Pages

Thursday, 4 September 2025

சொல்லித் தீராத உண்மைகள் .

 





 

சொல்லித் தீராத உண்மைகள் .

 

 

இன்றைய ஊடகங்கள் மீதான கோவமும் விமர்சனமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . அவை எல்லாம் ஒரே கோணத்தில் இருக்காது , அவரவர் அரசியல் பார்வைக்கு ஏற்ப இருக்கும் . ஆயினும் உண்மை எது ? தேடுக தொடர்ந்து .

 

களப்பணியாளர்களும் ,ஊடகப் பார்வையாளர்களும் ஊடகத்தில் பணியாற்றுகிறவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை ‘ விலக மறுக்கும் உண்மைகள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக தந்துள்ளார் அ.ப.அருண்கண்ணன் . தாமதமாகத்தான் படித்தேன் . சொல்கிறேன்.

 

இந்நூல் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு .இதில் நான்கு கட்டுரைகள் ‘வளரி’என்கிற குறைவான வாசகர் பரப்பைக் கொண்ட ஏட்டில் வெளிவந்தவை .ஒன்று ’தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்தது .   

 

 சினிமாவை முன்வைத்து பேசுகிறது கட்டுரை ஒன்று .  ஆவணப்படங்களை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் . புகைப்பட கலைஞனை முன்வைத்து பேசுகிறது இன்னொன்று . கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் பற்றி பேசுகிறது ஒன்று .இப்படி ஐந்தும் தனித்தனியே முகம் காட்டினாலும் இதன் ஊடும் பாவுமாக இருப்பது பாசிச அரசியல் மீதான விமர்சனப் பார்வையே ! பாசிசம் எப்படி ’பொய் பொதிந்த கருத்துத் திணிப்பில்’ மிகவும் நுட்பமாக வினையாற்றுகிறது என்பதை அறிய இக்கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் .

 

இந்தோநேசியாவில் ஒரு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொடுங்கோலன் சுகர்னோ படுகொலை செய்ததை நியாயப்படுத்தி  கம்யூனிஸ்டுகளை தேசவிரோதிகளாகச்  சித்தரிக்கும் ‘பெங்கியானன் ஜி30எஸ்/பி.கே.ஐ’ [ pengkhianatan G30S/PKI ]என்றொரு பிரச்சாரப் படத்தை இந்தோநேசிய இராணுவ ஆட்சி தயாரித்து இளைஞர்களை கட்டாயம் பார்க்க வைத்து , அதை ‘ உண்மைவரலாறு ‘ போல் நம்பவைக்க முயன்றது .இதனை முன்னுரையில் சிந்தன் குறிப்பிடுவதை கவனத்தில் வைத்துக்கொண்டே முதல் கட்டுரையை வாசிக்க வேண்டும் .

 

“ வரலாற்று உண்மையை சொல்ல மறுக்கும்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற படம் விவேக் அக்னி ஹோத்திரி என்பவரால் இயக்கப்பட்டது .1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தியை ’கொடூர உண்மை வரலாறு போல்’ சித்தரித்து இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிட உருவாக்கப்பட்ட திரைப்படமே அது .  மோடியும் சங்பரிவார்களும் இதனைத்தூக்கிச் சுமந்ததில் இருந்தே அது ’புராணப் புளுகு’ போன்ற ’வரலாற்றுப் புளுகு’ என்பது வெளிச்சமாகவில்லையா ? இதனை காஷ்மீர் வரலாற்றுடனும் சங்பரிவாரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்தியும் கட்டுரைக்கு நியாயம் வழங்கியுள்ளார் அருண் கண்ணன் .

 

இதனைப் படிக்கும் போது ‘கேரள ஃபைல்ஸ்’ மற்றும் மராட்டிய திரைப்படம் ‘சாவா’ ஆகிவை எப்படி சிறுபான்மை மக்களை எதிரிகளாக்கியது என்பது நினைவுக்கு வராமல் போகாது . தமிழ்நாட்டிலும் சில திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியும் இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்தரித்தும்  வருவது கவனத்துக்கு உரியது .ஆக ,திரைப்படத்துறையில் மதவெறி சாதிவெறி அரசியல் தொழில்படத்துவங்கி உள்ளதை மிகவும் கவலையோடும் எச்சரிக்கையோடும் பார்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை நம்மிடம் சொல்லுகிறது .

 

 “தந்துரா : உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா ?” இது பாலஸ்தீனத்தின் கதையைப் பேசும் ஆவணப்படம் . 1948 ஆம் ஆண்டு தந்துரா என்ற கடற்கரை கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் . இது செய்தி .இதனை இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது . இரதரப்பையும் அலசுவது போல் இந்த ஆவணப்படம் தோற்றம் காட்டினும் படுகொலை நடந்தது என்பதை வலுவாகவே முன்வைக்கத் தவறவும் இல்லை .ஆயினும்  ,’” ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவிலும் பூர்வகுடிகளை கொன்றதை ஒத்துக்கொண்டதுபோல் நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் .  படத்தில் இறுதியில் நினைவுச் சின்னம் அமைப்படுவதுடன் முடிகிறது ,அதில் ’சுதந்திரப்போர் நினைவுச் சின்னம்’ என்றே பொறிக்கப்படுவது இஸ்ரேலின் பக்கத்தில் பார்வையாளரைப் பிடித்துத் தள்ளுகிறது .இப்படத்தை இயக்கியவர் அலோன் ஸ்வாரஸ் .இவர் இஸ்ரேலைச் சார்ந்தவர் .இவர் இடதுசாரி முகாமைச் சார்ந்தவர் எனச் சொல்வதுதான் அதிர்ச்சி . இது உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா என்பதுதான் கேள்வி . விடை . ஒவ்வொருவரிடமும் மாறுபடும் .

 

இன்னொரு ஆவணப்படம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை ’பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா’   சோபியா ஸ்காட் மற்றும் ஜார்ஜியா ஸ்காட் இயக்கிய ‘டுமாரோஸ் ஃபிரீடம்’ எனும் ஆவணப்படத்தை முன்வைத்து பாலஸ்தீனப் போராளி ’மர்வான் பர்குதி’யின் வாழ்க்கையையும் பாலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் முக்கிய கண்ணியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை .

 

“ அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசிய புகைப்படக் கலைஞன்’ டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் போரின் போது தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் .உலகமே கண்ணீர் விட்டது . ஆனால் அந்த மாபெரும் இந்திய புகைப்படக் கலைஞனுக்காய் மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . இது போதாதா அவர் யார் என்று சொல்ல ? அவரின் புகைப்படக் கருவி எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவுமே படம் பிடித்தது .அவரது புகைப்படங்கள் உண்மையை உரக்கச் சொல்லின . ஊடகங்கள்  மீது ‘இன்னும் நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்ல இத்தகையவர்கள் சாட்சியாகிறார்கள் . ஊடகத்துறையில் செயல்படும் சமூக அக்கறை மிக்க ஊடகக்காரர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணம் . வாசியுங்கள் நண்பர்களே !

 

எண்டிடிவி என்கிற தனியார் கார்ப்பரேட் ஊடகம் எப்படி அம்பானியால் விழுங்கப்பட்டது என்பதைச் சொல்லும் கட்டுரை ; ” ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல்’.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற ஊடகங்கள் ஆட்சி அதிகாரத்தால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறது ஆட்டுவிக்கப்படுகிறது என்பதன் சாட்சி .

 

இந்நூலை எழுதிய அருண்கண்ணனுக்கு வாழ்த்துகள் !

 

ஊடகம்  சினிமா தொடர்பான நம் பார்வையையைக் கூர்மைப் படுத்த இதுபோன்ற நூல்களை வாசிப்பது களப்பணியாளர்கள் கடமையாகும் . ஊடகங்கள் குறித்தும் ’பொய் பொதிந்த கருத்தித் திணிப்பு’ முயற்சிகள் குறித்தும் எத்தனை நூல்கள் வந்தாலும் சொல்லித் தீராத உண்மைகள் நிறைய இருக்கும் .

 

விலக மறுக்கும் உண்மைகள்  : சினிமா ,ஊடகம் தொடர்பான கட்டுரைகள் ,அ.ப.அருண்கண்ணன்,  பாரதி புத்தகாலயம் ,  www.thamizhbooks.com    / 8778073949  ,

பக்கங்கள் : 72 , விலை  :ரூ. 70 /  

 

சுபொஅ.

05/09/25.

 

 

 

 

 

 


No comments:

Post a Comment