உதிரிலைகளில் மீந்த பச்சையம்

Posted by அகத்தீ Labels:

 





கவிஞர் .பழ.புகழேந்தியின் “ உதிரிலைகளில் மீந்த பச்சையம்” கவிதைத் தொகுப்பு குறித்து பொன்.குமார் எழுதிய நூலறிமுகத்தை  இரண்டு நாட்களுக்கு முன் இங்கு பகிர்ந்திருந்தேன். அன்றே கவிஞருக்கும் குறும் அஞ்சல் அனுப்பி இருந்தேன். உடனே நூலை அனுப்பி விட்டார் . நேற்றே கிடைத்து விட்டது . நான் வாசித்து நெகிழ்ந்தேன் . என் இணையரும் வாசித்துவிட்டார் .

 

“யதார்த்த வாழ்க்கையின் இயல்பை தத்துரூபமாக எழுதி இருக்கிறார் ,ஆயின் வாசிக்க வாசிக்கப் பயம் தொற்றிக் கொள்கிறது …” என்றார் என் இணையர் .

 

இதனை எதிர்பார்த்துத்தான் முன்னுரையில் பழ.புகழேந்தி எழுதியிருக்கிறார் ,” பெரும்பாலானவர்கள் ‘அழவைக்கிறீர்கள்’ என்றார்கள்.சிலர் ‘அச்சமூட்டுகிறீர்கள்’ என்றார்கள் . இரண்டுமே உண்மையாகக் கூட இருக்கட்டும் . நான் எழுதியதின் நோக்கம் அழவைக்கவோ ,அச்சமூட்டவோ அல்ல. வாசித்து முடித்தபின் ,முதியோர்களைக் கைவிடக்கூடாது என்று மூளையின் ஓரத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்தினால் போதும்.”

 

புகழேந்தி எழுத்தின் வீரியமும் அக்கறையும் அதை நோக்கி நகர்த்தின் மகிழ்ச்சியே . ஆயின் வாழ்க்கைச்  சூழல் பெற்றோரைப் பிரிந்து வெகுதூரம் பிழைப்பு நிமித்தம் பிள்ளைகளை விரட்டிவிடுகிறதே! ” முதுமை “ வரமா ? சாபமா ?” எனும் சிறு நூலில் இது குறித்து நான் விவாதித்திருக்கிறேன் .  “முதியோர் இல்லங்கள்” காலத்தின் கட்டாயத் தேவை என்பது என் கருத்து .

 

இந்நூல் பேசுபொருள் முதுமைக் காதல் குறித்தல்லவா ? அதில் வெற்றி பெற்றுள்ளது . புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதியோர் காதலை டார்ச் லைட்டாகக் கையில் பிடித்துக் கொண்டு இந்நூலில் பயணித்திருப்பதாய் நூலாசிரியர் சொல்வது மிகை அல்ல.

 

முதுமையில் தோன்றும் கசடுகளற்ற காதல் குறித்து நூலின் ஒவ்வொரு காட்சியும் விரிகிறது . வாசலில் நிற்கும் மரணமும் படுக்கையில் இருக்கும் நோயும் வாழ்வின் வலியும் நூல் நெடுக விரிகிறது . ஏதேனும் ஒரு கவிதையை சுட்டிச் செல்லலாம் எனில் எல்லா கவிதைகளும் போட்டி போடுகின்றன .

 

“ அதிகாரம்தான் செலுத்தியிருக்கிறேன்

உன்னிடம்

முதல் முறையாகக் கெஞ்சுகிறேன்.

போவதெனில்

என்னையும் கூட்டிப் போயேன்.”

 

இருவரும் ஒன்றாய் போக முடியாது . யாரேனும் ஒருவர் முந்தித்தான் ஆக வேண்டும் . இது இயற்கை .ஆயினும்..

 

“நிச்சயமற்ற நாளையை

போர்த்துக் கொண்டுதான்

உறங்குகிறோம்.

 

அப்படியே கண்மூடி விடுவதில்

எந்தச் சிக்கலும் இல்லை.

 

போர்வையை விலக்கி எழப்போவது

நீயா ? நானா ?

என்கிற சந்தேகம்தான்

படுத்துகிறது பெரிதாய்.”

 

பல கவிதைகள் இதனைச் சுற்றியே உள்ளன . வாழ்வின் யதார்த்தம்தான் . ஆனால் அந்த நிச்சயமற்ற வேளையில்தாம்  முதுமையில் காதல் மெய்யாய் கனிகிறதோ?

 

“உலர்ந்து விட்ட

நம் உதடுகளில்

இன்னமும் மிச்சமிருக்கின்றன

நமக்கான முத்தங்கள் .

 

அத்தனை பரிசுத்தமாய் இருக்கும்

அவற்றில்

எச்சில் வாடையும் இல்லை

இப்போது .”

 

என்கிறார் . இன்னொரு இடத்தில்

 

“ நம் தோல்கள்

முற்றிலுமாகச் சுருங்கத் தொடங்கிய பிறகு

நம் காதல்

தன்னைத் தானே

சரி செய்து கொண்டு விட்டிருந்தது .”

 

இன்னும் சொல்கிறார்…

 

“இதயம் நின்று போகும்

அந்த கடைசி நாளில்

நீ மட்டும்தான் இருப்பாய்

மூளையின் மூலை எங்கும்.

கண் முன்னாலும் இருக்க வேண்டும்

என்கிற கவலைதான்

இப்போதெனக்கு .”

 

காதலும் காமமும் முதுமையில் வற்றிவிடுவதில்லை  பக்குவமடைகின்றன என்பது என் கருத்து . ஆயின் நெடுங்காலமாய் வயசாயிடிச்சு  ‘இன்னும் என்ன வேண்டிகிடக்கு’என அங்கலாய்க்கும் பொதுபுத்தி இங்கு நீடிக்கிறது .மேற்கத்திய சமூகத்தில் அப்படி இல்லை . இந்த பொது புத்தியை மாற்ற இன்னும் ஏராளமான முதுமைக் காதல் இலக்கியங்கள் வரவேண்டும் என்பது என் கருத்து மட்டுமல்ல வேண்டுகோளும்கூட.

 

இந்த முதுமையின் தவிப்பை ,ஏக்கத்தை , ஆசையை , அன்பை …. இளைய காதலர்களே ! கொஞ்சம் உள் வாங்குங்கள். ஆதிக்கமற்ற அதிகாரம் செலுத்தாத அன்பும் காதலும் உங்களிடம் இப்போதே முகிழ்க்கட்டும் ! அதுவே இந்நூலின் வெற்றியாய் அமையட்டும் .

 

நூலின் அச்சுக்கோர்ப்பும் வடிவமைப்பும் முகப்பும் படங்களும் ஈர்க்கின்றன.

 

உதிரிலைகளில் மீந்த பச்சையம், பழ.புகழேந்தி ,

மெளவல் பதிப்பகம் ,  nfayha@gmail.com  , mouvalpathipagam@gmail.com

97877 09687 , 94888 40898,    பக்கங்கள்: 96  , விலை : ரூ.130 /

 

சு.பொ.அ.

17/07/25.

 

 


வெற்றிடம்

Posted by அகத்தீ Labels:

 

எங்கும் எதிலும்
வெற்றிடம் என்று ஏதுமில்லை…
அங்கு என்ன இருக்கிறது
என்பதை அறியவும் இல்லை
தேவையை அறியாமல்
திணிக்கிற எதுவும் சேர்வதுமில்லை
வெறுங்கையில் முழம் போட்டு
வீணாய்க் கழிகிறது காலம் !

சுபொஅ.
16/07/25.

அபிற்கினியாள்....

Posted by அகத்தீ Labels:

 







க.சரவணனின் ‘ அன்பிற்கினியாள் , “ மொத்தம் 14 கதைகள் .அத்தனையும் நீள் கதைகள்” என்பார் ஓவியர் ஸ்ரீரசா .

சமூகத்தின் புண்களை அப்படியே எழுதிச் செல்வது ஓர் வகை . இப்படி சிலராவது யோசித்திருக்கலாமே என்கிற கோணத்தில் கதா பாத்திரங்களை கற்பனை செய்து படைப்பது இன்னொரு வகை . இரண்டும் கலந்தது இச்சிறுகதைகள் .

இடிந்து விழும் நிலையிலுள்ள ஓர் அரசு பள்ளிக்கட்டிடத்தைக் கண்டு பதைபதைக்கும் ஓர் தலைமையாசிரியரும் கரடுதட்டிப்போன அரசு இயந்திரமும்” மேற்கூரை” கதையில் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.

“டிபன் பாக்ஸ் ”மாறிப்போனதை வைத்து சொல்லும் சேதி மிகப்பெரிது . சுய விமர்சனத்தோடு பிரச்சனைகளை அணுகச் சொல்லும் “நீலதிமிங்கலம்” இப்படி ஒவ்வோர் கதையும் ஓர் சமூகச் செய்தியை உள்ளடக்கி உள்ளது . பொறுப்பான ஆசிரியராக க.சரணன் நூல் நெடுகவும் , நூலுக்கு வெளியேவும் வெளிப்பட்டுள்ளார் .

தொடர்ந்து எழுதி உச்சம் தொட வாழ்த்துகள் !

அன்பிற்கினியாள் , சிறுகதைத் தொகுப்பு , க.சரவணன் , பாரதி புத்தகாலயம் ,பக்கங்கள் 216 ,விலை : ரூ .240/.

சுபொஅ.
15/07/25.

திரும்பிப் பார்க்கிறேன்

Posted by அகத்தீ Labels:

 


திரும்பிப் பார்க்கிறேன்

 


 

திரும்பிப் பார்க்கிறேன்

சக பயணிகளைக் காணோம்

பாதையை தவறவிட்டோர் சிலர்

பாதியிலே முடித்துக் கொண்டோர் சிலர்

சூழ்நிலைச் சிறையில் அடைபட்டோர் சிலர்

வெகுதூரம் முன்சென்றுவிட்டோர் சிலர்

நம்மை மறந்து விட்டோர் சிலர்

நாம் மறந்துவிட்ட சிலர்

திடீர்திடீரென திரும்பிவரமுடியா இடத்துக்கு

பயணப்பட்டுவிட்ட பலர்

இன்னும் எஞ்சியிருப்போரும்

அலைபேசியிலும் செவி வழியிலும்

கொஞ்சம் அவ்வப்போது பேசிக் கொள்ள

நினைவலையில்

வந்தபடியும் சென்றபடியும்

மறக்க முடியா சகபயணிகளோடு

கழியும் இரவுகள் .

 

சுபொஅ.

10/07/25.


எந்தப் பெயரால் அழைப்பது ?

Posted by அகத்தீ Labels:

 


``ராஜ குலோத்துங்க-வை விட்டு விட்டானய்யா’’ - பட்டப்பெயரை வலியுறுத்தும் தி.மு.க...
கி.ச.திலீபன்

இது இன்றைய ஜூவி கட்டுரை . தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா என்பது நல்ல விவாதம் . பட்டப் பெயர் , அல்லது மரியாதை நிமித்தமான புனைவு பெயர்களால் அழைக்க வேண்டுமா ? இயற்பெயரிலேயே அழைக்க வேண்டுமா ? இதுவே விவாதத்தின் மைய இழை .

அவரவர் இயற்பெயரிலேயே அழைக்கலாம் . அதுதான் சரி . இக்கட்டுரை சொல்லும் செய்தி இதுவே . நாம் இதில் மாறுபடவில்லை . உடன்படுகிறோம்.

வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசிரியர்களையே மிஸ் ,மிஸ்டர் என முன்னொட்டோடு பெயர் சொல்லி விழிக்கக் கற்றுக் கொடுத்து விடுகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்களில் உயர் அதிகாரிகளையே பெயர் சொல்லித்தான் அழைக்கின்றனர் . ஆக பெயர் சொல்லி அழைப்பது பிழையில்லை .பண்பாட்டு இழிவல்ல .உயர் பண்பாடே . ஆயின் இங்கு எங்கு பிரச்சனை வருகிறது ? சமூக உளவியலை கொஞ்சம் ஊன்றி கவனிக்க வேண்டும் .

கிரிமினலாக இருப்பினும் மேல் சாதியினரைக் குறிக்க ‘ர்’ விகுதி சேர்ப்பதும் ; பிறரை குறிக்க ‘ன்’ விகுதி சேர்ப்பதும் ஊடக தர்மமாக கடைப் பிடிக்கப்படுகிறதே , அதை சுட்டிக் காட்டிட வேண்டாமா ? இங்கு எந்த அளவுகோலும் எல்லா சாதிக்கும் ஒரேப்போல் இருப்பதில்லையே . ஏன் ?

ஈ,வே.ரா என்றோ ஈ எம் எஸ் என்றோ பெயர் சொல்லி அழைத்தால் அந்தத் தலைவர்கள் ஒரு போதும் கோவித்துக் கொள்ள மாட்டார்கள் .ஏனெனில் அதுதான் தங்கள் பெயர். அது இழிவல்ல என்பதறிவார்கள் . கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லா தலைவர்களையும் தோழர் என்ற பாசமிகு முன்னொட்டோடு பெயர் சொல்லி அழைப்பதே மரபு . தோழர் லெனின்தான்.தோழர் மார்க்ஸ்தான் .தோழர் யெச்சூரிதான் .

ஆயின் தன் சாதி பெயரை தூக்கி எறிந்த பின்னும் ’ராமசாமி நாய்க்கர்’ என இன்றும் விழிக்கும்/எழுதும் சங்கித்தனம் குறித்து ஏன் இந்த கட்டுரையில் ஜூவி பேசவில்லை ?

தமிழ்நாட்டுக்கும் தமிழ்ர் பண்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லாத ’ஜீ ’என பின்னொட்டு போட்டு ஏன் அழைக்க வேண்டும் . ’ச்சீ’என இதனை ஜுவி தூக்கி எறியச் சொல்லவில்லை ? ஏன் ?

கலைஞர் என்கிற சொல் மட்டும் கசக்கும் எனில் அது பிரச்சனையே . அண்மையில் ஒரு தொலை காட்சியில் கேப்டன் விஜயகாந்த் மகன் பேட்டியை குறிப்பிடும் போது ‘கேப்டன்’ திருமணம் ’கருணாநிதி’ தலைமையில் நடந்ததெனக் குறிப்பிட்டது . ’கருணாநிதி’ தலைமையில் ’விஜயகாந்த்’ திருமணம் நடந்தது என்றோ ’கலைஞர்’ தலைமையில் ’கேப்டன்’ திருமணம் நடந்தது என்றோ குறிப்பிடாமல் ஒருவரை ’’கேப்டன் என்றும் இன்னொருவரை ’கருணாநிதி’ என்று குறிப்பிட்டதும்தான் பிரச்சனை .

சி.பா.ஆதித்தன் தன் பெயரை சி.பா.ஆதித்தனார் என்று மாற்றிய போது துக்ளக் சோ பொறுக்காமல் சத்தியவாணி முத்தனார் , மதியழகனார் என கேலி செய்தாரே ! அது ஏன் ? தோளில் துண்டணிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட போது வாய்மூடி மவுனியாய் இருந்தோர் ; ஒடுக்கப்பட்டோர் தோளில் துண்டு போட்ட போது கேலி செய்தது ஏன் ? துக்ளக் சோ கடைசி வரை கால்வரை நீண்டு தெரு பெருக்கும் துண்டோடு கார்ட்டூன் போட்டு மகிழ்ந்தது ஏன் ? மேடையில் மேல்சாதியினர் மட்டுமே அமரவைக்கப்பட்ட சூழலில் எல்லா சாதியைச் சார்ந்தோர் பெயரையும் துண்டறிக்கையில் போட்டு மேடையில் உடகாரவைத்து அவர்களே இவர்களே என அண்ணா அழைத்த போது மேல்சாதி மனோப்பாண்மையில் வயிறு எரிந்து கேலி செய்த துக்ளக்குகளை என்னென்பது ? [ ஒரு கட்டத்தில் இந்தப் பட்டியல் எல்லை மீறி சுமையானது தனி ] இவை எல்லாம் மநுஅதர்ம அயோக்கிய சிந்தனை அல்லவா ?

நீதிபதிகளை ‘ யுவர் ஹானர்’ என இன்னும் ஏன் அழைக்க வேண்டும் ? ’சார் ’ என அழைத்தால் போதாதா ? போதும் .அதுதான் சரி ! ” அதே சமயம் உயர் சாதியினர் நீதிபதியாய் இருக்கும் வரை ’யுவர் ஹானர்’ என அழைத்துவிட்டு ,ஒடுக்கப்பட்டவன் நீதிபதி ஆனதும் ‘சார்’ என அழைக்கச் சொல்வது ஏன் ? கொஞ்சகாலம் இவர்களையும் ‘யுவர் ஹானர்’ என அழைக்கலாமே !, “ சகோதரி அருள்மொழி கேட்பதும் நியாயம் தானே !

பெரியார் குன்றக்குடி அடிகளாரை ‘மகா சந்நிதான்ம் என அழைத்தார் . அது ஏன் என உடன் இருந்தோர் கேட்டபோது , “சங்கர மடத்திம் ’மகா பெரியவா’ன்னு அழைக்கும் போது நம்ம அடிகளாரை மகாசந்நிதானம்’ என ஏன் அழைக்கக்கூடாது . நம் தோழர்கள் எல்லோரும் அப்படியே அழையுங்கள் என்றார் .

பெரியார் ,அண்ணா , கலைஞர் ,புரட்சித் தலைவர் என மக்கள் அன்போடு அழைத்துப் பழகிவிட்ட பெயரால் ஒருவரை அழைப்பது நாகரீகமான நடைமுறைதான் . ஒரு முறை தோழர் சங்கரய்யா பேசிய பொதுக்கூட்டத்தில் நான் கருணாநிதி என பலமுறை சொல்லிவிட்டேன் . என்னை தோழர் என்.சங்கரய்யா கண்டித்தார் . கலைஞர் என்று சொன்னால் நம் மதிப்பு குறைந்துவிடாது ; நாம் அரசியல் பழுதாகிவிடாது .கலைஞர் என்று குறிப்பிட்டே அவரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யலாம் .பிழையில்லை என்றார். அதன் பின் நான் என்னை திருத்திக் கொண்டேன்.

மேற்வங்கத்தில் ஜோதிபாசுவை எல்லோரும் ‘பாபு பாபு’ என வங்கமொழியில் மரியாதையாய் அழைப்பார்கள் .ஏன் அரசியல் எதிரி மம்தாகூட ’ஜோதிபாபு’ என்றுதான் சொல்லுவார் . இதில் என்ன பிழை ?

சாதிய ஆதிக்க மனோபாவம்தான் ஆளுக்கொரு முழக்கோலைத் தூக்குகிறது .ஒரு பக்க உண்மையை மட்டும் சொல்லி சூ.வி மென்மையாய் தங்கள் எரிச்சலை விளக்கெண்ணை தடவி மறைக்கிறது .

இறுதியாய் ,மநுஅதர்மம் பெயர்சூட்டவும் வழிகாட்டி இருக்கிறதே , அதை சூ.வி சுட்டி இருக்கலாமே ! நான் இங்கு சுட்டுவதோடு நிறைவு செய்கிறேன் .மீதி உங்கள் சிந்தனைக்கு.

“ பிராமணனுக்கு மங்களம் , சத்திரியனுக்கு பலம் ,வைசியனுக்குச் செல்வம் ,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலைமை தோன்றுமாறு பெயர் சூட்ட வேண்டும்” என்று மட்டுமா மநுஅதர்மம் சொல்லுகிறது ; “சூத்திரனை முழுப்பெயரால் அழைக்கலாகாது” என்றும் சொல்கிறது . குப்பு சாமியை குப்பு என்றோ குப்பா என்றோ ,சுப்பு ராஜை சுப்பு என்றோ சுப்பா என்றோ , முனீஸ்வரன் என்பதை முனியா என்றோ முனியன் என்றோ அழைப்பது இதனாலன்றோ ! இன்றும் அப்பழக்கம் உள்ளதே ! சூ.வி இதையெல்லாம் பேசுமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
07/07/25.

இன்றளவும் நீடிக்கின்ற யுத்தம்…..

Posted by அகத்தீ Labels:

 


இன்றளவும் நீடிக்கின்ற யுத்தம்…..

ரிதன்யா [தற்]கொலையைத் தொடர்ந்து திருமணவாழ்வு குறித்து சமூகவலைதளம் எங்கும் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இங்கு அந்த குறிப்பிட்ட நிகழ்வு குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை . ஆயின் திருமணம் குறித்த சமூக உளவியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சில செய்திகளை சொல்ல முயல்கிறேன்.

“ நீ எப்போது கல்யாண சாப்பாடு போடப்போகிறாய் ? “ என்று ஒரு ஆணிடமோ பெண்ணிடமோ கேட்பதையும் ;
“ ஏதாவது விசேஷம் உண்டா ? “ என குழந்தை பேற்றை குறித்து மறைமுகமாகக் கேட்பதையும் ;
எப்போது நிறுத்தப் போகிறோம் .அவை நாகரீகமற்ற கேள்விகள் .அடுத்தவர் தனிப்பட்ட உரிமையில் அத்துமீறி மூக்கை நுழைப்பது என்பதை எப்போது உணரப்போகிறோம் .
இப்படி இப்போது சொல்கிற நானும் நெடுநாளாய் இக்கேள்விகளை பிரஞ்ஞையின்றி கேட்டிருக்கிறேன் .அதற்காக இப்போது வருந்துகிறேன்.
திருமணம் என்பதும் குழந்தைப் பேறு என்பதும் சம்மந்தப்பட்டவரின் தனிப்பட்ட உரிமை . விருப்பம் . அவர்கள் முடிவெடுக்க வேண்டிய அம்சம்.அதில் சம்மன் இல்லாமல் ஆஜராகி , வாதாடுவது அநாகரீகம் என்பதை எப்போது உணரப் போகிறோம் ?
பெற்றவர்களுக்கும் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஓர் கட்டாயக் கடமையாகவோ சுமையாகவோ இருக்கக்கூடாது .இருக்கவும் முடியாது .அப்போதுதான் இதனை நாகரீக சமூகம் எனச் சொல்ல முடியும் .
உரிய பருவம் எய்திய பின் , உடலின் வேட்கை வாழ்வின் தேவை இவை சார்ந்து தக்க துணையை தேர்வு செய்வது ஆண் / பெண் இருபாலரின் உரிமை . சேர்ந்து வாழ்வதா [ லிவிங் டுகதரா ] தனித்து வாழ்வதா , காதல் திருமணமா ,ஏற்பாட்டுத் திருமணமா , காதல் தோற்றதால் இன்னொரு காதலா , திருமண வாழ்வா , திருமணம் தோற்றதால் மணமுறிவா , இன்னொரு திருமணமா , தனித்து வாழ்வதா ,குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா , எதுவாயினும் அதை சம்மந்தப்பட்ட ஆணோ பெண்ணோ முடிவு செய்ய வேண்டுமே தவிர வேறு யாரும் அதில் தலையிடக்கூடாது . கேட்டால் உதவலாம் அதுவும் ஆலோசனை என்ற அளவில் மட்டுமே . இறுதி முடிவை சம்மந்தப்பட்டவரே எடுக்க வேண்டும் .

சாதி ,மதம் ,குடும்ப கவுரவம் ,அந்தஸ்து ,குடும்ப சம்பிரதாயம் ,பழக்க வழக்கம் , வழிவழி வந்தது இப்படி எந்தக் குறுக்கீடும் கூடாது .இவற்றின் பெயாரால் பண்பாட்டு உடையணிந்து போடும் ஆட்டங்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் . தடுக்க வேண்டும் .

திருமணம் என்பது பருவம் எய்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயவிருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமே தவிர, யார் நிர்ப்பந்தத்திற்காகவோ எதன் கட்டாயத்தின் பேரிலோ அமைவதாக இருக்கக்கூடாது .

எல்லாம் சரி ! நம் வாழ்வின் சமூக உளவியலில் இப்பார்வை இருக்கிறதா ? இல்லவே இல்லை . திருமணம் தாமதமாவதோ , தள்ளிப் போவதோ , மணமுறிவோ ,மறுமணமோ , காதல் திருமணமோ , சாதி மத மறுப்புத் திருமணமோ ,சம்பிரதாய மறுப்புத் திருமணமோ பெரும் விவாதப் பொருளாகிவிடுகிறது . குடும்பத்தார் தலைகுனிவாக இழுக்காக அல்லது இயல்புக்கு மாறானதாக , அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவே சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது .ஆண் / பெண் இரு பாலினரின் உளவியலும் இப்படித்தான் உள்ளது . இதில் மாற்று பாலின உறவு குறித்த சமூக உளவியல் கேட்கவே வேண்டாம். அவ்வளவு மோசம் .

இதன் அடிப்படை என்ன ? இதுவே கேள்வி .இன்றைய ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற திருமண முறைக்கு அடிப்படை “தனிநபர் சொத்துரிமைதான்” என்பார் மாமேதை ஏங்கெல்ஸ் . “குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற மாமேதை எங்கெல்ஸ் எழுதிய புகழ்மிக்க நூலை வாசிக்காமல் உள்வாங்காமல் , இன்றைய குடும்பச் சிக்கல்களை,காதல் பிரச்சனைகளை சரியாக உள்வாங்கவே முடியாது . அதிலும் இந்தியச் சூழலில் மநுதர்மம் , வர்ணாஸ்ரம் போன்ற அநீதிகள் கூடுதல் கைவிலங்கு . இதனை உடைக்காமல் சமத்துவச் சிந்தனைச் சாளரங்களைத் திறக்கவே முடியாது .

“ இதுநாள் வரையில் , மரியாதைக்குரியதாக இருந்த ,பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த ,வாழ்க்கை தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது .அது மருத்துவரையும் ,மதகுருவையும் , கவிஞரையும் ,விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது .

முதலாளித்துவ வர்க்கம் ,குடும்பதினரிடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டது .குடும்ப உறவை வெறும் பண உறவாகச் சுருக்கிவிட்டது .”

ஆம் . காதல் அன்பு எல்லாம் வெறும் பகட்டுப் பேச்சாகப் போய்விட பணம் சொத்து அந்தஸ்து இந்தியச் சூழலில் இணைந்த சாதி ,மதம்,குடும்ப கவுரவம் ,மநுநீதி ,வர்ணஸ்ரமம் எல்லாம் ஒவ்வொரு உள்ளத்திலும் பேயாட்சி செய்கிறது . இதனை உயர்ந்த பண்பாடெனக் கொண்டாடும் கேவலம் வேறு .

இந்த ஆணாதிக்கமும் பண ஆதிக்கமும் சமத்துவமற்ற பண்பாட்டுப் பார்வையும் ஏதோ ஆண்களில் மூளையில் உறைந்து போயிருக்கிற கரடுதட்டிய சிந்தனை மட்டுமல்ல ; பெண்களின் மூளையிலும் இதுவே உறைந்து போயுள்ளது . அம்மா ,மாமியார் ,மருமகள் ,மகள் எந்த பாத்திரமாயினும் அப்பா மாமனார் மகன் மருமகன் எந்தப் பாத்திரம் ஆயினும் இது விதி விலக்கு அல்ல .காதல் ,திருமணம் என்றெல்லாம் வரும் போது ஆணோ பெண்ணோ தெரிந்தோ தெரியாமலோ இந்த பஞ்சாங்கக் கண்ணாடியை கடன் வாங்கியாவது அணிந்து பார்க்கத் துவங்கி விடுகின்றனர் . தற்காலிக ஈர்ப்பு அதனை மீறிய போதிலும் உள்ளத்தின் அடித்தளத்தில் இருக்கும் அந்த விஷப் பாம்புக் குட்டிகள் சந்தர்ப்பம் பார்த்து தலையைத் தூக்கிவிடுகின்றன . எல்லா குடும்ப உறவுகளிலும் மூர்க்கமாகவோ உள்ளோட்டமாகவோ இது தொடர்கிறது . மூர்க்கமானது கொலையாகவோ தற்கொலையாகவோ வெளிப்பட உள்ளோட்டம் மவுன சித்திரவதையாய் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது .

எங்கெல்ஸின் கீழ்க்கண்ட வரிகளோடு நான் இப்போது நிறுத்திக் கொள்கிறேன் . [ எங்கெல்ஸின் ’குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகிவற்றின் தோற்றம்’ படியுங்கள் ! ]

“ ஆக ,ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக ஒரு தார மணமுறை வரலாற்றில் தோன்றவில்லை . அத்தகைய சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம் . அதற்கு மாறாக ,ஒரு பால் மற்றொரு பாலை அடிமைப்படுத்தலாக அது தோன்றுகிறது . ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்திராத இரு பால் சர்ச்சை பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது . மார்க்சும் நானும் [எங்கெல்ஸ்] எழுதிய பிரசுரிக்கபடாத பழைய கையெழுத்துப் பிரதியில் பின் வருமாறு எழுதினோம் . ‘ குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப் பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும் .” இன்று இத்துடன் சேர்த்துக் கூறுவேன் ; வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது . ஒரு தார மண முறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றம் ஆகும் . ஆனால் அது அடிமைமுறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தார்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுத்தத்தைத் துவக்கியது …”

அந்த யுத்தம் தொடர்கிறது … போராடுவோம்….

சுபொஅ.
04/07/25.

ஒரு காவல் கொலை [ lockup murder ] யும் நம்மை நாமே விசாரிக்க வேண்டிய தேவையும்….

Posted by அகத்தீ Labels:

 


ஒரு காவல் கொலை [ lockup murder ] யும் நம்மை நாமே விசாரிக்க வேண்டிய தேவையும்….

சில நிகழ்வுகள் உணர்ச்சியைக் கொம்பு சீவிவிடும் . அதைச் சுற்றியே ஊர் முழுக்க பேச்சாக இருக்கும் . கருத்து கந்தசாமிகள் காட்டில் அடை மழை கொட்டும் . பொன்னான ஆலோசனைகள் எங்கும் பரபரப்பாகப் பேசப்படும் . அவற்றை நுணுகிப் பார்த்தால் சிரிப்பு வரும்.

அஜீத்குமார் லாக் அப் கொலையைத் தொடர்ந்து , “ போலீஸ் கையிலிருந்து லத்தியைப் பிடுங்க வேண்டும்…” என்கிற அளவுக்கு பொங்குகிறார்கள் ; கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்த்தால் போலீஸ் என்கவுண்டர் கொலைகளின் போது “ இப்படி நாலு பேரைப் போட்டால்தான் பயம் வரும் . திருந்துவான்கள் …”என என்கவுண்டர்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள் . “ நான் போலிஸல்ல பொறுக்கி ..” என சினிமா வசனத்துக்கு கைதட்டி விசிலடிப்பார்கள் . இப்படி அந்தந்த நேரத்தில் பொங்கி அதிதீவிரம் பேசும் யாருக்கும் பிரச்சனையின் ஆழமும் அகலமும் புரியவே இல்லை என்பதுதான் உண்மை .

[ இந்த குறிப்பிட்ட நிகழ்வு குறித்தோ அதன் அரசியல் குறித்தததோ அல்ல இப்பதிவு .]

மனித உரிமை பற்றிய ஞானம் காவல்துறைக்கு அறவே கிடையாது என்பது உண்மை . கலைஞர் முதல்வராக இருந்த போது காவலர்களுக்கு மனித உரிமையைக் கற்றுக்கொடுக்க பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார் . அதில் சென்னையில் சில வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நானும் போனேன் . எனக்கு போக்குவரத்துச் செலவு மற்றும் பயிற்சிக்கூலி எல்லாம் கிடைத்தது .ஆனால் மாணவரகளாக வந்த போலிஸார் வகுப்பை சட்டை செய்யவே இல்லை . மனம் வருந்தி ஒரு கட்டத்தில் நான் போவதை நிறுத்துவிட்டேன் . என் போல் பயிற்சி அளிக்கச் சென்ற பலரின் அனுபவமும் அப்படியாகத்தான் இருந்தது .

மனித உரிமை என்பது ஏதோ என் ஜி ஓக்கள் , தன்னார்வக் குழுக்கள் பேசுகிற ஒன்றாகக் கிட்டத்தட்ட சுருங்கிப் போனது . கம்யூனிஸ்ட் கட்சியும் தலித் அமைப்புகளும் இதில் ஆர்வமும் அக்கறையும் காட்டினாலும் இன்னும் ஆழமாக சமூக பொதுபுத்தியின் கூறாகவில்லை .எங்கேனும் அநீதி அலங்கோலமாய் வெளிப்படும் போது பொங்குவதோடு நம் பொதுபுத்தி அடங்கிவிடுகிறது.

சரி ! எடுத்துகாட்டாய் ஒன்றைச் சொல்கிறேன் . விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறை பின்பற்ற வேண்டிய நெறிகளாக உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியவை எவை எவை என எத்தனை பேர் அறிவோம் ?

The eleven Supreme Court guidelines related to arrest and detention are:
1. The police officer who is going to arrest a person should bear accurate, visible, and clear identification and name tag with the designation. The particulars of all police officers/constables who handle interrogation of the arrestee must be recorded in the register.
2. The police officer who is going to arrest shall prepare a memo of the arrest and the time of the arrest, and such memo will be attested by at least one witness who may be either the member of the family of the arrestee or a respectable person of the locality from where the arrest is made. The memo will be signed by the arrestee and shall contain the time and date of arrest.
3. A person who has been arrested or detained is entitled to give information to his friend or relative or other person known to him (within 12 hours).
4. The time, place of arrest, venue of custody must be notified by the police to the friend or relative or known person.
5. The person arrested must be made aware of his right.
6. An entry must be made in the case diary at the place of detention regarding the person’s arrest and mention the next friend of the arrestee who has been informed of the arrest.
7. The arrestee should, where he requests, be also examined at the time of his arrest and major and minor injuries, if present on his body, be recorded at that time.
8. The arrestee should be subjected to a medical examination by a trained doctor. (section 54)
9. Copies of all the documents, including the arrest memo, should be sent to the magistrate for his record.
10. The arrestee may be permitted to meet his lawyer during the interrogation, not throughout the interrogation.
11. A police control room should be provided at all districts and state headquarter, where information regarding the arrest and place of custody of the arrestee shall be communicated by the officer arresting within 12 hours of the arrest, and it should be displayed on a notice board.
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேலும் மொத்த விசாரணையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் . காவல் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் . தனி இடத்தில் விசாரிக்க கூடாது .இப்படி நிறைய வழிகாட்டல்களை அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது என்பதை அறிவோமா ? இவற்றை எல்லாம் பள்ளி பாடத்தில் சொல்லித் தருகிறோமா ?
கொடுமை நடக்கும் போது பொங்குவது மட்டும் போதாதாது . மனித உரிமை என்பது நம் அடிப்படைப் பயிற்சி ஆகவேண்டும் . அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் மனித குலத்தை விடுதலை செய்வதே மனித உரிமையின் இறுதி இலக்கு . உண்ணும் உணவு , உடுத்தும் உடை எல்லாம் அவரவர் உரிமை .இதில் மதவெறி கலந்து வெறுப்பு அரசியல் கலந்து கலவர விதை தூவுவோர் அஜீத்குமாருக்காக மனித உரிமை பற்றி நீட்டி முழக்குவதுதான் நகை முரண்.

“பட்டப் பகல் திருடர்களை
பட்டாடைதான் மறைக்கிறது - ஒரு
பஞ்சையைத்தான் திருடன் என்று
ஊரு கூடி உதைக்குது”

பட்டுக்கோட்டைப் பாட்டை எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்போம் ; அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்கப் பார்வையை வர்க்க அரசியலை வாழ்க்கையில் பெற்றோமா ? இனியேனும் பெறுவோமா ?

ஒரு காவல் கொலையை வைத்து நம்மை நாமே விசாரிப்போம் ! சரிதானே !

[ ரிதன்யாக்களின் கொலைக்கு பின்னால் … நாளை பார்ப்போம்…]

சுபொஅ.
3/07/25.

ஈகோ ....

Posted by அகத்தீ Labels:

 


அண்மையில் ஸ்ரீரசாவும் அருணனும் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை குறித்து பொதுவான கருத்தொன்றை முகநூலில் பதிவிட்டிருந்தனர் . அதே போன்ற ஓர் கருத்தை தி.க வைச் சார்ந்த பெல் ஆறுமுகமும் பதிவிட்டிருந்தார். அதையொட்டி பலரும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் . பொதுவாழ்வில் ஈடுபடும் பலரும் சந்திக்கும் பிரச்சனை இது .

 

ஆரம்பச் சூழலில் தீவிரமாக செயலாற்றும் போது இயக்க வளர்ச்சியின் நிர்ப்பந்தத்தால் எதிர்பாராமலே அங்கீகாரம் கிடைத்துவிடும் . மேலே செல்லச்  செல்ல தலைமையின் விருப்பு வெறுப்பு ஈகோ எல்லாமும் சேரும் , மேலும் பல்வேறு அக ,புறக் காரணிகளும் வினைப்படும் , விளைவு ஒரு கட்டத்தில் தேங்க நேரிடும் .அப்போது சோர்வு தட்டும் .பலர் தடுமாறும் இடமும் தடம்மாறும் இடமும் அதுதான் .ஆனால் அந்த தடுமாற்றமும் தடமாற்றமும் அதுவரை போற்றி பின்பற்றிய சித்தாந்தத்தை விட்டு விலகச் செய்துவிடும் .இச்சூழலில் சித்தாந்த உறுதியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம்மால் இயன்ற பணியைத் தொடர்வோரே லட்சியவாதி ஆவார் . ஒரு பேட்டியில் ஃபிடல் காஸ்ட்டிரோ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈகோ பெரும் சவாலாக உள்ளது என்று வருந்துவார் . கட்சிகளில் மட்டுமல்ல நிறுவனங்கள் , தலைமை இடங்கள் எங்கும் ஈகோ பெரும் தலைவலியாகவே இருக்கிறது . இது மனித உறவுகளின் பிரச்சனை .

 

இதனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது ஆன்மீகம்தான் இதற்கு ஒரு மருந்து என்றார் ஓர் அன்பர் . மதபீடங்களிலும் வெடித்து குமுறும் ஈகோ குறித்து சுட்டியபோது மவுனமானர் .மேலும் சொன்னார் ஆச்சார அனுஷ்டானங்களில் மூழ்கியோரும் யோகா தியானம் என அலைவோர்களும் உட்சபட்ச ஈகோ வெளிப்படுத்துவதை ஒப்புக் கொண்டார்.

 

விமர்சனம் சுயவிமர்சனம்தான் சிறந்த மாமருந்து .மார்க்சியம் வழிகாட்டியது .ஆயின்  பிறரை  விமர்சனம் செய்யும் போது விரியும்  இதயம் சுயவிமர்சனம் என்கிற போது ஒட்டிச் சுருங்கிவிடுகிறது .அந்த மருந்து வீரியமற்றுப் போகிறது . அறிவுத் திருக்கோயில் வேதாத்திரி மகிரிஷி அகத்தாய்வு என்கிற ஒன்றை தம் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார் . ஆனால் அங்கும் ஓர் சடங்காகாகவே மாறிப்போனது . கிறுத்துவ மதத்தில் பாவமன்னிப்பு கேட்பது கிட்டத்தட்ட வெறும் கேலிக்கூத்தானதுபோல்தான்.

 

ஆக .ஈகோவுக்கு எதிரான போராட்டத்தில் விமர்சனத்துக்கு செவி கொடுப்பதும் சுயவிமர்சனமாய் வாய்திறப்பதுக்கும் மாற்று வேறு இல்லையே !

 

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (குறள் .389)

 

கேட்கக்கூசும் விமர்சனங்களையும் பொறுமையோடு செவிமடுத்து தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பண்புதான் பொதுவாழ்வில் மிகத்தேவை .ஆயின் அதுவே இங்கு பெரும் பற்றாக்குறை .என் செய்ய ?

 

[ இவை ஒரு சகதோழரோடு அலைபேசியில் உரையாட நேர்ந்த போது பரிமாறிக்கொண்ட கருத்துகள் . தனிப்பட்ட முறையில் யாரையும் சுட்டுவன அல்ல ]

 

சுபொஅ.

02/07/25.


ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

Posted by அகத்தீ Labels:

 


ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

 

நேற்று முழுவதும் என் பிறந்த நாளுக்கு [15/6/1953] வாழ்த்துமழை பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தோழமை அன்பில் திக்குமுக்காடிப் போனேன். நன்றி ! நன்றி! நான் ஓர் கம்யூனிஸ்ட் என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [ மார்க்சிஸ்ட்] உறுப்பினர் என்பதுமே என் மகிழ்வும் பெருமையும்.

 

இந்த ஆண்டு பிறந்த நாளை வர்ஜீனியாவில் பேரப்பிள்ளைகளோடு கழித்த பின்னார் 16 ஆம் தேதிதான் ஊர்திரும்பத் திட்டமிட்டிருந்தோம் . எதிர்பாராவிதமாக கிழே விழுந்து என் இணையருக்கு இடது கை தோள்பட்டை அருகே முறிவு ஏற்பட்டதால் அவசரமாக ஆறாம் தேதியே புறப்பட்டு பெங்களூர் வந்து அறுவை சிகிட்சை செய்ய வேண்டியதாயிற்று . இப்போது நலம் மீண்டு வருகிறார். வாழ்வும் போராட்டமும் பிரிக்கவே முடியாதது . இன்பமும் துன்பமும் இரவும் பகலுமாய் மாறி மாறி கடந்து போய்க்கொண்டே இருக்கும் .இதுதானே வாழ்க்கை .

 

நாங்கள் அவசரமாக ஊர் திரும்ப நேரிட்ட போதும் என் மகன் வழிப் பேரன் முகிலன் [ வயது 11 ]அவசர அவசரமாக ஒரு மணி நேரத்தில் வரைந்து அளித்த ஓவியமே இப்பிறந்த நாளுக்கு நான் பெரிதும் மகிழும் பரிசாகும் . இங்கே அந்த ஓவியத்தைப் பகிர்ந்துள்ளேன் மகிழ்வோடு . என் மகள் வழிப் பெயரன்  சஞ்சை ஹஷ்மி பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸைப் பயிலத் தொடங்கி இருக்கிறான் என மகள் சொல்லும் செய்தியைவிட எனக்கு  இனிய பிறந்த நாள் பரிசு உண்டா ? பேத்திகள் சங்கமித்திரா ,மேகா சொன்ன வாழ்த்தினும் பெரிதுண்டோ !

 

என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் முகநூலிலும் அலைபேசியிலும் என்னை வாழ்த்தி மகிழும் அன்புத் தோழர் K.சின்னையா குரலை இனி கேட்கவே முடியாது என்பதே இந்நாளில் என் பெரும் துயரம் .என் பேரிழப்பு.

 

வயது ஒன்று கூடிவிட்டது . அனுபவம் மேலும் பக்குவப்படுத்திவிட்டது . ஆனாலும் உலகிலும் இந்தியாவிலும் நிலவும் சமூக அரசியல் சூழல் நெஞ்சம் பதைக்க வைக்கிறது . யுத்த வெறி ,சுரண்டல் வெறி ,மதவெறி ,சாதிவெறி,இனவெறி,நிறவெறி ,தேசியவெறி,மொழிவெறி ,பிரதேசவெறி ,என எந்தப் பெயரால் வெறி கொள்ளினும் வெறுப்பு இருள் சூழும் ;அன்பு பலியாகும்;மானுடம் தேம்பி அழும். இதற்கு எதிராய் ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன். போரற்ற உலகம் , சுரண்டல் எதிர்ப்பு , சமத்துவம் , அறிவியல் பார்வை ,சமூகநீதி ,பகுத்தறிவு,பாலின சமத்துவம், மானுட அன்பு , ஆதிக்க எதிர்ப்பு ,மூடநம்பிக்கை எதிர்ப்பு , இவற்றை என்னால் இயன்றவரை பேசிக் கொண்டே இருக்கிறேன் . எழுதிக் கொண்டே இருக்கிறேன் .இனியும் தொடரும் . இதுவே என் பிறந்த நாள் செய்தி.

 

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

16/06/25.

 

 


வாழ்க "சாணி"நக்கித்தனம் !

Posted by அகத்தீ Labels:

 


யாருக்காக எழுதுவாய் ?
யாருக்காக அழுவாய் ?
பற்றி எரியும் டெல்அவிஸ்ஸுக்காகவா ?
அகமதாபாத் மரண ஓலத்துக்காகவா ?
கலவர நெருப்பில் பொசுங்கும் மணிப்பூருக்காகவா ?
பசியில் துடிக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்காகவா ?
லாபவெறியிலா பூமிப்பந்தையே சூறையாடுவதற்கு எதிராகவா ?
வெறுப்பும் பொய்யும் மட்டுமே
வசுதைவ குடும்பகமாக்குவதற்கு எதிராகவா ?
போடா போ ! புண்ணாக்கு !
இதையெல்லாம் விவாதிக்க நாங்கள் என்ன வெட்டிப் பயலா ?
மாம்பழச் சண்டை
அணில் ஆட்டம்
முருகக் கடவுளை முச்சந்திக்கு இழுத்து பகடை உருட்டும் சகுனி பெருமை
"பயில்வான் ரங்கநாதன்" "இந்து நேசன்" வகைறா சூடான செய்திகள்
எவ்வளவோ இருக்கு !
போடா போ !புண்ணாக்கு!
உன் அன்பையும் மனிதத்தையும்
பகுத்தறிவையும் நேர்மையையும் தூக்கி உடைப்பில் போடு !
வாழ்க "சாணி"நக்கித்தனம் !
சுபொஅ.
14/06/25

நான் சொல்ல வேண்டுமோ

Posted by அகத்தீ Labels:

 அவர்களின் மூக்கு அலாதியானது

மாட்டுக்கறி வாசம் மட்டுமே அறிந்தவை.


அவர்கள் கண்ணின் பார்வை வித்தியாசமானது
குல்லா மட்டுமே கண்ணில் தெரிந்தவை

அவர்கள் கைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை
தங்களவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுபவை

அவர்களின் கால்கள் அபூர்வமானவை
கலவரம் செய்ய மட்டுமே ஓடுபவை

அவர்களின் இதயம் அரியவகை
வெறுப்பை மட்டுமே உமிழ்பவை

அவர்களின் மூளை விசித்திரமானவை
பொய்களும் புராணப் புளுகுகளும் மட்டுமே நிரம்பியவை

அவர்கள் யாரென
நான் சொல்ல வேண்டுமோ

சுபொஅ.
13/06/25.

அண்டா வாயும் அகல வாயும்

Posted by அகத்தீ Labels:

 




அண்டா வாய் … அகல வாய்…..

 

 

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரு சாப்பாட்டை ருசி பார்த்துவிட வேண்டும் .  “நண்டு திங்கிற ஊரில் நடுகண்டம் நமக்கு” என்பது சொலவடை . உங்களுக்கு ஏதேனும் மருத்துவரீதியான ஒவ்வாமை இருக்குமெனில் மட்டுமே தவிர்க்கலாம் என்பது பொதுவிதி .

 

ஆகவே ,நீங்கள் அமெரிக்கா போனால் அங்கு ஸ்பெஷல் ஹும் பர்க்கர் [HUMBURGER] தான்  .  அதுவும் மாட்டுக்கறி பன்றிக்கறி பர்க்கர்தான் .  வெஜ்ஜெல்லாம் கிடையாது .அதைச் சாப்பிடாமல் வரலாமோ ! ஆயின் ,அதைச் சாப்பிட உங்களுக்கு முன்கூட்டியே ஸ்பெஷல் பயிற்சி தேவை . அதாவது உங்கள் வாயை அண்டா வாயாகவும் அகல வாயாகவும் ஆக்கிப் பழக வேண்டு .மூன்று நான்கு அங்குலம் வாயைத் திறக்காமல் பர்க்கரை வாயில் நுழைக்கவே முடியாது .அமெரிக்காவில் பலர் இரண்டு கையாலும் வாயில் பர்க்கரை திணிப்பதை பார்த்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது .

 

சரி ! வாயைக் கிழிக்கும் பயிற்சி தேவை இல்லை . காபி மட்டும் குடிக்கலாம் எனில் அதற்கும் “ நீட்” தேர்வு எழுத வேண்டும் . சும்மா சொல்லவில்லை . ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் என் மருமகள் எங்களுக்கு காபி ஆர்டர் செய்த போது பார்த்தேன் . சும்மா காபி என கேட்க முடியாது . உடனே கம்ப்யூட்டர் நிறைய கேள்வி கேட்கும் . உங்களுக்கு அந்த ரக இந்த ரக காபி கொட்டையா எந்த ரக காபி கொட்டை , பாலூற்றியா ஊற்றாமலா , பாலெனில் எந்தப்பால் மாட்டுப்பாலா அந்தப்பாலா இந்தப்பாலா , சர்க்கரை வேண்டுமா வேண்டாமா , சர்க்கரை வேண்டுமெனில் அந்தச் சர்க்கரையா இந்தச் சர்க்கரையா எந்தச் சர்க்கரை , சூடாகாவா ஐஸ் காபியா , அந்தக் கோப்பையிலா இந்தக் கோப்பையிலா  இப்படி அது கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடிக்கும் முன் காபி குடிக்கும் ஆசையே போய்விடும் போலிருக்கிறது . [ ஒரு சினிமாகூட இதைக் கேலி செய்து வந்துள்ளது ]

 

இன்னொரு நாள் சப்வே என்ப்படுகிற நீண்ட மெக்சிக்கன் வெஜ் பர்க்கர் ஆர்டர் போட  மருமகளுடன் உடன் இருந்தேன் அப்போது கம்ப்யூட்டர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதிலே இல்லை ; மருமகளிடம் கேள்விகளைத் தள்ளிவிட்டுவிட்டு நான் வேடிக்கை மட்டும் பார்த்தேன் .  நெடிய பரிட்சைக்கு பின்தான் பர்க்கர் வந்தது .அங்கு எல்லாமும் அப்படித்தான் வரும் .

 

 

ஆனால் ஒன்று ,வடிவேல் ஊத்தப்பம் ஆர்டர் சொன்ன கதைபோல் இருக்காது ; நாம் கேட்டபடியே வரும் .

 

எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு ஸ்பெஷல் என்னவென்று கேட்கவும் சாப்பிடவும் கூட பொது அறிவு தேவைப்படுகிறது …

 

கோமியம் குடிக்கவும் மாட்டுச் சாணி உருட்டி விழுங்கவும் மட்டும் பகுத்தறிவு தேவைப்படாது . ஆமாம். ஆமாம்….  

 

சுபொஅ.

03/06/25

வர்ஜீனியா .

 

 


வள்ளுவன் தமிழ் மையம்

Posted by அகத்தீ Labels:

 





 

 


 “இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”   ( திருக்குறள் : 621)

 

துன்பங்களைக் கண்டு கலங்காதிரு ! முகமலர்ச்சியோடு எதிர்கொள் ! அதுவே அதனை வெல்வதற்குத் தக்க வழி . அடுத்து இன்பம் காத்திருக்கும் .

 

இன்று என் மனம் ஏனோ இதில்  நிலைகுத்தி நிற்கிறது .  

 

 சனிக் கிழமை [ 31/05/25 ] வர்ஜீனியாவில் எமது நாள் அப்படித்தான் நகர்ந்தது சற்று எதிர்மறையாக . இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே !

 

ஆம். அன்று காலை எழுந்தது முதல் இரவு உணவு வரை . ஒரே உற்சாகம் .மகிழ்ச்சி . அடுத்தூர்ந்தது .. ? கடைசியில் பார்ப்போம். அது சொந்தக் கதை .

 

இங்கு ஓர் புகைப்  படத்தில் ஏடுகள் தொங்கிக் கொண்டிருக்கும் . அது எழில் கொஞ்சும் “திருக்குறள் ஆலமரம்” . அதில் தொங்கும் 1330 திருக்குறள்களையும் தம் கையால் வரைந்தவர்கள் மாணவச் செல்வங்கள் . ஆசிரியர்களும் இதர தன்னார்வலர்களும் கூடி வடிவமைத்த இந்த திருக்குறள் ஆலமரத்தை வ.த.மை ஆம் வர்ஜீனியாவில் உள்ள  “வள்ளுவன் தமிழ் மையம்”  சாதித்திருக்கிறது .

 

15 ஆண்டுகளுக்கு முன் 15 மாணவர்களுடன்  துவக்கப்பட்ட  வள்ளுவன் தமிழ் மையம் எனும் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளி இன்று முதல் நிலை முதல் எட்டாம் நிலை வரை 700 மாணவர்களுடன் ஆலமரமாக வளர்ந்துள்ளது . சனிக்கிழமை தோறும் நடக்கும் இப்பள்ளியில் முழுக்க முழுக்க ஊதியமின்றி உழைக்கும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் தன் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டும் தமிழ் மக்களின் பேராதரவு இவையே அடிஉரம் .

 

இப்பள்ளியின் 15 வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . அமெரிக்க தேசிய கீதம் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்ந்து என  எடுத்த எடுப்பிலேயே தன் பண்பாட்டு முத்திரையை வலுவாய் பதித்தது . நிகழ்வின் கருப்பொருள் வள்ளுவமே . வள்ளுவமும் தமிழுமே நிகழ்வு நெடுக ஓங்கி ஒலித்தது .

 

மாணவ மாணவிகளின் ஒவ்வொரு கலைநிகழ்வுக்கும் இடையில் மாணவர் இருவரின் அறிமுக உரையாடலும் வள்ளுவம் சார்ந்தே அமைந்தது . மாணவர் பங்கேற்கும் ஓர் ‘மினி பட்டி மன்றமும் ‘ இடம் பெற்றது .அதுவும் வள்ளுவம் சார்ந்ததே .

 

மொத்தம் 44 நிகழ்வுகள் இடம் பெற்றன ஒவ்வொன்றும் தமிழ் தமிழ்  என முழங்கின .தமிழ் பண்பாடு மிளிர்ந்தது .பறை , ஒயில் ,கும்மி , முளைப்பாரி ,காவடி , பொய்க்கால்குதிரை ,சிலம்பம் , வாய்ப்பாட்டு ,சேர்ந்திசை ,பரதநாட்டியம் ,கர்நாடக இசை , அறிவியல் விழிப்புணர்வு என கலக்கி எடுத்தனர் . சாதி ,மத வண்ணம் எங்கும் பூசிக்கொள்ளாத தமிழ் உணர்வாக வள்ளுவன் உணர்வாக மொத்த நிகழ்வும் எம்மைக் கட்டிப் போட்டது . ஏதேனும் ஒன்றை மட்டும் தனியே குறித்தால் நிகழ்வின் ஊடும் பாவுமாய் இருந்த மனிதமும் பண்பாடும் முழுதாய் பிரதிபலிக்காது என்பதால் பொதுவாய்ச் சொன்னோம். ஆயினும் நிகழ்வு முழுக்க நாட்டுபுறவியலும் தமிழும் தமிழ் பண்பாடும் நீக்கமற நிரவி இருந்தது குறிபிடத்தக்கது . ஆகவேதான் இறுதிவரை கைதட்டலும் ஆரவாரமும் அரங்கில் நிரம்பி வழிந்தோடியது .

 

என் பேரன் முகிலன்  காவடி ,பொய்க்கால்குதிரை ஆடியதும் ; என்  பேத்தி மேகா பறை இசைக்கு ஆடியதும் எமக்கு பெரு மகிழ்ச்சி . மிகுந்த மனநிறைவு.

 

 

அமெரிக்க செனட் உறுப்பினர் . நாடாளுமன்ற உறுப்பினர் . தூதுரக அதிகாரி உட்பட பலர் சிறப்பு விருந்தனராக வந்து கலந்து கொண்டதும் ; செனட் சார்பாக வள்ளுவன் தமிழ் மையத்தைப் பாராட்டி பட்டயம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது .  எட்டாம் நிலை தேர்வு பெற்றவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது . தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலோடும் பாடதிட்டங்கள் , தேர்வு எல்லாம் வடிவமைக்கப்படுவதால் அமெரிக்க கல்வித்துறையும் இங்கு பெறும் சான்றிதழை அங்கீகரிக்கிறது . தனிப்பட்ட யாரையும் முன் நிறுத்தாமல் குழுவாக அனைவரும் இயங்கியதும் வெளிப்பட்டதும் அந்த அமைப்பைப் பாராட்டத் தோன்றியது .

 

வர்ஜீனியாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இதுபோல் தமிழ் கற்பிக்க பலவேறு பள்ளிகள் நடத்தப்படுவதாக அறிகிறோம்.

 

வள்ளுவன் தமிழ் மையம் போல் மற்றவைகளும் இயங்குமெனில் நிச்சயம் மகிழ்ச்சியே !

 

காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்வுகள் இரவு 7 மணிக்குத்தான் நிறைவுற்றது [ இடையில் மதிய உணவு , மாலை சிற்றுண்டி  இரவு உணவும் அங்கேதான் ஏற்பாடு]

 

இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

 

காலை முதல் மாலைவரை வர்ஜீனியாவில் இருக்கும் உணர்வே யாருக்கும் இல்லை .தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் கூடிக் கொண்டாடிய மன நிறைவு .

 

########################

 

இரவு உணவை முடித்து அரங்கிலிருந்து புறப்படும் போது என் இணையருக்கு சின்ன விபத்து . உடன் மருத்துவ சிகிட்சையின் பொருட்டு எம் பயணத்தை பத்துநாட்கள் முன்நகர்த்த [ ஜூன்5 , 6 ]வேண்டியதாகிவிட்டது . ஜூன் 6 இரவு பெங்களூர் வந்து சேர்வேன் .ஆபத்தொன்றும் இல்லை . பயப்படத் தேவை  இல்லை . அமெரிக்க மருத்துவத்துறையின் கோரமும் கொடூரமும் பகற்கொள்ளையும் புரிந்தது .பிறகு எழுதுவேன்.   

 

ஆரம்பத்தில் சுட்டிய குறளுக்கு மீண்டும் செல்கிறேன்.

 

சுபொஅ.

02/06/26

வர்ஜீனியா .

 



நானும் உள்ளொளியும்

Posted by அகத்தீ




  “நானும்”  ”உள்ளொளியும்”…..

 

தூக்கம் தொலைத்த இரவுகளில்

”நானும்”  ”உள்ளொளியும்”…..

பின்னோக்கி

வெகுதூரம் பயணித்தோம்….

வழிஎங்கும் அசைபோட்டோம்

கடந்த பாதையினை எடை போட்டோம்!

 

 

நெஞ்சாரச் சொல்லுகிறேன்

ஒழுக்கம் தவறியதாய்

நேர்மை தடுமாறியதாய்

அநீதி இழைத்ததாய்

பேராசையில் புழுங்கியதாய்

யாரையேனும் பழிவாங்கியதாய்

நினைவுக்கு எட்டியவரை இல்லை

ஒரு  வேளை

என்னை அறிந்தவர்களுக்கு தெரியக்கூடும்

நான் அறியாமல் செய்த

ஏதேனும் அவர்களை உறுத்தி இருக்கலாம்

அதற்காகவும்

இப்போது வருந்துகிறேன்.

 

ஆனால் ,

அன்று

இப்படி பேசியிருக்கக் கூடாது

இப்படி ஒதுக்கி இருக்கக்கூடாது

இப்படி காயப்படுத்தி இருக்கக்கூடாது

 

 

அதை அப்படிச் செய்யாமல்

இப்படிச் செய்திருக்கலாமோ

அதை இன்னும் நிதானமாக அணுகி இருக்கலாமோ

ஏன் அந்த அவசரக்குடுக்கைத்தனம் ?

விட்டுக்கொடுப்பதில் என்ன பிரச்சனை

வீணாக சந்தேகப்பட்டுவிட்டோமோ !

எல்லாம் காலம் கடந்த ஞானம்தான்.

 

என்  “அகத்தாய்வு” முடிவற்றது

அது சுய இரங்கலும் அல்ல

சுயபச்சாதாபமும் அல்ல

விமர்சனங்களுக்கு

சரியாக செவிகொடுத்தேனோ இல்லையோ

சுயவிமர்சனம் உள்ளொளியாய் பரவுகிறது

முதுமை பக்குவப்படுத்திவிட்டதோ ?

 

ஜெயகாந்தன் சொல்லுவார்

 “வாழ்க்கை என்பது

அந்தந்த நேரத்து நியாயங்கள் !”

ஆம்

அது சரியும்தான் ; இல்லையும்தான்.

 

நேற்றைய நியாயங்கள்

இன்றைக்கு பல்லிளிக்கிறது …

இன்றைய நியாயங்கள்

நாளை பல்லிளிக்குமோ

தனி மனித ”அனுபக் காயங்கள்”

ஒருபோதும் ஆறாமல் எதையோ

சொல்லிக் கொண்டே இருக்கும் .

 

அனுபவம் என்பதும்

மாறிக்கொண்டே இருப்பதுதானே !

அனுபவம் படிக்கல்லாகும்

எப்போது ?

பார்வை ஆழமாகும் போது ; விசாலமாகும் போது !

சமூக அறிவியலை உள்வாங்கும் போது

ஞானத்தின் மெய்யான ஊற்று அதுதானே !

 

தூக்கம் தொலைத்த இரவுகளில்

”நானும்”  ”உள்ளொளியும்”…..

பின்னோக்கி

வெகுதூரம் பயணித்தோம்….

வழிஎங்கும் அசைபோட்டோம்

கடந்த பாதையினை எடை போட்டோம் !

 

 

 

சுபொஅ.

28/05/25.

 

 

 

  

RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “

Posted by அகத்தீ Labels:

 


முதல் நாள் மாலை  மாலை நேரம் பள்ளி பஸ்ஸில் இருந்து திமுதிமுவென இறங்கிய குழ்ந்தைகள் இருபதடி தள்ளி நின்றனர் . உச்சுக்கொட்டினர் .சில குழந்தைகள் அழுதன . என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன். இரண்டு அங்குல நீளம்கூட இராத பிறந்த குட்டு குருவி ஒன்று இறந்து கிடந்தது. என் பேரனும் பேத்தியும் பாவம் என வருந்தினர். வீடு வந்துவிட்டோம்.

 

மறுநாள் பள்ளிக்கு போகும் போது அதே இடத்தில் குழந்தைகள் கூட்டம் . செடிகளில் இருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகின்றனர் .

 

ஆர்வத்தோடு நானும் சென்றேன் . ஒரு செடியோரம் மண்ணைக் குவித்து ஒரு குட்டி சமாதி .அதன் மீது ஒரு சிறிய அட்டை .அந்த அட்டையில்  “ RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “ கறுப்பு மையால் எழுதி சொருகி இருக்கிறது . குழந்தைகள் அதன் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செய்கின்றனர்.

 

ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன் . என் பேரனும் பேத்தியும் மலர் பறித்து வந்து அஞ்சலி செய்தனர் .சிலிர்த்தேன்.

 

என்னுள் ஒரு கேள்வி விஸ்வரூபமெடுக்கிறது . ஓர் குட்டி குருவியின் மரணத்துக்கு வருந்தி கண்ணீர் விடும் குழந்தைகள் மனம் எங்கே ? ஆயிரக் கணக்கான குழந்தைகளுக்கு உணவை எடுத்துச் செல்லவும் வழிவிடாமல் காஸாவை முற்றுகையிட்டு குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலிய ஜியோனிச யூதவெறி எங்கே ?

 

சுபொஅ.

22/05/25.

வர்ஜீனியா .


Posted by அகத்தீ Labels:

 

குட்டிக் கதை

 

தாத்தா இறந்து விட்டார் . அவர் நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவரது போட்டோ சாமி படங்களின் நடுவே கூடத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது .  ஊதுபத்தியும் மணம் வீசத் தொடங்கிவிட்டது .

 

“ அப்பா ! ஏன்பா ! தாத்தா படத்துக்கு பூமாலை போடுறீங்க !”

 

“ தாத்தா சாமியாயிட்டாரும்மா ! அதுதான் மாலை எல்லாம் போட்டு கும்பிடுறோம்….”

 

“ அப்பா ! அந்த சாமி எல்லாம் கூட செத்துப் போச்சா ? அதுதான் மாலை போடுறோமா ?”

 

அப்பா திருதிருவென விழித்தார் .

 

சுபொஅ.

20/05/25.