Pages
▼
Monday, 10 December 2018
சொல்.92
தினம் ஒரு சொல் .92 [ 11 /12/2018 ]
நாம் சரி என இன்று நம்புகிற ஒன்று , நேற்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம் , நாளை வேறு மாதிரியாக கணிக்கப்படலாம் .கருத்துகள் மாறதவையோ மாற்றக்கூடாதவையோ அல்ல . ஆனால் அதன் உள்ளுறை நோக்கம் என்ன என்பதுதான் முக்கிய கேள்வி.
மகாத்மா காந்தியின் ஆரம்பகால கருத்துகளுக்கும் கடைசிகாலக் கருத்துகளுக்கும் நிறைய வேறுபாடுண்டு . அவரிடம் கேட்டபோது நான் கடைசியாகச் சொல்லியதே சரி .என் அனுபவம் திருத்தியுள்ளது என்றார் . பெரியாரிடம் ,மேலும் பல தலைவர்களிடம் இதனைக் காணலாம் .ஏன் ? எல்லோரிடமும் உண்டு .காலம் ஒவ்வொருவரையும் செதுக்குகிறது ;கருத்து முதிர்ச்சி அடைகிறது அல்லது பக்குவமடைகிறது .ஆனால் இந்த கருத்து மாற்றம் பொதுவாய் இரண்டு விதமாய் நிகழலாம் .
ஒன்று ,அனுபவம் ,படிப்பு ,சமூகத்தொடர்பு ,அறிவியல் முன்னேற்றம் என பல்வேறு காரணங்களால் கருத்துகள் மாறும் .அது பிழை அல்ல . தேவை .இப்படி மாறிய கருத்து குறித்து ஒருவர் வெட்கப்பட மாட்டார் .வெட்கப்பட வேண்டியதுமில்லை . “நான் இப்போது சரியான தளத்துக்கு வந்துவிட்டேன் என் நாநடுங்காமல் கூறவும் முடியும்.” என பெருமையோடு கூறவும் இயலும் .
இரண்டு ,சுயநலத்தோடு அவ்வப்போது கிடைக்கிற பணம் ,பதவி, சுகம் ,லாபம் ,அற்ப சந்தோஷம் ,தந்திரம் ,வஞ்சகம் இப்படி பல்வேறு நோக்கில் கருத்துகளை ஒருவர் அடிக்கடி மாற்றி மாற்றிக் கூறலாம் .இது அயோக்கியத்தனம் .சந்தர்ப்பவாதம் .இதனை கருத்து மாற்றம் என்ற சொல்லால் சுட்டுவதேகூட தவறு . ஆனால் இவர்கள் தன் வஞ்சகத்துக்கு சர்க்கரை தடவி ,ஜிகினா தூவி ஈர்ப்பார்கள் .இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
முன்னது முற்போக்கானது .ஒவ்வொருவரும் மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடேதான் பயணிக்க வேண்டும் .பின்னது ஆபத்தானது ,சமூகத்தின் புற்றுநோய் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டால் குணப்படுத்தலாம் .முற்றிவிட்டால் பேராபத்தே . அரசியல் ,சமூகம் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுக்கும் இது பொருந்தும் .
Su Po Agathiyalingam
No comments:
Post a Comment