இரங்கற் குறிப்புகளில்
சொல்லப்படுபவை எல்லாம்
உண்மைதானேன்று
இறந்தவரா சாட்சி சொல்லுவார்
அஞ்சலி உரைகளில்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசப்படவில்லை என
மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்
நினைவுகூரும் சடங்குகளில்
வரலாறு திரிக்கப்படவில்லை என
வாக்குமூலம் தந்திட இறந்தவர்
மீண்டும் வரவா போகிறார் ?
மேடைகளில் சொல்லப்படும்
இறந்தவர் பெருமைகள்
பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்
சிறுத்துப் போனது எப்படி ?
நான் கேட்டுக்கொண்டிருந்த போது
இடைமறித்த இறந்தவர்,
“வாழும் போது மட்டும் புகழ்கையில்
உண்மையா பொங்கி வழிகிறது?”
இருப்பவரோ இறந்தவரோ
அவரவர் தேவைக்கு
கூட்டியும் குறைத்தும்
கதை கட்டவேண்டியதுதான் .
ஆனாலும்
அடுத்தவரால் நெய்யப்படும்
வாழ்க்கைக் கதையைவிட
சுயவரலாற்றில் பொய் குறைந்து
உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?
[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]
சுபொஅ.
No comments:
Post a Comment