விடக்கூடாது . எப்போதும் விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும் .

கொஞ்சங்க் கொஞ்சமாய் உடலை உள்ளத்தை இலகுவாக்கி எந்த நொடியும் பறந்து செல்ல தயார்படுத்திக் கொண்டே இருப்பதே முதுமையின் இனிமை .

சு .பொ.அகத்தியலிங்கம்.



sorkolam 9

Posted by அகத்தீ Labels:




சொற்கோலம் . 9.

என் பார்வையும் உன் பார்வையும் ஒரே கோணத்தில்  இல்லை . என் பார்வையில் நான் சொன்னதுதான் சரி.நான் செய்ததுதான் மிகச்சரி .உன் பார்வையில் நீ சொன்னதும் செய்ததும் சரியாக இருக்கக்கூடும் ;ஆயினும் நானே சரி !

மாமியார் கோணம் .மருமகள் கோணம் .கணவன் கோணம் .மனைவி கோணம் . அப்பா கோணம் .பிள்ளை கோணம் .அண்ணன் கோணம் . தம்பி கோணம் . அக்கா கோணம் .மருமகன் கோணம் . .மாமா கோணம் .மச்சான் கோணம் .மச்சினி கோணம் .ஒவ்வொன்றும் ஒரு ரகம் .

எதுவும் முழுதாய் சரியுமல்ல ; முழுசாய் தவறுமல்ல . அவரவர் தன்நலம் தன் பக்க நியாயத்தை மட்டுமே பார்க்கச் செய்யும் . ஆயின் நியாயத்தின் தராசு முள் அவர்களுக்கு எதிராய் போகக்கூடும் .

அதிலும் குடும்பம் ,உறவு ,நட்புக்குள் மோதல் வரும் போது நியாயம் சொல்லப் புகின் ஒரு பக்க பகையே மிஞ்சும் . இன்னொரு பக்கமும் நாம் முழுசாய் அவர் சொன்னதை புரியவில்லை அல்லது ஏற்கவில்லை என வருத்தம் மேலிட ஒதுங்குவர் .

அது நமக்கு சம்மந்தம் இல்லா விஷயம் என ஒதுங்கினும் ; நாம் எதிர் பக்கம் சேர்ந்து இவரை ஒதுக்குவதாய் இருவரும் குற்றம் சாட்டுவர் .

உங்கள் சொந்தக் கோணத்தைத் தவிர்த்து இந்தக் கோணத்திலும் அந்தக் கோணத்திலும் மாறி மாறி உள்ளுக்குள் ஓர் விசாரணையை அரங்கேற்றினால் ஓரளவு நியாயம் பிடிபடும் .

ஆனால் ஒன்று  சுத்த சுயம்பான சார்பற்ற நியாயம் என்பது வெறும் பேச்சே !


சொற்கோலம்

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம் .8.

ஒவ்வொன்றாய்  கடந்து வந்தோம்  , ஒவ்வொன்றும் இனிதென்று காலம் கடந்த பின்னே அறிந்து கொண்டோம் !!!

குழந்தையாய் மீண்டும் பிறப்போமா ,தாய் தந்தை கொஞ்சுவதில் மகிழ்வோமா ;  நெஞ்சுக்குள் ஓயாது பேராசை ;

சென்றதினி மீளுமோ ?

குழந்தைப் பருவம் கவலை யற்றது எனினும் பிரச்சனை அற்றது அல்ல .

ஆம் தவழ ,உட்கார ,நிற்க ,பேச ,சூழலோடு இயைந்திட ; நாளும் தமக்குள் முட்டி மோதி, விழுந்து, எழுந்து, அழுது, சிரித்து, குழந்தைப் பருவம் பிரச்சனை அற்றது அல்ல . அது வளர்ச்சியின் பிரச்சனை.

சென்றதினி மீளுமோ ?

சிறார் ,மாணவர் என வளர வளர கவலை மெல்ல முளைக்கிறது ;பிரச்சனைகள் ஓய்வதில்லை .

தனது விருப்பமும் ஈடுபாடும் எவை என்பதை விளக்கவும் முடிவதில்லை  பெற்றோர் ,ஆசிரியர், பிறர் விளங்கிக் கொள்வதுமில்லை . முரணும் மோதலும் உண்டு. பகை ஆவதில்லை என்பதே மகிழ்ச்சி.

சென்றதினி மீளுமோ ?
 
வாலிபம் மேலும் சிக்கல் .கனவும் யதார்த்தமும் எதிர் எதிராய் .பிடிபடாத வாழ்வோடு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ..

கொண்டாட்டமும் கொந்தளிப்பும் ஒரு சேர போட்டிபோடும் .தடுமாறும் .தடம் மாறும் .தடம் பதிக்க வடம் பிடிக்கும் வயதின் போர்க்கோலம் .

சென்றதினி மீளுமோ ?

புரிந்தும் புரியாமலும் வாழ்வில் நுழையும் பருவம் .பொறுப்பு கனமாய் தோளை அழுத்தும் . உதறவும் முடியாது உதவவும் யாரும் வரமாட்டார் .

வாழ்க்கை படித்தது போலும் இல்லை .பிடித்ததாகவும் இல்லை .கனவு கண்டது போலும் கைகூடவில்லை .கைக்கு எட்டியதுகூட பல நேரம் வாய்க்கு எட்டுவதில்லை .

ஆனாலும் ஓரு ஈர்ப்பு எப்போதும் நாக்கில் தேன் தடவும் . மறுப்பு அடிநாக்கில் கசப்பாய் ஊறும் . சாதிக்கவும் சோதனையில் துவளவும் என சக்கரம் உருண்டோடும் .

காதலும் அன்பும் லட்சியக் கனவும் நெஞ்சம் நிறைந்தால் ;பயணக் களைப்பு கொஞ்சம் குறையும் .அதன் ஏற்ற இறக்கம் வாழ்வையும் பந்தாடும் . வாழ்வின் பொருளை  ஒவ்வொரு அசைவும் சொல்லிச் செல்லும் .

சென்றதினி மீளுமோ ?

அனைத்தையும் அசைபோடும் முதுமை . ஒவ்வொரு பருவமும் அததற்குரிய பிரச்சனைகளையும் பெரு மகிழ்ச்சியையு கொண்டது போலவே முதுமை என்பதும் .

ஓய்வு ஆனால் ஓய்வதில்லை . உறக்கம் ஆனால் உறக்கமில்லை . உற்சாகம் ஆனால் உற்சாகமில்லை .பிரச்சனை இல்லை .ஆனால் பிரச்சனை .பொறுப்பு இல்லை ஆனாலும் பொறுப்பு உண்டு .
உண்டு ,இல்லை இரண்டுமே  முதுமை  . உணர்ந்தால் இனிமை . இல்லையேல் வெறுமை .

முதுமைக்கு முடிவுண்டு ஆனால் மீளாது ஒரு போதும் .

ஒவ்வொன்றாய்  கடந்து வந்தோம்  , ஒவ்வொன்றும் இனிதென்று காலம் கடந்த பின்னே அறிந்து கொண்டோம் !!!

-         சு.பொ.அகத்தியலிங்கம் .









சொற்கோலம்.7.

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம். 7

பழகிப் போச்சு என்பதற்கும் மரத்துப் போச்சு என்பதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே

பழக்குவது என்பதற்கு அடக்குமுறையோ ,கடும் பயிற்சியோ கூடதேவை இல்லாமல் போகலாம்..

பாரம்பரியம்,பண்பாட்டுப் போதை போதுமானது .மதம் ,சாதி ,இனம் எதன் பேராலும் இருக்கலாம் …

எங்கள் குடும்ப வழக்கம் இதுதான் ,நாங்கள் இப்படித்தான் செய்வோம் ,நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்  இறுகிப்போன , காலத்துக்கு ஒவ்வாத ஒவ்வொன்றையும் பிடிவாதமாய் பற்றிக்கொண்டு மாரடிக்கிறோம்.

ஈரக்கம்பளியை போர்த்திக்கொண்டு மழையில் நனையும் மூடரைப்போல் எத்தனை காலம் திரியப் போகிறோம் ?

சுதந்திரமாய் கைவீசி மழையில் நடந்து நனைந்து மகிழ்ந்து பாருங்கள் அப்போதுதான் தூக்கிய எறியாமல் இத்தனைகாலம் சுமந்தது எதுவென விளங்கும் .

நேற்றின் தொடர்ச்சிதான் இன்று ;அதற்காக நேற்றிலேயே வாழ்ந்துவிட முடியாது .இன்றின் தொடர்ச்சிதான் நாளை ; ஆயின் இன்றை நிராகரித்து விட்டு நாளை இல்லை ;இன்றிலேயே தங்கிவிடவும் போவதில்லை .

கடந்த காலம் மக்கி உரமாகட்டும் ;மக்காததை அப்புறப்படுத்தியாக வேண்டும் . வருங்காலம் இலக்காகட்டும் .நிகழ்காலம் வாழ்வாகட்டும் .

மரத்துப்போன எதுவாயினும் அது பெரும் நோயின் குறியே .பழக்கம் ,வழக்கம் எதன் பொருட்டும் நோய்க்குறிக்கு இடம் தராதீர் !

ஓடிக்கொண்டே இருங்கள் ! மாற்றங்களை உள்வாங்கியபடியே , தகவமைத்தபடியே…. இலக்கு மட்டும் உன்னதமாக இருக்கட்டும் !!

-         சு.பொ.அகத்தியலிங்கம் .




sorkolam 6

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம் .6.

முட்டை அழுகினால் சற்று தாமதமாக அப்புறப்படுத்தினும் கேடொன்றும் நிகழ்ந்துவிடாது .

தக்காளி அழுகினால் உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும் ; இல்லையேல் கூடைத் தக்காளியும் அழுகிவிடும் .

முட்டையும் அழுகியது ,தக்காளியும் அழுகியது ஆயினும் இரண்டும் ஒருப்போல் இல்லை . கையாளுவதற்கு ஒரு பக்குவம் தேவை .புரிதல் தேவை .

சமூக உளவியலும் அப்படித்தான் முடை நாற்றமெடுக்கும் பல அழுகல் சித்தாந்தங்களின் குவியலாக உள்ளது .தூய்மைப் படுத்த வேண்டும் .

எங்கிருந்து தொடங்குவது என்பதே அடிப்படையானக் கேள்வி .எங்கே தொட்டாலும் மினனதிர்ச்சி ஏற்படும் .அளவும் தாக்கமும் மாறுபடும் .

 ‘மானுடம் வென்றதம்மா’ எனக் கவிபாடும் பரந்த இதயத்துடன் மானுடம் ஒன்றுபட எவை எவை தடை என ஓர்ந்து நொறுக்குதல் ஓர் புறம் .

பேயிருட்டையும் ஓர் கணத்தில் கொல்லும் தீபச் சுடராய் முயன்று  அறிவொளி ஏற்றுதல் இன்னோர் புறம் .

நல்லது அல்லது பகுத்துப் பார்க்கும் பார்வையைத் தொலைத்து ; ஒரு கலயம் கள்ளுக்கு ஆசைப்பட்டு குடியிருக்கும் வீட்டுக்கு தீ வைக்கும் படித்த மூடரை தீமையின் கருவென அறிந்து அகற்றுக விரைந்து .

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதென ஓருத்தர் ஆவேசம் கொண்டு பொருதும் வேளையில் ; அவர் வேட்டியை கோவணத்தை உருவி தனக்கென உரிமை கொள்வேன் அழுகிய தக்காளியினும் அழுகிய மனம் கொண்டோன். ஆபத்தின் மூலவேர் .

இல்லாதிருப்பது இரக்கத்திற்குரியதே . தேவையை அடைய தேடிப் பயணித்தல் உயிர்த்தலின் பொருட்டே .

ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் கோடாரிக் காம்பாய் தீட்டிய மரத்தை பதம் பார்த்தல் அறமும் அன்று .மனிதமும் அன்று .

கொல்லும் வறுமையிலும் போராட்ட துணையாகு ! மானுடம் வெல்லும் வழி அது ஒன்றே .இன்றும் .என்றும் .

-         சு.பொ.அகத்தியலிங்கம்.



corkolam 5

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .5. அந்த நாய்க்குட்டியின் வலது முன்னங்கால் ஒடிந்து தொங்குகிறது .வாயிலும் பெரிய கிழிசல் . ஒற்றைக்காதும் பிய்ந்து கிடக்கிறது . உடல் முழுக்க அழுக்கு அப்பியுள்ளது . அந்த நாய்க் குட்டிக்காகத்தான் இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை .அடம் பிடித்து அழுகின்றன . வேறு அழகழகான புதிய நாய் பொம்மைகள் இருந்தாலும் பழைய உடைந்த நாய்க்குட்டி பொம்மை மீதே குழந்தைக்கு அலாதி பாசம் . அன்புக்கு ஊனம் தடையல்ல ; அழகும் பொருட்டல்ல. அந்த காலொடிந்த நாய் பொம்மைக்கு முத்தம் ஈந்து குதுகலிக்கிறது குழந்தை . அது மட்டுமல்ல உடைந்த பேனா மூடி , நசுங்கி கிடக்கும் பழைய தகர டப்பா , பற்பசை வாங்கிய அட்டைப் பெட்டி ,சக்கரம் கறன்றுவிட்ட கார் பொம்மை , உருக்குலைந்து கிடக்கும் குட்டி பாப்பா பொம்மை இப்படி குழந்தையை ஈர்க்கும் ஒவ்வொன்றும் நம்மை ஏதோ சிந்திக்கத் தூண்டுகிறது . விலை உயர்ந்ததில் இல்லை ; விருப்பமானதைக் கொஞ்சி விளையாடவே குழந்தைகள் ஆர்வம் காட்டுகின்றன .கிடைக்காவிடில் அழுது புரண்டு அதை எடுத்துக் கொள்கிறது . அழகு பொம்மைகள் அலமாரியில் கொலுவிருக்க உடைந்த பொம்மைகளோடு படுக்கையில் உறங்கவும் ,சாப்பாடு ஊட்டவும் குழந்தைகள் எப்போதும் பிரியப்படுகின்றன . குப்பையாய்ச் சேர்ந்திருக்கும் உடைந்த பொம்மைகளை தூக்கி எறிந்துவிட அம்மா பலமுறை எண்ணியுள்ளார் .முயற்சித்துள்ளார் . தூங்கும் போது அவற்றை அள்ளிக் கொட்ட முயற்சித்த தாய் ,குழந்தை விழித்ததும் அழுமே என தன் முயற்சியில் தோற்றுப் போகிறாள். குழந்தைகளுக்கு எப்போதும் ஏன் ஒன்றைப் பிடிக்கிறது .காரணமில்லை. .பிடிக்கிறது .அவ்வளவுதான் .அவர்களின் உலகமே தனி. குழந்தைகளின் கட்டற்ற அன்பையும் பிரியத்தையும் வளர வளர எங்கே தொலைத்து விடுகிறோம் ? கொஞ்சம் வெட்கத்தையும் கவுரவத்தையும் விட்டு குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளலாமே ! சு.பொ.அகத்தியலிங்கம்.

sorkolam 4

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .4. “நாற்காலியைத் தேய்க்கிறான் ,நாற்காலிப் பைத்தியம் ,நாற்காலித் திமிர் ,நாற்காலி ஆசை, நாற்காலி சதி ,நாற்காலி வெறி இப்படி என்னைக் குற்றம் சொல்கிறீர்களே நியாயமா ?” “ நான் என்ன பிழை செய்தேன் ? மூடன் உட்கார்ந்தாலும் அறிஞன் உட்கார்ந்தாலும் நான் வேறுபாடு பார்ப்பதில்லை.” “ குபேரன் உட்கார்ந்தாலும் பிச்சைக்காரன் உட்கார்ந்தாலும் நான் பிரித்தறிவதில்லை.” “குற்றவாளி உட்கார்ந்தாலும் அப்பிராணி உட்கார்ந்தாலும் நான் பேதம் பார்ப்பதில்லை . யோக்கியன் அயோக்கியன் எல்லாம் எனக்கு ஒன்றுதான்” “இற்று ஒடியும் வரை என் மீது அமர்வோரை சுமப்பதே என் பணி . நீங்களே உடைக்காத வரை முகத்தைச் சுழிக்காமல் , வெறுப்பைக் காட்டாமல் உழைக்கிறேன். உங்களின் ஆன்மீக அகராதிப்படி நான் ‘கர்ம யோகி’.என்னைப் பழிக்கலாமா ?” “ சரி,சரி நாற்காலி ! நீ ரொம்பவும் அளக்காதே ! உனக்காக நடக்கும் சண்டைகளும் அட்டூழியங்களும் நீ அறியாததா ?” “ குசு போட்டாலும் , குசுகுசுவென ரகசியம் பேசினாலும் நீ அறிவாயே ! என்றைக்கேனும் அதை உரக்கச் சொன்னது உண்டா ?” “ நான் மரக்கட்டை .எனக்கு உயிர் இல்லை .உணர்ச்சி இல்லை .ஆனால் இரத்தமும் சதையும் உயிர்துடிப்பும் உள்ள எத்தைனையோ பேர் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளைக் கண்டு உதட்டைக்கூட அசைக்காமல் மவுனம் காக்கிறார்களே ! அதற்கு என்ன சொல்கிறீர்கள் ?” “ என்னிடம் பதில் இல்லை .உன் முன் தலைகுனிகிறேன் ..” என்னுள் கேள்வி விஸ்வரூமெடுத்தது , “ தவறு நாற்காலியிடமா ? சகித்து சகித்து ஜடமாகிப் போன நம்மிடமா ?” சு.பொ.அகத்தியலிங்கம்.

சொற்கோலம்.3

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .3. “உஷ் ! சத்தம் போடாதே !” குழந்தைகளை அதட்டினாள் அம்மா. அமைதி திரும்பியது போல் தெரிந்தது . ஆனால் கொஞ்ச நேரம்தான் .மீண்டும் குதூகலாமாய் அவர்கள் கூச்சலிட்டனர் . வீட்டில் கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது . நோய்வாய்ப்பட்ட பெரியவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர் . பெரிய பிள்ளைகள் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கின்றனர் . அம்மா புலம்பினாள் . மீண்டும் அதட்டினாள் . “ போம்மா ! நாங்க விளையாடுகிறோம் …” எனச் சொல்லிக் கொண்டே கோரஸாக கூச்சலிட்டனர் குழந்தைகள் . அம்மா பொறுமை இழந்தாள் . ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்தலானாள் . குழந்தைகள் பிடிகொடுக்காமல் ஓடினார்கள் .கையில் சிக்கிய பொடியன் காதைத் திருகினாள் அம்மா .அவன் ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான் . மற்ற குழந்தைகளும் கூடவே அழத் தொடங்கினர் . இப்போது அம்மா சமாதானம் செய்வதில் இறங்கினாள் . மீண்டும் குழந்தைகள் உற்சாகமாய் கூச்சலிட்டபடி விளையாடத் தொடங்கினர் . உரிமைகளை ஒரு போதும் யாரும் நசுக்கவோ பறிக்கவோ முடியாது .அடக்குமுறையினால் சற்று அடங்குவதுபோல் தெரிந்தாலும் ; அந்த அமைதி அற்ப நேரமே ! குழந்தைகள் மனித உரிமைப் பாடத்தை அவர்களின் வழியில் சொல்லியபடியே ஆரவாரம் செய்தனர் . அமைதியைவிட இரைச்சல் மேலானது அல்லவா ?