Pages

Saturday, 1 December 2018

சொல் .87

தினம் ஒரு சொல் .87 [ 2 /12/2018 ] பத்திரிகையாளர் என்கிற முறையில் எமது இதழுக்காக ஒரு முறை கலந்துரையாடலை நான் நெறிப்படுத்த வேண்டியிருந்தது .தலைப்பு “ பள்ளிக்கூடத்தில் பாலியல் கல்வி தேவையா ?” பெற்றோர் சிலரும் பங்கேற்றால் நன்றாக இருக்குமென சிலரிடம் பேசினேன் . ஒரு பெண்ணின் தந்தை கோபமாகக் கேட்டார் ,”இப்பவே கண்டதைப் படித்து ,பார்த்துக் கெட்டலையதுங்க நீங்க பாடமாவேற சொல்லித்தரப் போறீங்களா ? தியரி மட்டும்தானா ,பிராக்டிக்கல்லும் உண்டா ?”அவருக்கு புரிய வைப்பதுக்குள் பெரும்பாடாகிவிட்டது .இன்றும் பாலியல் கல்வி என்றதும் காமம் ,கலவி என்று மட்டுமே புரிந்துள்ளோர் ஏராளம் .அதற்கும் மேல் கொஞ்சம் உடல்கூறு ,பருவ வளர்ச்சி ,சுகாதாரம் இதனோடு முடித்துக் கொள்வோர்களே மிகமிக அதிகம் .பாலியல் கல்வி அதுமட்டுமன்று . பாலியல் கல்வி நான்கு கூறுகளைக் கொண்டதென நான் கருதுகிறேன் . ஒன்று பதின் பருவத்தில் உடலில் தோன்றும் இயற்கையான வளர்ச்சி ,பூப்படைதல் ,மீசை அரும்புதல் ,பாலின வேட்கை ,மகப்பேறு ,மலட்டுத்தன்மை இவை குறித்த அறிவியல் பூர்வமான புரிதலை உருவாக்குதல் .இரண்டு ,பாலின சமத்துவத்தை , அதற்கேற்ற பண்பாட்டு நடத்தையை கட்டமைக்கும் முயற்சி . மூன்று குடும்ப ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கும் கடும்பணி ,நான்கு சமூக உளவியலில் கரடுதட்டி போய் உறைந்து போயுள்ள ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் பிம்பங்களை உடைத்து அந்த இடத்தில் முற்போக்கான , சாதி மத வேலிகளுக்கு அப்பாற்பட்ட புதிய ஆண் /பெண்/மூன்றாம் பாலின இலட்சிய பிம்பத்தை உருவாக்கி அதை நோக்கி சமூகத்தை நகர்த்தல் . இவை அனைத்தையும் பள்ளியில் மட்டுமே கற்றுக் கொடுத்துவிடவே முடியாது . இதற்கான உரையாடலை உங்கள் வீட்டில் நீங்கள்தான் தொடங்க வேண்டும் .மதவெறி ,சாதிவெறியை எதிர்ப்பது என்பது பொதுவெளியில் நடக்கும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல ; உங்கள் வீட்டிற்குள் நடத்தும் மேலே குறிப்பிட்ட இப்போராட்டமும் அதன் முக்கிய அங்கமே ! நீங்கள் ரெடியா ? Su Po Agathiyalingam

No comments:

Post a Comment