தினம் ஒரு சொல் .28 [ 26/09/2018 ]
முன்பெல்லாம் இன்பச் சுற்றுலா என்பர் . இப்போதெல்லாம் ஆன்மீகச்
சுற்றுலா என்றே விளம்பரமும் ஆள் சேர்ப்பும் நடக்கிறது .கோயில் கோயிலாய் இழுத்துச் செல்கிறார்கள்
. திவ்ய தரிசனம் என குதுகலிக்கின்றனர் .
சுசீந்திரம் கோயிலின் ஒவ்வொரு தூணிலும் கலை கொஞ்சும் சிற்பம்
உண்டு .நான் சிறுவனாயிருக்கும் போது ஒவ்வொன்றாய் நுணுகிப் பார்த்தவன் .சுவரில் தேவாரம்
,திருவாசகம் எழுதப்பட்டிருக்கும் . சிறுவனாயிருக்கும் போது வாய்விட்டு வாசித்து அதன்
அழகு தமிழில் சொக்கி இருக்கிறேன் .
ஆனால் ஆன்மிகச் சுற்றுலா என்பது இது போன்றவற்றையோ ஊரின் இதர
பெருமைகளையோ பேசாமல் வெறுமே சாமி கும்பிடுவது ,அர்ச்சனை செய்வது ,சாமி படம் வாங்குவது
.பிரசாதம் வாங்கித் தின்பது என முடிந்துவிடுகிறது .
விடுதலைப் போரின் போது சுசீந்திரம் சாமி தேரில் காங்கிரஸ் கொடியை
ஏற்றியதையோ ,அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் டஜனுக்கும் மேற்பட்டோர் பலியானதையோ
யாருக்கும் சொல்லுவதேயில்லை .
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் செல்வோர் அங்குள்ள ஓவியக் கண்காட்சியில்
விடுதலைப்போரில் சீக்கியரின் அளப்பரிய பங்களிப்பை ,தியாகத்தை மெய்சிலிர்க்க உணரலாம்
.
ஆன்மிகச் சுற்றுலா வெறும் சடங்காகவே எங்கும் பொதுவாய் இருக்கிறது
. இந்தியா ஓர் நந்தவனம் .இதன் பன்மையை ,பெருமையை ,பண்பாட்டு பல்வண்ணத்தை , உணரவைக்கும்
வானவில் சுற்றுலா எப்போது கைக்கூடும் ?
முற்போக்கு என்பது போராட்டக் களங்களோடு முடிவதல்ல ; வானவில்
சுற்றுலாக்கள் பண்பாட்டு முன்னெடுப்பாவது எப்போது ? உங்களில் எவர் அதற்காக முன்கை எடுக்கப்
போகிறீர்கள் ?
.
No comments:
Post a Comment