Pages

Friday, 5 September 2025

பிள்ளையாரப்பா !

 


பிள்ளையாரப்பா !



குட்டி குட்டி மண்பிள்ளையாரை

டிரம் தண்ணீரில் போட்டு

மூடிவைத்து கரைந்ததும்

வெளியே கொட்டும்

அடுக்கக பக்தர்களை

பிள்ளையாரப்பா ! நீ

பாராட்டி இருக்கவேண்டாமா

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதற்காக ?

 

 

குத்துப்பாட்டும்

மூச்சுமுட்டும் மதுநெடியும்

வசூல் வேட்டையும்

வாரிச் சுருட்டலும்

மனதைக் குமட்டுவதால்தான்

தூக்கி வீசும் போது

“அப்பாடா ! தப்பித்தோம்

இந்த ஆண்டு கலவரத்திலிருந்து” என

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாரா ?

பாவம் ! அந்தப் பிள்ளையாரப்பா !

 

 

மராமத்துப் பணிக்காக

நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட

ஏரியின் ஓரத்தில்

வழிந்தோடிய சாக்கடையில்

வீசிஎறியப்பட்ட பிள்ளையாரப்பா

என்ன நினைத்துக்கொண்டிருப்பார் !

 

 

இரண்டு மூன்று நாட்களாய்

ஒவ்வொரு தெருவிலும்

சுண்டல் ,வடை , இனிப்பு

கொழுக்கட்டை , புலவு என

தன் வாடிக்கையாளர்கள்

வயிற்றை பிள்ளையாரப்பா நிரப்பிட

ஐந்து நாட்களாய்

போண்டா பஜ்ஜி கடையை

மூடிவைத்திருந்த பாட்டி

இன்று கடை திறந்து

சாமியைக் கும்பிடும் நொடியில்

என்ன வேண்டி இருப்பார்

”அடுத்த ஆண்டாவது மூன்று நாளில்

முடித்துக் கொள்ளப்பா பிள்ளையாரப்பா!” என்றா ?

 

சுபொஅ.

06/09/25.


No comments:

Post a Comment