Pages

Sunday, 27 July 2025

வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

 



வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

 

 

சக்தி சூர்யாவின் முதல் நாவல் ‘நரவேட்டை’யை வாசித்து மகிழ்ந்து பாராட்டியவன் நான் . ’சந்தாலி’ நாவல் என் கைக்கு மார்ச் மாதமே கிடைத்துவிட்டது . பல்வேறு சூழல்களால் வாசிப்பு தள்ளிப்போனது . நேற்று [ 26/07/25]தான் வாசித்து முடித்தேன் . தாமதத்திற்கு வருந்துகிறேன் .

 

வரலாற்றில் அலைகுடிகளாக ஆக்கப்பட்டுவிட்ட சந்தால் பழங்குடி மக்கள் தென் இந்திய மாநிலங்களை நோக்கி பிழைப்பு தேடி இடம்பெயர்வதை மறைந்த போராளி ஸ்டேன் சாமிகள்,” மூன்றாவது இடப்பெயர்வு” என்கிறார் . இந்த வரலாற்று செய்திகளோடும் வலிகளோடும் கொங்கு மண்டலம் நோக்கி பிழைப்பு தேடிவரும் வட இந்தியத் தொழிலாளர்கள் நிலையையும் பிசைந்து , சாதி மதம் இனம் கடந்த காதலையும் சமவிகிதத்தில் கலந்து  புனைவாக்கி நம் கையில் கொடுத்திருக்கும் சக்தி சூர்யாவிற்கு வாழ்த்துகள் .

 

முதல் அத்தியாயத்தில் நாகஜோதி எனும் பணக்காரப் பெண்ணின் ஒருதலை இச்சையால் பாதிக்கப்பட்டு , திருடன் என்கிற முத்திரையோடு பிழைப்புதேடி வந்த ஓர் வட இந்திய இளைஞன் செங்கா ஓடத் தொடங்கியதும் அதே தடத்தில்தான் நாவல் பயணிக்கும் என நீங்கள் நினைத்தால் அது பிழையாகிவிடும் . அந்த காட்சிக்கும் அடுத்தடுத்து வருவதற்கும் சம்மந்தம் இல்லை . செங்காவை சபலமற்றவனாகக் காட்ட அந்த முதல் காட்சி தேவைப்பட்டதோ?  அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய சமூகத்தின் பொது புத்தியை சுட்ட இக்காட்சி அமைக்கப்பட்டதோ? ஈர்ப்பாக அமைந்துவிட்ட நுழைவாயில் .

 

சந்தாலிகளின் உருவமற்ற கடவுள்கள் மாறன் புரூ , போங்கா ,தோட்டக் காவியா , அவர்களின் சாமியாடி ஓஜா ,பபேல் கோபுரம் என பண்பாட்டு காட்சிகள் ,ஓல்சிக் மொழி எனும் சந்தாலி மொழி மெல்ல வழக்கற்றுப் போகும் நிலை ,  கன்யாட்டுகள் ,பட்நாய்க்குகளின் நிலபிரபுத்துவ சாதிய ஆதிக்கம் , சந்தால் மக்களின் கையறு நிலை நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது . கதை நாயகன் செங்கா இந்த சமூகத்திலிருந்து வந்தவன் .ஆனால் தான் ஒரிசாவிலிருந்து வந்தவன் என்றே சொல்லிக் கொள்வான் .இது ஓர் கதைக் களம் .

 

செங்கா கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் சூழல் , அங்கு பல ஊர்களில் இருந்து வந்து சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பணிபுரியும் பெண்கள் , இங்கு இவன் சந்திக்கும் மனிதர்கள் , முதலாளித்துவ சுரண்டல் எல்லாம் இன்னொரு கதைக் களமாகிறது .ஆக இந்நாவல் இரண்டு கதைக் களத்தில் பயணிக்கிறது . இரண்டும் நெடுந்தொலைவிலுள்ள கதைக் களங்கள் . பண்பாட்டுச் சூழலும் சமூக உளவியலும் வெவ்வேறானவை . ஆனால் வாழ பிழைப்பு தேடி ஓடுவது ஒன்றே இணைப்புச் சங்கிலி . கடைசிவரை அந்த வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை .

 

சந்தால் பழங்குடி செங்காவின் தந்தை கிஷ்கு கோரா , தாய் செர்மா , தங்கை சித்ரமுகா , பாட்டி பாதல் முர்மு , சித்ரமுகாவின் காதலன் உயர்சாதியான கன்யாட் சமூகத்தைச் சார்ந்த ரித்விக் , கன்யாட் ,பட்நாய்க்  போன்ற ஆதிக்க சமூக ஒடுக்குமுறைகள் எனக் கதை சுழலும் . செங்கா பிழைப்பு தேடி கோவை வந்தவன் .

 

செங்கா  அவன் நண்பன் இஸ்மாயில் ,  ஸ்பின்னிங் மில்லில் உடன் வேலை செய்யும் மஞ்சு , செங்கா மஞ்சு இடையே அரும்பும் காதல் , சிஐடியு சங்கம் தோழர் செல்வராஜ், அவரோடு செங்காவின் தொடர்பு ,விரியும் புதிய பார்வை என கதை வளர்கிறது . செல்லா நோட்டு , ஜல்லிக்கட்டு போராட்டம் ,கொரானா கொடும் தாக்குதல் , சொந்த ஊரை நோக்கி நெடிய கொடிய நடை பயணம் என சமூக அரசியலும் வலுவாக வினையாற்ற கதை மேலும் விரிகிறது . இஸ்மாயில் ,செங்கா ,மஞ்சு இடையே சாதி ,மதம் , இனம் அனைத்தையும் தாண்டிய அன்பும் அரவணைப்பும் ; கொரானா இடப்பெயர்வும் யதார்த்த இந்தியாவை  சித்தரிக்கிறது.

 

நாவல் முடிவதற்குள் ஒரு வன்புணர்வுக் கொலை , ஒரு ஆவேசக் கொலை , நான்கு கொரானா சாவுகள் , ஒருவர் சிறைக் கொட்டடியில் , ஒருவர் மனநிலை பிறழ்ந்து அலைய , காதலி மஞ்சுவை பிணமாக மடியில் சுமந்தபடி பயணம் தொடருமா எனும் கேள்விக்குறியோடு செங்கா என திரைப்படக் காட்சிபோல் அடுத்தடுத்து நகரும் சோகக்காட்சிகள் .

 

இடப்பெயர்வின் வலியும் , மனிதம் கசியும் வாழ்வும்  பாடுபொருளாகி புதிய மானுடப் பார்வையை விதைக்க முனைகிறது . உழைக்கும் பாட்டாளிக்கு சாதி இல்லை ,மதம் இல்லை ,நாடு இல்லை’ என ஓங்கிச் சொல்கிறது இந்நாவல் எனில் மிகை அல்ல .

 

 “ சக்தி சூர்யாவின் நடை மென்மையும் இனிமையும் வாய்ந்த தென்றல் போன்ற அழகியலையும் ,புயலைப் போன்ற வேகத்தையும் ,கொடும் பாலையைப் போன்ற துயரத்தை விவரிக்கும் ஆழத்தையும் கொண்டிருப்பது தனிச் சிறப்பானது.”என சிறந்த எழுத்தாளர் இரா.முருகவேலே பாராட்டியபின் நான் சொல்ல என்ன இருக்கிறது ?

 

அதுபோல் சிறந்த எழுத்தாளர் கமலாலயன் சொல்கிறார் ,” கடைசி ஐம்பது பக்கங்களைப் படிக்கும் போது எழுந்த உணர்வுகளின் அழுத்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை .” ஆம். நாவலை படிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வீர்கள் .

 

 ’நரவேட்டை’நாவலின் களமும் காட்சிகளும் உயிர்த்துடிப்பான நிகழ்வுகளின் வழி நகர்வதே அதன் வெற்றிக்கு அடித்தளம் . ஆனால் ,’ சந்தாலி’ நாவல் சமூக அறிவின் வழி நெய்யப்பட்ட புனைவு . ஆகவே அதற்குரிய பலம் பலவீனம் இரண்டும் உள்ளடக்கியது .

 

புலம் பெயர் தொழிலாளர்களை எப்படிப் பார்க்கப் பழக வேண்டும் என்பதற்கு இந்நாவலைப் படியுங்கள் !

 

சந்தாலி [ நாவல் ], சக்தி சூர்யா , பாரதி புத்தகாலயம் ,thamizhbooks.com  / 8778073949  , பக்கங்கள் : 304 , விலை  :ரூ.310 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

27/07/25.

 


No comments:

Post a Comment