Pages

Saturday, 4 July 2026

பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 


பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 

 


பேராசிரியர் .பி. ராஜமாணிக்கம் எழுதிய  பசு மாடு படும் பாடு’ என்னும் இச்சிறிய புத்தகம்  [ 32 பக்கங்கள் ] ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .

 

சில கேள்விகள்…

1] பசு மாட்டின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா ?

2] பசு மாட்டின் சிறுநீரில்  தங்கம் இருப்பது உண்மையா ?

3] பசு மாடு ஆக்சிஸனை சுவாசித்து ஆக்சிஸனை வெளியிடுகிறதா ?

4 ] பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்குமா ?

5] பசு மாட்டின் பூர்வீகம் எது ? அது எங்கே பிறந்தது ? மூதாதையர் யார் ?

 

இப்படி சில அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக ஆணித்தரமான பதில்களைத் தருகிறது இந்நூல் .ஆகவே ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

 

தமிழ்நாடு அறிவியல் இயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பேரா.பி. ராஜமாணிக்கம்  தேவையான நேரத்தில் , மிக அவசியமான இந்நூலை எழுதி இருக்கிறார்  . மாட்டுக்கறி வெறுப்பு அரசியலுக்குள் நுழையாமல் வேறு தளத்தில் நின்று அறிவியல் பூர்வமான நான்கைந்து கேள்விகளுக்கு மட்டும் தக்க ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறார். படங்கள் ,கார்ட்டூன் , சிந்திக்கத் தூண்டும் அட்டை என புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது .

 

புரளிகளை அறிவியல் என விற்கும் புழுகுணிப் பிரச்சாரங்களில் சிக்கிக் கொண்ட மக்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் பரிசளியுங்கள் !  அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில்க் கொள்க !

 

பசு மாடு படும் பாடு , ஆசிரியர் : பேரா.பி. ராஜமாணிக்கம் , வாசல் வெளியீடு , 40 D / 3 – முதல் தெரு ,வசந்தா நகர் , மதுரை 625 003 , vasalviji@gmail.com + 91 98421 02133 . பக்கங்கள்: 32 , விலை : ரூ.42 /

 

சுபொஅ.

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 

 


நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?

விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?

கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?

பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?

மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?

பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?

பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?

நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?

நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?

அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய்  ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்

கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?

 

சுபொஅ.