Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

எந்தக் கோயிலுக்கு போனால்… சிறுகதை .10.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .10.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 

எந்தக் கோயிலுக்கு போனால்…

 

 

அன்றாட அலுவலக பரப்பை சொற்களில் சொல்லிவிடவே முடியாது .பணியாற்றுகிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் . அலுவலகம் திறக்கும் முன்பே வந்து காத்திருந்து ,காலை டிபனையே அலுவலகத்தில் சாப்பிடும் வேணுகோபால் முதல் .அரக்க பரக்க ஓடிவந்து அட்டெண்டன்ஸ்சை குளோஸ் செய்வதற்கு முன்னால் கையெழுத்திடும் ராமசுப்பு , சியாமளாவரை எல்லோரும் எந்நாளும் அப்படியேதான் இருக்கிறார்கள். மாற்றம் பெரிதாக இல்லை .

 

ஆனாலும் முக்கியமாக ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது .முன்பு வந்தததும் கூடிக்கூடி கதை அடித்தபின்னர்தான் பணி தொடங்கும் .இப்போது வந்து உட்கார்ந்ததும் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தால் எப்போது பணியைத் துவங்குவார் என சொல்ல முடியாது . இந்த தனியார் அலுவலகத்திலேயே இதுதான் நிலைமை எனில் அரசு அலுவலகத்தில் சொல்லவே வேண்டாம்.

 

இன்றும் அப்படித்தான் . சியாமளா வந்ததும் வாட்ஸ் அப்பில்  வந்த ஒரு செய்தியை பக்தி பரவசத்துடன் படித்தாள் . கர்ம சிரத்தையோடு அதை சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினாள் . கொஞ்ச நேரத்தில் அந்தச் செய்தி அவ்வலுவலக விவாதப் பொருளானாது .

 

 “சியாமளா மேடம்! அனுப்பின செய்தியை படிச்சீங்களா ?” பக்கத்து இருக்கை நாகபூசனத்திடம் கேட்டார் ராமசுப்பு.

 

“ படிச்சேன் … அது என்ன தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் பவரு?”ன்னு நாகபூசனம் கேள்வியை வீச ,

 

“ எங்க திருநெல்வேலியில கோயில் இல்லையா ? அங்குள்ள சாமிக்குகெல்லாம் பவர் இல்லையா ? ஒவ்வொரு ஊர்லேயும் கோயில் இருக்கே .. தஞ்சாவூருக்கு என்ன கொம்பு ?” கோமதி உரையாடலில் குதிச்சாள்

 

 

 “ இங்க இருக்குற திருச்செந்தூர் முருகனுக்கும் , வடபழனி முருகனுக்கும் ,  காளியம்பாளுக்கும் பவர் இல்லேன்னுதானே திருப்பதிக்கும் சபரிமலைக்கும் இங்கிருந்து படை எடுக்குறாங்க … விச் காட் இஸ் பவர்புள் ?” வேணுகோபால் கேள்வி .

 

“ நாத்திகன் இந்த சாமி அந்த சாமின்னு கூறுபோடலை இந்த ஆத்திகன்தான் எல்லா சாமியையும் ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க ..” ராமலிங்கம் சொல்ல அலுவலகத்தில் கலகலப்பு கூடியது .

 

அந்த நேரத்தில் டீ கொண்டு வந்த அலமேலு ,” காலையில இருந்து எல்லோரும் போண நோண்டி பேசிக்கிட்டே இருக்கீங்க என்னங்க சமாச்சாரம் ?”

 

அலமேலுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ரெஜினா அலமேலுக்கு விளக்கினாள்.

 

“ கருத்தரிக்க அதிலும் பெண் குழந்தை அல்ல புத்திர பாக்கியமே கிடைக்க  கருவளர்ச்சேரி எனத் தொடங்கி ,கல்விபெற ,பதவிபெற ,செல்வம்பெற ,குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க ,வழக்குகளில் வெற்றி கிடைக்க , கிரக பெயர்ச்சிக்கு ,என தஞ்சாவூர்ல ஒவ்வொரு கோயிலா சொல்லிட்டு நீண்ட ஆயுள் பெற திருக்காடையூர்னு கடைசியா சொல்லி  தஞ்சை மாவட்டத்தில இருபது கோயில்கள் பட்டியல போட்டு மகிமையை அளந்துவிட்டுருக்காங்க  அதுதான் பேச்சா கிடக்கு…”

 

 “ ஆமாம் இருபது கோவில் இல்ல எண்பது கோயில் ஆனாலும் எங்க பொளப்பு இப்படித்தான் என சலித்துக் கொண்டே ..” அலமேலு நகர்ந்தார் .

 

“ சார்! திருவண்ணாமலை ,திருப்பரங்குன்றம் போகாமல் திருக்கார்த்திகைக்கு இங்கே உட்கார்ந்திருக்கீங்க …” என ராமசுப்புவை நாகபூசனம் வம்புக்கிழுத்தார் .

 

மெல்ல குனிந்து காதோடு கிசிகிசுத்தார் ராமசுப்பு ,” பினான்சியல் டைட் .. அங்க கூட்டம் வேற அதிகம் இருக்கும் …”

 

 “ அங்க என்ன சார் கிசிகிசு ! சபைக்கு சொல்லுங்க ராமலிங்கம் சந்தியில் இழுத்துவிட்டார் .

 

 “ இரண்டு நாள் லீவு போட முடியுமா ? லாஸ் ஆப் பே ஆகிடும்…”ன்னு இன்னொரு உண்மையை போட்டுடைத்தார் ராமசுப்பு .

 

 “ அதத்தான் லைவ் காட்டுறானே அதப் பார்த்தால் போதாதா ? மனுஷந்தானே அங்கே மலையில ஏறி விளக்க ஏற்றுறான் …. அங்க போயி கும்பிட்டாத்தான் சாமி ஏற்பாரா ?” வேணுகோபால் சந்தேகம் .

 

 ஏன் வேணு ! தோஷத்துக்கு பரிகாரம் இருக்காம் , கிரக பெயர்சிக்கு பரிகாரம் இருக்காம் … அப்படின்னா ஐயரு சொல்ற மந்திரம்தாம் எல்லாவற்றையும் மாற்றுன்னு சொல்றாங்களோ ….”

 

 “ மந்திரத்தால ,பரிகாரத்தால ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது ; சும்மா வெட்டிச் செலவு ; அதிகக் கடன் அம்புடுத்தான்..”

 

 “ ஆமாம் ஆமாம் இவரு பெரிய ஞானி சொல்றாரு ! எல்லாமே ஒரு மன தைரியத்துக்குத்தான் .கோயில் குளம்னு போய்வந்தால் மனசு தெளிவாகும் நல்லா யோசிச்சு வழி காணலாம் அம்புடுத்தான் .. பரிகாரம்ங்கிறதும் ஒரு சைக்காலஜிகல் டிரீட்மெண்ட்தான்…” ராமசுப்பு சயின்சையும் ரிலீஜியஸ் செண்டிமெண்டையும் கலந்து கட்டி சாமாதானம் சொன்னார் .

 

“இப்படி சயின்ஸையும் மூடத்தனத்தையும் முடிச்சு போட்டு விக்கிறது இப்ப பேஷன்… சந்திரமுகின்னு ஓரு படத்தில கூட மனோதத்துவதையும் மந்திரவாதியையும் கூட்டணியாக்கி ஒரு உடான்ஸ் விட்டிருப்பாங்க … அது சினிமா … இப்ப நெஜத்திலேயே அப்படி டகால்ட்டி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க..” வேணுகோபால் சொல்ல .

 

 “ நீங்க அது எப்படி ஏமாற்றுன்னு சொல்லலாம்..” சியாமளா சண்டைக்கு வந்தாள் …

 

”வைபிரேஷன் ,பாசிட்டிவ் என்ர்ஜி ,சைக்காலஜி எல்லாம் கலந்து விக்கிற சாமிகளா உங்க பவரைக் காமிச்சு விலையைக் குறையுங்க , எல்லோருக்கும் வேலை கொடுங்க , கொரானாவை கேன்சரை தொற்றுநோய்களை விரட்டி அடிங்க …. நாங்களும் கோவிந்தா போட்டுட்டு போறோம்… காசு டைமும் வேஸ்ட் ஆகுதே தவிர இவற்றால என்ன பிரயோசனம் ?” ராமலிங்கம் தன் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

 

 “ ஆள விடுங்க ! சீக்கிரம் ஆபீஸ் வேலையை முடியுங்க … மேனஜர் வர்ற நேரம்..” ராமசுப்பு நல்ல பிள்ளை அவதாரம் எடுத்து விவாதத்தைத் தவிர்த்தார்.

 

“ ஆமா ஆமாம் ! இன்னிக்கு ஏதோ முக்கிய அறிவிப்பு இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காரு …”

 

“ சம்பள உயர்வா இருக்குமோ ?”

 

“ ஏதோ பெரிய இடியை இறக்கப் போறாரு தயாரா இருங்க “

 

ஆளுக்கு ஆள் பேச மெல்ல அவரவர் பணியில் மூழ்கினார் .

 

அன்று வெள்ளிக் கிழமை . ராகுகாலம் 10.30 -12 எனவே வழக்கம் போல் ராகுகாலம் தாண்டியே மேனஜர் உள்ளே நுழைந்தார் .

 

மேனஜர் வந்த சிறிது நேரத்தில் சுற்றறிக்கை வந்தது ; அது நோட்டிஸ் போர்டிலும் ஒட்டப்பெற்றது …

 

கம்பெனி பொருளாதார நிலவரம் மோசமாக உள்ளதால் . ஊழியர் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க உள்ளோம் . விருப்ப ஓய்வில் போவோர் போகலாம் .அதற்கு தனி பேக்கேஜ் உண்டு . இல்லாவிடில் வயசு ,சர்வீஸ் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் ..” என மொட்டையான அறிவிப்பு

“எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகை . கனத்த மவுனம் .பெருமூச்சு . வேலைபோனால் அடுத்து என்ன செய்வது ? கடன் ,குழந்தை படிப்பு , இஎம்ஐ ,வட்டி எல்லாம் நினைவுக்கு வர ஒவ்வொருவரும் தலை சுற்ற உடகார்ந்தனர் .

 

ராகுகாலம் தாண்டி மேனஜர் வந்தாலும் செய்தி என்னமோ எமகண்டமாப் போச்சே

 

மதிய உணவு இடை வேளை .எல்லோரும் சாப்பிட மறந்தனர் .ஆட்குறைப்பை பேசிப்பேசி சோர்ந்தனர் .லீவிலிருந்த சங்கப் பொருளாளர் யூசுப்பும் வந்து சேர்ந்தான் .ராமலிங்கம் ,யூசுப் ,ரெஜினா எல்லோரும் கூடிப் பேசினர்.சங்கத் தலைவரோடும் பேசினர் .பின் வாயில் கூட்டம் நடைபெற்றது .

 

“ கம்பெனி கொரானா காலத்திலேயும் லாபத்திலதான் ஓடி இருக்கு ,இந்த ஆண்டும் லாபம்தான் .அப்புறம் ஏது பொருளாதார நெருக்கடி ? இன்னும் அதிக லாபம் வேணும்னு நம்ம வயிற்றில அடிக்கிறாங்க .. சட்டப்படியும் நம்ம சக்தியைத் திரட்டியும் ஒரு கை பார்ப்போம் .நம்பிக்கையோடு இருங்க ..” என ராமலிங்கம் பேசினார் .

 

“ கைவிடு ! கைவிடு ! ஆட்குறைப்பைக் கைவிடு !” என்கிற முழக்கம் ஓங்கி ஒலித்தது .வழக்கமாய் இக்கூட்டங்களில் நழுவும் சியாமளாவும் வேறு சொலரும்கூட பங்கேற்றனர் .

 

சிலர் தாமதமாகச் சாப்பிட்டனர் . பலர் சாப்பிடவும் மனமின்றி இருக்கைக்கு திரும்பினர் .

 

“ காலையில கோயில் லிஸ்ட் போட்டீங்களே மேடம் ! எந்த கோயிலுக்கு போனா ஆட்குறைப்பு போகும்னு ..” அலமேலு அப்பிராணித்தனமாகக் கேட்க..

 

வேதனை கலந்த சிரிப்பு எங்கும் பரவியது .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

6/12.2022.

 

 

பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .9.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


பூனைக்கு யாராவது

மணிகட்டத்தானே வேண்டும்.

 

 

 

 

அலுவலகத்தில் பணி புரியும் வந்தனா விபத்தில் கையொடிந்து படுக்கையில் கிடந்தாள் . அலுவலகம் வரும் வழியில் ஸ்கூட்டர் சாலையிலுள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்ததால் இடது கையில் முறிவு ; சிறிய அறுவை சிகிட்சைக்குப் பின் வீட்டில் மருத்துவ விடுப்பில் ஓய்வில் இருந்தாள் .

 

ராமலிங்கம் ,ராமசுப்பு .ரெஜினா ,ஹேமா ,சியாமளா ,பத்மா .வேணுகோபால் , நாகபூசன் எல்லோரும் பார்க்க வந்திருந்தனர்.

 

 “ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்க …” என்றாள் சியாமளா.

 

 “ ஹெல்மட் போட்டிருந்ததால தலையும் உயிரும் தப்பிச்சுன்னு சொல்லணும்..” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ ஏதோ இவ நல்ல நேரம் இதோடு போச்சு அப்ப ஏதாச்சும் தண்ணீர் லாரி வந்திருந்தா ?” பத்மா அதிர்ச்சியை சொன்னாள் .

 

 “ சனிப் பெயர்ச்சி தன் கைவரிசையைக் காட்டி இருக்கு…  கடக ராசிக்கு இந்த சனிப் பெயர்ச்சி நல்லதில்லை …” ராமசுப்பு தன் சோதிடப் புலமையையும் அக்கறையையும் சேர்ந்து கண்ணீர் விட்டார் .

 

 “ கை கொஞ்சம் குணமானதும் ஒரு எட்டு திருநள்ளாறு போய்வந்திரு வந்தனா !”என சியாமளா அக்கறையைக் குழைத்து அலோசனை நல்கினாள்.

 

“ உங்க மாமியார்ட்ட சொல்லி குலதெய்வத்த வேண்டி மஞ்ச துணியில காச முடிஞ்சு வை..” பத்மா தன் பங்கிற்கு அட்வைசினாள்.

 

 “ இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிடணும் … நீ நான்வெஜ்தானே … ஆட்டுக்கால் சூப்பு வச்சு குடி …” ரெஜினா யோசனை .

 

 “ அப்பாடா !ரெஜீனா நீ ஒருத்திதான் உருப்படியா யோசனை சொல்லியிருக்க..” என ராமலிங்கம் சொன்னதும் எல்லோரும் முறைத்தனர் .

 

 “ உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம் … இவா கடக ராசி இந்த சனிப் பெயர்ச்சி கரெக்டா வேலையைக் காட்டி இருக்கே !” என ராமசுப்பு சந்தடி சாக்கில தன் அபிப்பிராயத்துக்கு வலு சேர்க்க முயற்சித்தார் .

 

 “ உன் ராசிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகுதுன்னு  நேற்றுதானே சொன்னே இண்ணைக்கு உனக்கு சஸ்பென்சன் ஆர்டர் வந்திருக்கே அதுக்கு என்ன சொல்லுவே …???” ராமலிங்கம் திருப்பி அடிக்க ,

 

“ இத அவரு சொல்லவே இல்லையே …” என ரெஜினா வருந்தினாள்.

 

“ ஆடிட்டின் போது ஸ்டாக் குறையுதுன்னு மெமோ கொடுத்திருக்காங்க … அதுக்கு இவரு கொடுத்த பதில் சரியா இல்லேண்ணு இப்போ சஸ்பென்சன் கொடுத்திருக்கா …” என சியாமளா சொன்னாள்

 

பேச்சு வந்தனாவிடமிருந்து ராமசுப்பு பக்கம் திரும்ப  , வந்தனா சிரித்தாள் .

 

“ அதை விடுங்க , கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்திருக்காரு .. இன்னொரு தரம் யோசிச்சு பதில் சொல்லி சஸ்பென்சன கேன்சல் செய்ய வைக்கலாம்…” ராமலிங்கம் சொல்ல நிம்மதி பெருமூச்சு சூழந்தது .

 

எல்லோருக்கும் காபி வந்தது .குடித்துவிட்டு . ஒரு சிறு தொகையை ஒரு கவரில் போட்டு வந்தனாவிடும் கொடுத்தனர் .

 

 “ எதுக்குங்க காசெல்லாம் கொடுக்கிறீங்க …” என வந்தனா கேட்டாள் .

 

“ பார்க்க வரும் போது ஆப்பிள் வாங்கலாம் ,ஆரஞ்சு வாங்கலாம் ,காம்பிளான் வாங்கலாம்னு ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க … ராமலிங்கம் சார்தான் சொன்னாரு காசு கொடுக்கலாம்னு…” பத்மா உண்மையைப் போட்டுடைத்தாள்.

 

“அங்க பாருங்க ராமலிங்கம் சார் சொன்னமாதிரி  வீடு முழுக்க பழமும் ஹார்லிக்சும்தான்  அடைஞ்சு கிடக்கு … நோயாளிக்கு என்ன தேவை  என்ன இல்லைன்னு தெரிஞ்சுக்காமல் எதையோ வாங்கிப் போறது  சடங்குத் தனம்னு சார் சொன்னது சரிதானே…” ஹேமா சொல்லவும் ,எல்லோர் தலையும் ஆட்டினர் .

 

 “ சார் ! எனக்கு காச வாங்க ஒரு மாதிரியா இருக்கு ..” என்றாள் வந்தனா .

 

“ பார்த்தேளா ! அதுக்குத்தான் நான் அப்போதே சொன்னேன்..” என ராமசுப்பு இழுத்தார் .

 

“ நீங்க வந்ததே போதும் … காசு அது இதுன்னு எதுக்கு ?” வந்தனா சொல்ல ,

 

 “ அதுக்காக கையை நீட்டிட்டா வரமுடியும் ?” வேணுகோபால் கேட்டார் .

 

“ அதுதாம் மெடிக்கல் இன்சுரன்ஸ் இருக்கில்ல…” என்றாள் வந்தனா.

 

 “ அதுல 65 அல்லது 75 பிரசண்டேஜ் தருவாங்க மீதி நாமதான கட்டணும் .. அதுலேயும் தனியார் ஹாஸ்பிடல்ன்னா இன்சுரன்ஸ்ன்னு சொன்னாலே பில் கண்டமேனிக்கு போட்டுறான் … நம்ம பர்ஸ புடுங்காமல் ட்டிரீட்மெண்ட் இல்ல..” நாகபூசனம் விளக்கினார் .

 

 “ ஆமாம் … ஆமாம் ..” என எல்லோரும் தலையாட்டினர் .

 

 “ கெளரி பொண்ணுக்கு எப்போ கல்யாணம் … நான் வரமுடியாது .. என் பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க கொடுத்திடுறேன்..” வந்தனா கேட்டாள் .

 

 திருமண கிப்ட் என்ன கொடுக்கலாம்னு பேச்சு திரும்பிச்சு ..

 

ஆளுக்கு ஒண்ணு சொல்ல …  “ராமசுப்பு இடையிட்டு மொதல்ல அவர்ட்ட கேளுங்கப்பா ன்னு ” பால ராமலிங்கம் பக்கம் தள்ளிவிட்டார் ராமசுப்பு.

 

வேணுகோபாலண்ணேன் உங்க வீட்டு கிரஹ பிரவேசத்துக்கு எத்தனை கடிகாரம் வந்திச்சுன்னு ராமலிங்கம் கேட்க …”

 

“ 18 கடிகாரம் 21 மில்க் குக்கர் ..” வேணுகோபால் பட்டியலை சொல்லத் தொடங்க …

 

“ வர்ற கிப்டெல்லாம் இப்படித்தான் வருது …” ராமசுப்பு அலுத்துக் கொண்டார் .

 “ அட ! எந்த பப்ளிக் பங்க்‌ஷனுக்கு போனாலும் ஏதோ மொமண்டம் ,சீல்டுன்னு ஒண்ணக் கொடுத்திடுறாங்க .. சால்வன்னு ஒண்ணை போத்திடுறாங்க ..அதெல்லாம் எதுக்கு ? அதனாலே என்ன உபயோகம்? இன்னைக்கு வரத் தெரியல .. எடத்தத்தான் அடைக்குது ” என ராமலிங்கம் சொல்ல எல்லோரும் அவரவர் பங்குக்கு பேசித் தீர்த்தனர் .

 

“ மரியாதை ,அன்பு ,கவுரவம் ,பாராட்டு  எல்லாம் சரி ! பணத்தை கொட்டும் போது எல்லோரும் யோசிச்சா நல்லது … இதத் திணிக்க முடியாது … நம்ம பண்பாடு மாறணும் …”

 

“ சம்மந்தப்பட்டவங்கள் கேட்டு செய்யலாம்னா அதுக்கும் இடமில்லை … கேட்க நமக்கு தயக்கம் , சொல்ல அவங்களுக்குத் தயக்கம் … என்ன செய்ய ?”

 

“ நான் திண்டுக்கல் புத்தக திருவிழாவுக்கு பேசப் போயிருந்தப்போ … மொதல்ல சுற்றிப் பார்த்தேன் … கூடவந்த விழா ஒருங்கிணைப்பாளர் ,” சார் ! நீங்க ஏதாவது உங்களுக்குத் தேவையான புத்தகத்தை சொல்லுங்கோ என்றார் … நான் தயங்கினேன் .. பின் சொன்னேன் … அதையே நினைவுப் பரிசாகக் கொடுத்தாங்க…” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ சார் !கெளரி பொண்ணு கல்யாணத்துக்கு காசில்லாமல் திணறுறா … நான்கூட ஒரு லோணுக்கு அரேஞ் பண்ணினேன் … பேசாமல் காசாக கெளரி கையில கொடுத்திரலாம் …” ஹேமா சொல்ல அதுவே முடிவானது .

 

ஆபிஸ்ல எல்லோருக்கும் இப்படி சொல்லியே லிஸ்ட் எடுப்போம்னு ராமலிங்கம் முடித்துவைத்தார் .

 

 “ எப்பம்மா ஆபிஸ் வருவே ..” ராமசுப்பு கேட்டார் .

 

“ சனிக்கிழமை கட்ட பிரிச்சிருவாங்க … அப்புறம் பிசியோதெரபிதான் … அப்புறம் வரவேண்டியதுதான் .. திங்கள் அல்லது புதன் ..”

 

“ புதன்தான் நல்லநாளு அண்ணைக்கே ஜாயிண்ட் பண்ணு … டைம் பார்த்துச் சொல்றேன் … மொதல்ல கோயிலுக்கு போயிட்டு வந்திடு” ராமசுப்பு விடாமல் தன் பஞ்சாங்க யோசனையைச் சொன்னார் .

 

ராமலிங்கம் சத்தம் போட்டு சிரித்தார் .

 

“ ஏன் சார் ! சிரிக்கிறீங்க ! இதெல்லாம் நம்புறவங்களுக்குத்தான் புரியும்” என ராமசுப்பு குரலை உயர்த்தினார் .

 

 “ சரி ! நம்புங்க ! விரல்ல அஞ்சு சொடக்கு போடுங்க எல்லோரும் ..” ராமலிங்கம் சொல்ல ,

 

“ ஏன் ? ஏன் ?” என எல்லோரும் கேட்க,

 

 “ பரவாயில்லையே பகுத்தறிவு வந்திடிச்சே ! போடுங்க சொல்றேன்..”

 

எல்லோரு சொடக்கு போட்டனர் .

 

 “ நாம இங்க சொடக்கு போட்ட நேரத்தில யாருக்கோ எங்கேயோ குழந்தை பொறந்திருக்குமா இல்லையா ?”

 

“ இதென்ன கேள்வி .. நிச்சயம் பிறந்திருக்கும்”

 

“ யாரோ எங்கேயோ செத்திருப்பாங்களா இல்லையா ?”

 

“ ஆமா ஆமா “

 

“ அப்போ ! இது யாருக்கு நல்ல நேரம் யாருக்கு கெட்ட நேரம் ?”

 

 “ ஆள விடு ராமலிங்கம் ! புறப்படுவோம் நேரம் ஆகிட்டே போகுது … வந்தனா நாங்க வரட்டா …”

 

எல்லோரும் கிளம்பினர் .

 

வழியில் ரெஜினா ஹேமாவிடம் சொன்னாள் , “ ராமலிங்கம் சார் ! சொல்றது சரிதான் ஆனாலும் ராகு காலம் ,எமகண்டம் ,சுபமுகூர்த்தம் இதெல்லாம் பார்க்காமல் நாம எதாவது செய்ய முடியுதா ? நாம நினைச்சாலும் வீட்டிலுள்ளோர் .. சுற்றி இருப்பவங்க பாடாய்ப்படுத்திவிடுறாங்களே … என்ன செய்ய ..”

 

 “ கஷ்டம்தான் ஆனாலும் இந்த பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்..” என்றார் அருகில் இருந்த வேணுகோபால் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

4/12/2022.

 

 


 

 


சிறுகதை .8.காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு ?

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .8.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


காதல் என்றால்

என்னவென்று தெரியுமா

உனக்கு ?

 

 

 

 அண்ணா ! உங்க மருமக செய்யுறது நியாயமா ? சரியா ? அவளுக்கு சொல்லுங்க…” என பாக்கிய லட்சுமி அழுத்திச் சொன்னாள் .

 

“ பாக்கியா !என்னம்மா ! தலையும் புரியாம வாலும் புரியாமா சொல்ற…” ராமலிங்கம்

 

 “ அதுதான் உங்க மருமக மணிமேகலையை பெண் பார்க்க ஒரு குடும்பத்திலிருந்து வர்றாங்க … ஜாதகம் பொருந்திப் போச்சாம் .. அடுத்தமாசம் வர்றேங்கிறாங்க … இவ என்னடான்னா யாருட்ட கேட்டு ஜாதகத்த கொடுத்த என்னை யாரும் பார்க்க வேண்டாம்னு முரண்டு பண்றா..உங்க மச்சான் கோவத்தில  இருக்கார்…”

 

   பாக்கியா விடு நான் அவள்ட்ட பேசிட்டு முடிவு செய்யலாம் ..அவ்வளவுதானே !”

 

 “ ஆமா இவரு கலெக்டரு இவரு உத்தரவு போட்டா ஊரே நடுங்கும் … பொறந்தப்பவே மணிமேகலைன்னு பேரு வைக்காத இவவாழ்வு கண்ணாலம் காட்சி இல்லாத மணிமேகலை மாதிரி ஆயிடும்னு சொன்னேன் .. கேட்டாளா ! எங்க அண்ணன் சொல்ற பேரு நல்லா இருக்கு தமிழ்ல இருக்கு மாடர்னாயிருக்குன்னு சொல்லிட்டு இப்ப புலம்பினா எப்படி ?” மூச்சுவிடாமல் மச்சான் குமாரவேலின் அம்மா காளியம்மா புலம்பினார் ..

 

 “ ஆமாம் ! நீங்க உங்க பொண்ணுக்கு லட்சுமின்னு பேருவச்சீங்க அவ வாழ்க்கை சீரழிஞ்சு கிடக்கு.. பேருல என்ன கிடக்கு ?” என பாக்கியா எதிர் கச்சேரியை முணுமுணுக்க … காளியம்மா காதில் விழுமுன் ,

 

“ அம்மா ! சும்மா இருக்க மாட்ட … இந்தக் கழுத யாரையாச்சும் லவ் பண்ணுதோ என்னமோ ..சொல்லித் தொலைக்கவும் மாட்டேங்கிறா..” குமாரவேல் சொல்லி மூள இருந்த பெரும் போரைத் தடுத்தார்.

 

“ நானும் தனியா பலமுறை கேட்டுட்டேன் … கூடவே திரியுற அலெக்ஸ விரும்புறியான்னும் கேட்டுட்டேன்… இல்ல அவன் பெஸ்ட் பிரண்டுங்கிறா … லவ் யாருட்டேயும் வந்துட்டா சொல்றேன்னு நழுவுறா”

 

 “ மச்சான் ! விடு  மாப்பிள வீட்டுக்காரங்க இன்னும் வர்ற தேதி சொல்லலைல அதுக்கு  முன்னாடி நான் மணிமேகலைட்ட பேசுறேன் … நீங்க யாரும் அவள்ட்ட இதைப் பற்றி பேசாதீங்க … மாப்பிள வீட்டுக்காரங்க கேட்டால் தாய் மாமாகிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு டேட்ட கன்பார்ம் பண்றோம்னு சொல்லி வைங்க ..” ராமலிங்கம் இப்படி சொன்னதும் குமாரவேலும் பாக்கியாவும் தலையசைத்தனர் . காளியம்மா பிலாக்கணம் வைத்தவாறு நழுவினார் .

 

கல்லூரியிலிருந்து மணிமேகலை உள்ளே நுழைந்தாள் .

 

 “ மாமா ! உங்க தங்கச்சி என்னப் பற்றி குற்றப் பத்திரிகை வாசிச்சிருப்பாங்களே ..” என மணிமேகலையே பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாள்.

 

 “ மேகல ! சொல்லமா இருப்பாரா ? அவளுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் பிஎஸ்சி முடிக்கட்டும் … அப்புறமா மேல படிக்கிறதா ? கல்யாணாமானு அவகிட்ட கேட்டுக்கலாம்னு சொல்லிட்டு இருக்கேன்…நீ வந்திட்டே…”

 

 “ மாமான்னா மாமாதான்” என ராமலிங்கம் கழுத்தை கட்டிப் பிடிச்சா மேகல..

 

 “நல்ல மாமா நல்ல மருமக.. அண்ணே ! உங்களுக்கு பிடிச்ச அடை அவியல் செய்யுறேன் எல்லாம் ரெடியா இருக்கு பத்து நிமிசம்தான்…” பாக்கியா சொல்ல ராமலிங்கம் தலையாட்டினாள்..

 

 “மாமா! நம்ம கொய்யா மரத்தில நிறைய பழம் …வாங்க பார்க்கலாம்” என மணிமேகலை அழைக்க ராமலிங்கம் உடன் போனார் . அங்கே பழம் பறிச்சாங்களோ இல்லையோ ஞாயிற்று கிழமை மாமாவும் மருமகளும் அத்தையோடு மெரினா பீச் போக பிளான் போட்டுட்டாங்க…

 

பாக்கியம் “ அடை ரெடி” என குரல் கொடுக்க வந்து சாப்பிட அமர்ந்தனர் .

 

ஞாயிற்று கிழமை மைதிலி ,ராமலிங்கம் ,மணிமேகலை மூவரும் மெரினா பீச் வந்தனர் . மாற்றுத்திறனாளிகளுக்கு பீச்சில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாதையை கண்டனர் . “ நல்ல முயற்சி” என ராமலிங்கம் சொல்ல . ஆம் என்பதுபோல் தலையாட்டினர் .

 

கூட்டம் இல்லாத இடத்தைப் பார்த்து உட்கார்ந்து பேசத்துவங்கினர் .

 

 “ தேங்காய் மாங்காய் பட்டாணிச் சுண்டல் , பஜ்ஜி ,போண்டா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போகுது பர்க்கர் பீஸா , பாணி பூரி ன்னு பீச்ச ஆக்கிரமிக்குது” என மைதிலி வருத்தம் தெரிவித்தாள் .

 

 “ ரொம்ப சரி ! அதுமட்டுமா ? விற்பவர் பேசும் மொழியும் இந்தியாக இருக்கிறது … பண்பாட்டு படை எடுப்பு நிகழ்கிறதோ என்னவோ ?” ராமலிங்கம் தன் வருத்தத்தைப் பகிர்ந்தார் .

 

 “ எங்க பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பை , மதுபாட்டில் மாநகராட்சி சுத்தம் செய்யுதான்னு சந்தேகமே வருது …” மைதிலி சுட்டிக் காட்ட,

 

“ கவர்ன்மெண்டும் இன்னும் அக்கறையோடு கவனிக்கணும் ,அதே நேரம் பொது மக்களும் நம்ம பீச்சு நம்ம சுத்தம்ன்னு குப்பையை தாங்களே எடுத்துப் போய் உரிய இடத்தில போடலாம்ல … குடிமகனுங்களுக்கு இதை எப்படி புரியவைக்கிறது.. “  ராமலிங்கம் அங்கலாய்ப்பு

 

 “ஜப்பான்காரன் காலபந்து ஆடி முடித்ததும் ஆள் ஆளுக்கு ஸ்டேடியத்தை சுத்தம் பண்ண கை குடுக்கிறான் ..அத பேஸ் புக்கில ஸ்டேட்டசா போடுறாங்க .. ஆனால் இங்க கடைப் பிடிக்கிறது இல்ல .. சுத்தம் செய்வது ஒரு சாதிக்கும் வீட்டுல பெண்களுக்கும்னு நம்ம பண்பாடு ஒதுக்கி வைத்ததின் கோரவிளைவு” என மணிமேகலை விளக்கம் கொடுத்தார்.

 

இளந்தலமுறையின் கூர்த்த பார்வையை ராமலிங்கமும் மைதிலியும் வியந்து தட்டிக் கொடுத்தனர் .

 

நாலய்ந்து இளம் பெண்களும் பையன்களும் சிரித்து அரட்டை அடித்து அவர்களைக் கடந்தனர் .

 

 “ ஓர் ஆணும் பெண்ணும் காதலராக இருக்க வேண்டும் அல்லது அண்ணன் தங்கைன்னு இருக்கணும் அப்படித்தானா ? ஏன் நண்பர்களாக இருக்கக் கூடாதா ? ..” திடீரென மணி மேகலை கேட்கவும் ராமலிங்கம் மகிழ்ந்தார் ; உரையாடலுக்கான வாசல் திறந்துவிட்டது அல்லவா ?

 

 “ மேகலா !தாரளமாக ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம் தப்பே இல்லை ..”

 

“ பின்ன ஏன் அலெக்ஸும் நானும் நண்பர்களென்பதை சந்தேகப் படுற மாதிரி அம்மா அவனை நீ லவ் பண்ணுறியான்னு கேட்குறாங்க …” மேகலா கேள்வியைச் சொடுக்கினாள்.

 

 “ அம்மா ! சந்தேகப் படலைம்மா … சந்தேகப்பட்டா நீ அவனோடு சுற்றுறத கண்டுக்காமல் இருப்பாளா ? உன் பாட்டி அடிக்கடி குத்திக் காட்டுறாங்க அதைக் கிளியர் பண்ணிக்கத்தான் அம்மா கேட்டாங்க … அப்பாவுக்கும் அவன் மேல் சந்தேகம் இல்லை … இன்னும் சொன்னால் அவன் மேல ரொம்ப நல்ல அபிப்பிராயம் வச்சிருக்கார் … ஆனால் பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வர்றார்ன்னு சொன்னதும் நீ கோவிச்சுக் கிட்ட இல்லை … அதுதான் யாரையோ லவ் பண்ணுறியான்னு சந்தேகப் படுறாங்க அதுதான் கேட்டாங்க …” ராமலிங்கம் சொன்னார் .

 

“ போங்க மாமா ! நான் இன்னும் படிக்கணும் … எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் .. எவனோ ஒருத்தன் திடீர் ஒரு நாள் வீட்டுக்கு வருவானாம் ஒரு நிமிடம் பார்ப்பானாம் … நானும் பார்க்கணுமாம் … அந்த ஒரு நிமிடத்தில என்ன தெரிஞ்சிக்க முடியும் … சும்மா அழகா இருந்தால் மட்டும் போதுமா ?”மணிமேகலை பொரிந்தாள் .

 

 “ மணி ! நீ சொல்றது சரிதாம்மா … ஆனா பொம்பளைங்களுக்கு வேற விதி … கல்யாணமே வேண்டாம்னு இருக்க முடியுமா ? அம்மா அப்பா சொல்றாங்கன்னு தலையாட்டத்தான் நம்ம பண்பாடு சொல்லிக் கொடுத்திருக்கு ..” மைதிலி சமாதானம் சொன்னாள் .

 

 “ அத்தை நீங்க மட்டும் சாதி பார்க்காமல் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… என்ன மட்டும் கல்யாண சந்தையில மாடு மாதிரி நிக்கச் சொல்றீங்க …” மணிமேகலை கோவத்தோடு பேச அத்தையும் மாமாவும் ரசித்தனர் .

 

“ சபாஷ் ! என் சிங்கக் குட்டி !உனக்கும் யாருட்டையாவது லவ் இருந்தா சொல்லு பேசி முடிச்சிருவோம்…”

 

 “ மாமா ! இருந்தால் மொதல்ல உங்கள்ட்டதான் கூட்டிட்டு வந்து நிற்பேன் … இந்த பெண் பார்க்கும் சடங்கு எனக்கு குமட்டலா இருக்கு ….ஏன் ஆண் பார்க்க அவங்க வீட்டுக்கு நாம் மொதல்ல போய் பல்லைப் பிடிச்சு பார்க்கக்கூடாதா …”

 

 “ போற போக்க பார்த்தா நீ பெரிய பெண்ணியப் போராளி ஆகிடுவே போலிருக்கு !” மைதிலி கேலி செய்ய,

 

“ மாமா ! நீங்கதான நெறைய புக்கஸெல்லாம் கொடுத்து படிக்கச் சொன்னீங்க ..ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதிய  ‘உலக வரலாற்றில் பெண்கள்’ பெரியார் எழுதிய  ‘பெண் ஏன் அடிமையானாள்’ ..இப்படி நீங்க  கொடுத்த எல்லா புக்ஸ்சையும் நானும் படிச்சேன் என் எல்லா பிரெண்ட்ஸும் அலெக்ஸ் உட்பட படிச்சோம்… இங்க திருமணம்  என்பது வெறும் பிஸினெஸ் அதில லவ்வுக்கு இடமே இல்லைன்னு நெறைய டிஸ்கஸ் பண்ணிருக்கோம்…”

 

 “ பலே ! பலே ! மாமா மருமகள இப்படி தயார் பண்ணிவிட்டா அவங்க பாட்டி ஏன் திட்ட மாட்டா…” மைதிலி கேட்க

 

இருவரும் சிரித்தனர் , “ பாட்டிக்கும் பேத்தி மேல உள்ள அக்கறையைத்தான் அதில் பார்க்கணும் அவங்க அனுபவம் அவங்க உலகம் அவ்வளவுதான்..”

 

 “ எல்லாம் சரி ! நாளைக்கு பாக்யா போண் பண்ணி என்னாச்சு, என்ன சொல்றான்னு கேட்பாளே என்ன சொல்றது ..??” தன் கவலையைச் சொன்னாள் மைதிலி.

 

 “ நாளைக்கே கல்யாணம் பண்ணி நாளைன்னிக்கே புள்ளயும் பெத்துக்க ரெடின்னு சொல்லுங்க …” கோவமாக மணிமேகலை எழுந்திருக்க முயல

 

 “ இரு ! இரு ! அவங்க அவங்க கஷ்டத்த சொன்னாங்க ..விடு !”

 

“ மாமா! கட்டாயம் பொண்ணாப் பொறந்தா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா ?”

 

“ பொண்ணோ ஆணோ கல்யாணம் பண்ணிக்கிறது பண்ணாமலே இருக்கிறது குழந்தை பெற்றுக்கிறது பெறாமலிருக்கிறது எல்லாம் அவங்க அவங்க விருப்பம். இதுல மூக்கை நுழைக்கிறது குறை சொல்றது எல்லாம் நாகரீகமே இல்ல … எங்களுக்கு குழந்தை இல்லை எவ்வளவு ஏச்சு பேச்சை மைதிலி தாங்கி இருப்பா ! குறைபாடு எங்கிட்டத்தான்ன்னு டாக்டர் சொன்னாரு ! தத்து எடுக்கலாம் ,செயற்கை கருத்தரித்தல் இப்படி சில வாய்ப்புகள் இருந்தன … குழந்தை இல்லாமல் இருவரும் வாழ முடிவெடுத்தோம் … இப்பவும் பல நிகழ்ச்சிகளில  ‘மலடி’ன்னு அவள ஒதுக்கிறாங்க ஆனா  ‘மலட’ன்னு என்னை யாரும் சொல்வதில்லை ..” ராமலிங்கம் சொல்லும் போதே கண் கலங்கியது …

 

மைதிலி அமைதியாக இருந்தாள்.

 

“ மாமா ! நான்தான் உங்க மகளா இருக்கன ஏன் கலங்குறீங்க ..”

 

“ நான் புள்ள இல்லேங்கிறதுக்காக கலங்கலை .. மைதிலியை மங்கல நிகழ்வுகளில் குத்திக் காட்ற சமூகத்தை, ஒவ்வொரு முறையும் மைதிலி படும் வேதனையை நினைச்சேன்… பொண்ணு கல்யாணமாகமல் இருந்தாலும் இப்படி இழிசொல் வரும் தாங்க மனசு வேணும்…”

 

“ மாமா ! நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன் … இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம் ! அவ்வளவுதான்… நான் எம் எஸ் சி படிக்கணும் பிஹெச்டி முடிக்கணும் … அதுக்குள்ள  எவனாவது இழிச்சவாயன எனக்கு பிடிச்சா உங்கள்ட்ட வந்து சொல்றேன் .. கல்யாணம் பண்ணிக்கணும் தோணி எவனோடும் காதலும் வரலைன்னான்னாலும்  உங்கள்ட்ட சொல்றேன் .. நீங்க வழிகாட்டுங்க .. இப்ப எனக்கு படிக்க அவகாசம் கொடுங்க..”

 

 “ அப்புறம் …நாங்க ஒரு இழிச்சவாயனை பார்த்துத் தரணும் ..” என மைதிலி அவ சொன்ன வார்த்தய திருப்பி அடிக்கவும் ; வெட்கத்தோடு மணிமேகலை தலை கவிழ்ந்தாள் .

 

இருட்டத்துவங்கிவிட்ட பொழுதில் இதயத்தில் ஒளி துலங்கியது ..

 

 “ மணிமேகலை ! நீ மேல படி ! நான் உங்க அப்பா அம்மாட்ட பேசுறேன் … அவங்க புரிஞ்சுக்குவாங்க … பாட்டிதான் காச்சுவாங்க …பார்த்துக்கலாம் … உங்க சித்தப்பாட்ட சொல்லி சோதிடத்தின் மீது பழியைப் போட்டு பாட்டியை கொஞ்சநாள் சைலண்ட் பண்ணிரலாம் …

 

 “ மாமா ! சோதிடத்தில நம்பிக்கையே இல்லேன்னு சொல்வீங்க இப்ப பாட்டிய சமாதானப் படுத்த சோதிடமா ?” மணிமேகலை வினவ ,

 

 “ சோதிடமே ஒரு டுபாக்கூர்… நாம பாட்டிய சமாதானப் படுத்த டுபாக்கூர் விடுறோம் … ஒண்ணு தெரியுமா ? என் பிரண்டஸ் சில பேரு பொண்ணுங்க ,பையனுக ஜாதகம் சரி இல்லேன்னு புலம்பினப்போ நான் டூப்பிளிகேட் ஜாதகம் ரெடி பண்ணிக் கொடுத்து கல்யாணம் முடிச்சு அவங்களும் ரொம்ப நல்லா இருக்காங்க .. முறையா எழுதின ஜாதகம் பொருந்தி கல்யாணம் பண்ணினவங்க பலபேரு விவாகரத்து ஆகி இருக்காங்க … திருமணம் என்பது வெறும் ஜாதகப் பொருத்தமோ பணப் பொருத்தமோ சாதிப் பொருத்தமோ அல்ல காதலில் ஒருவருவரை ஒருவர் புரிந்து வாழ்தல்…” ராமலிங்கம் சொல்ல மணிமேகலை உற்சாகமானாள்.

 

மூவரும் ஐஸ் சாப்பிட நகரலாயினர் .

 

மணிமேகலை கையிலிருந்த  “ பெயல் மணக்கும் பொழுது” [ அ.மங்கை தொகுத்த ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ] நழுவி கீழே விழுந்தது .அதை எடுத்த மைதிலி அதில் மணி மார்க் பண்ணி வைத்திருந்த நளாயினி தாமரையின் கவிதையைப் படித்து விட்டு ராமலிங்கம் கையில் கொடுத்தாள் .

 

 “ காதல் என்றால்

என்னவென்று தெரியுமா

உனக்கு ?

எனக்கே எனக்கான வாழ்வையும்

உனக்கே உனக்கான வாழ்வையும்

நீயும் ,நானும்

மனம் கோர்த்து

வாழ்ந்து பார்ப்பதுதான்.

அதற்காக

என் வாழ்வை

என் விருப்பு வெறுப்பை

எல்லாம் துறந்து

உனக்காய் மட்டும்

உன் விருப்பு வெறுப்போடு

உனக்காய் வாழ

எனக்கு இஷ்டமில்லை

நீ நினைக்கும்

குருட்டு

செவிட்டு

ஊமைக்காதலியாய்

நான் இருப்பேன் என

நினையாதே !”

 

 “ என் மருமகளுக்கு காதலைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் நிறைய தெளிவு இருக்கு … கவலை இல்லை …” என கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் மைதிலி .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/11/2022.