உழைக்கும் பெண்களின் நெடிய போராட்டப் பயணம் : ஓர்ஆய்வு

Posted by அகத்தீ Labels:

 



 உழைக்கும் பெண்களின் நெடிய போராட்டப்  பயணம் : ஓர்ஆய்வு  

 

நர்மதா தேவி எழுதிய “ பெண் : அன்றும் இன்றும்” நூல் எனக்குத் தாமதமாகத்தான் கிடைத்தது .கிடைத்த பின்னும் இரண்டு வாரங்கள் வேறு சில பணிகள் காரணமாக இந்நூலைப் புரட்ட முடியவில்லை . கடந்த மூன்று நாட்களில் படித்து முடித்தேன் .தாமதமாயினும் இந்நூலை படிக்காமல் இருந்ததைவிட  இப்போதேனும் படித்ததற்காக மிகவும் மகிழ்கிறேன் .  “better late than never” இல்லையா ?நீங்களும் இன்னும் படிக்காவிடில் இனியும் தாமதிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுகிறேன். பலர் நூல் அறிமுகம் எழுதிவிட்டதால் நான் சுருங்கச் சொன்னால் போதுமல்லவா ?

 

பாலின சமத்துவம் , பெண் விடுதலை , ஆணாதிக்கம் ,பெண்ணியம்  இந்த சொற்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் பொதுவானவை .ஆனால் அமெரிக்கவின் ஒரு மேல்தட்டு பெண்கள் குழுவினர் இச்சொற்களைச் சொல்லும் பொருளுக்கும் , இங்கே  இராமநாதபுரத்திலோ தர்மபுரியிலோ ஓர் விவசாயக் கூலிப் பெண் சொல்வதற்கும் ஒரே பொருளில்லை . அவரவர் வர்க்கப் பார்வை அச்சொற்களின் மேல் இயல்பாக ஒட்டிக் கொள்ளும் .

 

இச்சொற்களின் பொருளும் விரிவும் கூர்மையும் காலந்தோறும் மேம்பட்டு வருவதை வரலாற்றுப் போக்கில் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர முடியும் . நான் சார்ந்திருந்த இயக்கத்திலும் சரி , எனக்கும்  சரி1980 களில் இருந்த பார்வையும் , 1990 களில் இருந்த பார்வையும் பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த பார்வையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றமும் சாதாரணமாய் வந்ததில்லை . உள்ளும் புறமும் நடந்த கடும் போராட்டத்தின் விளைவே .

 

இந்நூலில்  பாட்டாளி வர்க்கப் பார்வையில் வரலாறு நெடுக உழைக்கும் பெண்கள் பட்ட பாட்டினையும் அதற்கு எதிராக மெல்ல எழுந்து ஓங்கிய போராட்ட அலைகளையும் பெற்ற வெற்றிகளையும் நுட்பமாக ஆய்வு செய்து அழகு தமிழில் நமக்குத் தந்திருக்கிற தோழர் நர்மதா தேவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

 

எட்டு பகுதிகளாக 40 அத்தியாயங்களில் இந்நூல் விரிந்திருக்கிறது . முதல் பகுதி  ” குடும்பம்- தனிச் சொத்து – அரசு இவற்றின் தோற்றம்” குறித்து எங்கெல்ஸ் எழுதிய நூலினை அடியொற்றி எளிமையாய் ஓர் அறிமுகம் செய்கிறது .அடுத்த பகுதி ’ஸ்வீட் கேப்டலிசத்தின்’ உண்மை முகத்தை தொழிற்புரட்சி காலந்தொட்டு படம் பிடிக்கிறது . முதலாளித்துவம் தன் லாபவெறிக்காகாக பெண்களை எப்படிக் கையாள்கிறது என்பதன் விரிவான சித்திரமாக உள்ளது . முதலாளித்துவத்தின் இரட்டை வேடமும் சுரண்டலை அதிகப்படுத்தவே என்பதை இந்நூல் நிரூபிக்கிறது .

 

காலனி இந்தியாவில் உழைக்கும் பெண்கள் நிலை ; சுதந்திர இந்தியாவில் உள்ள நிலை , சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி இவற்றை பகுதி நான்கும் பகுதி ஐந்தும் விவரிக்கிறது . குடிமகனுக்கு பெண்பால் என்ன ? மிகச் சரியான கேள்வி . நீதிக் கட்சியைச் சார்ந்த டி.எம்.நாயர் தமிழ்நாட்டு உழைக்கும் பெண்கள் குறித்து கூர்மையான தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார் என்பதை பல எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலில் சுட்டி இருப்பதைக் கண்டேன் ; வழக்கமாக நம் வகுப்புகளில் இது சொல்லப்படாத செய்தி .

 

சோஷலிசமும் பெண்களும் எனும் நுட்பமான பொருள் குறித்து ஆறாவது பகுதி நிறைய தகவல்களோடு வெளிச்சம் போடுகிறது . ஆதியில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயும் பாலின சமத்துவத்தை ஏற்காதவர் கை ஓங்கி இருந்ததையும் நுட்பமாக நடத்திய கருத்துப் போராட்டத்தையும் இந்நூல் பேசுகிறது .

 

என் நினைவுகள் பின்னோக்கி அசைபோட்டன .அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கங்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பு மாநாடு சென்னையில்  தாசப் பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் 1981 ல் நடைபெற்ற போது அந்த மாநாட்டு அரங்கத்தின் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியை எனக்கு கட்சி வழங்கி இருந்தது . அம்பத்தூர் தோழர் சுந்தர்ராஜூம் இந்திய மாணவர் சங்கத் தோழர் விஜயகுமார் போன்ற தோழர்களும் இணைந்து செய்தோம் .

 

அப்போது கட்சித் தலைவர்கள் பலருக்கே பெண்சமத்துவம் குறித்த புரிதல் குறைபாடு உடையதாக இருந்தது . தோழர் மைதிலி சிவராமன் ,பாப்பா உமாநாத் , ஷாஷாஜி கோவிந்தராஜன்  போன்ற தோழர்கள் புரிதலை ஆண் தோழர்களுக்கு  ஏற்படுத்த பட்ட பாட்டினை நான் நேரில் பார்த்தவன் . மாநாட்டின் போது தோழர் மைதிலி சிவராமன் கண்கலங்கியதையும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியன் தன் தோளில் சாய்த்த்து மைதிலியை தேற்றி , “ பெண் சமத்துவத்துக்காக கட்சிக்குள்ளும் போராடத்தான் வேண்டும் . வேறு வழியில்லை . தோழர் கொலந்தாய் , கிளாரா ஷெட்கின் பற்றி எல்லாம்  உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை … நம் நாட்டில் மநுநீதி எல்லோர் மண்டையிலும் இருக்கிறது ..கம்யூனிஸ்டுகளும் விதி விலக்கல்ல .. போராடுங்கள் கட்சி உங்களோடு இருக்கிறது .படிப்படியாக காய் நகர்த்துவோம். ..” என்றார் .

 

பின்னர் ஓர் சிஐடியு மாநாட்டில் தோழர் பி .டி.ரணதிவே சொன்னார் , “ நாம் மேடையில் பெண்சமத்துவம் பேசுகிற புரட்சியாளர்களாக இருக்கிறோம் ,வீட்டில் மோசமான இந்துக் கணவர்களாக இருக்கிறோம் .”  இதனை பல கூட்டங்களில் அவர் திரும்பத் திரும்ப சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன் .

 

 

இந்திய வரலாற்றில் வீரஞ்செறிந்த தெலுங்கானா போராட்டம் ,வொர்லி பழங்குடி மக்கள் போராட்டம் , கையூர் போராட்டம்  ,பொன்மலைப் போராட்டம் என கனல் மணக்கும் நினைவுகளோடு உணர்ச்சியை உசுப்பி வீரத்தை விதைக்கிறது ஏழாவது பகுதி . இப்பகுதியில் பாபா உமாநாத் ,கே.பி.ஜானகியம்மா , ஷாஷாஜி , ஜானகியம்மாள் ,லட்சுமி அம்மாள் ,ருக்மணி அம்மாள் போன்ற தலைவர்களைப் பற்றிய குறிப்புகள் நன்று . ஆயின் மைதிலி சிவராமன் பற்றி ஒருவரியில் கடந்துபோனது சரியல்ல . அவரின் தத்துவார்த்த புரிதலும் சென்னையில் பெண் தொழிலாளர்களைத் திரட்ட அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதும் கொஞ்சம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து .

 

குறிப்பாக இந்துத்துவத்தின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கி இருக்கும் சூழலில் பாலின சமத்துவத்துகான போராட்டம் எவ்வளவு முக்கியமானது கடுமையானது என்பதை எட்டாவது பகுதி விளக்குகிறது . மிகச் சரியாக ஒவ்வொரும் அறிய வேண்டிய- போராட வேண்டிய செய்தி அவை . பெரியாரின் பெண்ணியப் பார்வை இங்கு சரியாகச்  சுட்டப்பட்டிருக்கிறது .இன்றைய தேவை கருதி அதனை இன்னும் அதிகம் விரிவாகச்  சொல்லி இருக்கலாமோ ?

 

இந்நூல் மிகுந்த ஆழமான ஆய்வு நூல் . ஆகவே நிறைய புள்ளிவிவரங்கள் தவிர்க்க முடியாதவைதான் .எனினும் புள்ளிவிவரங்களை சற்றுக் குறைத்து அவற்றை பிடல் காஸ்ட்ரோ பாணியில் உணர்ச்சி யூட்டும் விதத்தில் சொல்லி இருக்கலாமோ ? இது என் ஆசை . நூலின் பிழை அல்ல.

 

பாலின சமத்துவம் குறித்த பல்வேறு பார்வைகள் திரிபுகள்  அதிதீவிர போக்குகள் உலகெங்கிலும் உள்ளன .இந்தியாவிலும் உண்டு .அவை குறித்து ஓர் அறிமுகமும் , பாட்டாளி வர்க்கப் பார்வையே சரி என்பதின் விளக்கமும் இன்னொரு பகுதியாக அடுத்த பதிப்பில் சேர்க்கலாமே ! இதுவும் என் ஆசையும் யோசனையும்தான் .அது இல்லாவிடிலும் நூலுக்கு எந்த குறைவும் இல்லை .

 

பெண் அன்றும் இன்றும்  ,  ஆசிரியர் : நர்மதா தேவி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

E mail :     bharathiputhakalayam@gmail      /    www.thamizhbooks.com

பக்கங்கள் : 512 , விலை : ரூ.520  /

 

சுபொஅ.

17/02/25.

 

[நேற்றே 16/02/25 இந்த நூல் அறிமுகத்தை எழுதிவிட்டேன் .சரி பார்த்து வெளியிட அவகாசம் இல்லை . பெருமிதத்தோடு 51 வது ஆண்டாக சிபிஎம் கட்சி உறுப்பினர் புதுப்பித்தல் கிளைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தததால் தாமதமாக இன்று 17/02/25 வெளியிடுகிறேன் . ]

 

 

 

 


காதல் இல்லா உலகம் பாழ் !

Posted by அகத்தீ Labels:

 



காதல் இல்லா உலகம் பாழ் !

 

காதல் இல்லா உலகம் பாழ் !ஆதாம் யோவாள் காதல் இயல்பானது .அன்பானது .நேர்மையானது . ஆதிக்காதல் எல்லா நாட்டிலும் அப்படித்தான் . ஒவ்வொரு காதலும் அப்படித்தான் இருக்க வேண்டும் .

 

காதல் எல்லா காலத்துக்குமானது . காதல் எல்லா தேசத்துக்குமானது . காதல் எல்லா உயிர்களுக்குமானது . காதல் எப்போது யாரிடம் ஏன் வருகிறது என யாராலும் எங்கும் கணித்துச் சொல்லவே முடியாது .

 

புறநானூற்றுக் காதலும் , திரைப்பட காதலும் ஒன்றல்ல . முந்தையதில் அன்பும் இயல்பும் பொங்கி வழிந்தது .பிந்தையதில் மிகை இருக்கிறது ; உண்மை விலகி நிற்கிறது . காதலில் காமம் உண்டு .காமம் மட்டுமே காதல் இல்லை .காமம் இல்லாமலும் காதல் இல்லை .காமம் இருப்பது மட்டுமே காதல் இல்லை . புறநானூற்றுக் காதலுக்கு வாசலைத் திறப்பீர் !

 

பிப்ரவரி 14 மட்டுமா காதலர் தினம் ? சித்திரை முழுநிலவு காதலர் கொண்டாட்ட நாளல்லவா ? ஆடி 18 காதலர் மகிழ்ந்து நீராடி மகிழும் நாளல்லவா ? எத்தனையோ காதல் கொண்டாட்ட நாட்கள் சங்க இலக்கியத்தில் உண்டே ! காதலை எதிர்ப்போருக்கு நம் பண்பாட்டின் ஆணிவேர் சல்லிவேரே காதல் என்பது தெரியாது.அவர்கள் மூட மத வெறியர் .சாதி வெறியர் .ஆணவக்காரர் .அவர்களைச் சுண்டு விரலால் தூக்கி எறிவீர் !

 

காதல் இல்லா உலகம் பாழ் ! வள்ளுவனைவிட காதலை போற்றியவன் எவன்? காமத்துப் பால் யாத்த அவனுக்கு காவியுடை கட்டும் கயவர்கள் என்றும் காதலின் எதிரிகளே ! மானுடத்தின் எதிரிகளே !

 

ஆதிக் காதலில் நிரம்பி இருந்த பாலின சமத்துவம் காலவெளியில் காணாமல் போனது . சொத்துடைமை தந்த ஆணாதிக்கம் பெண்மையை நசுக்கிப் போட்டது .காதல் வெறும் பெயர்ச் சொல்லானது . காமமும் பெண் மீது திணிக்கப்பட்ட கடமையுமே வினைச் சொல் ஆனது . அடிமைத்தனத்துக்கு பண்பாடென பட்டுக் குஞ்சரம் கட்டப்பட்டது . திருமணம் என்பது அதன் அங்கீகார முத்திரை ஆனது . காதல் தொலைந்து போனது .

 

 

சமூகத்தின் பேதம் மிகு கழுக்குப் பார்வையை , இராட்சச விலங்கை ,சாதி மத அகழியைத் தாண்டியும் காதல் பூ மலர்ந்து கொண்டே இருக்கிறது . மதம் பிடித்த சாதிய வெறி பிடித்த நாய்கள் காதலுக்கு எதிராய் குரைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆணவக் கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள் !

 

 நேற்றையக் காதல் புனிதமானது , இன்றையக் காதல் வெறும் உடல் பசிஎன்கிறார்கள் . ”நாடகக் காதல்என்கிறார்கள் . “லவ்ஜிகாத்என பழிதூற்றி கொலை செய்கிறார்கள் ! பண்பாட்டை பெண் யோணியில் பூட்டி வைக்கிறார்கள் !ச்சேத்தூமானுடம் தலைகுனிந்து நிற்பதை தம் வெற்றி எனக் கொக்கரிக்கின்றனர் .

 

காதலுக்கு புனிதப் பட்டம் தேவை இல்லை ; காதல் இயல்பானது என்பதைப் புரிந்தால் போதும் .ஒன்றை வரலாறு நெடுக கண்டு தெளிகிறோம் ; ‘ தடைகளை மீறுவதுதான் காதல் . போர்க்களத்திலும் காதல் மலரும். சிறையிலும் காதல் பூக்கும் .காதல் எல்லை தாண்டும் . காதல் வேலியை உடைக்கும் . அதுதான் காதலின் வலிமை .

 

ஆனால் ஒன்று ! ஒரு வகையில் நேற்றும் இன்றும் காதல் ஒன்றல்லதான் ; காதல் மேம்பட்டிருப்பதைப் புரிந்து கொள்வீர் !  சமத்துவமும் அன்பும் நீர்த்துப் போக எதிர்பார்ப்பு பொய்யாகும் போது ; பல்லைக் கடித்துக்கொண்டு  கொடுமையை சகித்துக் கொண்டு வாழ்ந்து தொலைப்பது இன்றையக் காதலில் சாத்தியமில்லை . இன்றைய பாலின சமத்துவ எல்லை விரிந்து கொண்டே போகிறது .குடும்ப ஜனநாயகம் புரிதலின் விதி ஆகிறது.

 

சிறுபான்மை பெரும்பான்மை தேர்தல் கணக்கல்ல குடும்ப ஜனநாயகம் . வலிமையே அனைத்தையும் தீர்மானிக்கும் எனும் அதிகார சூத்திரமல்ல குடும்ப ஜனநாயகம் . ஒவ்வொருவர் கருத்துக்கும் உரிமைக்கும் உணர்வுக்கும் உரிய இடமளித்து அன்பின் முழு பரிணாமமாய் விரிவதே குடும்ப ஜனநாயகம் .

 

அங்குதான்  ஆதாம்யோவாள்  காதலுக்குஅடுத்த காதல் இதுவெனச் சொல்ல முடியும் ’. தும்மியதுக்கு எல்லாம் கசந்து காதல் பிரிந்து போக வேண்டும் என்பதும் பிழையே ! நரகத்தில் உழன்றாலும் காதல் பிரியக் கூடாது என்பதும் பிழையே !வாழ்வதற்குத்தான் காதல் .கொல்வதற்கு அல்ல . கொலை எண்ணம் தலைதூக்கின் அது காதலே அல்ல .எங்கிருந்தாலும் வாழ்க என்கிற அன்பு மனமே காதல் !

 

மேடையில் பாலின சமத்துவம் புரட்சி பேசும் பலரும் வீட்டில் அப்படியே இருந்துவிடுவதில்லை . பழகிப்போன ஆணாதிக்கம் அவ்வப்போது தலைநீட்டவே செய்யும் . அதற்கு எதிராய் உள்ளுக்குள் போராடுவது ஒன்றும் எளிதல்ல . காலம் தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது .

 

காதலும் உழைப்பும்தான் மானுடத்தின் ஆதார சுருதி . காதலும் உழைப்பும் கவுரவிக்கப்படாத தேசத்தில் மானுடம் மெல்லச் சாகும் !காலம் காறி உமிழும்!

 

நாளையக் காதல் ஆதிக்கம் இல்லாததாய் ; அன்பால் பிணைந்ததாய் ; சமத்துவம் மிக்கதாய் ; குடும்ப ஜனநாயகத்தை உள்வாங்கியதாய் ; இரு பாலருக்கும் பொறுப்பும் உரிமையும் மிக்கதாய் ; அவரவர் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாய் மலர்க !

 

காதல் போற்றுதும் ! காதல் போற்றுதும் ! காலந்தோறும்  மேலும் செழித்து , மேலும் செம்மையாகி காதல் ஓங்கிட வாழ்த்துதும் யாமே !

 

காதல் செய்வோம் !

குரோதத்துக்கு எதிராய் அன்பை முன்மொழிவோம் !

அன்பு செய் ! காதல் செய் !

 

சுபொஅ.

14/02/25.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் “ - ஏங்கெல்ஸ்

வாசித்து விட்டீர்களா ? அவசியம் வாசியுங்கள் !!!