இன்னொரு நவகாளி
எஸ் வி வேணுகோபாலன்
மிக அவசரமாகத்
தலைநகர் ராஜ்காட் சமாதியில் இருந்து
காந்தி வெளியேறிவிட்டார் என்ற
தகவலை உறுதி செய்கிறோம்
மரணத்திற்குப் பின்னும் தொடரும்
படுகொலை முயற்சிகள் குறித்து
அவர் வேதனை அடைந்திருக்கக் கூடுமென்று
அதிகாரபூர்வ வட்டாரங்கள்
(பெருமிதம் பொங்கும் குரலில்) தெரிவிக்கின்றன
ஒருபோதும் அவர்
தாம் பிறந்த குஜராத் பக்கம்
திரும்பி இருக்க வாய்ப்பில்லை என
ஏற்கெனவே விளக்கப் பட்டது
நேயர்களுக்கு நினைவிருக்கலாம்
காணாமல் போன காந்தி பற்றிய
முதல் தகவல் அறிக்கை எதுவும்
நாட்டின் எந்தக் காவல் நிலையத்திலும்
பதிவாகவில்லை என்கிறது யூ என் ஐ செய்தி ஒன்று
தொலைந்தார் காந்தி என்று தொடங்கும்
மத்திய அரசு அறிக்கை ஒன்றின் மெய்ப்பொருள் வேறு
என்கிறார் நமது நாடாளுமன்றச் சிறப்புச் செய்தியாளர்
கோட்ஸே சிலைகளை
தேசத்தின் கோயில்களில் நிர்மாணிக்க
முடிவெடுத்திருக்கும் சந்நியாசி அமைச்சக
பறக்கும்படை தளபதிகள்
ரூபாய் நோட்டுக்களில் நீண்டகாலம்
சிறைப்பட்டிருக்கும் காந்தியை வெளியேற்றி
அங்கே கோட்சேயை நிரந்தரமாகக் குடிவைக்கும்
அவசரச் சட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகச்
சற்றுமுன் வந்த பி டி ஐ செய்திக்குறிப்பு எச்சரிக்கிறது
'காந்தி இனிமேல்தான் கொல்லப்பட இருக்கிறாராமே?'
என்று தொடுக்கப்பட்ட
பொதுநல வழக்கு
ஜனவரி 30 காலை 11 மணி
இரங்கல் நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது
காந்தியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு
போடப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனு
சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டாலொழிய
விசாரணைக்கு எடுக்கப்பட மாட்டாது
என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது
மெரீனா கடற்கரையில்
காலை வழக்கமான நடைப்பயிற்சிக்கு வந்தோர்
காந்தி சிலையும் காணாமல் போயிருந்ததைக் கண்டு
அதிர்ந்து போகாமல் அடுத்த சுற்று நடையைத் தொடர்ந்ததாக
உற்சாக நேர்காணல் ஒன்றில்
உலக ஆரோக்கிய நடைப்பயிற்சி சித்தர் ஒருவர் தெரிவித்தார்
காந்தி என்பது ஒரு மேலைத் தத்துவம்
காந்தி என்பது ஒரு வெறி
காந்தி என்பதுதான் உண்மையில் மாயை
காந்தியிலிருந்து காந்தியையும்
காந்திக்கு வெளியே இருந்து காந்தியையும்
காந்தியைக் கொண்டே காந்தியையும்
காந்தியைக் கொன்றவனைக் கொண்டே காந்தியையும்
விடுவிப்பதே பகவத் கீதையின்
மோட்ச சித்தாந்தம் என்கிறார்
பூஜ்ய ஸ்ரீ நாதுராம் தாச விநாயக் அடிவருடி கோட்ஸே கொண்டாடி பாபா
இதனிடையே
இரவு நேர ரோந்துப் பணியாளர்களிடம்
சிக்கிய
அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரை
நள்ளிரவைக் கடந்த நேரத்தில்
விசாரித்த மாஜிஸ்திரேட்
தம் இருப்பு இறப்பைப் பற்றி
யாதொரு கவலையுமின்றி
அடியுதைகளால் களவாடப் பட முடியாத
புன்னகை நிரம்பிய அந்த ஆசாமி
இன்னொருமுறை நவகாளிக்குச் சென்று
நடக்கத் தமது பாதங்களுக்கு
சக்தி இல்லையே என்றே
வேதனையோடு முனகிக் கொண்டிருந்ததாகக்
குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்.....
0 comments :
Post a Comment