Pages

Friday, 5 June 2026

இரங்கற் குறிப்புகளில்

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.

 

No comments:

Post a Comment