Pages
▼
Tuesday, 10 May 2022
போராட்ட களத்தில் பூத்த நெருப்பு மலர்
.
எப்போதுமே போராட்டக் களங்களில் உயிர்ப்பான கவிதை பூக்கும் . இந்திய விடுதலைப் போராட்டமோ ,ரஷ்யப் புரட்சியோ , சீனப்புரட்சியோ ,வீரவியட்நாம் எழுச்சியோ எதுவும் விதிவிலக்கல்ல .
381 நாள் இந்திய நாட்டையே உலுக்கிய விவசாயிகளின் உறுதியான போராட்டம் இலக்கியத்திலும் வேர்விட்டது . நா.வெ.அருளின் “ பச்சை ரத்தம்” கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய போராட்ட தளபதிகளில் ஒருவரான தோழர் ஹன்னன் முல்லா தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் .
“ பஞ்சாபில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயக்கத்தின் வெவ்வேறு அத்தியாயங்களைச் சித்தரிக்கும் வகையில் இயற்றப்பட்டதாக அறிகிறேன். பல இளைஞர்கள் பாடல்கள் எழுதினார்கள் .மாநிலத்தில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பாடி வருகிறார்கள் .ஹரியானாவில் பல நாடுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டன . பஞ்சாப் மற்றும் ஹரியானா மட்டும் இல்லை ; பல மொழிகளில் பல இலக்கியங்கள் கிளர்ந்து வந்தன.”என்கிறார் .
தமிழிலும் பலர் பாடல் எழுதினர் ;கவிதை புனைந்தனர் .அவற்றை தொகுக்க வேண்டும் . இந்த போராட்ட களத்தில் உயிரோவியமாய் உதித்ததுதான் நா.வெ.அருளின் “பச்சை ரத்தம்”
இரத்தமும் ,சதையும் ,கோபமும் ,அறமும் கொப்பளிக்கும் கவிதைகள் .
“உதிரமும் உழவர்களும் ஒன்று
உயிரணுக்களை வாழவைக்கும்
உதிரத்தைப் போலவே
உலகத்தை வாழவைக்கும்
உழவர்கள்.” என மிகச் சரியாய் குறிக்கிறார்.
“ ஒரு கட்டளையில்
பசியின் குறைந்தபட்ச உத்திரவாதம்
நீக்கப்படுகிறது.
மறு கட்டளையில்
வயல் வெளிகள் முழுவதும்
பணத்தாள்கள் நடப்படுகின்றன.
மூன்றாம் கட்டளையில்
வயல் வெளிகளே சொந்தமில்லாமல் போய்விடுகின்றன.”
மோடியின் கொடூர வேளாண் சட்டங்களை இதைவிட எளிதாய் அழகாய்ச் சொல்ல சொற்கள் ஏது ?
“ போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள்
மந்திரத் தனமையாக மாறிவிடுகின்றன.
அவ்வெலும்பு மஜ்ஜைகளில்தாம்
கல் இதய மனிதர்களுக்கான
வாய்க்கரிசி தயாராகின்றன .”
வெறும் கோவம் மட்டுமல்ல ; அறச்சீற்றம் ; தொலை நோக்கு .
“விவசாயிகளுக்காக
எழுதப்படும் ஒவ்வொரு கவிதையும்
ஆன்மாவில் எழுதி தோலில் மிளிர்கிறது.”
என நா.வெ.அருளின் கவிதை வரிகள் அவரின் இந்நூல் முழுமைக்கும் அப்படியே பொருந்திப் போகிறது .
“ கவிதைக்கு உவமை அழகு .அந்த உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும் . இந்தக் கவிதைத் தொகுப்பில் “ ருத்திர தாண்டவம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை ஒரு புதிய கவிப்பார்வையைத் தருகிறது .”என த.உதயச் சந்திரன் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது மிகையன்று.
விவசாயிகளுக்கு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பெ.சண்முகம்.
“ வெளியே தெரிவதில்லை
எனினும்
விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல
அவன் ரெளத்திரம் பிரமாண்டமானது .”
அவற்றை கவிதையாய் யாத்திருக்கும் நா.வெ.அருளின் பச்சை ரத்தமும் பிரமாண்டமானதே !
இப்போதும் பலர் சொல்லுகின்றனர் கவிதை நூல் விற்பதில்லை .மெய்தான் .ஆயின் இது கவிதை நூலல்ல ;அதற்கும் மேல் “ ஓர் நல்ல கவிதை எங்கே பிறக்கும் ; எப்படிப் பிறக்கும்” என்பதன் நேரடி சாட்சியான - இலக்கணமான நூல் .
இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளிவந்திருப்பது மகிழ்வான செய்தி .
இதனை வாங்கி வாசிப்பது நம் கடமை .
வாழ்த்துகள் அருள் ! தொடர்க உம் கவிதைப் பயணம் !
சு.பொ.அகத்தியலிங்கம்.
10/5/2022.
No comments:
Post a Comment